ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் பல்வேறு பரிணாமங்களைக் கடந்துவந்த பாதையில் புலம்பெயர்வு என்பது ஒரு மைல்கல் என்பதில் சந்தேகமில்லை. இப்புலம் பெயர்வானது அரசியல், கலாச்சாரம், கலை, இலக்கியம் என வளர்ச்சியுற்று ஏனைய புலம்பெயர் சமூகங்களுக்குமான வழிகாட்டல்களை நிகழ்த்தியுமுள்ளன என்பதை அறியும் போது மனதுக்கு திருப்தியை தரும் அதே நேரம் புலம்பெயர்ந்த சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் சிக்கல்களும் நிறையவே ஆராயப்பட கலந்துரையாடப்பட வேண்டியுள்ளன. இந்தவகையில் Asker og Baerum தமிழர் ஒன்றியத்தின் அனுசரணையுடன் வெளியிடப்பட்டுள்ள பறை வாசிக்கக்கிடைத்தது. முதல் முழக்கமே மிகச்சிறப்பாக இருந்தது திருப்தியையும் ஆறுதலையும் தந்தது. முன் பின் அட்டைகளை அலங்கரித்துள்ள வர்ணப்படங்கள் முதல் ஆசிரியர் தலையங்கம் அவ்வையின் அக்கினிகுஞ்சாய் உயிர்த்தெழு ஜெயபாலனின் கவிதை என பலவும் சுவையாக இருந்தன.
தொப்புள் கொடி உறவின் எதிர்காலம் தொடர்பான ஐயங்களை காலத்தின் தேவையைக் கொண்டு எதிர்வரும் காலங்களில் பறை சிறப்பாகவும் தரியமாகவும் முழங்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. புத்தளத்தில் சட்டத்தரணி தொழில்பார்க்கும் நான் மாற்று இலக்கியங் களை தேடிப்படிப்பதில் ஆர்வம் கொண்டவன். இந்தவகையில் ”பறை”யின் முழக்கம் தொடர்ந்தும் என காதுகளில் ஒலிக்க முதல்பிரதி முதல் தொடர்ந்து வரும் பிரதிகளையும் எனக்கு அனுப்பிவைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தோழமையுடன் எம்.எச்.எம்..பவுசர் ரகுமான்
புத்தளம்-இலங்கை
நண்பர் ஒருவரிடம் இருந்து பறை இதழ் பார்த்தேன். பல விடயங்களை தாங்கி பறை இதழ் வந்துள்ளது. மகிழ்ச்சி. பாராட்டுகள். வாழ்த்துக்கள். சிறீலங்கா துரோகங்களின் புகலிடம் நல்லதொரு கட்டுரை அதேபோல் நமது நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கும் ஊடகம் மற்றும் சமுத்திரனின் எனது பார்வையில் ராஜினியின் கட்டுரை. எல்லாம் நிறைய விடயங்களை சொல்கின்றன. சமுத்திரன் கூறுவதுபோல் புலம் பெயர் இலக்கியங்கள் ஆரம்பத்தில் பெரும் ஆர்ப்பாட்டத்துடன் பரபரப்பை ஏற்படுத்தினதுதான் ஆனால் இன்று அவற்றின் பரபரப்பு ஓய்ந்துவிட்டது. இதற்கு காரணம் தலைமுறை மாற்றமும் ஆக இருக்கலாம். என்பது ஏற்கக் கூடியதே. வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்தவர்கள் அந்தந்த நாட்டின் உன்னத இலக்கியங்களை அந்த நாடுகளின் கலை பண்பாட்டு அம்சங்களை தமிழில் வெளிக்கொணரலாம். இன்றும் எமது தமிழ்மொழி சார்ந்த விடயங்கள் இலக்கிய இலக்கண மற்றும் அறிவு சார்ந்த விடயங்களை வெளிநாடுகளுக்கு கொண்டு போகப்பட்டுள்ளன. மொழி பெயர;க்கப்பட்டுள்ளன. ஜேர்மன் பிரான்ஸ், டென்மார்க், போர்த்துக்கல், ஒல்லாந்து, பிரிட்டன் என்று நீள்கின்றன. அந்த நாடுகளின் பழமையான நூல் நிலையங்களில் எமது பழமையான சுவடிகள் பல உள்ளன. அவற்றை எல்லாம் ஆராய்ந்து வெளிப்படுத்தலாம். சமீபத்தில் யேர்மனியில் உள்ளதை சமீபத்தில் யேர்மனியில் உள்ளதை கனகசபாபதி-சரவணபவன் வெரித்தார்! இதழில் வெளிப்படுத்தி உள்ளார். இதேபோல் மற்றவர்களும் செய்தால் பிரயோசனம் இருக்கும்.
டொக்டர் ராஜதுரை தர்மராஜா (ஜே.பி.)
திருகோணமலை
முள்நிறைந்த பாதைகள் தாண்டி சுமை நிறைந்த பொறுப்புக்கள் சுமந்து பத்தாண்டுகளைத் தொட்டுக்கொண்டு இருக்கும் Asker og baerum ஒன்றியத்தின் பறை முழக்கம் ஒன்று படித்தேன். ஆசிரியர் தலையங்கத்தின் உறுதியான நோக்கு இறுதிவரை கடைப்பிடிக்கப்பட வேண்டும். மனிதத்திற்காகவும் கருத்து சுதந்திரத்திற்காகவும் குரல்கொடுக்க எத்தணிக்கும் போது எல்லாம் கொலைநாய்கள் உங்கள் குரல்வலையை நொpக்கும். துரோகி முத்திரை உங்கள் நெற்றியில் ஒட்டப்படும். இவற்றை எல்லாம் முறியடித்து குரல்கொடுக்கும் ஆற்றலை சேமித்துகொள்ளுங்கள்.
விடுதலைப் பாதையில் மாற்றுக் கருத்துரைத்தல் மாபெரும் குற்றமாகக் கருதப்பட்டமையால்தான் ”மாந்தார வானத்துள்ளும் சூரியனைத்தேடியவள்” ஆர்ப்பாட்டமான கொச்சைதனத்துள்ளும் அமிழ்ந்து போக மறுத்தவள் அள்ளிசெல்லப்பட்டு பத்து ஆண்டுகள். இவற்றிற்கு எல்லாம் நியாயம் கற்பிப்பதற்கு சில மனிதர்கள். கருத்தைச் சுதந்திரமாக உரைத்ததால் பறிக்கப்பட்ட உயிர்பட்டியல் மிக நீளமானது. இந்தபட்டியலில் தங்கள் பெயரும் வந்துவிடக்கூடாது என்று அஞ்சி கருத்துரைக்காது இருப்பவர்கள் அனேகர். பாசிச நோக்கு கொண்டவர்களுக்கு கிடைத்த பெரியவெற்றி இது. போராட்ட வெற்றியின் பின்பு கருத்துச் சுதந்திரத்திற்காக இன்னொருமுறை இரத்தம் சிந்த தயாராக இருக்கட்டும் இவர்கள். ஒருவிடுதலைப்போராட்டம் சமகாலத்தில் வென்றெடுக்கப்பட வேண்டிய கூறுகளை மழுங்கடித்து மண் விடுதலையை மட்டும் கூர்மைப்படுத்துவது துரோகத்தனமான விடுதலை போராட்டமாக அமையமுடியாது என்பதே வரலாறு கண்ட உண்மை.
தொடரட்டும் இவை சார்ந்த கருத்துக்கள்
புலம் பெயர்மண்ணில் எங்கள் வாழ்வியல் அரசியல் சார்ந்த கருத்துக்கள் ஆழமாக நோக்கப்பட வேண்டியவை. கடந்த பத்து ஆண்டுகளில் புலம்பெயர்ந்த நாடுகளில் திடமாக கால்பதிப்போமா! இல்லை திருப்பி அனுப்பப்படுவோமா! என்று தத்தளித்துக்கொண்டு இருந்தகாலம் ஆனால் இன்று அனேகமானவர்கள் நிரந்தரவதிவிட உரிமை பெற்றவர்களாக தமக்குள் ஓரதீர்வு வந்தவர்களாக வாழத் தலைப்படும்போது இவர்கள் எந்தவாழ்க்கை முறையில் தம்மை நிலைநிறுத்தி கொள்கிறார்கள்! தாயகம் சார்ந்த இவா;கள் நிலைப்பாடு என்ன! முதலாம் தலைமுறையினர்க்கும். இரண்டாம் தலைமுறையினர்க்கும் சாதியம் சீதனம் கலாச்சார நிகழ்வுகள் போன்றவற்றில் எவ்வாறு பிரதிபலிக்கின்றார்கள்! தமிழ் ஊடகங்களின் வியாபாரம் இன்னும் எத்தனைகாலம் சாத்தியமாகும்! இரண்டாவது சந்ததியை இந்த ஊடகங்கள் கவர்கின்றனவா! இந்த கேள்விகளுக்கெல்லாம் விடையை ”பறை” முழங்கட்டும்................
சி. ரவிந்திரன், யேர்மனி...
0 comments:
Post a Comment