தேசம், மொழி, சாதி, பால், சிறூபான்மையினரின் உரிமைகள் சார்ந்த அரசியற் போராட்டங்களும், அவர்களின் அடையாள அரசியல் போராட்டங்களும் இறுதியில் தோல்வியைத் தழுவிக் கொள்கின்றன என்ற வாதங்களும், அவை தழுவிய உபதேசங்களும் இன்று தொடர்ச்சியாக வலியுறுத்தப் பட்டுக்கொண்டு வருகின்றன. இவை தோல்விகளைத் தழுவிக்கொள்ளும் என்று ஏற்கனவே எங்களுக்குத் தெரியும் என முன்முடிவுகளை அன்று சொன்னவர்களும், இன்று சொல்பவர்களும் பாலஸ்தீனத்தையும், குர்திஸ்தானையும், முள்ளிவாய்க்காலையும் உதாரணங்களாக மீண்டும் வலியுறுத்துகின்றனர். தேசம், அடையாளங்கள் சார்ந்த போரட்டங்களின் தோல்வி என்பன ஏகாதிபத்தியங்களினதும், வல்லரசுகளினதும் சதி என ஒற்றை வரியில் விளங்கப்படுத்தப் படுவனவாயும், ஒற்றைவரியில் விளங்கப்படவேண்டிய சூத்திரமாகவும் ஆக்கப்பட்டுள்ளது.
இந்த ஒற்றை வரி விளக்கங்கள் இன்றுள்ள ஒடுக்கப்பட்ட தலித் மற்றும் விளிம்பு நிலை மக்களின் போராட்டங்களையும், பெண்களின் போராட்டங்களையும் அவர்களின் அரசியல் அபிலாசைகளையும் விளங்கிக்கொள்ள போதுமானவையா? என்ற கேள்வி என்னைக் கேள்விமேல் கேள்விகளை கேட்க வைக்கின்றன. எனது முதலாவது கேள்விக்கும் அதனைத் தொடந்து வருகின்ற நூற்றி ஓராவது கேள்விக்கும் கிடைக்கும் பதில் ஒரே பதிலாகவும், ஒற்றைவரிப் பதிலாகவுமே இருக்கின்றது. இவை எல்லாம் ஏகாதிபத்தியத்தின் சதி வர்க்கப்போராட்டமும் வர்க்கவிடுதலையுமே எல்லாவற்றிற்குமான சர்வரோக நிவாரணி என்பதே அந்தப்பதிலாக பல முனைகளிலிருந்தும் உபதேசங்களாக வந்து விழுகின்றன