Slideshow

களிப்பூட்டும் பொய்யும், கசப்பூட்டும் மெய்யும் !

.பலகோடி ஆண்டுகளாகப் புரையோடிப்போன மரபொன்றினை சமீப காலத்தேயே பகுத்தறிவுவாதத்தால் குறுகியகாலத்தில் வெற்றி பெறச்செய்துவிடமுடியாது

தளத்திலும் புலத்திலும் அரசியலின் நவவடிவம், திசைவழி, அதன் பரிமாணம்

நமது சமூகம் இன்னமும் "யாழ்-சைவ-வேளாள-உயர்வர்க்க-ஆணாதிக்க" அதிகாரத்துவ அமைப்பையே கொண்டிருக்கிறது. வெறும் தமிழ்தேசிய விடுதலை இவை எல்லாவற்றுக்குமான சர்வரோகநிவாரணி ஆகிவிடாது.

பேசாப்பொருளை பேசு பொருளாக்குவதன் அரசியல்!

பேசாப்பொருளை என்றென்றும் பேசாப்பொருட்களாக வைத்திருப்பதில் ஆதிக்க சக்திகள் நீண்டகாலம் வெற்றிபெற்று வருகின்றன.

Showing posts with label தலித்தியம். Show all posts
Showing posts with label தலித்தியம். Show all posts

யாழ்ப்பாணத்து சாதிய ஆதிக்க வடிவங்கள் - ராகவன்

ராகவன்
சமூக வளர்ச்சி பற்றி சிந்திப்பவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் சாதியம் பற்றிய ஆழமான புரிதல் அவசியமாகிறது. சாதியம் சமூகத்தின் மொழி, அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், பண்பாடு, நடைமுறை போன்ற அனைத்து தளங்களிலும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் எவ்வாறு தனது ஆதிக்கத்தை செலுத்துகின்றதென்பதை அவதானித்தல் அதற்கெதிரான செயல்பாடுகளை பல்வேறு தளங்களில் முன்னெடுத்தல் அவசியமானதொன் று. இக்கட்டுரை யாழ்ப்பாணத்து சாதிய ஆதிக்கம் பற்றிய ஒரு அறிமுகம்.

தென்னாசிய சமூகங்களில் சாதியத்தின் இருத்தல் பற்றிய பல்வேறு ஆய்வுகள் வந்திருக்கின்றன. சாதியத்தில் இருத்தலை இவ்வாய்வுகள் பெரும்பாலும் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல.

சாதியம் பண்டைய சமூகத்தின் எச்சசொச்சம். அது நிலப்பிரபுத்துவத்தின் வடிவம். நவீன சமூக பொருளாதார வளர்ச்சி சாதியத்தை இறுதியில் இல்லாமல் ஆக்கிவிடும் என்ற பார்வை இன்று கேள்விக்குறியாக எமக்கு முன் நிற்கிறது. அகதிகளாக அனைத்தையும் இழந்து வந்தவர்கள் கூட சாதியத்தை மட்டும் விடாமல் தூக்கிகொண்டு வருவது ஏன்? அல்லது நாடு கடந்து ஐரோப்பா அமெரிக்காவென்று வந்தவர்கள் சாதியை மட்டும் விடாமல் இருப்பது ஏன்? ஒரு புதிய சமூக பொருளாதார அரசியல் சூழலில் வாழ்பவர்கள் கூட சாதியத்தை கைவிடாமல் இருப்பதன் பின்னணி என்ன? 

ஆனந்த் டெல்டும்ப்டே என்ற அறிஞர் கூறுகிறார், ’’1853இல் புகையிரத சேவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட போது சாதியத்தை உடைக்க போக்குவரத்து நவீனமயமாக்கல் உந்துசக்தியாகுமென்று மார்க்ஸ் எழுதினார். ஆனால் உலகத்திலேயே இரண்டாவது மிகப் பெரிய புகையிரத சேவையை கொண்டுள்ள இந்தியாவில் சாதி அழியவில்லை. மாறாக சாதியானது நவீன வடிவங்களுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்து (adaptive) வருகிறது.’’

சாதியமானது நவீன மயமாக்கல், முதலாளித்துவ உலக மயமாதல் போன்ற அனைத்து வளர்ச்சிப் போக்குகளுடாக தன்னை தகவமைத்து புதிய வடிவங்களை எடுக்கிறது. சாதியம் ஒருபுறம் மாறுகிறது. மறு புறம் சாதியம் திரும்பவும் தளைக்கிறது. புதிய அவதாரங்களை எடுக்கிறது. சாதியத்தின் சமூக இருப்பை அங்கீகரிக்காமல் அதன் நேரடி-மறைமுக ஆதிக்கத்தை உணராமல் ஒரு சமூக விடுதலை அல்லது குறைந்த பட்ச ஜனநாயக வாழ்வு சாத்தியமில்லை.

இலங்கையில் தெற்கிலும் வட கிழக்கிலும் சாதிய மேலாதிக்கம் செல்வாக்கு செலுத்துகின்றது. சாதியத்தின் நேரடி தாக்கம் அதன் இறுக்கம் பிரதேசங்களுக்கு இடையில் வேறுபட்டிருப்பினும் முழு இலங்கையிலும் ஏதோ ஒரு வகையில் சாதியத்தின் ஆதிக்கம் இருக்கதான் செய்கிறது. கண்டிய கிராமங்களை ஆய்வு செய்த நியூட்டன் குணசிங்க, இலங்கையில் பவுத்தமானது அதன் முற்போக்கு தன்மையை இழந்து இந்துத்துவ சிந்தனைமுறையான கர்மாவை தன்னகத்தே வரித்து முற்பிறப்பில் செய்த பலனே சாதியில் மேலோனாகவும் கீழோனாகவும் பிறப்பதற்கு காரணமென்ற சித்தாந்தத்தை தூக்கிப்பிடிக்கிறது என்கிறார்.. ரடல, கொவிகம ஆகிய ஆதிக்க சாதிகள் தங்களை உயர் சாதியென பிரகடனப்படுத்த இந்த சித்தாந்தம் முண்டுகொடுக்கிறது. 

எனது கட்டுரை யாழ்ப்பாண சாதி அமைப்பை மட்டும் பேசுவதால் மற்றய பிரதேசங்களில் சாதிய அமைப்பு அதன் தாக்கம் பற்றி நான் இங்கு மேலும் எழுதவில்லை. 

சாதியமானது மாறாத்தன்மை கொண்டு இருப்பதல்ல, அல்லது வர்ணாச்சிரம அடிப்படையை அச்சொட்டாக கடைப்பிடித்து ஆதியிலிருந்த அதே இறுக்கமான மரபுகளை கொண்டு இயங்குவதல்ல. மாறாக சாதியமானது தன்னை புதிய வடிவங்களுக்கேற்ப தகவமைக்கிறது, சாதிய ஏற்ற தாழ்வுகளை புதிய வடிவங்களில் பிரதிபலிக்கிறது. சாதிய அதிகாரத்தை அரசியல், சமய, கலாச்சார தளங்களில் நிலை நாட்ட புதிய கதையாடல்களை உருவாக்கிறது. இதற்கு சிறந்த உதாரணம் யாழ்ப்பாணத்து வெள்ளாள சாதி. அது அரசியல் பொருளாதார சமய பண்பாட்டு தளங்களில் எவ்வாறு படிப்படியாக ஆதிக்கம் செலுத்தி சாதிய மேலாதிக்கத்தை யாழ்ப்பாண சமூகத்தில் உருவாக்கியது என்பதை பார்ப்போம்.

யாழ்ப்பாணத்தில் தமிழர் கி.பி. 3ம் நூற்றாண்டு காலத்தில் இருந்திருக்கின்றனர் என்று அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் தெரிவித்த போதும் 11ம் நூற்றாண்டு காலப்பகுதியில் சோழ படையெடுப்பு பின்னர் பாண்டியர் படையெடுப்பு காலப்பகுதிகளிலேயே வட கிழக்கில் இந்தியாவிலிருந்து தமிழரின் வருகையும் குடியிருப்பும் அதிகமானதென அரசரட்னம் போன்ற ஆய்வாளர்கள் கருத்து. 

இக்காலகட்டத்தில் விவசாயத்தை தொழிலாக கொண்ட வெள்ளாள சாதி யாழ்ப்பாண பகுதிகளில் பெரும்பான்மையாக குடியேறினர். அவர்களுக்கு சேவகம் செய்யும் பல்வேறு சாதியினர் கொண்டு வரப்பட்டனர். இந்துக் கோவில்கள் இக்காலகட்டங்களில் கட்டப்பட்டு பிராமணர்கள் கோவில்களில் அர்ச்சகர்களாக அமர்த்தப்பட்டனர். இந்தியாவில் பார்ப்பனர்களுக்கிருந்த அரசியல், பொருளாதார, பண்பாட்டு அதிகாரம் யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லை. மாறாக அவர்கள் வெள்ளாளரின் கோவில்களில் பூசகர்களாக அமர்த்தப்பட்டனர். சமய கருத்தியலே அரச அதிகாரத்தையும் சாதிய வேறுபாடையும் நியாயப்படுத்தியது. ஆனால் வர்ணாச்சிரம தர்மத்தின் படி சூத்திரராக வரையறுக்கப்பட்ட வெள்ளாளர் யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை ஆதிக்க சாதியான பரிணாமத்தின் ஒரு வடிவம். மனு தர்மக் கோட்பாடு சூத்திரரான வெள்ளாருக்கும் பொருந்தியதே. 

பார்ப்பனருக்கு மட்டுமே உரித்தான கன்னிகாதானம் போன்ற விவாக முறைகள் மற்றும் சமய சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்படுதல் மனுதர்ம கோட்பாட்டின் புதிய வடிவம். வெள்ளாளர் பார்ப்பன மயமாகுதல் ஒரு புறமிருக்க, மறு புறத்தில் பார்ப்பன ஆதிக்க கலாச்சார தளத்தை எவ்வாறு யாழ்ப்பாண ஆதிக்க சாதியினர் தம்வசப்படுத்தினர், அதற்கான ஆதிக்க கருத்தியல் ஆறுமுக நாவலரால் எவ்வாறு உருவாக்கபட்டது என பின்னர் பார்ப்போம்.

மன்னராட்சி காலத்தில் வெள்ளாளர்களில் பெரும்பாலாலோர் முதலியார், உடையார், விதானையார் போன்ற பதவிகளில் அமர்த்தப்பட்டு அந்த பதவிகள் அவர்களது பிறப்புரிமையானது. முதலியார், உடையார் நில உடைமையாளர்களாக மட்டுமல்ல அரசியல், சமூக விடயங்களில் ஆளுமை செலுத்தியவர்களாகவும் இருந்தனர். மதமானது மன்னர் ஆட்சியையும் சமூக ஏற்றத் தாழ்வையும் கர்மா என்ற கோட்பாட்டின் மூலம் நியாயப்படுத்தியது. சாதி அடிப்படை முற்பிறப்பின் பாவ புண்ணியங்களின் அளவு கோலாக அமைந்தது.

பொருளாதார தளத்தில் வெள்ளாள சாதியின் நில உடைமை மற்றும் உற்பத்தி உறவுகள் தேசவழமை சட்டத்தினால் ஒழுங்கு படுத்தப்பட்டன. தேசவழமை உற்பத்தி உறவுகளை நிர்ணயித்த அதே வேளை ஒவ்வொரு சாதியினரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளையும் அவர்கள் என்ன செய்யலாம், செய்யக்கூடாது என்ற வரைமுறைகளையும் தீர்மானித்தது. தேசவழமையானது சாதிய உறவு முறையை ஒழுங்கமைத்தது. மன்னர் காலத்தில் இது சட்டக்கோர்வையாக இல்லாவிடிலும் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையாக இருந்தது. அக்கால தேசவழமை அடிப்படையில் மேலாதிக்கம் செலுத்திய வெள்ளாள சாதியினது உடைமைகளை, சலுகைகளை பாதுகாத்தது. வெள்ளாளருக்கு அடிமையாயிருந்த பள்ளர், பறையர் போன்ற தலித் மக்கள் வெள்ளாளருக்கு பணிபுரிதல் அவர்களை வாங்கி விற்கும் உரிமை போன்ற மிக பிற்போக்கான அநாகரிக வழிமுறைகளின் மூலம் வெள்ளாளரின் மேலாதிக்கத்தை பாதுகாத்து தலித் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மறுத்தது. 

அத்துடன், ஒவ்வொரு சாதிக்குமான வரைமுறைகள், அவர்களது கலாச்சார நடைமுறைகள் பற்றியும் தேசவழமை நிர்ணயித்தது. ஒவ்வொரு சாதியினரின் திருமண சடங்குகள் எவ்வாறு நிகழ்த்தப்பட வேண்டும் என்பதைக் கூட தேசவழமை தீர்மானித்தது. ஒருவகையில் மனு தர்ம சித்தாந்தத்தை புதிய சூழல்களுக்கேற்ப தகவமைத்த வடிவமே தேசவழமை எனலாம். பார்ப்பனர்கள் ஆன்மீக தளத்தில் உயர்ந்த இடத்தை கொண்டிருப்பினும் ஆன்மீக ஆதிக்கம் கோவில் மதில்களுக்குள் குறுகியிருந்ததெனலாம். சமஸ்கிரித சுலோகங்களை கடவுள் முன் ஒப்புவிக்கும் பாத்திரத்தை மட்டும் இலங்கைப் பார்ப்பனர்கள் எடுத்திருப்பினும் தமது சாதிய மேன்மை, தமது பிறப்பினால் ஆனது என்ற சிந்தனை போக்கை அவர்கள் கைவிடவில்லை.

எனினும் அரசியல் பொருளாதார கலாச்சார தளங்களில் இந்திய பார்ப்பனர்கள் போல் இலங்கை பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்தவில்லை. ஏனெனில் அவர்களின் சனத்தொகை மிக சொற்ப அளவாக இருந்தது மட்டுமல்ல அவர்கள் கோவில் பூசாரிகளாக இறக்குமதி செய்யப்பட்டதால் அவர்களது பரம்பரையினர் பெரும்பாலும் தொடர்ந்து பூசாரிகளாக இருந்து வரும் ஒரு நிலையை தோற்றுவித்தது. இன்நிலையில் ஆதிக்க சாதியாக வெள்ளாளர் உருவெடுத்தனர்.

முதலியார், உடையார், தலையாரி போன்றவர்களே மன்னராட்சி காலங்களில் மன்னர்களின் உள்ளூர் பொறுப்பாளர்களாக இருந்து வரி அறவிடுதல் போன்ற விடயங்களுக்கு பொறுப்பாக இருந்தனர். எனவே கிராம மட்டங்களில் இவர்கள் அரசியல் பொருளாதார கலாச்சார அறிவுத் தளங்களில் மேலாதிக்கம் செலுத்தினர். சமயம், சட்டம் போன்றவை சாதிய ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தி முண்டு கொடுத்தன. கிராம தலைவர்களாக இருந்த ஆதிக்க சாதிகள் இந்த ஏற்றதாழ்வான சட்டமுறைகளையும் சமய விதிகளையும் அடிப்படையாக கொண்டு கிராம பிரச்சனைகளை தீர்த்தனர். எனவே சாதிய ஆதிக்க கருத்துருவின் அறிவுசார் தளத்தின் தலைவர்களாகவும் இவர்கள் இருந்து மன்னர் ஆட்சி, சாதி முறை ஆகியவற்றை பண்பாட்டுத் தளத்தில் நியாயப்படுத்தினர். 

கிராம்சியின் கருத்தில் சொல்வதன்றால் ஓர் இணக்கப்பாட்டை (consent) சமூகத்தில் நிலை நாட்டும் பாரம்பரிய அறிவாளர்களாக (traditional intellectuals) தொழிற்பட்டனர். ஒருவகையில் தலித் மக்கள் தமது அடிமை நிலைக்கான காரணம் முன்வினைப் பயன் என்பதும், குறிப்பிட்ட சாதியில் பிறந்தது தமது விதியென்றும் நம்புவதற்கான வலுவான கலாச்சார ஆதிக்க தளம் (cultural hegemony) சாதிய சமூகத்தை ஒழுங்கமைக்கும் விதியானது. 

தலித் மக்கள் இந்த கலாச்சார ஆதிக்க கருத்தியலை அப்படியே விழுங்கிக் கொண்டார்கள் என்பது இதன் பொருளல்ல. பல்வேறு எதிர்ப்புகளும் முரண்பாடுகளும் அக்கால கட்டத்தில் எழுந்திருக்கலாம். இந்த எதிர்ப்புகள் வன்முறை மூலம் நசுக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த ஆதிக்க கருத்தியலுக்கு எதிரான மாற்றுக் கருத்தியலுக்கான அரசியல் கலாச்சார தளம் அக்காலகட்டத்தில் உருவாக வில்லை என்பது யதார்த்தம். இன்னொரு வகையில் அக்கால மன்னர் ஆட்சியானது நிர்வாக ரீதியாக மத்தியத்துவப்படுத்தப்பட்டதாக இருக்கவில்லை. கிராமங்களின் நிர்வாக அலகுகளை உள்ளூர் முதலியார்களும் உடையார்களும் நிர்வகித்தனர். அரசனின் திறைசேரியை நிரப்புவதற்கான வரிகள் கிராமங்களிருந்து செல்வதை கண்காணித்ததை தவிர வேறு விடயங்களில் அரச நிர்வாகம் தலையிடவில்லை எனலாம். எனவே ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மாற்று சிந்தனை முறை கலாச்சார தளத்தில் வருவதற்கான வாய்ப்புகளோ இருப்பதற்கான சூழல் அரிதாகவே இருந்ததென கொள்ளலாம். 

எனவே மன்னராட்சி காலகட்டங்களில் ஆதிக்க சாதி கருத்தியலுக்கு எதிரான மாற்றுக் கருத்தியல் குறைந்தபட்சமாவது ஆளுமை செலுத்திய தென்பதற்கான வரலாற்றுத் தடயங்கள் இருப்பதாக தெரியவில்லை. 

சாதியத்தின் இறுக்கமான வேர்களை கேள்விக்குள்ளாகும் நிலையும் அதற்கெதிரான பல்வேறு போராட்ட வடிவங்களும் காலனித்துவ காலங்களில் உருவானதென்பது மிகையல்ல. இதற்கான பல்வேறு காரணிகள் உள்ளன. போத்துக்கேயர், டச்சுகாரர் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலங்களில் சாதியத்திற்கெதிரான எதிர்ப்புகள் கிளம்பவில்லை. வெள்ளையர்கள் மனித சமூகத்தில் உயர் நிலை கொண்டவர்கள் என்ற நிறவாத கருத்தியல் காலனித்துவ ஆட்சியை நியாயப்படுத்தியது. 

கருப்பின மக்களை அடிமையாக்கி வியாபாரம் செய்து தங்கள் மூல தனத்தை விருத்தி செய்த காலனித்துவ வாதிகள் யாழ்ப்பாண சாதிய முறைக்கெதிராக செயற்படவில்லை என்பது ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல. வரிகளை வசூலிப்பதற்கு ஏற்கெனெவே நிலைத்திருந்த சாதிய அடுக்குமுறை சாதகமாக இருந்தது மட்டுமல்ல, நிறவாத கருத்தியலும் சாதிய கருத்தியலும் ஒன்றுக்கொன்று உறுதுணையாக இருந்தன. பிறப்பால் வெள்ளையன் உயர்ந்தவன் என்ற அதே சிந்தனை முறையின் அடுக்கில் ஆதிக்க சாதி தன்னை அடுத்த படியில் வைத்துகொண்டது.

அதே முதலியார்களும் உடையார்களும் போர்த்துகேய டச்சு ஆட்சி காலப்பகுதிகளில் தங்கள் ஆதிக்கத்தை தொடர்ந்தனர். தங்கள் பெயர்களுக்கு முன் ஐரோப்பிய பெயர்களை வேறு பதித்து கொண்டனர் (தென் பகுதிகளிலும் இது நிகழ்ந்தது).

1707ஆம் ஆண்டு தேச வழக்காயிருந்த தேசவழமை சட்டம் டச்சுகாரரால் அச்சு வடிவம் கொடுக்கப்பட்டு அரச அங்கீகாரம் பெற்ற விடயம் சாதியத்திற்கான புதிய பரிமாணத்தை கொடுத்தது. இந்த சட்டமானது 12 முதலியார்களால் பரிசீலிக்கப்பட்டு சட்டமூலமாக்கப்பட்ட விடயம் ஒரு ’சாதிய’ சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. உள்ளூர் சமூக நடைமுறைகள் வழக்கங்களை மாற்றினால் அங்கு சமூக கொந்தளிப்பு ஏற்படும்; அது காலனித்துவ ஆட்சிக்கு குந்தகமாக அமையும்; எனவே உள்ளூர் வழமைகளை தொடர்ந்து பேணுவது அவசியம் என்பதை டச்சுக்கார அதிகாரிகள் எடுத்துரைத்தனர். சாதிய அடுக்கு முறையும் காலனித்துவ நிறவாத சிந்தனையும் எவ்வாறு ஒத்தோடின என்பதற்கு தேசவழமை சட்டமூலமாக்கப்பட்ட்மை சிறந்த உதாரணம்.

தேசவழமை சரத்து இல.5 (1869) – 4 ( தற்போது நடைமுறையில் இல்லை) இவ்வாறு கூறுகிறது: "இம்மாகாணத்தின் உரித்துகள் உரிமைகள் சம்பந்தமான முடிவுகளானது இம்மாகாணத்தில் தொன்று தொட்டு கடைப்பிடித்துவரும் வழமைகள், நடைமுறைகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும். இந்த உரித்தும் உரிமையும் உயர்சாதியினருக்கும் -குறிப்பாக வேளாளருக்கும், தாழ்ந்த சாதியினருக்கும் –குறிப்பாக பள்ளர், நளவர், கோவியர் போன்றாருக்கும் இடையே நிலவும் உறவு முறையிலிருந்தே எழுகிறது".

தேசவழமை சட்டரீதியான அங்கீகாரத்தை பெற்றது, சாதிய அடுக்குகளை பலப்படுத்துவதற்கான நவீன வடிவத்தை பெற்றது மட்டுமல்ல காலனித்துவ அரசுகள் தமது நிர்வாகத்தை பலப்படுத்தும் பொருட்டு சாதிய பிரிவுகளின் எண்ணிக்கை, மதிப்பீடுகள் எடுத்தது சாதியத்தின் இருப்புக்கான –நவீன வடிவத்தை கொடுத்தது. அச்சுப் பதிப்புகள் ஆகிய நவீனத்துவ முறைகள் சாதியத்தின் இருப்பையும் வீச்சையும் மேலும் வலுப்படுத்தின. எனவே நவீனத்துவத்தின் மூலம் ஆதிக்க சாதியினரான வெள்ளாளரின் இருப்பு அரசியல் ரீதியாகவும் பண்பாட்டு தளத்திலும் மீளுறுதி செய்யப்பட்டது.

பிரித்தானிய காலனித்துவகால கட்டத்தில் ஆட்சியாளர்கள் சாதிய அடுக்குகளை தொடர்ந்து தேசவழமை போன்ற சட்டங்களால் பேணினாலும் பிரித்தானிய காலனித்துவம் வணிக முதலாளித்துவத்திலிருந்து கைத்தொழில் முதலாளித்துவமாக 19ஆம் நூற்றாண்டு பகுதிகளில் மாறிய காலகட்டங்களில் பல்வேறு நவீன சிந்தனைகளையும் மாற்றங்களையும் படிப்படியாக ஐரோப்பாவிலும் காலனித்துவ நாடுகளிலும் தோற்றுவித்தது. 

20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் சம உரிமை, ஜனநாயகம், சமத்துவம் மனித உரிமை, மதச்சார்பின்மை, சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் போன்ற நவீன கருத்துக்கள் காலனித்துவ நாடுகளிலும் பரவின. அத்துடன் இந்திய தேசிய விடுதலை போராட்டம், ரஸ்ய புரட்சி போன்ற விடயங்கள் ஆதிக்கத்திற்கெதிராக போராட முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தன. இந்த கருத்தியல்களின் தாக்கம் இலங்கையிலும் நிகழ்ந்தது. இக்காலப் பகுதிகளில் இலங்கைக்கான சுதந்திர அமைப்புகள் மற்றும் தொழிலாளர் சங்க அமைப்புகளினதும் இடதுசாரி அமைப்புகளினதும் தோற்றம் காலனித்துவத்திற்கு எதிரான குரல்களாக மட்டுமல்ல சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கும் எதிராகவும் எழுந்தன.

ஆனால், 19ஆம் நூற்றாண்டு காலப்பகுதிகளில் ஆறுமுக நாவலர் ஆன்மீக கருத்தியல் தளத்தில் வெள்ளாளருக்கான இடத்தை பதித்தது மிக முக்கியமான விடயம். அறிவாளர்கள் ஒரு தனி வர்க்கமல்ல. மாறாக ஒவ்வொரு வர்க்கமும் தனது அறிவாளர்களை உருவாக்கின்றதென்பார் கிராம்சி. இந்த வகையில் ஆறுமுக நாவலர் வெள்ளாள சாதியினரின் படைப்பே. கிறிஸ்தவ மிசனரிகளின் ஆதிக்கத்துக்கு எதிராக அதே வழிமுறையை பயன்படுத்தி சைவப் பாடசாலைகளை உருவாக்கினார். காலனித்துவத்துக்கெதிராக குரல் கொடுத்தார். பாட்டுத் தமிழை வசன நடையாக்கினார் என்ற கதையாடல்களுக்கப்பால் ஆறுமுக நாவலர் வெள்ளாள சாதியினரின் ஆதிக்கத்தை நிலைப்படுத்தும் அறிவாளராக இருந்தார் என்பதே உண்மை. 

தமிழ், ஆங்கிலம், சமஸ்கிரிதம் போன்ற மொழிகளில் புலமை மிக்க நாவலர் மிகுந்த உழைப்பாளி. தனது சாதியினரின் மேலாதிக்கத்தை நிலை நாட்ட அயராது உழைத்தவர் என்ற வகையில் வெள்ளாளர் அவருக்கு நன்றியுடையவர்களாக இருப்பது ஆச்சரியமல்ல. ஆறுமுக நாவலரின் மிக முக்கிய பாத்திரம் மனு தர்ம சித்தாந்தத்தை வெள்ளாள மயப்படுத்தி சைவ சித்தாந்தமாக்கியதே. ஆறுமுக நாவலர் மிக எளிமையாக தமிழில் எழுத வல்லவர் மட்டுமல்ல, சிறந்த பேச்சாளர். அத்துடன் அச்சுப் பதிப்பு முறையை தனது கருத்துக்கள் பரவ முக்கிய துணையாக எடுத்தவர்.

மனுதர்ம சாத்திரத்தின் வர்ண அடிப்படையில் பார்ப்பனர்கள், சத்திரியர்கள், வணிகர்கள் என வரிசைக் கிரமமாக முன்னிலையில் நிறுத்தப்பட்டு சூத்திரர்கள் வர்ண முறையில் நான்காவது இடத்தில் வைக்கப்பட்டனர். சூத்திரரின் உயர்ந்த பணி பார்ப்பனர்களுக்கு சேவகம் செய்பவதே என்கிறது வர்ண முறை. ’அவர்ணர்’ என மனுசாத்திரம் வர்ணிக்கும் தலித்துகள் இந்த வர்ண முறைக்குள் அடக்கப்படாமல் தீண்டத்தகாதவர்களாகவும் சமூகத்தில் எவ்வித மதிப்போ மரியாதையோ இன்றி சமூகத்திலிருந்து முற்றிலும் ஒதுக்கப்பட்டு மிக கொடிய சமூக வன்முறையை சந்தித்து வந்தனர்; வருகின்றனர். 

நாவலர் சூத்திரரான வெள்ளாளரை சைவ சித்தாந்த முறைப்படி தூய்மைப்படுத்தும் கருத்தியலை மேற்கொண்டு வெற்றியும் கண்டார். நாவலரின் சைவ வினா விடை மனுதர்மத்தின் யாழ்ப்பாண வடிவமே. நாவலர் சைவசமயிகளை ஆதிசைவர், மகாசைவர், அநுசைவர், அவாந்தரசைவர், பிரவரசைவர், அந்தியசைவர் என அறு வகையாக பிரிக்கிறார். இங்கு அவாந்தர சைவராக வரிசைப்படுத்தப்படும் சூத்திரர் சிவதீட்சை மூலம் தெய்வீகப்படுத்தப்படும் முறையை நாவலர் அறிமுகப்படுத்துகிறார். இது மனு சாத்திரத்தின் சிந்தனைமுறையை கையாண்டு சூத்திரரான வெள்ளாளர் ஆன்மீக தளத்தில் உயர்த்தப்பட்ட விடயமே. 

ஆசாரியர்கள் ஆவதற்கான தகுதி நான்கு வர்ணத்தாருக்கும் உள்ளதென சைவ வினா விடை போதிக்கிறது. நாவலர் சொல்கிறார், ‘’பிராமணர் முதலிய நான்கு வருணத்தாருக்கும், க்ஷத்திரியர், க்ஷத்திரியர் முதலிய மூன்று வருணத்தாருக்கும் வைசியர், வைசியர் முதலிய இரண்டு வருணத்தாருக்கும், சூத்திரர், சூத்திரருக்குஞ் சங்கர சாதியருக்கும் ஆசாரியராகலாம். இந்நியமங் கிரியாகாண்டத்தின் மாத்திரமேயாம்; ஞான காண்டத்திலோ வெனின், நான்கு வருணத்துள்ளும் உயர்ந்த வருணத்தாருக்குத் தாழ்ந்த வருணத்தாரும் ஆசாரியராகலாம்.’’

ஆசாரியாக யோக்கியதை இல்லாதவர் யார் என்பதற்கு நாவலரின் பதில்: "நான்கு வருணத்துக்குட்படாதவன், கணவன் இருக்கக் கள்ளக் கணவனுக்குப் பிறந்தவனாகிய குண்டகன், கணவன் இறந்தபின் கள்ளக் கணவனுக்கு விதவையிடத்துப் பிறந்தவனாகிய கோளகன், வியபிசாரஞ் செய்த மனைவியை விலக்காதவன், குருடன், ஒற்றைக்கண்ணன், செவிடன், முடவன், சொத்திக் கையன், உறுப்புக் குறைந்தவன், உறுப்பு மிகுந்தவன், தீரா வியாதியாளன், பதினாறு வயசுக்கு உட்பட்டவன், எழுபது வயசுக்கு மேற்பட்டவன், கொலை, களவு முதலிய தீயொழுக்கமுடையவன், சைவாகமவுணர்ச்சியில்லாதவன் முதலானவர். (சொத்தி = ஊனம்)"

மனு சாத்திரத்தில் பார்ப்பனர்களுக்கு சூத்திரர்கள் ஆசாரிகளாவதென்பது கொல்லத்தகுந்த குற்றம். ஆனால் வெள்ளாளர் பார்ப்பனர்களுக்கும் ஆசாரியாகலாம் என்ற நாவலரின் புதிய வரைவிலக்கணம் வெள்ளாளருக்கு ஆன்மீக கலாச்சார தளத்தில் உயர்ந்த ஸ்தானத்தை கொடுத்தது. ஆனால் தலித் மக்கள் சைவராக இருப்பினும் அவர்கள் தீண்டத்தகாதவர்கள் சமூகத்திலிருந்து விலக்கப்பட்டவர்கள் அவர்களுக்கு ஆன்மீக கலாச்சார தளத்தில் இடமில்லை. 

அது தவிர, சிறு தெய்வ வழிபாடு போன்ற சமய நடவடிக்கைகளை எதிர்த்ததன் மூலம் நாவலர் வெள்ளாளருக்கான ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட சமய கலாச்சார மேலாதிக்கத்தை உருவாக்கினார். சைவ ஆகம மயப்பட்ட சமயாசாரங்கள், விரதங்கள் போன்றவை இந்தியாவை விட அதிகப்படியாக யாழ்ப்பாணத்தில் இன்றும் தொடர்வதற்கு நாவலரின் நவீனத்துவ சைவ வழிமுறை அடிப்படை.

நாவலரின் பங்கு வெள்ளாளரின் சாதிய தூய்மையாக்கலுடன் சேர்ந்து கலாச்சார தளத்தில் அவர்களுக்கான புதிய அந்தஸ்தை கொடுத்தது. தேசவழமை காலனித்துவ காலத்தில் சட்டமூலமாகி வெள்ளாளரின் அரசியல், பொருளாதார மேலாதிக்கத்தை வலுப்படுத்தியதும் கலாச்சார தளத்தில் வெள்ளாளர் ஆன்மீக அந்தஸ்து அடைந்ததும் வெள்ளாளரின் அரசியல் சமூக அந்தஸ்தை மேலும் உரமாக்கியது. வெள்ளாளருக்கு அரசியல் ஆட்சி உரிமை காலனித்துவ காலத்தில் இருக்கவில்லை யெனினும் அரசியல், சட்ட, நிர்வாக துறைகளில் அவர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

நாவலரின் பாத்திரமானது கிராம்சியின் மொழியில் வினைத்திறனான அறிவாளரின் ( organic intellectual)பாத்திரமாகும். பாரம்பரிய அறிவாளர்கள் தாங்கள் தனித்துவமானவர்கள் எனும் நினைப்பில் இருப்பவர்கள். உதாரணமாக மதகுருக்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தில் அதிகாரத்தை வைத்திருப்பவர்கள் . இவர்கள் பாரம்பரிய சமூக பாத்திரத்தை வகிப்பவர்கள். மாறாக வினைத்திறனான அறிவாளர்கள் குறிப்பிட்ட சமூக குழுவின் அபிலாசைகளை இயல்பாக முன்னெடுப்பவர்கள். அதன் சிந்தனை மற்றும் ஒழுங்கமைப்பின் பங்காளர்கள். காலனித்துவ ஆட்சியில் வெள்ளாள இந்து மேலாண்மைக்கு வந்த நெருக்கடி நிலைக்கெதிரான ஒழுங்கமைப்பாளராக கலாச்சார அறிவியல் தளங்களில் நாவலர் செயல்பட்டார் என்பது மிகையல்ல. இவரது அறிவாளர் பாத்திரம் தலித் மக்களை முற்றாக புறம் தள்ளி ஆதிக்க சாதியினருக்கு அடிமையாயிருக்கும் நிலையை நவீன சைவ சனாதன முறையூடாக நியாயப்படுத்தியது. இதற்கான செயல்பாடுகளை கல்வி சமய ஆசாரம் பிரசங்கம் மற்றும் பரப்புரை போன்ற கலாச்சார தளங்களில் நாவலர் முன்னெடுத்தார். 

அத்துடன் காலனித்துவ காலத்தில் சாதிய ரீதியான மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆதிக்க சாதியினரான வெள்ளாளருக்கு தாங்கள் பெரும்பான்மை என்ற பலத்தை மட்டுமல்ல மற்றைய சாதியினர் குறிப்பாக தலித் மக்கள் தாம் அரசியல், பொருளாதார, கலாச்சாரத் தளங்களில் புறம் தள்ளப்பட்டவர்கள் மட்டுமல்ல எண்ணிக்கையிலும் குறைந்தவர்களென்ற நிலைக்கும் தள்ளபட்டிருக்கலாம்.

காலனித்துவ கல்விமுறை மூலம் பயனடைந்தவர்கள் ஆதிக்க சாதிகளே. தலித் மக்கள் கல்வி கற்கும் உரிமை உட்பட பல்வேறு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டிருந்த காலமது. வீதியில் நடப்பதிலிருந்து குடிக்கும் நீர் உடுக்கும் உடை வரை தலித்துகளுகான பல்வேறு விதிமுறைகளை ஆதிக்க சாதியினர் அமைத்திருந்தனர். தலித் ஒருவர் இறந்த பின் அவரை அடக்கம் செய்வது கூட எப்படி என்பதை இந்த விதிமுறை கொண்டிருந்தது. பாடசாலைக்கு செல்ல பிற்காலத்தில் அனுமதி வழங்கப்பட்டிருப்பினும் அவர்கள் நிலத்தில் அமர்ந்தே படிக்க அனுமதி கொடுக்கப்பட்டது.

எனவே வெள்ளாளரின் ஆதிக்கம் அரசியல், கல்வி, சமயம், பொருளாதாரம் ஆகிய பல்வேறு தளங்களில் தன்னைப் பலப்படுத்திக் கொண்டது. காலனித்துவ காலத்தில் ஆதிக்க சாதிய கருத்தியலும் நடைமுறையும் சூழலுக்கேற்ப தகவமைத்து கொண்டது மட்டுமல்ல காலனித்துவ, நிறவாத சிந்தனைக்கூடாக ஆதிக்க சாதியம் தன்னை அடையாளப்படுத்தவும் செய்தது. இதற்கான கலாச்சார தளம் –நாவலர் போன்றவர்களால் வலுவாக்கப்பட்டது. 

காலனித்துவத்திற்கு எதிரான அரசியல், சமூக எதிர்ப்புணர்வுகள் எழுந்த காலகட்டமான 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் ஆதிக்க சாதிய கருத்தியலும் நடைமுறையும் ஏற்கெனவே வலுக்கொண்டிருந்தது ஒரு முக்கிய வரலாற்று போக்காகும். 

வெள்ளாளர் என்பது பிறப்பால் மட்டும் உருவானதல்ல. காலப்போக்கில் அகம்படியார், செட்டி, தனக்காரர் போன்ற பல்வேறு ஆதிக்க சாதிகள் இணைந்து வெள்ளாளர் என்ற ஒரு பரந்த சாதிய பிரிவினுக்குள் அடங்கினர் என்கிறார் அரசரட்னம். வெள்ளாளருக்குள் பல உப பிரிவுகள் இருப்பினும் தலித் மக்களுக்கெதிரான செயல்பாடுகளில் அவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வெள்ளாளர் என்ற பொது அடையாளம் அவர்களை ஒன்றிணைத்தது. அதுமட்டுமல்ல வெள்ளாளர் என்ற பரந்த அடையாளம் எண்ணிக்கை ரீதியிலும் ஆதிக்க சாதிக்கான பலத்தை கொடுத்தது.

ஒருவகையில் காலனித்துவத்திற்கு எதிரான தேசிய விடுதலைக்கு இன, சாதிய, சமய பிரிவினைகள் தடையாக இருக்குமென்ற சிந்தனை போக்கு ஆரம்பத்தில் இருந்த போதும் ஆதிக்க சாதிய கருத்தியலே சமூகத்தில் வேரூன்றி இருந்தது.

1920களில் யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் இன, மத, சாதிய வேறுபாடுகளை எதிர்த்து காந்திய சிந்தனை முறையை வரித்து கொண்டு தீண்டாமைக்கு எதிரான குரலை கொடுத்திருப்பினும் அது ஒரு வலுவான கருத்தியலாக வளர விடாமல் தடுப்பதில் ஆதிக்க சாதிகள் கவனமாக இருந்தனர். யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் சம பந்தி, சம போசனம், பாடசாலை அனுமதி என்ற மூன்று விடயங்களை மூலமாக கொண்டு தனது தீண்டாமைக்கெதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டது. காந்தி, பெரியார், நேரு போன்றவர்களின் யாழ்ப்பாண வருகை காலனித்துவத்திற்கு எதிரான போராட்ட சிந்தனையை பரவ செய்தது ஒருபுறம் இருக்க, பழமைவாத வெள்ளாள ஆதிக்கத்திற்கெதிரான சாதிய எதிர்ப்பு கருத்தியலையும் உருவாகியது. 

1927ல் உருவான ஒடுக்கப்பட்ட தமிழ் தொழிலாளர் சங்கம் (Forum for Depressed Class Tamil Labourers) சாதியத்துக்கெதிரான போராட்டங்களை முன்னெடுத்தது. 

யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசின் சாதிய எதிர்ப்பு கருத்தியல் மற்றும் ஒடுக்கப்பட்ட தமிழ் தொழிலாளர் சங்க போராட்டங்க்கள் பழமைவாத வெள்ளாள ஆதிக்க சாதி கருத்தியலுக்கு சவாலாக இருந்தது. இந்த வரலாற்று நெருக்கடியை ஆதிக்க சாதி எதிர்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. ஆதிக்க வர்க்கத்தின் பாத்திரம் தேக்க நிலையடைந்து. அதன் கருத்தியல் தளம் குறுக்கப்படும் நெருக்கடி நிலை வரும் போது அது வன்முறையை கையிலெடுக்கும் என்கிறார் கிராம்சி. இவ்வாறான நெருக்கடி நிலையை எதிர்கொள்ள 1930களில் ஆதிக்க சாதியினர் தலித்துகள் படிக்கும் பாடசாலைகளுக்கு தீமூட்டினர். தலித் மக்கள் மேல் வன்முறை ஏவப்பட்டது. மறுபுறம் இராமநாதன் தமிழ் ஆதிக்கசாதிக்கான அரசியல் கருத்தியல் தலைமையை கொடுத்தார். பாடசாலைகளில் சம உரிமை என்ற கருத்துக்கு எதிராக சாதிய ரீதியாக பாடசாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். அத்துடன் சர்வசன வாக்குரிமை ஆபத்தானது. அது தலித்துக்கள், படிப்பறிவற்றவர்கள் தலைமையை கைப்பற்ற வழிவகுத்து சமூக கட்டமைப்பை சீர்குலைக்குமென வாதித்தார். இராமநாதன் ஆறுமுகநாவலரின் கருத்தியல் மேலாண்மையின்வடிவமாகி தலித் மக்களை முற்றாக புறம் தள்ளும் சிந்தனை போக்கிற்கு தலைமை தாங்கினார். 

யாழ்ப்பாண வாலிபர் சங்கம் மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்திய நிலை பழமைவாத கருத்தியலுக்கான எதிர்சவாலாக இருந்த நெருக்கடியை ஆதிக்க சாதி தலைமை பல்வேறு தளங்களில் வன்முறை மூலமாகவும் ஆதிக்க கருத்தியல் மூலமாகவும் எதிர்கொண்டது. வெள்ளாளர் எண்ணிக்கையில் அதிகமாக உள்ள நிலையும் அதற்கு அனுகூலமாக இருந்ததெனலாம். யாழ்ப்பாண வாலிபர் சங்கத்தின் வீழ்ச்சிக்கு சாதிய ஆதிக்க கருத்தியலின் வீச்சு ஒரு முக்கிய காரணி எனலாம். யாழ்ப்பாண வாலிபர் சங்கம் சர்வசன வாக்குரிமைக்கு ஆதரவாக இருந்தனர். அதே வேளை இனரீதியான பிரதி நித்துவம் என்ற நிலைப்பாட்டை பழமைவாத தலைமை எடுத்தது. 1920களில் முதலாவது மகாயுத்தம் மற்றும் பிரித்தானியாவில் தொழிலாளர் கட்சியின் வருகை ஆகிய விடயங்கள் காலனிகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வழி கோலியது. இதன் தொடர்ச்சியாக இலங்கையிலும் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளபட்டன.

1931ல் சர்வசன வாக்குரிமை நடைமுறைக்கு வந்தபோதும் இராமநாதன், பொன்னம்பலம் போன்ற தமிழ்த் தலைமை யாழ்ப்பாண சாதிய பழமைவாதத்தை நிலை நாட்டி வெற்றி கொண்டன. சர்வசன வாக்குரிமைக்கு மாறாக இனரீதியான பிரதி நித்துவம் என்ற கோட்பாடு தமிழ்த் தலைமையால் முன்வைக்கப்பட்டது. இது ஒருபுறம் இருக்க சுயராச்சிய கோரிக்கையை முன்வைத்து தேர்தலை பகிஸ்கரிக்க யாழ்ப்பாண் வாலிபர் சங்கம் அழைப்பு விட்டதற்கெதிரான செயல்பாடுகளை தமிழ் பழமைவாத தலைமை முன்னெடுத்தது. வாலிபர் காங்கிரஸ் கூட்டங்கள் குழப்பபட்டு ஒரு கூட்ட பந்தல் தீக்கிரையாக்கப்பட்டது. 1934ல் வாலிபர் சங்கம் முற்றாக செயலிழந்து பழமைவாத தலைமை வெற்றிகொண்டது. இது சாதிய மேலாதிக்கத்திற்கான வெற்றியே. 

ஆனாலும் ஆதிக்க சாதியத்திற்கு எதிரான தலித் அமைப்புக்களின் உருவாக்கங்களும் செயல்பாடுகளும் தொடர்ந்தன. 1943ல் சிறுபான்மை தமிழர் மகாசபையின் உருவாக்கமும் தலித் மக்களுக்கான தனி பிரதிநித்துவ கோரிக்கைகளும் தமிழ் பழமை வாத சாதிய தலைமையை அவர்களது தளத்திலேயே எதிர்கொண்டன. தலித் மக்களுக்கு பல்வேறு கொடுமைகளை பாரம்பரியம் என்ற பேரில் இழைத்து வந்து, அதனை வெட்கமின்றி நியாயப்படுத்திய இத்தலைமை, தமிழர் என்ற ஒருகுடைக்குள் தலித் மக்களை இன ரீதியான பிரதிநித்துவ கோரிக்கைக்குள் அடக்க முயன்றபோது தலித் மக்கள் ’தமிழர்கள்’ என்ற பெரும் கதையாடலுக்குள் அடங்க மாட்டார்களென, தனிப் பிரதிநித்துவ கோரிக்கையை முன்வைத்தது மகாசபை.

மகாசபையினதும் மற்றும் தலித் இயக்கங்களினதும் மாற்றுக் கருத்தியலுக்கும் ஆதிக்க சாதியினரின் ஆதிக்க கருத்தியலுக்குமான போராட்டகளமாகவே யாழ்ப்பாணம் இருந்திருக்கிறது; இருந்து வருகிறது. இந்த வரலாற்று போக்கில் ஆதிக்க சாதிய கருத்து நிலை சமூக சூழலுக்கு தக்கவாறு தன்னை தகவமைத்துத் கொள்வதன் மூலமும் சில விட்டுக் கொடுப்புகளை மேற்கொள்வதன் மூலமும் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து பேணி வருகிறது. 

1948ல் இலங்கை சுதந்திரம் அடைந்த பின் சிங்கள பெரும்பான்மை ஜனநாயகம் என்ற அரசியல் சூழலில் யாழ்ப்பாண பழமைவாத தலைமைக்கு இரு விதமான நெருக்கடிகள் உருவாகின. ஒருபுறம் தமிழ் பழமைவாத தலைமையும் ஆதிக்க சாதியும் காலனித்துவ காலங்களில் அனுபவித்து வந்த அதிகாரங்களும் சலுகைகளும் சிங்களப் பெரும்பான்மை அரசியல் பரப்பில் படிப்படியாக குறைந்துவரும் நிலை தோன்றியது. மறுபுறம் தலித் மக்களின் விழிப்புணர்வும் போராட்டமும் பழமைவாத தலைமக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. ஏனெனில் அவர்களது தலைமை ஆதிக்க சாதியின் நலங்களை மட்டும் பிரதிபலிப்பதாக இருந்ததே. சிங்கள பெரும்பான்மை அதிகாரம் கொவிகம, ரடல சாதியினரின் அதிகாரமாகவே இருந்து வருகின்ற தென்பது யதார்த்தமெனினும் பழமைவாத அரசியலுக்கு தலைமை தாங்கிய இலங்கை காங்கிரஸ் கட்சிக்கு அவ்வாறான அரசியல் அதிகாரத்தை பெற முடியவுமில்லை. தலித் மக்களை தங்களுடன் இணைக்கும் குறைந்த பட்ச காந்திய வழிமுறையான ’ஹரிஜன் சிந்தனை’கூட அவர்களுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை.

இந்த நெருக்கடியின் உருவாக்கமே தமிழரசு கட்சி. தென்னிலங்கையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உருவாக்கத்திற்கும் தமிழரசுக் கட்சியின் உருவாக்கத்திற்கும் பல ஒற்றுமைகள் உண்டு. 1949ல் தமிழரசு கட்சியும் 1951ல் சுதந்திர கட்சியும் பழமைவாத காங்கிரசிலும் யூ.என்.பி.இலும் இருந்தும் பிரிந்து வந்த கட்சிகள். இவை தமது அரசியல் செயற்திட்டத்திற்கான கருத்தியலாக மக்களை வசீகரிக்கும் கருத்துகளை வைத்தனர். சுதந்திரக் கட்சி பரந்துபட்ட சிங்கள மக்களை வசீகரப்படுத்தும் ஜனரஞ்சக அரசியல் கருத்தியலையும் தமிழரசுக் கட்சி பரந்துபட்ட தமிழ் பேசும் மக்களை வசீகரப்படுத்தும் ஜனரஞ்சக (polulist) கருத்தியலையும் முன்வைத்து வெற்றி கொண்டன. ஆனால் இரண்டு கட்சிகளும் ஆதிக்க சாதி அதிகாரத்தை அரசியல் கலாச்சார தளங்களில் எதிர்கொள்ள தயங்கின. மாறாக ஒரு சமரச நிலையை முன்னெடுத்தன. எனவே சாதிய கருத்தியலான ஆறுமுக நாவலரின் சைவ ஆகமத்தை மறுதலித்து 

தமிழரசு கட்சித்தலைமை அடிப்படையில் ஆதிக்க சாதிகளின் நலன்களுக்கு எதிராக செயல்படவில்லை. ஆனால் தனது அரசியல் அபிலாசைகளை அடைய சாதிய ஆதிக்க பழமைவாத போக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறதென அடையாளம் கண்டது. அதுமட்டுமல்ல வெளிப்படையான சாதிய ஆதிக்க அரசியல் தமிழர் என்ற பொது அடையாள அரசியல் முன்னெடுப்புக்கு துணை போகாது என்பதையும் தலித் மக்களின் சில உரிமைகள் மறுக்கப்படும் வரை தமிழ் அரசியல் பரப்பில் அவர்கள் இணைக்கப்படுவது சாத்தியமல்ல என்பதையும் தமிழரசுக் கட்சியினர் உணர்ந்திருந்தனர். சாதியம் மட்டுமல்ல பிரதேசம், மதம், அனைத்துக்கும் அப்பால் தமிழ் பேசும் மக்கள் என்ற மொழியால் இணைந்த மக்கள் கூட்டத்தின் ஆதரவு தமது அரசியல் இருப்புக்கு அவசியம் என்பது தமிழரசுக் கட்சி ஏதோ திட்டம் போட்டு தீர்மானித்த விடயம் அல்ல. மாறாக அந்த அரசியல் சமூக சூழலில் ஒரு குறிப்பிட்ட சாதிய/வர்க்க அபிலாசைகளை பிரதிபலிக்க எழுந்த ஒரு சமூக வெளிப்பாடே பரந்து பட்ட தமிழ் அடையாள அரசியல்.

இந்த வரலாற்று போக்கில் இலங்கையில் 1957ல் சட்டமாக்கபட்ட சாதியத்திற்கெதிரான சமூக குறைபாட்டு தடைச் சட்டத்தை அமூல் படுத்துவதற்கு தமிழரசுக் கட்சி முன்னின்றது. இதன் தொடர்ச்சியாக 1958ல் சிறுபான்மை தமிழர் மகாசபையினருடன் சேர்ந்து தேனீர் கடைகளில் தலித் மக்களை அனுமதிக்கக் கோரி போராட்டங்களை நடத்தியது. இந்த நிகழ்ச்சிப் போக்கு தலித் மக்கள் தமிழரசுக் கட்சியில் இணைவதற்கான சூழலை உருவாக்கியது. ஆனால் சாதியத்தின் வேர்களை அழிக்கவோ அல்லது சாதியத்திற்கெதிரான தொடர்ந்த போராட்டங்களை முன்னெடுக்கவோ தமிழரசுத் தலைமை முனையவில்லை. ஏனெனில் யாழ்ப்பாண வெள்ளாளரின் அபிலாசைகளுக்கு எதிரான அரசியல் கருத்தியல் தளம் அதற்கு இருக்கவில்லை. மாறாக ஆதிக்க சாதிகளின் அரசியல் கருத்தியல் ஆட்பலத்தின் அடிப்படையிலேயே அதன் அரசியல் தளம் அமைந்திருந்தது. எனவே சமூகத்தில் அடிப்படை மாற்றங்கள் நிகழாமல் ஆதிக்க சாதியின் ஆதிக்கம் குறையாமல் தலித் மக்களுக்கான சில விட்டுக் கொடுப்புகளை செய்வதன் மூலம் தமிழ் அடையாள அரசியலை அது முன்னெடுத்தது. 

தமிழரசுக்கட்சியின் கலாச்சார கருத்தியல் நிலைப்பாடானது நாவலர் இராமநாதன் தலைமைகளில் இருந்தெழுந்த தலித்துகளை முற்றாக புறம் தள்ளும் கருத்தியல் நிலைப்பாட்டிலிருந்து வேறுபட்டிருந்தது உண்மையே. இலங்கை அரசு சிங்களபெரும்பான்மை என்ற கருத்தியலுக்கூடாக கொவிகம ரடல சாதியினரின் மேலாண்மையை நிறுவியதற்கெதிரான அரசியலுக்கு தமிழ் அடையாளத்திற்கூடாக ஒரு ஒருங்கிணைப்பை தமிழரசு கட்சி ஏற்படுத்த முயன்று ஓரளவு வெற்றியும் கண்டதெனலாம். ஆனால் சைவ சித்தாந்த கருத்தியலை உடைத்துக்கொண்டு அது வெளிவரவில்லை. இந்த ஒருங்கிணைப்பு தலித் மக்களை தமிழர் என்ற அடையாளத்துள் இணைத்து கொண்ட அதேசமயம் அவர்களது ஒடுக்கப்பட்ட சமூக நிலைக்கெதிரான கருத்தியல் போராட்ட நெறி முறைகளை கொண்டிருக்கவில்லை. சம பந்தி போசனம் போன்ற சில அடையாள –நடவடிக்கைகள் ஆங்காங்கே நடத்துவதுடன் சாதியத்திற்கெதிரான போராட்டங்கள் மட்டுப்படுத்தபட்டன. 

எனவே தலித் மக்கள் தமிழர் என்ற அடையாள அரசியலுக்குள் கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பினும் நடைமுறையில் அவர்களுக்கான சமூக நீதி கிடைக்கவில்லை. தலித் மக்களை தமிழர் என்ற அடையாளத்துள் ஒன்றிணைக்கும் அதேவேளை அவர்களை உள்ளிருந்து புறம்தள்ளும் கருத்தியலே தமிழரசுக்கட்சிக்கான நிலைப்பாடாக இருந்தது . நாம் தமிழராக ஒன்றுபடுவோம் சாதியாக வேறுபடுவோம் என்பதை சொல்லாமல் சொல்லும் நிலைப்பாடே இது. 

ஆனாலும் தலித் மக்களின் அரசியல் விழிப்புணர்வு இந்த நிலைப்பாட்டிற்கு எதிர்ப்புகளை காட்டிகொண்டு தான் இருந்தது. 

1960களின் நடுப்பகுதிகளில் தலித் மக்கள் அருந்ததியர் சங்கம், திருவள்ளூவர் மகாசபை போன்ற அமைப்புகளூடாக தமது எதிர்ப்பு குரல்களை எழுப்பி வந்தனர். சிறுபான்மைத் தமிழர் ஐக்கிய முன்னணி அமைத்து தாம் இரண்டாம் தர பிரஜைகளாக நடாத்தப்படுவதற்கெதிராக குரல் எழுப்பினர். தமிழரசுத் தலைமை அவர்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்த்த போதும் உரிய நடவடிக்கைகளை எடுக்க தயங்கியது. ஏனெனில் அவர்களது அரசியல் இருப்பு பெரும்பான்மை வெள்ளாள அபிலாசைகளால் தீர்மானிக்கப்பட்ட நிலையில் தமிழரசு கட்சி சாதியம் சம்பந்தமாக மெத்தனப் போக்கையே கையாண்டது. 

இந்த இடைவெளியானது கம்யூனிஸ்ட் கட்சியால் நிரப்பப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சி முன்னின்று ஒழுங்கு படுத்திய ஆலயப் பிரவேசப் போராட்டம் தலித் மக்களில் பெரும்பான்மையினரை ஈர்த்தது. தீண்டமை ஒழிப்பு வெகுஜன முன்னணி என்ற அமைப்பு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் சாதியத்திற்கெதிரான பல்வேறு போராட்டங்களை அக்காலகட்டத்தில் முன்னெடுத்தது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி தலித் மக்களின் பிரச்சனைகளை வர்க்கப் பிரச்சனையாக மட்டுமே பார்த்தது. வர்க்க ரீதியான விடுதலையின் பின் சாதிய அடக்குமுறை அழிந்துவிடுமென்ற பொருளாதார அடிப்படைவாத கண்ணோட்டத்தையே கம்யூனிஸ்ட் கட்சி கொண்டிருந்தது. தமிழரசுக் கட்சியை விட தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய பாத்திரம் வகித்திருப்பினும் சாதியத்தினது அடிப்படைகளை புரிந்து கொள்ள தவறி வர்க்கத் தராசின் மூலம் சாதியத்தை நிறுத்தது. 

ஒருவகையில் தலித் மக்களுக்கு போராட்ட உணர்வையும் விழிப்புணர்வையும் தூண்ட கம்யூனிஸ்ட் கட்சி அக்காலகட்டத்தில் உந்து சக்தியாக இருந்தது உண்மையே. பல கம்யூனிஸ்ட் கட்சி போராளிகளும் தலைவர்களும் சாதியம் கேடான விடயம் என்பதை மனப்பூர்வமாக நம்பினார்கள் என்பதும் யதார்த்தம். ஆனாலும் தலித் மக்களின் தனித்துவமான பிரச்சனைகளை சாதியத்தின் தகவமைப்பை கம்யூனிஸ்ட் கட்சி கணக்கில் எடுக்கவில்லை.

சாதியமானது மேற்கட்டுமானத்தின் ஒரு பிரதிபலிப்பு; அடிக்கட்டுமானம் தகர்ந்து விட்டால் சாதியம் தானாக அழிந்துவிடும் என்ற வரட்டுதனமான தத்துவார்த்த பார்வை பரவலாக வட இலங்கை கம்யூனிஸ்ட்டுகள் மத்தியில் இருந்தது; இருக்கிறது. அத்துடன் சீனாவினதோ ரஸ்யாவினதோ உத்தியோகபூர்வ கம்யூனிச கோட்பாடுகளை மீறி செயல்படுவதற்கான நிலையில் அக்கால சீன, ரஸ்ய சார்பு கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கவில்லை.

எனவே தமிழரசுக் கட்சியினரோ கம்யூனிஸ்ட் கட்சியினரோ தலித் மக்களின் சமூக விடுதலையின் அடிப்படையை புரிந்து கொண்டு அதனை முதன்மைப் படுத்திய அரசியல் வேலைத் திட்டங்களை கொண்டிருக்கவில்லை எனலாம். 

தலித் மக்களின் ஆலயப் பிரவேசம், தேனீர்கடை பிரவேசம் போன்ற போராட்ட நிகழ்வுகளுக்கெதிராக ஆதிக்க சாதி வன்முறையைக் கிளம்பியது. அந்த வன்முறையை தலித் மக்கள் வன்முறை மூலமே எதிர் கொள்ள நேர்ந்த்து. கோவில் பிரச்சனைகளுக்குள் அரசியல் நுழையக்கூடாதென்ற உப்புச்சப்பற்ற விளக்கத்தை தமிழரசுக் கட்சி ஒரு புறம் கூறிக் கொண்டது. மறுபுறம் ஆதிக்க சாதியினர் செல்வநாயகத்தை எம்.பி.ப் பதவியை துறந்து ஆலயப் பிரவேசத்தை முன்வைத்து தேர்தலில் நிற்குமாறு கோரினர்.

இந்த நெருக்கடியை சமாளிக்க தமிழரசு கட்சி சாதியத்திற்கெதிராக ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்கு மாறாக சாதிய பிரச்சனையை திசை திருப்பும் நோக்கில் நடந்து கொண்டதென்கிறார் பிறயன் பபன்பேகர் என்ற அறிஞர். அவரது கருத்தின் படி அக்காலகட்டத்தில் யூ.என்.பியுடன் கூட்டு சேர்ந்திருந்த தமிழரசுக் கட்சி திருகோணமலை கோவிலை இந்துக்களின் புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த யூ.என்.பி உறுதியளித்தது போல் செய்ய தவறிய காரணத்தால், கூட்டிலிருந்து விலகி தமிழருக்கு அநீதி என்ற பதாகையின் கீழ் மீண்டும் தமிழர்கள் என்ற அடையாள அரசியலுக்குள் அனைவரும் இணைந்தனர். இன ரீதியான எதிர்ப்பு நிலைப்பாடு அரசியல் லாபத்தை ஈட்டிதரும் என்பதை மீண்டும் படித்துக் கொண்டது தமிழரசு கட்சி என்கிறார் அவர். அத்துடன் இந்த லாபத்தை தக்கவைக்கும் முகமாக வெள்ளாளரின் நலன்களுக்கு குந்தகம் ஏற்படாமல் ஒருசில தலித்துகளை தேர்தலில் நிறுத்தும் கொள்கையையும் பிற்காலங்களில் தமிழரசுக் கட்சியும் பின்னர் கூட்டணியும் வரித்து கொண்டதென்கிறார். 

எனவே ஆதிக்க சாதியின் நலன்களுக்கு பாதகமின்றி தீண்டாமை ஒழிப்பு, தேர்தலில் சிறு பங்கு போன்ற சில விட்டுக் கொடுப்புகள், சமரசங்கள் ஆதிக்க சாதியின் நலன்களை முன்னிறுத்தியே நிகழ்ந்தன. இன்னொருவகையில் தலித் மக்களுக்கு எதிரான சாதிய கருத்து நிலைகளை சாதகமாக்கி தென்னிலங்கை கட்சிகள், பவுத்த குருமார்கள் மற்றும் இடதுசாரிகள் தலையிடும் நிலை வரவிடக் கூடாதென்ற அச்சமும் தமிழ் தலைமைகளுக்கு இருந்தன. எனினும் ஆதிக்க சாதியினரின் நலனை மறுதலித்து தலித் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான செயல் திட்டங்களை தனது அரசியல் நடவடிக்கைகளில் இணைத்துக் கொள்ள தமிழ்த் தலைமை முன்வரவில்லை.

தமிழ் மிதவாத அரசியல் 1983ல் தமிழர்களுக்கு மேல் அரசும் சிங்கள இனவாதிகளும் தொடுத்த வன்முறையால் அஸ்தமனத்துக்கு வந்தது. இளைஞர்களின் ஆயுத போராட்டம் மக்களின் ஆதரவு பெற்றது.

சாதி, பிரதேசம், மதம் இவற்றை கடந்து தமிழ் தேசிய உணர்வை கொண்டுவர அப்போதுதான் முளைவிட்டிருந்த இயக்கங்கள் மனப்பூர்வமாக விரும்பியிருப்பினும் காலப்போக்கில் ஆதிக்க சாதிய அரசியலுக்கப்பால் செயற்படாத நிலையே தொடர்ந்தது. 

இலங்கையரசின் இன அடக்குமுறையின் உச்சக்கட்ட காலமான ’83’ முடிந்து, இயக்கங்கள் பலம் பொருந்தி வரும் காலகட்டத்தில், 84ஆம் ஆண்டு காலப் பகுதியில் புத்தூர் பகுதியில் தலித் மக்களுக்கு மேலான அடக்குமுறை ஆதிக்க சாதியால் மேற்கொள்ளப்பட்டது. ஆயுதம் தாங்கிய பெரும் இயக்கங்களும் தமிழரசுக் கட்சி வழியில் சாதிய ஆதிக்கம் பற்றிய கோட்பாடுரீதியான நிலைப்பாட்டை எடுக்காமல், இலங்கை அரசுக்கெதிரான போராட்டமே இன்று முக்கியம் சாதிய முரண்பாடுகளை பின்னர் தீர்த்து கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டை எடுத்தது, ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பை சம்பாதிக்க விரும்பாத நிலையே ஆகும்.

ஈ.பி.ஆர்.எல்.எப்., என்.எல்.எப்.டி. போன்ற அமைப்புகள் சமூக விடுதலையை முன்வைத்து சாதிய ஆதிக்கத்தை எதிர்த்த போதும் யாழ்ப்பாண ஆதிக்க சமூகம் அவர்களை பள்ளர், பறையர் அமைப்புகளென ’பட்டம் சொல்லி’ தமிழ் அரசியல் பரப்பிலிருந்து ஓரங்கட்டியது. ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் இந்திய சார்பு அரசியலும் 1987க்கு பின்னர் இந்திய இராணுவத்தினுடன் அவர்கள் சேர்ந்தியங்கிய முறையும் இந்திய இராணுட அத்துமீறல்களை கண்டிக்கத் தவறியதும் ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் முழு அரசியல் செல்வாக்கையும் வீழ்த்தியிருப்பினும் 86களில் விடுதலைப் புலிகளின் மாற்று இயக்க அழித்தொழிப்பு நடவடிக்கையுடன் சகல மாற்று கருத்துக்களுக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.

விடுதலை புலிகள் சாதிப் பாகுபாட்டுக்கெதெரான தடை விதித்திருந்த போதும் சாதியத்திற்கெதிரான கோட்பாடு ரீதியான பார்வையை கொண்டிருக்கவில்லை. மாறாக விடுதலை புலிகள் என்ற இராட்சத இராணுவ இயந்திரத்தில் தலித்துக்கள், ஆதிக்க சாதிகள், பெண்கள், வயோதிபர்கள், குழந்தைகள் என அனைவருக்கும் சமமான பாத்திரம் கொடுக்கப்பட்டது. விடுதலைப் புலிகளில் இருந்த பெரும்பாலோர் சாதி, சமய பாகுபாட்டை முன்னிறுத்தவில்லை என்பது ஏற்றுகொள்ள பட வேண்டியிருப்பினும் விடுதலை புலிகளின் அரசியல் வறுமை ஆதிக்க சாதி நலன்களை பேணுவதற்கான ஒரு தளமாக அமைந்தது. 

ஒருவகையில் விடுதலைப் புலிகள் அமைப்புக்குள்ளோ அல்லது மற்றைய ஆயுத அமைப்புகளுக்குள்ளோ வெளிப்படையாக சாதிய பாகுபாடுகள் கடைப்பிடிக்கப்படவில்லை. யார் எந்த சாதியை சேர்ந்தவர்கள் என்ற விவரங்களிலும் அவர்கள் அக்கறைபடவில்லை. அமைப்புகளில் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாக இருந்த நிலை, மற்றும் அவர்கள் சமூகத்தை விட்டு பிரிந்த நிலை போன்ற விடயங்கள் ஒரு மேலோட்டமான சாதிய வேற்றுமையற்ற சமத்துவத்தை கொடுத்திருக்கலாம். குறிப்பாக விடுதலைப் புலிகள் ஒரு பலம் பொருந்திய இராணுவ அமைப்பாக பரிணமித்த பின் தமிழ் சமூக நடைமுறைகளுக்கும் புலிகள் அமைப்புக்கும் ஓர் இயல்பான பரஸ்பர இணைப்பு இருக்கவில்லை. எனவே சாதிய நடைமுறைகள் சமூகத்தில் தொடர்ந்தன. 

விடுதலைப் புலிகள் அமைப்புக்குள் சாதி மறுப்புத் திருமணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அவை கலப்பு மணங்கள் என்று தெரிந்தும் தெரியாமலும் நிகழ்ந்திருக்கலாம். ஆனால் இவ்வாறான நிகழ்வுகள் ஒரு மூடப்பட்ட அமைப்புக்குள் நிகழ்ந்தன. இன்னொருவகையில் விடுதலை புலிகளில் இருந்தவர்கள் இன்னொரு ’சாதி’யாகவே பார்க்கப்பட்டனர். கலப்பு மணங்கள் புரிந்து, விடுதலை புலிகளின் வீழ்ச்சிக்கு பின் சமூக வாழ்வை தொடர முயலும் முன்னைய விடுதலைப் புலி உறுப்பினர்கள் சாதிய சமூகத்தில் ஓரங்கட்டப்படும் நிலையும் இருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கும் சமூகத்திற்கும் இருந்த பாரிய இடைவெளி சாதியத்தை தக்கவைத்துக் கொண்டிருந்தது. 

யுத்தம், இடம் பெயர்தல் போன்ற நிகழ்வுகளால் தீண்டாமை ஒரளவுக்கு ஒழிந்திருப்பினும் சாதிய சிந்தனை முறையோ ஆதிக்கமோ ஒழியவில்லை. ஒருவகையில் விடுதலைப் புலிகள் காலத்தில் சாதிய பாகுபாடு வெளிப் பார்வைக்கு குடாநாட்டில் உறை நிலையில் இருந்த தோற்றத்தை கொடுத்த போதும் சாதிய நடைமுறைகள், அவை திருமணமாகட்டும் சடங்காகட்டும் தொடர்ந்தன. 

அதேவேளை ஆதிக்க சாதியினரில் பெரும் பிரிவினர் யுத்த காலத்தில் புலம் பெயர்ந்து அய்ரோப்பிய, அமரிக்க நாடுகளில் தஞ்சம் புகுந்து அங்கு ஒரு சாதிய குட்டி யாழ்ப்பாணத்தை உருவாக்கி விடுதலை புலிகளின் நிதி மையத்தினை இயக்குபவர்களாக இருந்தனர். வெளி நாடுகளில் கோவில்களிலிருந்து பழைய மாணவர் சங்கம் வரை புலிகளின் நிதி சேர்ப்பு மையங்களாக தொழிற்பட்டன. அடுத்து, ஆதிக்க சாதிகளே அமெரிக்கா ஐரோப்பாவில் படித்தவர்களாகவும் பணக்காரராகவும் பெரும்பாலும் இருந்தனர். சர்வதேச பிரச்சாரம், சர்வதேச நிதி, சர்வதேச ஆயுதக் கொள்வனவு இந்த மூன்று தளங்களும் விடுதலை புலிகளின் உயிர் நாடியாக செயல்பட்டன. இயல்பாக ஆதிக்க சாதிகளே புலிகளின் பிரதி நிதிகளாகவும் இருந்தனர். 

விடுதலைப் புலிகளின் வெளி நாட்டு பிரதி நிதிகள் பழமைவாத சிந்தனையும் சாதிய சிந்தனையும் கொண்டவர்களாகவே இருந்தனர். தமிழர் என்ற அடையாளத்தை வெளியில் சொல்லி கொண்ட போதும் சமூக தளங்களில் சாதிய அடையாளங்களை இறுக்கமாக பின்பற்றுபவர்களாகவே இருந்தனர். விடுதலை புலிகளுக்கு இது பிரச்சனையாக இருக்கவில்லை. 

எனவே விடுதலைப் புலிகளின் சாதிய வேறுபாட்டு எதிர்ப்புச் சட்டம் நடைமுறையில் சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கவில்லை. மாறாக இலங்கையில் ஆதிக்க சாதிகள் தமது ஆதிக்க நிலையை தக்கவைத்துகொண்டு சூழலுக்கேற்ப சில சமரசங்களை செய்து கொண்டனர். புலம்பெயர் ஆதிக்க சாதிய மேலாதிக்கத்துடன் விடுதலைப் புலிகள் ஒருவகை சமரசம் செய்து கொண்டனர். எனவே விடுதலை புலிகள் சாதிக்கெதிரான சட்டங்களை இயற்றியிருந்தும் தமிழர் என்ற அடையாளத்துக்குள் சாதி மறைப்பு செய்தனர். ஆனால் அவர்களது அரசியல் சாதியத்தை பொறுத்தவரை தமிழரசு கட்சியின் நவீன வடிவமே. 

எனவே ஆதிக்க சாதிச் சிந்தனையும் நடைமுறையும் மாறும் சூழல்களுக்கு தகவமைத்து கொண்டு தனது ஆதிக்கத்தை விட்டுக் கொடாமல் சில சமரசங்களுக்கூடாக தன்னை நிலை நிறுத்துகிறது. தனது ஆதிக்கத்திற்கு நெருக்கடி நிலை வரும் போது அது வன்முறையை நாடுவதும் எதிர்பார்க்கக்கூடியதே. 

விடுதலைப் புலிகளின் அழிவுக்கு பின்னர் சாதியம் புதிய நிலைகளுக்கேற்ப மீண்டும் தன்னை தகவமைக்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. ஆதிக்க சாதியினரின் ஆதிக்கம் மேலும் பலப்படுகிறது. குறிப்பாக:

• தமிழ்த் தேசிய விடுதலை போராட்டத்தில் ஒன்றுபடுதல் என்ற கருத்தியல் இன்று பலமிழந்ததாக இருக்கும் நிலை.

• யுத்தத்தின் பின்னால் ஏற்பட்ட நிலையான அரசுக்கான சூழல் வெளி நாட்டு முதலீடுகள் வியாபாரங்களை தங்கு தடையற்று அனுமதிக்கும் நிலையும் உலகமயமாக்கலும்.

• ஆதிக்க சாதியினர் (குறிப்பாக புலம் பெயர்ந்தோர்) தமது சொத்துக்களையும் நிலங்களையும் உரிமை கோரல்.

• இடம் பெயர்ந்தவர்கள் தமது கிராமங்களுக்கு திரும்புதலும் சமூக மீள் கட்டுமானமும். 

காலங்காலமாக ஆதிக்க சமூகத்தால் ஒதுக்கப்பட்டு இழிசனர் என பட்டம் சூட்டப்பட்ட தலித் மக்களில் பெரும்பாலோர் இன்றைய இலங்கை சூழலில் மிகவும் பிந்தங்கிய நிலையிலேயே உள்ளனர். தலித் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் படிப்பாலும் தொழிலாலும் முன்னேறி இருப்பினும் அலுவலகங்களிலும் பொது ஸ்தாபனங்களிலும் அவர்கள் புறக்கணிக்கபடும் நிலை நிலவுகிறது. தமது கிராமங்களுக்கு திரும்பும் ஆதிக்க சாதியினர் வெளி நாட்டவர் அனுப்பும் பணத்தின் மூலம் கோவில்களை புதுப்பிப்பதும் பாடசாலைகளை புதுப்பிப்பதுமான வேலைகளை செய்து தமது சாதிய, சமய கலாச்சாரத்தை புனருத்தாரணம் செய்கின்றனர். இந்த நடவடிக்கைகள் மூலம் யுத்த காலத்தில் இடம் பெயர்ந்த சூழலால் மறைக்கப்பட்டிருந்த சாதியம் மீண்டும் புத்துயிர்ப்பு அடைகிறது. அரசின் நவதாராள பொருளாதார கொள்கைகள் ஏற்கெனவே அடிமட்டத்தில் இருந்த தலித் மக்களை மேலும் நசுக்கும் நிலையில் ஏற்கெனவே பொருளாதார. அரசியல், கலாச்சார மேலாதிக்கம் பெற்றிருக்கும் ஆதிக்க சாதியினரின் அதிகாரத்தை வலுவடைய செய்கிறது. 

இதில் முக்கியமான விடயம், தலித் மக்களின் உரிமை சம்பந்தமான குரல் எழும் போது தற்போது சாதி இல்லை என்ற மறைப்பு அரசியல். ஒருவகையில் சாதியம் இல்லை என்பதன் பின்னால் உள்ள ஆதிக்க அரசியல் மிகவும் நுணுக்கமானது. தலித் மக்கள் தாங்கள் சாதிய ரீதியாக புறக்கணிக்கப்படுகிறோம் என்ற எதிர்ப்பு குரலை செயலிழக்கச் செய்யும் சாதுர்யமான ஆதிக்க சாதி அரசியல் இது. இந்த கருத்தியல் பின்புலத்தில் தான் சாதியம் தனது ஆதிக்கத்தை தற்சமயம் நிலை நாட்டுகிறது. ஆதிக்க சாதியின் நவீன நாவலர்கள் சாதிய ஆதிக்கத்தை பாதுகாப்பதில் கவனமாக இருந்து வருகிறார்கள். சாதி ஒழிந்து விட்டதென்று கூறிக்கொண்டு சாதியை பாதுகாக்கும் அனைத்து நடைமுறைகளையும் அவர்கள் மேற்கொள்கிறார்கள். 

முடிவாக, யாழ்ப்பாண ஆதிக்க சாதியானது வரலாற்றுப் போக்கில் வெள்ளாளர் என்ற பரந்த அடையாளத்துக்குள் பல உபசாதிகள் அடங்கிய ஒரு சாதிய ஆதிக்க கூட்டு. இந்த ஆதிக்கமானது மாறி வரும் சூழலுக்கேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு தேவையான நேரங்களில் தனது ஆதிக்கத்துக்கு குந்தகம் வராத முறையில் சமரசம் செய்வதும், சாதிய எதிர்ப்பு தனது ஆதிக்கத்திற்கான சவாலாக வரும் போது வன்முறை மூலம் எதிர்கொள்வதுமாக தனது சாதிய இருப்பை தொடர்ந்து பேணி வருகிறது. நாவலரால் தலித்துகள் முழுமையாக புறம் தள்ளப்பட்ட சைவ ஆகம கருத்தியல் காலனித்துவகால பகுதியில் மேலாண்மை செலுத்தியது. தமிழரசு கட்சி அதனை தொடர்ந்த ஆயுத அமைப்புகள் சாதிய அமைப்பை அதன் கருத்தியல் தளத்தில் எதிர்கொள்ளாமல் தமிழர் என்ற மேலோட்டமான அடையாள ஒருங்கிணைப்பூடான கருத்தியல் மேலாண்மையை உருவாக்கின. ஆனால் சைவஆகமகருத்தியலை மறுதலித்து தமிழ் அடையாள கருத்தியல் தோன்றவில்லை. மாறாக சைவ மறுமலர்ச்சியின் சாதியக் கருவில் உருவான குழந்தையே தமிழ் அடையாளம். எனவே சாதிய மேலாதிக்க கலாச்சார வேரை அது அசைக்கவில்லை. எனவே விடுதலை புலிகளின் தோல்வியின் பின் ஆதிக்க சாதிய கலாச்சார கருத்தியல் ‘சாதி இல்லை’ என்று கூறிக்கொண்டு வெளிப்படுவது ஒன்றும் ஆச்சரியப்படும் விடயமல்ல. அதனை எதிர்கொள்ள சமூக இயக்கம் அவசியம். 

உசாத்துணை நூல்கள்

1. Caste and Social Exclusion of IDPs in Jaffna Society . (Parmsothy Thanges)

2. The Laws and Customs of the Tamils of Sri Lanka ( H.W. Thambiah)

3. Prison Note Books , Gramsci 

4. Nation and National Identity in South Asia

5. The Sri Lankan Tamils – Ethnicity and Identity 

6. The persistence of caste , Anand Teltumbde 

7. The Sri Lanka Reader – History ,Culture and Politics
8. தலித் அறிக்கை – தலித் சமூக மேம்பாட்டு முன்னணி

9. சைவ வினாவிடை – ஆறுமுக நாவலர் 

10. யாழ்ப்பாணச் சமய நிலை – ஆறுமுக நாவலர்

(குவர்னிகா - 41வது இலக்கியச் சந்திப்பு மலரில் வெளியானது / யாழ்ப்பாணம் யூலை 2013)

இலங்கையில் அருந்ததியர் நிலை - என்.சரவணன்

சரிநிகரில்18 வருடங்களுக்கு முன்னர் அருந்ததியன் என்கிற பெயரில் தொடராக எழுதி வந்த குறிப்பை மாந்திருக்க மாட்டீர்கள். அருந்ததியர் சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதால். சென்ற முறை இலங்கை பயணம் பல கூட்டங்கள், சந்திப்புகள், செயற்பாடுகளால் மீண்டும் அவை புத்துயிர்ப்பு பெற்றுள்ளன. இம்முறை ஒரு மாநாட்டுக்கும் ஏற்பாடுகள் நடக்கின்றன.
லண்டன் இலக்கிய சந்திப்பில் எடுத்த தலைப்பை முழுமையாக பேச நேரம் போதவில்லை. 20 நிமிடங்களில் என்னத்தை சொல்ல...? ஆனால் அந்த சந்தர்ப்பத்தை எடுத்துக்கொள்வது தான் எங்களுக்குள்ள வழி
Video streaming by Ustream

தலித் அடையாளம் – டி.எம்.மணியின் நூல்களை முன்வைத்து



சில நாட்களுக்கு முன் நடந்த தலித் தொடர்பான கூட்டமொன்றில் நண்பர் ஒருவரோடு பேசிக் கொண்டிருந்தபோது "இக்கூட்டத்தில் வழங்கப்படும் சாப்பாட்டில் மாட்டுக்கறியெல்லாம் இல்லையே ! அதுவும் தலித் கூட்டத்தில் மாட்டுக்கறி இல்லாமல் சாப்பாடா?" என்றார். வேறொரு தருணத்தில் எழுத்திலும், பேச்சிலும் கொச்சையான சொற்களை கையாளும் எழுத்தாளர் ஒருவரைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது "அந்த எழுத்தாளர் தலித் அதனால் அவர் அப்படி பேசுவதுதானே சரியாக இருக்க முடியும்" என்றார்.

     மாட்டுக்கறியும், கொச்சையாக பேசுவதும் தலித்துகளின் அடையாளம் என்பது இதன் பொருள். தலித் பிரச்சனையில் கரிசனம் காட்ட விரும்பும் இடது சாரிகள் குறித்து ஒரேவிதமான கருத்தினையே வெளிப்படுத்துகின்றனர். குடி, அழுக்கு போன்றவற்றையும் தலித்துகளின் அடையாளமாக பேசமுனைந்த அறிவுஜீவிகளும் இங்கிருந்தனர்.

ஆனால் இது குறித்து தலித் மக்கள் நினைப்பது என்ன? இவை தலித் அடையாளங்கள் தானா? என்பதே இக்கட்டுரை எழுப்ப விரும்பும் வினா. ஒருவகையில் சொல்லப்படும் இந்த அடையாளங்கள் யதார்த்தத்தில் நிலவுவைதான். சாதிரீதியாக தொழிலும், இருப்பிடமும், வாழ்முறையும் பாகுபடுத்தப்பட்டு திணிக்கப்பட்டுள்ளது. தலித்து களுக்கென்று ஒதுக்கப்பட்ட அடையாளத்திலிருந்து மாறுபடுவது சாதி மீறலாகும். அதை சாதிசமூகம் அனுமதிப்பதில்லை. விரும்பும் தொழிலை, உணர்வை, வாழ்முறையை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான சுதந்திரத்தை சாத்தியப்படுத்துவதே சாதிய மறுப்பாக இருக்க முடியும்.

எனில் தலித்துகளிடம் நிலவும் இன்றைய அடையாளங்களை அவர்களுக்கேயுரியது என்று சொல்வது சாதி மறுப்பாகுமா? மாட்டுக்கறியோ, பறையடிப்பதோ அவர்களின் விருப்பமாக இருக்குமானால் அது பிரச்சினையில்லை. ஆனால் அதை அவர்களின் அடையாளம் என்று சொல்வதன் மூலம் இச்சமூகத்தின் பிற தளங்களில் அவர்களின் பங்களிப்பு மறுக்கப்படுகிறது. பொதுத்தளத்தின் மீதான அவர்களின் உரிமை மறுக்கப்படுகிறது. உண்மையில் தலித் மக்கள் அவர்களின் இன்றைய அடையாளங் களிலிருந்து விடுபட்டு சுயமரியாதை மிக்க வாழ்வை அடைய விரும்புகின்றனர். ஆனால் அத்தகைய புரிதலை உள்வாங்கி செயற்படும் அமைப்புகளாக களமும், அரசியல் தளமும் இல்லையென்பது வருத்தமே.    
இப்புரிதலை நம் சூழலில் பெறாமல் போனதன் காரணம் என்ன? தலித் மக்களின் விருப்பங்களிலிருந்தும், கடந்த கால இயக்கங்களின் தொடர்ச்சியிலிருந்தும் தலித் அடையாளத்தை யாரும் உருவாக்கிக் கொள்ளவில்லை.

கடந்த கால தலித் அமைப்புகளும், தலைவர்களும் பெரும் திரட்சியை சாத்தியப்படுத்தாவிட்டாலுங்கூட இத்தகைய புரிதலிலிருந்து செயற்பட்டனர். சாதியும், சாதிசார்ந்த கீழான அடையாளங்களும் தலித் மக்கள் மீது சுமத்தப்பட்டதன் தொடர்ச்சியாகவே அவர்களுக்கு உணவு, தொழில் இருப்பிடம் போன்றவை ஒதுக்கப்பட்டன. எனவே திணிக்கப்பட்ட தொழிலை, உணவை, மறுப்பதும். மறுக்கப்பட்ட அடையாளங்களை தங்களுக்குரியதாக பேசி மீட்டெடுத்தும் செயற்பட்டனர். அத்தகைய முன்னோடி முயற்சிகள் அறியப்படாமல் போனதின் அடிப்படையான பின்னணி எதுவெனில் தலித் மக்களின் போராட்டம்.

இயக்க வரலாறு போன்றவற்றை யாரும் அறிய மறுத்ததே ஆகும். ஒவ்வொரு இயக்கமும் தங்களின் வருகைக்குப் பின்னர்தான் இம்மக்கள் கண்விழித்தனர். அதுகாறும் அடிமை நிலையிலேயே இருந்ததாக கருதுவதும் இதனால்தான் ஆனால் இத்தகைய எண்ணங்களை மறுக்கும் பதிவுகள் இப்போது எழுத்துகளாக வந்துக் கொண்டிருக்கின்றன. அத்தகைய பதிவுகள் குறித்து நிலவும் மௌனத்தை கடக்க இக்கட்டுரை முயற்சிக்கிறது.

தலித் எழுத்து, வரலாறு, பண்பாடு என்று நிலவி வரும் கருத்துக்களிலிருந்து முற்றிலும் விலகிய தலித் எழுத்தை அண்மையில் வாசிக்க முடிந்தது. டி.எம். உமர் ஃபாரூக் என்றழைக்கப்படும் டி.எம். மணி என்ற தலித் தலைவர் எழுதிய நூல்களே அவை. 1960கள் இறுதி தொடங்கி தஞ்சை மாவட்டத்தின் கும்பகோணம், திருப்பனந்தாள் வட்டாரங்களில் இயற்றப்பட்ட நீலப்புலிகள் இயக்கத்தின் தலைவர் அவர். அமைப்பாக நின்று இப்பகுதி கிராமங்களில் இயங்கியபோது எற்பட்ட அனுபவங்களையும், அதன் வாயிலாக பெற்றுக் கொண்ட கருத்தியல்களையும் 'சாதி ஒழிந்தது' 'செந்தமிழ் நாட்டு சேரிகள்' என்னும் இரண்டு நூல்களாக எழுதியுள்ளார்.

சாதாரண நடைமுறையாகி விட்ட தலித்துகளின் இழிவாழ்வு. அதற்கு எதிரான தொடர் போராட்டங்கள், சளைக்காத அர்ப்பணிப்பு என்று இயங்கியதால் தலித் மக்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களைச் சொல்வது இந்நூல்கள் 30 ஆண்டுகால ஆவணமாய் மாறிநிற்கின்றன. தலித்துகள் குறித்த பழமையான சித்தரிப்புகளோடு முரண்படாத எழுத்துக்களே 'தலித்வாழ்வாக' மாறிவிட்ட சூழலில் இந்நூல்கள் வாசகர்களுக்கு வேறொரு உலகை காட்டுகின்றன. இவ்வாறு காட்டப்படும் இப்பதிவுகளே எதார்த்தமானவை. தான் இழிவு படுத்தப்பட்டதை இப்பதிவுகள் மறைக்கிறது. என்பது இதன் பொருளல்ல, 'எதார்த்தமாகி விட்ட இழிவுகளுக்கு எதிரான போராட்டங்களையும் அதில் பெற்ற வெற்றிகளையும் இவை சொல்கின்றன என்பதே தனித்துவத்திற்கு காரணமாகின்றன'

இழிவுகளை மறுத்து, மறுக்கப்பட்ட கல்வி உள்ளிட்ட தன்மான வாழ்வுக்கான அம்சங்களைப் பெற முயற்சிக்கிற அப்போராட்டங்கள் சாதி இழிவுகளை சுயமானதாக கருதுவதில்லை இவ்விடத்தில் சாதி தங்கள் மீது திணிக்கப்பட்டவை தானே ஒழிய 'விரும்பி' ஏற்றக் கொண்டவை அல்ல என்னும் புதிய உள்ளடக்கத் தினையும் அவர்கள் உருவாக்குகின்றனர். அதனால்தான் இழிவை சுமத்துவதைக் காட்டிலும், அதற்கு எதிரான போராட்டத்தில் கடுமையாக நடந்து கொள்கின்றனர் ஆதிக்க வகுப்பினர். ஆனால் பெறவிருக்கும் விடுதலையுணர்வுகளுக்கு முன்னால் போராட்டத்தின் வலி தலித்துகளுக்கு லேசாகிப்போகின்றன. தலித் விடுதலைக் கருத்தியலுக்கு இத்தகைய புரிதலை இந்நூல்கள் தருகின்றன.

     சுய அனுதாபத்தை வேண்டாமல் எழுதப்பட்ட தலித் எழுத்துக்கள் மிகக் குறைவே, தலித்துகள், தவிர்த்தமற்ற எழுத்தாளர்கள் யாரும் தங்கள் முன்னோர்களும். வகுப்பினரும் நடத்திய சாதிநடைமுறைகளைக் குறித்து வெளிப்படையாக எழுதவே இல்லை. ஆனால் உலகத்தின் எந்த பாகுபாடுகளுக்கும் குறையாத சாதிப்பாகுபாடு இங்குதான் நிலவுகிறது. இக்குறைகளைத் தவிர்த்த தலித் அனுபவத்தை தரக்கூடிய நூல்களாக இவை மாறியிருக்கின்றன. எழுதுவது இந்நூலாசிரியரின் முன்கூட்டிய திட்டமோ, முழுநேர வேலையோ, அல்ல, நான் இலக்கியவாதியோ எழுத்தாளனோ இல்லை என்று அறிவிக்கும் அவரின் அசாதாரண எழுத்து நடை இது.

அடர்ந்த காடு, இருண்ட சூழ்நிலை, உடைந்த மனம், பதுங்கி முடங்கிக் கிடக்கிற அற்பமான வாழ்க்கை ஏன் இந்த அவலம்? எதை வாரிக்கட்டிக் கொள்ள இப்படி அவதிப்படுகிறோம்? சொத்துசுகம் சேர்த்துக் கொள்ளவோ? இந்துக்களின் நிலபுலத்தில் மாடி மனையில் பங்கு கேட்கவோ? இல்லையே! நாங்களும் மனிதர்கள் தானே.. என்று விரிகிறது அந்த எட்டாம் வகுப்பு மட்டுமே படித்தவரின் எழுத்து.

முதல் நூலின் தொடர்ச்சிதான் இரண்டாம் நூல் அமைப்பு கட்டி போராட்டம் நடத்திய ஊரின் பெயர் சாதிப் பிரச்சினைக்கு எதிராக பேராடியவரின் பெயர் போன்றவற்றை தலைப்புகளாகக் கொண்டு சாதி ஒழிந்தது நூலில் கட்டுரைகளையும், செந்தமிழ் நாட்டு சேரிகள் நூலில் கட்டுரைகளையும் கொண்டுள்ளார். சில கட்டுரைகளை மட்டும் சமூகம் தொடர்பான தம் கருத்துக்களையும், விமர்சனங்களையும் எழுத பயன்படுத்தியிருக்கிறார். இவ்வாறு விவரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நிகழ்விற்குள்ளும் டி.எம். மணி இருக்கிறார் நேரடி அனுபவத்திலிருந்து குறிப்பிடத்தக்க சம்பவங்களை மட்டும் தொகுத்து எழுதியுள்ளார்.

கும்பகோணம், திருப்பனந்தாள் வட்டாரம் காவிரிப்பாயும் நிலப் பரப்பு யாவும் கோவில்களுக்கும், மடங்களுக்கும் உரிமை. இந்நிலங்களில் உழைக்கும் பண்ணையடிமைகளாய் தலித்துகள் இருந்தனர். "உயர்ந்த மதில் சுவர்களுடைய மடம் ஒருபுறம்,. சிவன் கோவில் மறுபுறம்... ஒவ்வொரு சிவன் கோவிலுக்கும் ஒரு தலவரலாறு இருக்கும். இப்படி ஒவ்வொரு சேரிக்கும் ஒரு தல வரலாறு போல. இது கட்டுக் கதையல்ல, காலங்காலமாக சாட்சியங்களாய் இன்னும் சேரிகளில் உயிரோடு இருக்கிறார்கள்." என்பதை சொல்லும் டி.எம். மணி அவ்வாறான 'தலவரலாறு' ஒன்றையும் சொல்கிறார். திருலோகி என்னும் கிராமத்தின் சேரிப்பெண் ஆயிபொன்னு என்பவர் வழக்கமாக செல்லும் மணியக்காரர் பண்ணை சாணியள்ளும் வேலைக்கு 3 நாட்களாக செல்லவில்லை. காரணம் அவருக்கு பிரசவம் ஆகியிருந்தது. இருந்தும் மூன்றாம் நாளே பண்ணை வேலைக்குத் திரும்பினார், கோபத்தோடு அவளை திட்டித்தீர்த்த மணியக்காரர் அவளின் மேலாக்கை பிடித்துக் கொண்டு மூங்கில் கழியால் அடித்தார். பண்ணையாரின் 'மண்ணான' சேரியிலிருக்கும் அவரின் குடிசையில்யாரும் நுழையாதவாறு வேலியும் வைத்தார்.

ஆயிப்பொன்னுவின் கணவரையும் பண்ணைக்கு வரும்படி சொல்லி அனுப்பினார். கணவனுக்கு நேரவிருக்கும் கதி, தனக்கு ஏற்பட்ட அவமானம் இரண்டும் சேர்ந்து இரண்டு வயதான தன் மூத்த மகன் மணிக்குஞ்சுவை பிறந்த குழந்தைக்கு காவல் வைத்துவிட்டு கூரையிலேயே தூக்குமாட்டி செத்தார் ஆயிபொன்னு. இவைதவிர படி நிலை சாதியமைப்பில் மேலேயுள்ள எல்லா சாதிகளுக்கம் இழிவு வேலை செய்யவேண்டிய நிலை டி.எம்.மணி விவரிப்பதைப் போல "இந்து வீட்டில் ஒருவர் இறந்து விட்டால். முன்னதாகச் சென்று வெட்டியான் சுடுகாட்டில் காத்திருக்க வேண்டும்.

பிணம் வருவதற்குள் சுடுகாட்டை சுத்தம் செய்து எரிபொருள் சேகரித்து விறகுக் கட்டைகளை அடியில்வைத்து அதன்மேலே விராட்டிகளை அடுக்கி அஸ்திவாரமிட்டு வைத்திருக்க வேண்டும். பிணம் சுடு காட்டிற்கு வரும்போது கட்டாயம் தயார்நிலையில் இருக்க வேண்டும். அடுத்து வண்ணான் செத்தவர் வீட்டிற்குச் சென்று மூங்கில் வெட்டிவந்து பாடைசெய்யும் பணியைச் செய்யவேண்டும். பிணம் தூக்கிச் செல்லும்போது. நோக்கர் கொம்பு ஊதியும், சேங்கண்டி அடித்தும் செல்லவேண்டும். பிணம் இறக்கும்போது வெட்டியான் விலகிக் கொள்ள வேண்டும். அவன் தீண்டாத சாதி அல்லவா? வண்ணானும் அம்பட்டரும் பாடையிலருந்து பிணத்தை எடுக்க வசதி செய்து கொடுக்க வேண்டும். இதற்குள் நாவிதர் கத்தியை எடுத்துக் கொண்டு கொள்ளிவைப்பவர் முடியைச் சிரைப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும்.

இதில் யாராவது ஒருவர் கடமை தவறினால் அந்தக் கிராமத்தில் சிக்கல் ஏற்பட்டுவிடும். கடமை தவறிய வருக்கு எந்த மாதிரியான தண்டனை என்பது ஊரைப் பொறுத்து. சூழ்நிலையைப் பொறுத்தது" இவை கிராமங்களின் நிலை. இழிதொழில்களுக்கு எதிரான தலித்துகளின் போராட்டம் எந்தக் கிராமத்திலும் எளிதில் நடந்தேறிவிடவில்லை. பெரும் கலவரங்களை ஏற்றபடியே போராட்டங்கள் நடந்தன கலவரத்தோடு பிரச்சினை நிற்பதில்லை. ஏற்கனவே சொந்தமாக நிலமற்ற இம்மக்களுக்கு வேலை மறுப்பு, தானாகவே எரிவதைப் போல கொளுத்தப்படும் குடிசைகள், தாக்குதல், வழக்கு அலைக் கழிப்பு என்பவைகளாக நீடித்தன. இப்படியே முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள்.

இப்பகுதி அரசியல் கட்சிகளென்றால் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், போன்றவை இருந்தன. கீழ்த்தஞ்சை மாவட்டம்போல கம்யூனிஸ்ட் கட்சி இப்பகுதியில் பரவலாகியிருக்கவில்லை. நக்சல்பாரி பாதையை ஆதரிக்கும் இடது சாரிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தலித்துகளிடம் தென்பட்டனர். பொதுவாக சுடு காட்டுப்பாதை போன்ற சிவில் உரிமைகளை வலியுறுத்தும் கம்யூனிஸ்ட்கள் சுடுகாட்டில் பிணம் புதைப்பதும் யார் என்பன போன்ற அழுத்தமான பார்வையை இன்று வரையிலும் பெறவில்லை.

சாத்திர இழிவு ஒழிப்புக்காக பாடுபட்ட திராவிடர் கழகம் அச்சாத்திரர்களால் தலித்துகள் மீது சுமத்தப்படும் இழிவுகளைக் கண்டித்து போராடிய வரலாற்றைப் பெறவில்லை. இந்நிலையில் இழிவு ஒழிப்பு போராட்டங்களை தலித்துகளே தனியாகவும் அமைப்பாகவும் நடத்தவேண்டிய நிலை. அப்படித் தான் தனித்துப் போராடியது நீலப்புலிகள் இயக்கம். இவ்வட்டாரத்தை ஒட்டி தென்னார்க்காடு அமைந்திருந்தமை சாதகமான அம்சமாய் இருந்தது. அப்பகுதியில் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுத்து வெற்றிப் பெற்றிருத்தார் எல். இளையபெருமாள்.

நீலப்புலிகளின் போராட்டத்திற்கு கைக்கொடுப்பவராக, காங்கிரஸில் இருந்த தலித்தலைவராக இவர் இருந்தார் இந்த இரண்டு நூல்களிலும் பல்வேறு கட்சிகளை, தலைவர்களை விமர்சித்து எழுதிச் செல்லும் டி.எம்.மணி மதிப்போடு 'தலைவர்'என்று விளிக்கிறார் என்றால் அவர் எல். இளையபெருமாள்தான் இதேபோல் வடஆர்காடு பகுதியிலும் இழிவு ஒழிப்புப் போராட்டங்களை குடியரசுக்கட்சி நடத்தியது தமிழகத்தின் பிறபகுதிகளைக் காட்டிலும் தலித்துகள் சற்றுமுன் கூட்டியே 'மேம்பாடு' பெற்றதற்கு இத்தகைய அரசியல் விழிப்புணர்ச்சியும் ஒரு காரணம் இப்பகுதியில் கிராமங்கள்தோறும் இவ்வகையான போராட்டங்களை தொகுக்கும்போது தலித் போராட்டத்தின் வலிமை உணரப்படும் கிராமங்களில் பெரும்பான்மை ஆதிக்கசாதியினருக்கு எதிராக நடத்தப்படும் சாதி மறுப்பு போராட்டங்கள் சாதாரணமானவை அல்ல. இவ்வாறான போராட்டங்களை தலித்சார்ந்து எழுதுவோரும்கூட அறியவில்லை. இப்போராட்ட வரலாற்றை ஏற்காமல் தலித் அடையாளத்தை "செஞ்" சோற்று கடனுக்காய் கம்யூனிஸ்டுகளிடம் விற்றுக் கொண்டிருக்கும் ஒருவர் கிராமங்களில் தலித் இயக்கங்களில் போராடிய துண்டா? என்று அண்மையில் எழுதியிருக்கிறார். போராட்ட வரலாற்றை பதிவுசெய்ய வாய்ப் பில்லாமல் போனதற்கு தலித்துகள் மட்டுந்தான் பொறுப்பா?

இழிவு ஒழிப்பு போராட்டங்களாகவே இப்போராட்டங்கள் நின்று போய் விடவில்லை. கிராமங்கள்தோறும் "கல்விப்பணிகள் நடந்து கொண்டிருந்தன ஊக்கத் தொகை, உதவித் தொகை, உயர்கல்வி நிதி, பகுதி நேரக்கல்வி, இப்படி ஏராளமான பட்டதாரி இளைஞர்கள் தொண்டாற்றிச் கொண்டிருந்தனர். சட்டப் பூர்வமாகவும். சாதுர்யமாகவும் சாதிக் கொடுமைக்கு எதிராகப் போராடி வந்தார்கள் இவ்வகை மாற்றங்கள் இழிவுமறுப்பு போராட்டங்கள் நடந்த மற்ற பகதிகளிலும் நடைபெற்றன. வடஆர்காட்டுப் பகுதியில் தொடங்கி நடத்தப்பட்ட இரவுப்பள்ளிகள் ஏராளம். தொடக்கம் முதலே தலித் தலைவர்கள் கல்வி மேம்பாட்டுக்காகப் பாடுபட்டனர்.

இத்தகைய செயற்பாடுகள் சாதிகுறித்த தனித்துவமான கருத்தியல்களை உருவாக்கிவிட்டன. அதாவது சாதி இழிவோடு இருந்தாலும் அந்த இழிவுதான் நம்முடைய காலகாலமான அடையாளம் என்ற பார்வை அவர்களிடம் இல்லை. அவ்வாறு கருதும்போதுதான் அதிலிருந்து விடுபடுவதற்கான நியாயம் உருவாகிறது. சாதியற்ற தளத்தில் இவர்களின் இடம் என்ன? எனும் கேள்வியும் எழுகிறது. அப்போது தான் சாதிக்கென்று பகுக்கப்பட்ட தொழில் உள்ளிட்ட அடையாளங்களை மறுத்துவிட்டு, மறுக்கப்பட்ட கல்விமேம்பாடு போன்ற சுயமரியாதைமிக்க அடையாளங்களை கையெடுக்கின்றனர். இம்மாற்றத்தின் கருத்தியல் வகிபாகம் என்ன? சாதிசார்ந்த அடையாளங்களை ஏற்பதை மறுத்து விரும்பும் தொழிலையும், அடையாளத்தையும் ஏற்பதே சாதிமறுப்பு என்பதாகிறது. தலித் தலைவர்களின் போராட்டம் இத்திசை நோக்கி இயங்கியிருக்கிறது.

பண்ணையின் விசுவாசியாக இருந்து பட்டினிகிடந்தே மடிந்த தாத்தா, அடிமைப்பட இன்னொரு பண்ணையைத்தேடி கிடைக்காமல் ஊர் ஊராய் கூலி வேலைக்கு அலைந்த தாய் தந்தை, ஆறாவது தலைமுறையாக அடிமை முறை வந்தபோது நீதிக்கட்சிக்கு ஓட்டுப் போடவில்லையென பண்ணையார் மாணிக்கம் பிள்ளையால் பறிக்கப்பட்ட வேலை என்ற குடும்பப் பின்னணியைக் கொண்ட டி.எம்.மணி யின் அப்பா ஒருமுறை ஈரத்துண்டை உலர்த்துவதற்காக தோளில் போடப்பட்ட போது மணியக்காரரை விட அவர் எத்துணை சிறந்த அறிவாளி. "அப்பா எவ்வளவு நாகரீகமானவர், அந்தக் காலத்திலேயே இலக்கணம் (நிகண்டு) படித்தவர். ராமாயணம், மகாபாரதம், அரப்பலிசதகம், குமரேச சதகம், சீவகசிந்தாமணி போன்ற நூல்களிலுள்ள பாடல்களை யெல்லாம் மனப் பாடமாகவேபாடுவார்" இதையெல்லாம் எந்த சூழ்நிலையில் அவர் படித்தார்.

இந்துக்களின் தெருவிலுள்ள பள்ளியில் நுழைய தீண்டாமை தடுத்ததால் வெளியே அரசமர நிழலில் அமர்ந்து படித்தவர். அந்தக் காலத்தில் முக்கியப் படிப்பான நிகண்டுகளைப் படிப்பதில் அவர் தேர்ந்தவர் தலித்துகளின் இழிவை மட்டும் சொல்ல விரும்பினோமென்றால் இத்தகைய ஆற்றல்களை யார் சொல்வது? தலித்துகளின் நிலவும் இழிவையே நிரந்தர அடையாளமாக தக்கவைப்பதில்தான் இன்றைய தலித் கலை, இலக்கிய முயற்சிகள் நிற்கின்றன. இந்நிலையை மாற்றும் கல்வி, பொருளாதாரம் குறித்த எவ்வித பார்வையும் செல்வாக்குப் பெற்றுள்ள தலித் இயக்கங்களுக்கு இல்லை. இந்நிலைமை சாதிமறுப்பதாக மாறுவதில்லை. இதை சார்ந்து டி.எம். மணி இந்நூல்களில் எழுதியுள்ள விமர்சனங்கள் முக்கியமானவையாகும் அவை "பறை எனப்படும் தப்பு ஒரு ஓசைக் கருவிதான் சேரியை ஒதுக்கினார்கள், அதற்காக தொழிலை ஒதுக்கினார்கள், தீண்டாமை பாராட்டி மனிதர்களை ஒதுக்கினார்கள். (அதன்படியே அவர்களுக்கென்று) இசையும் கலையும் ஒதுக்கப்படுகிறது.

நண்பர் கே.ஏ. குணசேகரன் போன்ற அறிவுஜீவிகளுக்கு நன்றாக தப்பு அடிக்கத்தொரியும் என்பதற்காக அதையே இசையாகத் தலையில் கட்டுகிறார்கள். அதைப் போலவே கல்வி மறுக்கப்பட்டதால் தலித்துகளிடம் உருவான ஊனத்தமிழ் வார்த்தைகளை நன்றாகப் புரிந்துக் கொண்ட 'பாமா' போன்ற எழுத்தாளர்கள், இந்த ஊனத் தமிழுக்கு வடிவம் கொடுத்து தலித் இலக்கியம் என்று அதை எங்கள் தலையில் கட்டுகிறார்கள்" என்று எழுதுகிறார்.

சாதி கற்பிக்கப்பட்ட காலத்தில சாதிக்கென்று ஒதுக்கப்பட்ட தொழில்களை மறுப்பதற்கு பதிலாக அதையே தங்களின் அடையாளமாக சொல்லிக் கொள்ளும்போது சாதிசார்ந்த கருத்தியல் மறுஉற்பத்தி செய்யப்படுகிறது. பொதுத்தளத்தில் மறுக்கப்பட்ட அடையாளங்கள் மீது உரிமையை கோருவதற்கான அரசியலையும் மறுக்கிறது. பறை மட்டுமல்ல சாதியின் பெயரால் பகுக்கப்பட்ட தொழிலையும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு மறுக்கப்பட்ட அடையாளத்தையும் அனைத்து சாதியினருக்கும் தேர்வுசெய்துகொள்வதற்கான கோரிக்கையோடு செயற்படுவதே சாதிமறுப்பாக இருக்க முடியும். செத்த மாடெடுத்தல் என்ற சுகாதாரப்பணி தலித்துகள் மீது சுமத்தப் பட்டதால் அத்தோலினால் செய்யப்பட்ட பறையும் அவர்கள் மீது சமத்தப்பட்டது.

மலமெடுக்க மறுக்கும் அருந்ததியரின் குலத் தொழில் மலமெடுப்பதுதான் என்பது எத்துணை அவதூறு. "தப்புதான் தலித்கலை என்றால் குழல், யாழ் போன்றவை எமக்கு உரிமையில்லை? அகராதியில் அழிக்கப்பட்ட தமிழ்ச் சொற்கள் கூட இன்னும் தாய்வழி கூட்டத்திற்கு ஊனத்தமிழ்தான் உரிமையா? தலித் இலக்கியம், தலித் கலை, தலித் பண்பாடு என்பதெல்லாம் ஒதுங்குதல், ஒதுக்குதல் அடிப்படையிலான வர்ணதர்ம கோட்பாடே அம்பேத்கர் சொன்ன சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இங்கு வேலையே இல்லை. எனவே தப்பு அடிக்க மறுப்பதை சமத்துவத்திற்குகான போராட்ட அடித்தளமாகவே பார்த்தோம். தப்புகளை செய்ய செத்த மாடுகள் எங்களுக்குத் தேவையில்லை என்று கோஷமிட்டோம்" என்று அவர் விளக்குகிறார். அவரின் இந்தப் பார்வை தலித்துகளின் நீண்ட போராட்ட மரபிலிருந்தும் தலித் மக்களின் விருப்பங்களிலிருந்தும் எடுக்கப்பட்டமையால் தான் தத்துவமானதாக விளங்குகிறது.

இந்நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள மற்றுமொருச் செய்தியும் தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமானதாகிறது. குடிதாங்கி பிரச்சினைதான் அது. குடிதாங்கி கிராம தலித் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை 'கொள்ளிடக்கரையில்' சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்கித்தர வேண்டும் என்பதுதான். டி.எம். மணி தலைமையிலான இயக்கம் கிளை அமைக்க சென்ற போது அக்கோரிக்கையை வலியுறுத்திய போராட்டத்தைத் தான் முதலில் எடுத்தனர்.

உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று தொடங்கி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை போன்றோரிடமும் பிரச்சினையை கொண்டு சென்றனர். 1988 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23இல் செல்வம் என்பவர் இறந்து தூக்கிச் சென்றபோது நூற்றுக் கணக்கான வன்னியர்களால் தலித்துகள் மறிக்கப்பட்டனர். அதுநாள்வரையில் மறிக்காதவர்கள் மறிப்பவர்களாக மாறியிருந்ததற்கு காரணம் அவர்களிடம் வன்னியர் சங்கம் உருவாகியிருந்ததுதான். பிரச்சினையின் காரணமாக பிண அடக்கத்தை மறுநாளுக்கு ஒத்திவைக்கச் சொன்ன காவல் துறையின் அறிவுரையின் பேரில் அவ்விடத்திலேயே பிணத்தை வைத்துச் சென்றனர் மறுநாள் பிணத்தை காவல்துறையே எங்கோ வீசிவிடுகின்றனர். அதனையட்டி தலித்துகளுக்கும் காவல்துறையினருக்கும் நடந்த மோதலில் காவல் ஆய்வாளர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டார். மறுநாள் அங்கிருந்த 9 சேரிகளில் புகுந்த காவல்துறை அவர்களை அடித்து நொறுக்கியது.

குடிதாங்கியைச் சேர்ந்த 22 தலித் பெண்கள் உள்ளிட்ட 104 பேர் மீது கொலைமுயற்சி வழக்கு (307) உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கை பதிந்தனர். இதனால் இடர்பாடுகளுக்கு பின்னும் அம்மக்களின் பிணங்களை பழைய சுடுகாட்டில் புதைப்பதில்லை. பொதுச் சாலையில்தான் எடுத்துச் செல்வோம் என்ற முடிவிலிருந்தும் மாறவில்லை. அதனால் வீதிகளிலும் வாய்க்காலிலும் பிணங்களை புதைக்கவேண்டிய நிலை. இந்த காலக்கட்டத்திலும் பல்வேறு வழக்குகளை அம்மக்கள் சுமந்தனர்.

சுமார் 4 ஆண்டுகாலம் இப்போராட்டம் நீடித்தது. இவை எல்லாவற்றின் பின்னணியில்தான் அப்பிரச்சினை முடிவுக்கு வந்தது. அன்றைக்கிருந்த அதிமுக அரசு சுடுகாட்டுப் பயன்பாட்டுக்காக பொதுப்பாதையை அனுமதித்த சூழல், 82 வன்னியவகுப்பினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலை. அச்சூழலில்தான் ராமதாஸின் வருகை நிகழ்ந்தது. அப்பகுதி சேரிமக்கள் அவரின் வருகையை விரும்பாத போதும் அவரை சுடுகாட்டுக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றவர்களும் தலித்துகளே, ஆனால் இன்றைக்கு குடிதாங்கிப் போராட்டம் என்றாலே அறியக் கூடியவராக ராமதாஸின் பெயராகிவிட்டது.

நான்கு ஆண்டுகால தலித்துகளின் நெடிய போராட்டத்திற்கு கிடைக்காத அங்கீகாரம் தலித் அல்லாத ஒருவரின் சிறிய தலையீட்டிற்கு பெரிய அளவில் கிடைத்து விடுகிறது. தமிழகத்தில் இதுபோன்று சொல்லப்படாத போராட்ட உண்மைகள் ஏராளமுண்டு அண்மைக்கால உதாரணம். கடைசி இரண்டு வருடங்களில் தலையிட்ட கம்யூனிஸ்டுகளின் போராட்டமாகிவிட்ட பாப்பாப்பட்டி பிரச்சனை.

குடிதாங்கிப் பிரச்சினை குறித்து கள ஆய்வு செய்து வெளியிட்ட நிறப்பிரிகை இதழும் இந்த வரலாற்றுப் பொய்க்கு காரணம் என்று டி.எம். மணி கூறுகிறார். ராமதாஸின் வருகையை தூக்கிப் பிடிப்பதிலேயே கவனம் செலுத்திய அவ்விதழின் கள ஆய்வு விழிப்புணர்வும், போர்க்குணமும் உடைய தலித் அமைப்புகளே அங்கில்லை யென எழுதியிருந்ததை சுட்டிக் காட்டுகிறார். பிறகு திருமாவளவனும் ராமதாஸை தமிழ்க்குடிதாங்கி என்று பாராட்டினார். பிராமணரல்லாதோர். தமிழர் போன்ற பொது அடையாளங்களை காட்டும் வரலாற்றில் இவ்வாறு சிதைந்த வரலாறு அதிகம். இதற்கு மறுதலையாக ராமதாஸ் தலித் தலைவர்களோடு பூண்ட உறவுகுறித்த நோக்கத்தினையும் டி.எம்.மணி குறிப்பிடுகிறார். எல். இளையபெருமாளின் எதிர்ப்பை சரிக்கட்டும் நோக்கிலேயே அவர் தென் மாவட்டங்களில் செயற் பட்டுக் கொண்டிருநத திருமாவளவன், பசுபதி பாண்டியன் போன்றோரை வடக்கே அழைத்தார். ராமதாஸின் அரசியல் நோக்கத்திற்கு தடையாயிருந்த தலித்துகளும் தாங்கள் எதிரியில்லை என்ற நிலையை உருவாக்குவதற்காக, தன் பிடிக்கு உட்படும் தலித் தலைவர்களை ஆதரிப்பது அவரின் நடவடிக்கையில் இருந்தது என்றும் அவர் கூறுகிறார்.

ராமதாஸின் நடவடிக்கைகளை கவனித்துவரும் யாரும் இதை பொய் என்று சொல்ல மாட்டார்கள். தமிழ் பாதுகாப்பு இயக்கத்தில் திருமாவளவனோடு இணைந்து பணியாற்றிய போதும் சாதிஒழிப்பு சார்ந்த தளங்களில் இந்த ஒற்றுமையை விரிவுபடுத்திக் கொள்ளவில்லை என்பது இளையபெருமாள் ராமதாஸோடு 1991 இல் சமாதான உடன்பாட்டை மேற்கொண்டபோது இழிதொழில்களை வலியுறுத்தக் கூடாது என்பதை உடன்பாட்டின் மைய நோக்காக்கி யிருந்தார். உடன்பாடு அப்படியே நின்றுபோனது இளையபெருமாளும் ஏமாற்றப் பட்டார் என்பதே அனுபவம்.

இந்நூல்கள் தரும் தலித்மக்களின் போராட்ட உணர்வுகுறித்த பதிவுகள் இதுவரை தமிழில் சொல்லப்டாதவையாகும். தற்சார்பற்ற வாழ்நிலை, மறுக்கப்பட்ட கல்வியால் நிலைபெறும் அறியாமை போன்றவற்றால் குறுகிக் கிடந்த அம்மக்களிடம் இயல்பாக உள்ள எதிர்ப்புணர்வு, துணிச்சல், இயக்கம் ஒன்றின் பின்னணியோடு வலுப்பெறும் எழுச்சி, இழப்புகளைத் தாண்டி உடனடியாக மறுவாழ்வை நிர்மாணிக்கம் திண்மை என்று நகருகிறது. இப்பிரதிகள் இயக்கம் உருவானபின் இந்துக்களின் வீடுகளில் சோறெடுத்தல், பண்டிகை பலகாரங்கள் வாங்குதல், கோயில் விழாக்களில் கஞ்சி வாங்குதல் போன்றன நிறுத்தப்படுகின்றன.

நிலங்களை உரிமையாக்குதல், மடத்துக்கு சொந்தமான குளத்தில் நீரெடுத்தல் என்று போராட்டங்கள் விரிவாயின. மடத்திற்கு சொந்தமான குளத்தில் நீரெடுக்கும் போராட்டம் நடந்தபோது தலித்துகளுக்கு எதிராக நில ஆதிக்கம் கொண்டிருந்த வெள்ளாளர்களுக்கு ஆதராவான பிற்பட்ட வகுப்பினர் கலவரத்தில் இறங்கினர். இருந்தும் தோல்வியைப்பற்றி நினையாமல் அம்மக்கள் போராடினர். அம்மோதலின் ரவுடிப் பட்டியலில் இருந்த ராஜேந்திரன் என்பவர் இறந்துபோனார். ஏற்கனவே தாக்கப்பட்டு மருத்துவமணையில் சேர்க்கப்பட்டிருந்த தலித் தரப்பு மோகன் என்பவரை ஆத்திரத்தினால் ஆதிக்க வகுப்பினர் கொன்று விடக்கூடும் என்று மனம் வருந்தி நின்றபோது உடல் முழுவதும் வியர்த்தவாறு 4 இளைஞர்கள் ஓடிவருகிறார்கள்.

ராஜேந்திரன் கொலையானதும் ஆதிக்க வகுப்பினர் சிதறி ஓடிய தருணத்தில் மருத்துவமனையிலிருந்த மோகனை தூக்கிக் கொண்டு பின்புறச் சுவற்றில் ஏறிக்குதித்து மறைவான இடத்தில் வைத்து விட்டு அந்நால்வரும் வருகிறார்கள். இச்சம்பவத்தை எழுதும் டி.எம்.மணி "எப்படி இவ்வளவு தைரியமாக இவர்களால் சாதிக்க முடிந்தது?" என்று வியக்கிறார். சாதி, சாதியின் செயற்பாடு போன்றவற்றை அனுபவிக்கும் இம்மக்களிடம் அத்தளத்தில் ஒன்று நடந்தால் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை எளிதாக யூகித்துக் கொள்ள முடிகிறது டி.எம்.மணி அரசு அலுவலர் ஒருவரை சந்திக்க செல்லுகிறாரென்றால் அக்குறிப்பிட்ட அலுவலர் தங்களிடம் என்னவெல்லாம் சொல்லுவார் என்று தங்கள் தோழர்களிடம் சொல்லிச் செல்லுவாராம். அவர் சொல்லிச் சென்றது போலவே அலுவலர் பேசுவாராம்.

இச்செய்தியை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் என்னிடம் நேர்பேச்சில் குறிப்பிட்டார். இது எப்படி சாத்தியம்? சாதிரீதியான அணுகு முறையில் சாதி இந்துக்களும், அதிகாரிகளும் வழமையாய் சொல்லும் காரணம் ஒரே மாதிரி இருப்பதும், வாக்குறுதிகளின் ஏமாற்றம் போன்றவற்றை சந்தித்துப் பழகிப்போன இம்மக்களுக்கு சூழலை வாசிப்பது எளிமையாகிவிடுகிறது. அதற்கு எண்ணும் எழுத்தும் கற்க தேவையில்லை.

காவற்கூடம் என்னும் ஊரில் செத்த மாட்டை அப்புறப்படுத்த வெட்டியான் வரவில்லை என்பதற்காக வெட்டியான் குடிசைகளை ஆதிக்கவகுப்பினர் கொளுத்தினர். இதனை காவல்துறையில் புகார் செய்த 'குற்றத்திற்காக' அவ்வூரைச் சேர்ந்த 40 சேரிக் குடிசைகளை எரித்தனர். கட்சி பிரமுகர்கள். காவல்துறை, தாசில்தார், துணை கலெக்டர் போன்றோர் எரிக்கப் பட்ட குடிசைகளை கணக்கில் கொள்ளாமல் சாதி இந்துக்களுக்கு ஆதரவாக பேசினாலும் தலித் சமூகத்தைச் சேர்ந்த கலெக்டர் 'கங்கப்பா' என்பவரின் வழிகாட்டுதலோடு இந்துக்களின் தெருவழியே போகாத வண்ணம் முற்றிலும் புதிய இடத்தில் வீடு கட்ட இடத்தை வழங்கியபோது 52 குடிசைகளையும் உற்சாகத்தோடு கட்டிகொண்டனர். இழப்புதரும் வலியிலிருந்து மாறி மற்றுமொரு வாழ்க்கையை உருவாக்கிக் கொள்கின்றனர். குடிசைகள் கட்டப்பட்ட பகுதிக்கு நன்றியோடு கங்கப்பா நகர் என்று பெயரும் சூட்டிக்கொண்டனர் அம்மக்கள்.

     போராட்டக் களங்களில் ஏற்படும் ஏமாற்றங்கள், கிராம அமைப்பொன்று சாதியை தக்கவைத்துக் கொள்ளும் சாதுர்யம் அசாதாரண சூழலில் பரப்பப்படும் சொல்லாடல்கள் குறித்த புரிதல் போன்றவை தலித்மக்களுக்கு அத்துப்படி. காவற்கூடம் கிராமங்களில் நடத்தப்பட்ட வன்முறையை எழுதத் தொடங்கும் டி.எம். மணி "முதல் நாள் செய்தித்தாளில் கோஷ்டி மோதல், தீவைப்பு என்ற தலைப்பில் செய்தி வெளியானது. பெரும்பாலும் கோஷ்டி தலித்துகளாகவும், அது பாதிக்கப்பட்ட தரப்பினராகவும் இருப்பர் என்பது தலித்துகளுக்கு பரிந்து பேசுபவராக வந்து தலித் இளைஞர் ஒருவரின் நடத்தை 'மீறலால்' மோதல் எழுந்தது என்றும் அரிஜனங்களே தங்களின் சில குடிசைகளுக்கு தீவைத்துக் கொண்டனர் என்றும் சொல்லுவதோடு சமாதானமாக போய்விடலாம் என்று சொல்ல தலித்துகளுக்கென சில உதவிகளையும் செய்ய முன் வருகிறார். ஆனால் தலத்துகள் தாங்களே தீவைத்துக் கொண்டதாக புகார் கூறியவர்களிடம் தீப்பெட்டியைக் கொடுக்கும் கலெக்டர் கங்கப்பா, "எங்கே உன்குடிசையை நீயே கொளுத்திக்கொள் பார்ப்போம்" என்று சொன்னபோது அவர்கள் பின்வாங்கினர். இந்த இடத்தில் கலெக்டர் கங்கப்பா தலித்வகுப்பினர் என்பதையும் ராமகிருஷ்ணன் வன்னியர் என்பதையும் டி.எம்.மணி குறிப்பிடுகிறார்.

வேறுசில இடங்களில் தலித் அதிகாரியாக இருப்பதாலேயே தலித் ஆதரவு முத்திரையால் தனக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சும் அதிகாரிகளைக் குறிப்பிடும்போது அவர்களின் சூழலை யோசித்துப் பார்க்கும் போக்கும் இவர்களிடம் வெளிப்படுகிறது. இந்த சூழல் குறித்து வேறொரு இடத்தில் எழுதும் டி.எம்.மணி "தலித்துகள் தாக்கப்படும் போதும், கொடுமைக்குள்ளாகும் போதும் அனுதாபப்படுவதற்கும் ஆதரவுக்குரல் கொடுப்பதற்கும் மற்ற சாதியில் ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் தலித்துகள் எதிர்தாக்குதல் நடத்துவதை அவர்கள் விரும்புவதில்லை" என்பதை நெடிய அனுபவத்திலிருந்து சொல்லுகிறார்.

கிராமங்களின் ஒற்றுமை என்பது அந்தந்த சாதிக் கடமையை அவரவர் செய்யவேண்டும் என்பதே போன்றவற்றை துல்லியமாக சொல்லும் சாதிகளின் சாதியச் செயற்பாடுகளை குறைத்துவிடாமலும், மிகைப்படாமலும் எழுதுகிறார். பிராமணர் எதிர்ப்பு அவருக்கிருந்தாலும் பிராமணர் அல்லாத சாதிகளன தலித்வெறுப்பை குறைத்து மதிப்பிடவோ, அதன் மூலம் சாதிய பலன்களிலிருந்து அவர்களை தப்பவைக்கவோ அவர் முயற்சிக்க வில்லை.

கொலை வழக்கு, சிறை என்று பயணித்த டி.எம்.மணி குறைவான எண்ணிக்கையினரோடு இசுலாம் தழுவி இன்று உமர் ஃபாரூக் ஆகி விட்டார். அதற்கான காரணம். மதம் தழுவியவர்களின் படங்கள் என்று சாதி ஒழிந்தது நூலின் இறுதியையும்,'தமிழ் தேசியத்தால்' உள்வாங்கப்பட்ட இன்றைய தலித் அரசியலை குறித்து செந்தமிழ் நாட்டுச் சேரிகள் நூலின் இறுதியையும் எழுதியுள்ளார். இந்நூல்களை வாசித்து முடிக்கிற போது பெரும் துயரமும், ஆற்றாமையும் நம்மை சூழ்ந்துக் கொள்கிறது. நூலின் இறுதிப்பகுதியில் அவர் முன்னெடுக்கும் விவாதத்தில் யாரும் உடன்படவோ, மாறுபடவோ செய்யலாம். ஆனால் அவர் முன்வைக்கும் அனுபவத்தை யாரும் அத்துணை எளிமையாய் கடந்துவிட முடியாது.

அங்கீகரிக்கப்படாத டி.எம்.மணி போன்றோரின் போராட்ட பலனால்தான் இன்றைய தலித் சமூகம், தலித் இயக்கங்களும் தங்களை ஆசுவாசப்படுத்தக் கொள்கின்றன. பெரும் இயக்கபலம் இல்லாவிட்டாலும் அவர் இன்றும் எழுதுகிறார், செயற்படுகிறார், ஏனெனில் அவர் பெற்றுக் கொண்டுள்ள கருத்தியல் தன்னளவில் விடுதலை பெற்றவராக அவரை உணரவைத்துள்ளது. தன்னளவில் விடுதலை பெறாத யாரும் எத்தகைய கூட்டத்தை திரட்டினாலும் யாரையும் விடுவிக்க முடியாது.

நன்றி http://arunthathiyan.blogspot.no

பரமக்குடி தலித் இனப்படுகொலை-சட்ட விரோத மரணதண்டனை - டி.அருள் எழிலன்.


பரமக்குடி படுகொலைகள்


எனது கள்ளத்தோணி படப்பிடிப்புக்காக மரக்காணம் சென்றிருந்தோம். மாலையில் கிடைத்த ஒரு சின்ன ஓய்வில் அங்கிருந்த சிறுவர்களை அழைத்து ஆளுக்கொரு பாடலை பாடச் சொன்ன போது ஒரு சிறுவன் திருமாவளனைப் புகழ்ந்து ஒரு பாடலைப்பாடினார். நாங்கள் அனைவருமே அச்சிறுவனை கொண்டாடினோம். காரணம் அவன் திருமாவைப் புகழ்ந்து பாடினான் என்பதற்காக அல்ல. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த தனக்காக திருமா போராடுவதாக நம்பும் அவனது நம்பிக்கைக்காக அவனை பாராட்டி விட்டு வந்தோம். எந்த விதத்திலும் அது எங்களுக்கு உறுத்தலாக இல்லை. கமுதி பள்ளச்சேரி தலித் காலனியில் உள்ள பழனிக்குமார் என்னும் சிறுவன் தன் தலைவர் என்று நம்பும் இமானுவேல் சேகரனைப் புகழ்ந்து சுவரில் கிறுக்கியதாகவும், தேவர் சாதியினரைத் திட்டி சுவரில் எழுதியதாகவும் சொல்லப்படுகிற நிலையில் கோவில் திருவிழா ஒன்றுக்கு சென்று வந்த பழனிக்குமார் என்ற அந்த சிறுவன் தேவர் சாதியினரால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்படுகிறான். இந்த வழக்கை மர்ம நபர்கள் கொலை செய்தனர் என்று பதிவு செய்த போலீஸ் எதிரிகளைத் தேடுவதாக பாவனை செய்து கொண்டிருக்கிறது. இதெல்லாம் தனிக்கதை என்றாலும் . இந்தக் கொலைக்கும் நேற்று நடக்கவிருந்த இமானுவேல் சேகரன் நினைவு நாள் விழாவுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
பள்ளர் சமூகத்தலைவர்களுள் முக்கியமானவர்கள் டாக்டர் கிருஷ்ணசாமி, ஜாண்பாண்டியன், பசுபதி பாண்டியன் ஆகியோர்தான். இதில் கிருஷ்சாமியைத் தவிற எனைய இரண்டு தலைவர்களும் அரசியல் ரௌடிகள், கட்டப்பஞ்சாயத்து, கொலை போன்ற பல் வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள். தேவர் சமூகம் வழிபடும் முத்துராமலிங்கம் என்பவர் எப்படி அந்த சமூகத்தை தவறான பாதையில் வழி நடத்தி, அனைத்து தேவர் மக்களையும் தலித் மக்களுக்கு எதிராக திருப்பினாரோ அது போன்று பள்ளர் இன மக்களை அரசியல் மயப்படுத்துவதை விட்டு விட்டு உணர்ச்சி மயபட்ட வன்முறை விளிம்பில் நிறுத்துபவர்தான் இந்த ஜாண்பாண்டியன். நீண்டகாலமாக சிறையில் இருந்த ஜாண்பாண்டியன் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது சிறையிலிருந்து வெளியில் வருகிறார். தமிழக முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பை நடத்தும் ஜாண்பாண்டியன் சிறையில் இருந்து வெளியில் வந்த வுடன் அவரது ஆதரவாளர்கள் தலைவர் வெளியில் வந்து விட்டார் ஆகவே இமானுவேல் சேகரன் பிறந்த தினத்தை புத்தெழுச்சியோடு கொண்டாட முடிவு செய்து.பரமக்குடி பகுதியில் கடந்த ஒரு மாதமாகவே பிளெக்ஸ் போர்டுகள் விளம்பரப்பலகைகளை அமைக்கின்றனர். இது ஆதிக்க சாதியான தேவர்களிடையே கொந்தளிப்பை உருவாக்குவதோடு, ஆதிக்க சாதியினர் ஆதிக்கம் செய்யும் மதுரை, இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்திலும் கொதிப்பை உருவாக்கியிருக்கிறது. இதனால் கடந்தப் ஒரு வராமாக போலீசார் தலித் சேரிகளுக்கும் கிராமங்களுக்கும் சென்று இமானுவேல் சேகரனின் பிறந்த நாள் விழாவுக்குச் யாரும் செல்லக் கூடாது அப்படிச் செல்கிறவர்கள் காவல் நிலையத்தில் வந்து பெயர் பதிய வேண்டும் என்று மிரட்டியிருக்கிறார்கள். இயல்பாகவே கடுப்பான தலித் மக்களோ இதனால் ஆவேசம் அடைந்திருக்கின்றனர். இந்நிலையில்தான் தலித் மாணவனான பழனிக்குமார் படிக்கும் பள்ளியிலும் இது தொடர்பான முரண்பாடுகள் எழ பழனிக்குமார் தேவர் சாதி மாணவர்களுக்கு எதிராகவும் இமானுவேல் சேக்ரனுக்கு ஆதரவாகவும் பேசியுள்ளார். பழனிக்குமார் இதை தனது காலனியிலோ அல்லது வீட்டிலோ சொல்லாத நிலையில் தேவர் சாதி மாணவர்கள் தங்கள் ஊரில் உள்ளவர்களிடம் தேவரை இழிவு செய்த பழனிக்குமார் பற்றி சொன்னதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான் நேற்று கோவில் திருவிழாவுக்குச் சென்று வந்த பழனிக்குமாரை தேவர் சாதி வெறியர்கள் கொடூரமான முறையில் வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். பழனிக்குமார் கொலையும், போலீசின் அடக்குமுறையும் சேர தலித் மக்கள் மிகவும் கோபமாக காணப்பட்டுள்ள நிலையில்,
நேற்று  காலையிலிருந்தே பரமக்குடி மெயின் ரோட்டில் இருக்கும் இமானுவேல் சேகரன் சுடுகாட்டில் தலித் மக்கள் குழுமத் தொடங்கியுள்ளனர். ஆனால் அவர்களை பல் வேறு இடங்களில் போலீசார் விழாவுக்க்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால் அதையும் மீறி திரண்ட தலித்துக்களில் ஜாண்பாண்டியனின் ஆதரவாளர்கள் அதிகம் இருந்திருக்கின்றனர். அவர்கள் ஜாண்பாண்டியனின் வருகைக்காக காத்திருந்த போது அவரை தூத்துக்குடியில் தடுத்த போலீசார் வல்லநாடு போலீஸ் டிரெயினிங் அக்காடமிக்கு கொண்டு சென்றுள்ளனர். ( இங்கே வல்லநாடு பயிற்சிப்பள்ளியைப் பற்றியும் சொல்லியாக வேண்டும் போலீஸ் நிகழ்த்தும் பல சட்ட விரோத என்கவுண்டர்களை இந்த காட்டுப்பகுதிக்குள் வைத்துத்தான் செய்யும்) இந்தப் பகுதிக்கு அவரை அழைத்துச் செல்கிறார்கள் என்ற செய்தி எட்டியதும். அவரை போலீஸ் சுட்டுக் கொல்லப் போகிறது என்றும், கைது செய்திருக்கிறார்கள் என்ற செய்தி பரவியதும். இமானுவேல் சுடுகாட்டில் திரண்டிருந்த மக்கள் பரமக்குடி சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். மிரட்டிப் பார்த்த போலீசுக்கு அஞ்சாமல் கோஷமிட்ட படியே இருந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்த சிதறி ஓடிய தொண்டர்கள் போலீசார் மீது கற்களை வீசியிருக்கிறார்கள். சற்றும் எதிர்பாராத வகையில் அந்த மக்கள் மீது போலீஸ் கண்மூடித்தனமாக  பலரும் குண்டடி பட்டு விழுந்திருக்கிறார்கள். ஜாண்பாண்டியன் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி பரவ இது மதுரையிலும் மறியலாக மாற அங்கும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது.ஆக மொத்தம் ஆறு பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள். போலீஸ் இதுவரை எந்த செய்திகளையும் கசிய விடாமல் பார்த்துக் கொள்ளும் நிலையில் ஆறு பேர் கொல்லப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படுகிறது. தாமிரபரணி படுகொலையின் பின்னர் மிகப்பெரிய இனப்படுகொலையாக கணிக்கப்படும் பரமக்குடி, மதுரை தலித் இனப்படுகொலையை தமிழக அரசும், ஊடகங்களும் மறைத்து பொய் செய்தியை வெளியிட்டு வருகின்றன. போலீசைத் தாக்கிய செய்திகளை மீண்டும் மீண்டும் சொல்லும் தமிழ் தொலைக்காட்சிகள் கொல்லப்பட்ட மக்கள் குறித்து ஒரு வரியைக் கூட மறந்தும் சொல்ல மறுக்கின்றன. நமது ஊடகங்கள், நமது போலீஸ், நமது அரசு என எல்லாம் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளின் கைகளுக்கு முழுமையாக சென்று விட்டதை இது காட்டுகிறது. திராவிட இயக்கங்கள் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக செய்த அயோக்கியத்தனமான சாதி அரசியலின் விளைவாய் இன்று தலித்துக்கள் நிர்கதியாய் விடப்பட்டிருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகள் செல்வாக்குச் செலுத்தும் தமிழ் அரசியலோ தலித் படுகொலைகள் குறித்து கள்ள மவுனம் சாதிக்கிறது. இதுவரை 6 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தென் தமிழகம் முழுக்க ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் ஒரு விதமான அச்சத்துள் உரைந்து போயுள்ளனர். சாதி இந்து அமைப்பு, அரசு நிர்வாகம். போலீஸ் என அதிகாரவர்க்கங்களின் சாதிக் கொடூரங்களில் இருந்து அவர்கள் முற்றிலுமாக விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். 
பரமக்குடி தலித் படுகொலைகள்

* பரமக்குடியில் நடத்தப்பட்டுள்ள போலீஸ் துப்பாக்கிச் சூடு அவசியமற்ற பேச்சுவார்த்தை மூலம் மீறிச் சென்றால் லேசான தடியடி மூலமும் கலைந்து போகச் செய்திருக்க வேண்டிய ஒரு விஷயத்தை காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்கியதன் மூலம் கேள்விக்கிடமற்ற வகையில் 6 பேரை கொலை செய்துள்ளார்கள். ஜாண்பாண்டியனுக்கு இமானுவேல் சேகரன் அவர்களின்  சமாதிக்கு சென்று மரியாதை செய்யும் உரிமையை மறுத்ததன் மூலம்  வன்முறைக்கு போலிசார் வித்திட்டுள்ளனர். தவிறவும் ஜாண்பாண்டியனை வல்லநாடு மலைப்பகுதிக்குக் கொண்டு சென்று என்கவுண்டர் செய்யப் போகிறார்கள் என்ற செய்தி பரவியதன் மூலமே தலித் மக்கள் ஆவேசமடைந்து பரமக்குடி, மதுரையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்த கோபமுற்ற மக்கள் கற்களை போலீசார் மீது வீசியுள்ளனர். பதிலுக்கு போலீசாரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கற்களை வீசியதோடு எந்த விதமான எச்சரிக்கையும் செய்யாமல் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். போலீசார் சுடுவதை அறிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்கள் உள்ளிட்ட அரசு வாகனங்களுக்கு தீவைத்துள்ளனர்.
* ஆறு பேர் போலீசால் கொல்லப்பட்டு விட்ட நிலையில் இன்று அச்சு, காட்சி ஊடகங்கள் எல்லாம் அவர்கள் வன்முறையை ஏவினார்கள். வேறு வழியில்லாமல்  போலீஸ் சுட்டது என்று செய்தி வெளியிட்டுள்ளதோடு, தாக்கப்பட்ட , தீ வைத்து எரிக்கப்பட்ட போலீஸ் வாகனங்களையும் பெரிது படுத்தி புகைப்படச் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் நூற்றுக்கணக்கில் காயமடைந்தவர்களையோ, சுட்டுக் கொலை செய்யப்பட்டவர்களின் தரப்புகளையோ முழுமையாக இருட்டடிப்பு செய்துள்ளதை வன்மையாக கண்டிக்க வேண்டும். இந்த நிலை சட்டக் கல்லூரி தாக்குதல் சம்பவத்தில் தமிழ் ஊடகங்கள் நடந்து கொண்ட விதத்தைப் போன்றதுதான். 
* கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட இயக்கம் தமிழகத்தில் அதிகாரம் பெற்று விட்ட நிலையில் அவர்கள் ஊட்டி வளர்த்ததுதான் இந்த பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதி அரசியல். பெரும்பான்மை பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்கு வங்கிகளை குறி வைத்து திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே வளர்ந்து வந்த நிலையில் அதிமுக தென் தமிழக தேவர் வாக்கு வங்கியை பெரும்பான்மையாகக் கொண்டிருக்கிறது. கடந்த திமுக ஆட்சியின் போது அதிமுகவின் வாக்கு வங்கியான தேவர் சாதி ஒட்டுகளை கைப்பற்ற திமுக பல் வேறு முயர்சிகளை முன்னெடுத்தது. அதில் ஒன்றுதான் 2007- ல் பசும் பொன் முத்துராமலிங்கன் என்பவரின் பிறந்த நாளை மூன்று நாள் விழாவாக அரசே கொண்டாடியது. இது தலித் மக்கள் மனங்களில் தீராத வேதனையை உருவாக்கியுள்ளது.  தந்தை பெரியாரின் சாதி ஒழிப்பை கைவிட்ட திராவிட இயக்கங்கள் அவரது சமூக நீதி அம்சங்களை உள்வாங்கி அதை பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளுக்கு விரிவு படுத்தியதோடு, எந்தெந்த தொகுதிகளில் எது பெரும்பான்மை சாதியோ அதை ஊட்டி வளர்த்ததன் விளைவுதான் இத்தகைய தாக்குதல்கள். அரசு, போலீஸ்ம் அதிகாரிகள் என கடந்த முப்பதாண்டுகளில் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் வளர்ச்சி சகல தளங்களிலும் விரிவு படுத்தப்பட்டது. இதுவே பாதிக்கப்பட்ட தலித் மக்கள் அரசு நிர்வாகத்தில், போலீசில் நீதி கேட்கவோ, பாதிப்புக்கு நியாயம் கேட்கவோ முடியாத நிலையை தோற்று வித்துள்ளது.
*தமிழ் தேசிய இயக்கங்களைப் பொறுத்தவரையில் திராவிட இயக்கத்திற்கும் தமிழ் குழுக்களுக்குமான முரண் என்பது அவர்கள் தென் மாநிலங்களில் அனைத்து மொழி பேசும் மக்களையும் அரவணைத்துக் கொள்கிறார்கள். தமிழனை தமிழனே ஆளட்டும் வந்தேரிகள் எல்லாம் ஓடட்டும் என்பதுதான் தமிழ் குழுக்களின் அணுகுமுறை. தமிழர்களின் மலங்களை காலம் காலமாக தங்கள் தலையில் தூக்கிச் சுமந்த அருந்ததிய மக்கள் தெலுங்கு மொழி பேசும் மக்கள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. எப்படி திராவிட இயக்கத்தின் தலைமை பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளின் அதிகாரமாக உள்ளதோ அது போன்றே தமிழ் தேசியக் குழுக்களும், இதை தலித்துக்கள் அனுபவ பூர்வமாக உணர்கிறார்கள். இவர்கள் ஈழம், தமிழ் மொழி, என்று போராடுகிறார்களே தவிற தமிழர்களின் வேறு எந்த பிரச்சனைகளுக்காகவும் போராடுவதும் இல்லை குரல் கொடுப்பதும் இல்லை. முருகன்,சாந்தன், பேரறிவாளனின் தூக்குத் தண்டனைக்கு எதிராக மட்டுமல்ல அப்சல்குரு, கஸாப், உள்ளிட்ட அனைவருக்காகவும் குரல் கொடுப்பதோடு இந்தியாவிலிருந்தே மரணதண்டனை நீக்கப்பட வேண்டும் என்பதுதான் முற்போக்கு மனித உரிமையாளர்களின் நீண்ட கால கோரிக்கை. பாராளுமன்றத் தாக்குதலில் மரணதண்டனை விதிக்கப்பட்டு பின்னர் நிரபராதி என்று விடுவிக்கப் பட்ட பேரா.கீலானி வேலூருக்கு வந்து மூவரையும் சந்தித்து மரணதண்டனைக்கு எதிராக குரல் கொடுப்பார். ஆனால் அப்சல் குரு குறித்தோ, கஸாப் குறித்தோ மறந்தும் தமிழ் தேசியவாதிகள் பேசி விட மாட்டார்கள். காரணம் இந்து முன்னணி கும்பலையும் அர்ஜூன்சம்பந்த் போன்ற இந்துப் பாசிஸ்டுகளையும் பகைத்துக் கொள்ள நேரிடுமே என்ற அச்சம். பெரியார் திக, தோழர் தியாகு, கொளத்தூர் மணி உள்ளிட்ட வெகு சில அமைப்புத் தலைவர்களைத் தவிற பெரும்பலான தமிழ் தேசியவாதிகள் தலித் சாதி ஒடுக்குமுறைகள் குறித்து எப்போதுமே பேசியதில்லை. நீங்கள் ஏன் பேசவில்லை என்று கேட்டால் எங்களை ஏன் கேட்கின்றீர்கள் கொன்றவனைப் போய் கேளுங்கள் என்கிறார்கள். 
* திராவிட இயக்கத்திற்கும் தமிழ் தேசிய இயக்கத்திற்குமான வேறு பாடு என்பது துளியளவுதான். அதிகாரத்தில் இருக்கும் திராவிட இயக்கம் என்று சொல்லக் கூடிய இந்து மதத்திற்கு நெருக்கமான அதிமுகவாக இருந்தாலும், பச்சைத் தமிழ் திராவிட இயக்கம் என்று சொல்லக்கூடிய திமுகவாக இருந்தாலும்  இவர்களின் அதிகாரத்தால் பலன் அடைவது பார்ப்பனர் அல்லாத முற்படுத்தப்பட்ட வகுப்பினரும், பிற்படுத்தப்பட்ட சாதியினரும்தான். திராவிட இயக்கத்திற்கென குறைந்த பட்ச சமூக சீர்திருத்த கோட்பாடுகள் உள்ளன. தமிழ் தேசியத்திற்கு அது கூட இல்லை. ஆனால் திராவிட இயக்கத்தால் அதிகாரம் பெற்று அரசு நிர்வாகத்தில் வீங்கிச் செல்லும் முற்பட்ட, பிற்படுத்தப்பட்ட குறிப்பாக தேவர் சாதி அரசியலே தமிழ்  தேசியத்தையும் வழி நடத்துகிறது. இன்றைக்கு திருமாவளவன் தலித்தே என்றாலும் தமிழ் தேசிய அரசியலில் இருந்து ஒதுக்கப்படுவதையும் அவர் தார்மீக நெறிகளுக்கு அப்பால் நூறு தள்ளி நிற்கிறேன். 200 அடி தள்ளி நிற்கிறேன் நாம் இணைந்து ஈழ மக்களுக்காக உழைக்கலாம் என்று தமிழ் அமைப்புகளுக்கு அழைப்பு விடுப்பதும் தமிழ் தேசியவாதிகள் திருமாவை ஒதுக்கி வைப்பதையும் காண முடிகிறது. மௌனம் என்பது எவளவு பெரிய வன்முறை என்பதை தமிழ் தேசிய குழுக்களின் அணுகுமுறைகளில் இருந்து நாம் புரிந்து கொள்ள முடியும். 
* தலித்துக்கள் மீதான இந்த மரணதண்டனையை, இனப்படுகொலையை எவன் ஒருவன் கண்டிக்கத் தயங்குகிறானோ அப்போதே அவன் பயங்கரவாத இலங்கை அரசை கண்டிக்கும் உரிமையை இழந்து விடுகிறான். மூவருக்கும் மரணதண்டனை வேண்டாம் என்று சொல்லுகிற ஒருவன் தலித்துக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட விரோத மரணதண்டனைக்கு எதிராகவும் பேசத் தவறுகிறான் என்றால் அவன் பகுத்தறிவுக்கு புறம்பானவனாக போலி முற்போக்காளனாக வாழ்கிறான் என்று பொருள்.
* மாணவர் பழனிக்குமாரை படுகொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், தலித்துக்கள் மீதான துப்பாக்கிச்சூட்டை நடத்திய காவலர்கள், உத்தரவிட்ட அதிகாரிகள் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். மிக முக்கியமாக தென் மாவட்ட அரசு அதிகாரிகள், போலீசார், போலீஸ் அதிகாரிகள் சொந்த ஊரில் இருந்து மாறுதல் செய்யப்பட்டு அவர்களை சென்னை போன்ற நகரங்களில் பணியமர்த்துவதோடு, கலவரக் காலங்களில் வெளி மாநில போலீசாரைக் கொண்டு பதட்டச் சூழலை எதிர்கொள்ள வேண்டும்.  பெரும்பலான காவல்துறை அதிகாரிகள், போலிசார் தேவர் சாதியைச் சார்ந்தவர்கள் என்பதை பல் வேறு உண்மையறியும் குழுவின் அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ள நிலையில், தலித்துக்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் தேவர் சாதி போலீசுக்கு மிக முக்கிய பங்கிருப்பதையும் நாம் கொடியங்குளத்தில் தொடங்கி தாமிரபரணி படுகொலை, பரமக்குடி படுகொலை வரை புரிந்து கொள்ள முடியும். தலித்துக்களுக்கு போலீஸ், அரசு நிர்வாகத்தில் உரிய பங்கீடுகளை வழங்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு சாதியை போலீஸ் துறையில் கட்டுப்படுத்தும் படி சட்டம் இயற்றப்பட வேண்டும். 
* தேவர் சாதித் தலைவர் என்று சொல்லக்கூடிய முத்துராமலிங்கம் என்பவரின் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக கொண்டாடுவது போல தலித் மக்களின் தலைவரான இமானுமேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அல்லது முத்து ராமலிங்கத்தின் விழாவை அரசு விழாவாக கொண்டாடுவதை தடை செய்ய வேண்டும்.
* படித்தவர்கள் எல்லாம் சாதி பார்க்க மாட்டார்கள் என்ற தமிழனின்  பொதுப்புத்தி இன்று உடைந்திருக்கிறது. கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளார்களில் பெரும்பாலானவர்கள் தங்களின் சொந்த சாதியை மீற முடியாதவர்களாக இருக்கும் நிலையோடு அவர்கள் காக்கும் மௌனமும் இங்கே குறிப்பிடத்தக்கது.சொந்த சாதியை மறுத்து ஒடுக்கப்பட்ட தலித் மக்கள்க்காக போராடும் பார்ப்பன நண்பர்களையும், தேவர் சாதி உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதி நண்பர்களையும் நாம் பாராட்டுகிறோம். பல பத்தாண்டுகளின் பின்னர் இருண்ட மேகமாய் தலித் மக்கள் மீது பாய்ந்துள்ள தமிழக சாதி வெறி போலீசின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை கண்டிப்போம்.

நன்றி - அருள் எழிலன். முகநூல்

உண்மை அறியும் குழுவின் அதிர்ச்சித் தகவல்கள்



திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணவேணி 13.06.2011 அன்று, இரவு பத்து மணியளவில் ஒரு கொலைவெறிக்கும்பலால் கொடூரமாக வெட்டப்பட்டு, உயிருக்குப் போராடிய நிலையில் – திருநெல்வேலி மாவட்ட அரசுப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தலித் சமூகத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, ஊராட்சி மன்றத் தலைவரõகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே அவருக்கு அச்சுறுத்தல்களும், மிரட்டல்களும் தொடர்ந்து இருந்துள்ளன.

1. 13.06.2011 அன்று இரவு கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி, உயிர் தப்பி, தற்பொழுது மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் கிருஷ்ணவேணி – மிகவும் நேர்மையாகவும், துணிச்சலாகவும் செயல்பட்டுள்ளார். கடந்த ஊராட்சி மன்றத் தேர்தலில் தாழையூத்து பஞ்சாயத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, 700 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். கடந்த அய்ந்தாண்டுகளாக தாழையூத்து ஊராட்சியின் மேம்பாட்டுக்கு பல திட்டங்களை ஆக்கப்பூர்வமாக மேற்கொண்டுள்ளார்.

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை மாவட்டத்திலேயே திறம்பட நிறைவேற்றிய முதன்மையான ஊராட்சி மன்றத்திற்கான "சரோஜினி நாயுடு விருதினை' 2009 ஆம் ஆண்டில், இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டில் அவர்களிடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பிற சாதியைச் சேர்ந்த பொது மக்கள் பலரும் இவரைப் பாராட்டுகின்றனர். இவருடைய அசாத்தியமான துணிச்சலும், நேர்மையும் பலரும் வியக்கும் அளவில் திறம்பட நிர்வாகம் செய்யும் ஆற்றலும் பாராட்டத்தக்கதாக இருந்துள்ளது.

2. ஊராட்சி மன்றத் தலைவராக இவர் நேர்மையாகவும், கறாராகவும் செயல்பட்டது – வேறு சாதியைச் சேர்ந்த சில ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தங்களது பதவியைக் கொண்டு மக்களிடமிருந்து லஞ்சம் வாங்கவோ, கூடுதலாக வேறு வழிகளில் சம்பாதிக்கவோ முடியாத சூழலில் – இவருடைய செயல்பாட்டுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். சாதியச் சமூகத்தின் கடைகோடியில் இருக்கும் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் – இவ்வளவு சிறப்பாக நிர்வாகம் செய்கிறாரே என்ற பொறாமையும், சாதிய ஆதிக்க உணர்வும் இவர்களிடம் அவ்வப்போது வெளிப்பட்டு வந்துள்ளது.

3. இதனால் இவருக்கு கடந்த அய்ந்தாண்டுகளிலும் தொடர்ந்து எதிர்ப்புகளும், அச்சுறுத்தல்களும், மிரட்டல்களும் இருந்து வந்துள்ளன. பரவலாக பலதரப்பட்ட மக்களின் ஆதரவிருந்தாலும், ஒரு சில செல்வாக்கு கொண்ட தனி நபர்கள்/ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர். இது, ஊராட்சி மன்றத் தலைவரின் பணிகளுக்கு அடிக்கடி தடைகளாக இருந்ததோடு, அவருக்கு எதிரான சாதிய ஆதிக்க உணர்வை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. எனவே, கடந்த அய்ந்தாண்டுகளில் ஊராட்சி மன்றப் பணிகளை சரிவரச் செயல்பட விடாமல் இடையூறு செய்த ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் துணைத் தலைவர் மீது புகார் மனுக்களை வட்டார வளர்ச்சி அலுவலர், திட்ட அலுவலர் (வளர்ச்சி முகமை), காவல் ஆய்வாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சித் தலைவர் போன்றோருக்கு கொடுத்துள்ளார்.

பல வேளைகளில் இந்தப் புகார் மனுக்கள், காவல் துறை அதிகாரிகளால் முறையாக விசாரிக்கப்படாமலும், "இந்தம்மா இப்படித்தான், எல்லாவற்றுக்கும் தீண்டாமை புகார் மனுக்களாகக் கொண்டு வந்து தொந்தரவு செய்வார்' என்பது போன்ற உணர்வுமே மேலோங்கி இருந்துள்ளது கவனிக்கத்தக்கது. ஒரு சில புகார் மனுக்களின் மீது தாழையூத்து காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கைகளாகப் பதியப் பெற்றாலும், பல புகார் மனுக்கள் எந்தவித நடவடிக்கையுமின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளன.

4. ஒரு தலித் பெண் அரசியல் அதிகாரம் பெற்று, ஊராட்சி மன்றத்தில் ஆட்சி செலுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாத சாதிய ஆதிக்க உணர்வு, பிற சாதி ஊராட்சி மன்ற உறுப்பினர்களிடம் மேலோங்கி நிற்பதைக் காண முடிகிறது. அடிப்படையில் கெட்டி தட்டிப்போன சாதியச் சமூகத்தின் ஆதிக்க உணர்வின் வெளிப்பாடுதான் பல வேளைகளில் உள்ளாட்சி மன்றத் தலைவராக கிருஷ்ணவேணியை பணி செய்ய விடாது தடுக்கும் சம்பவங்களாக நடந்துள்ளன.

கிராம சபைக் கூட்டங்களில் அவர் வைத்திருந்த அறிக்கை ஏட்டைப் பிடுங்குவது, (26.01.2011) அவரது கையைத் திருகி, அடிக்க எத்தனிப்பது, சுதந்திர நாள் விழாவில் அவரை கொடியேற்ற விடாமல் தடுத்தல் (15.08.2010), ஊராட்சி மன்ற அலுவலகத் தில் தலைவருக்குரிய நாற்காலியில் அமர விடாமல் தடுப்பது, காசோலையில் கையெழுத்துப் போடாமல் இடையூறு செய்வது (22.01.2009), மக்கள் நலப் பணிகளைச் செய்யவிடாமல் தடுப்பது (08.04.2008) போன்று இவருக்கு நேர்ந்துள்ள ஒரு சில கொடுமைகள் – ஆதிக்க சாதியினர் மத்தியில் புரையோடிக் கிடக்கும் சாதிய உணர்வின் வெளிப்பாடுதான்.

5. 13.06.2011 அன்று இரவு நடந்த கொலைவெறித் தாக்குதலுக்கு உடனடிக் காரணமாகச் சொல்லப்படுவது : ஊராட்சி மன்றத் தலைவருக்கும், மேலத் தாழையூத்தில் வசிக்கும் (ஊராட்சி மன்றப் பிரதிநிதி) சுப்பிரமணியன் (எ) சுப்பு என்பவருக்கும் இடையே ஓடைப் புறம்போக்கில் பொதுக்கழிப்பறை கட்டுவதில் முரண்பாடு எழுந்தது. தங்களது வீட்டிற்குப் பின்புறம் செல்லும் ஓடையை ஒட்டி இப்பொது கழிப்பறை கட்டப்படுவதை சுப்பு கடுமையாக ஆட்சேபித்துள்ளார். இந்த சுப்புவும், மற்றொரு உறுப்பினரான மீரான்கனியும் இதனை எதிர்த்தாலும், அப்பகுதியில் வசிக்கும் கோனார் சமூகத்தினரும், பிற சாதியைச் சேர்ந்தவர்களும் அப்பகுதி பெண்களும் கழிப்பறைக்கான தேவையை உணர்ந்து, பொதுக் கழிப்பறையைக் கட்ட அந்த இடத்தைத் தேர்வு செய்துள்ளனர். மக்களின் விருப்பப்படி இந்த இடத்தில் கட்ட வேண்டும் என்ற முடிவும் ஊராட்சி மன்றக் கூட்டத்தில் பேசி எடுக்கப்பட்டது.

தனது வீட்டிற்குப் பின்புறம் பொதுக் கழிப்பறையை கட்டுவது தனக்கு கவுரவக் குறைச்சல் என்று சுப்பு எண்ணி, தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்ததோடு, மாவட்ட நிர்வாகத்திற்கும் இதுகுறித்து தகவல் கொடுத்து, சம்பவ தினத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, பொதுக் கழிப்பறையை அங்கே கட்டுவதற்கான தடையையும் வாங்கியுள்ளார். ஓடைப் புறம்போக்கில் எந்தவித கட்டடங்களும் கட்டக்கூடாது என்ற காரணத்தைக் கூறி, மாவட்ட நிர்வாகம் இம்முடிவை எடுத்துள்ளது. இதனை எதிர்த்துப் பலதரப்பட்ட மக்களையும் திரட்டி, கிருஷ்ணவேணி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சம்பவ தினத்தன்று காலையில் ஒரு மனுவும் கொடுத்துள்ளார்.

6. ஊராட்சி மன்றத் தலைவர் மீது கொடூரத் தாக்குதல் நடந்த சம்பவத்தை முதல் தகவல் அறிக்கையாகப் (குற்ற எண். 213/11) பதிவு செய்த தாழையூத்து காவல் துறை உதவி ஆய்வாளர் கே. பால்துரை, பாதிக்கப்பட்டவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்று தெரிந்த பின்பும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய பிரிவுகளைப் பதிவு செய்யாமல், 341, 294(பி), 323, 307 போன்ற இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகள் மற்றும் Sec.4 of Tamilnadu Prohibition of Harassment of Women Act 2002 இன் கீழ் மட்டுமே பதிவு செய்துள்ளார்.

சம்பவ தினத்திற்கு மறுநாள் ஆதித்தமிழர் பேரவை, தமிழ்ப்புலிகள் மற்றும் பல்வேறு மனித உரிமை அமைப்புகள், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மேற்கொண்ட போராட்டங்களின் விளைவாகவே 15.06.2011 அன்று, வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவு 3 (2) (5)இன் கீழ் முதல் தகவல் அறிக்கை மாற்றம் செய்யப்பட்டு, ஆய்வாளரால் நீதித்துறை நடுவர் மன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது (341, 294(பி), 323, 324, 307 இதச மற்றும் பிரிவு 4 TNPHW Act 2002 r/2 3 (2) (5) SC/ST (PoA) Act.

7. இத்தாக்குதலை வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையாக மட்டுமே பார்க்கும் பார்வை காவல் துறை அதிகாரிகளிடம் உள்ளது. பல்வேறு பரிமாணங்கள் உள்ளடங்கிய கொலைவெறித் தாக்குதல் என்ற முழுமையான பார்வை இல்லை. கிருஷ்ணவேணி மிகவும் நேர்மையாக, கையூட்டு வாங்காமல் கறாராக இருந்து செயல்பட்டதை குறைபட்டு, சற்று நெழிவு சுளிவுகளோடு செயல்பட்டிருந்தால் இந்தத் தாக்குதல் நடைபெற்றிருக்காது என்ற போக்கு, காவல் துறை அதிகாரிகளிடம் மேலோங்குவதைக் காண முடிகிறது.

8. இவ்வளவு கொடுமையான தாக்குதல் நடந்து, பல வெட்டுக் காயங்களோடு உயிருக்கு ஊசலாடி, ஒரு காதை இழந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறும் ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணவேணியை வட்டார வளர்ச்சி அலுவலரோ, மாவட்ட ஆட்சித் தலைவரோ அரசு மருத்துவமனைக்கு 18.06.2011 வரை நேரில் சென்று சந்திக்கவில்லை. அரசு எந்திரத்தின் (மாவட்ட நிர்வாகத்தின்) மனிதாபிமானமற்ற போக்கையே இது காட்டுகிறது.

9. தொடர்ந்து நேர்மையாக, திறம்பட செயல்பட்டதற்கு உரிய பாதுகாப்பு தனக்கும் தன் குடும்பத்திற்கும் கிடைக்கவில்லை என்ற அச்ச உணர்வு கிருஷ்ணவேணிக்கு எழுந்துள்ளது. இதேபோல நேர்மையாக, திறம்பட மக்களுக்காகச் செயல்படும் ஊராட்சி மன்றத் தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் ஏற்படும் இதுபோன்ற பாதுகாப்பற்ற நிலை/அச்ச உணர்வு அவர்களுக்குள் மேலோங்கி இருப்பது – அடித்தள ஜனநாயகத்திற்கும், மக்களின் முழுமையான பங்கேற்பிற்கும், நேர்மையான, திறமையான நிர்வாகத்திற்கும் விடப்பட்ட சவாலாகவே அமையும்.

பரிந்துரைகள் :

1. கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளான கிருஷ்ணவேணிக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும் போதிய பாதுகாப்பை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் உடனடியாக வழங்க வேண்டும். ஏற்கனவே அவருடைய உயிருக்கு அச்சுறுத்தல்களும், மிரட்டல்களும் தொடர்ந்து இருந்து வந்துள்ள நிலையில், ஆயுதந்தாங்கிய பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட வேண்டும்.

2. கொடூரமான கொலைவெறித் தாக்குதலுக்கு இலக்கான கிருஷ்ணவேணிக்கு வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையான ரூ. 50,000/–அய் இரு நாட்களுக்கு முன் அரசு வழங்கியுள்ளது. ஆனால், கொலை வெறித் தாக்குதலின் தன்மை, கொடூரம் போன்றவற்றைக் கணக்கில் கொண்டு கூடுதலாக 3 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை அவருக்கு வழங்கப்பட வேண்டும். தவிர, அவருடைய மருத்துவச் சிகிச்சைக்கான ஏற்பாடுகளிலும் சிறப்புக் கவனம் செலுத்தி, அவர் விரைவாக குணமடைய அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

3. ஏற்கனவே கிருஷ்ணவேணி கொடுத்த பல்வேறு புகார் மனுக்களின் மீது காவல் துறை சுதந்திரமான விசாரணையை மேற்கொண்டு, அதன் அடிப்படையில் முறையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்.

4. கடந்து அய்ந்து ஆண்டுகளாக கிருஷ்ணவேணி கொடுத்த புகார் மனுக்கள் மீது முறையாக விசாரணை செய்யாத, தாழையூத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் கே. பால்துரை அங்கிருந்து உடனே மாற்றம் செய்யப்பட வேண்டும். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5. தமிழகத்தின் பிற பகுதிகளில் குறிப்பாக தென்மாவட்டங்களில் ஊராட்சி மன்றத் தலைவர்களாக/பிரதிநிதிகளாகப் பணியாற்றும் தலித் மற்றும் பெண் பிரதிநிதிகளுக்கு, தமிழக அரசு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர்கள் திறம்பட தங்கள் பணிகளை மேற்கொள்ளத் தடையாக உள்ள விஷயங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

6. தலித் சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சி மன்றங்களில் துணைத் தலைவர் பதவிகளும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும். அதேபோல, தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சி மன்றங்களில் துணைத் தலைவர் பதவிகளும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும். (பெருவாரியான இடங்களில் காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரம், ஊராட்சிகளுக்கான திட்டங்களைத் தாமதமின்றி விரைவாகவும் செய்து முடிக்கவும் இத்தகைய ஏற்பாடு பெரிதும் உதவும்.) 

தாழையூத்து ஊராட்சித் தலைவர் மீதான கொலைவெறித் தாக்குதலுக்கான பின்னணி மற்றும் காரணங்களை ஆராயவும், இதுபோன்ற வன்கொடுமைகளைத் தடுக்கவும் – திருநெல்வேலியில் உள்ள சமூக அக்கறை கொண்ட கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் குழு ஒன்று உண்மையைக் கண்டறியும் நோக்கில் கள ஆய்வினை, சூன் 18 – 19 ஆகிய நாட்களில் மேற்கொண்டது. இக்குழுவில் இடம் பெற்ற உறுப்பினர்கள் : 1. பேராசிரியர் தொ. பரமசிவன் 2. பேராசிரியர் ஜெ. அமலநாதன் 3. பேராசிரியர் பே. சாந்தி 4. திரு. லெனா குமார் – யாதுமாகி பதிப்பகம் 5. வழக்குரைஞர் ஜி. ரமேஷ் 6. திரு. சு. கணேசன் – மக்கள் கண்காணிப்பகம் 7. வழக்குரைஞர் ம. பிரிட்டோ – வான்முகில் 8. திரு. பே. மாரியப்பன் – மனித உரிமை ஆர்வலர்

‘நான் ரொம்ப தைரியசாலி, யாரையும் கள்ளத்தனம் பண்ண விடமாட்டேன்’

நீங்கள் தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்தே உங்களை இயங்க விடாமல் செய்து வருகிறார்களா?

நான் பொறுப்பேற்றதிலிருந்தே பல பிரச்சனைகள். தெரு பிரச்சனை, ரோடு, தண்ணீர் பிரச்சனை, வீடு ஒதுக்கீடு பண்றது எல்லாமே பிரச்சனைதான். கூட்டமே நடத்தவிட மாட்டாங்க. காவல் துறையின் உதவி யுடன்தான் கூட்டமே நடத்துவேன். காவல் துறையிடம் புகார் மனு கொடுத்தாலும் உடனே நடவடிக்கை எடுக்க மாட்டாங்க. அவசரம்னு போன் பண்ணி கூப்பிட்டாலும் உடனே வரமாட்டாங்க. பால்துரை இன்ஸ்பெக்டர், எந்தப் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்க மாட்டார். ஆனா, மற்றவர்கள் கூப்பிட்டால் உடனே வருவார்.

குடியரசு தினம் அன்னிக்கு கொடியேத்திட்டு, கிராம சபைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து கொண்டு இருக்கும்போது, துணைத் தலைவர் அவருடைய பினாமி ஆள் மூலம் இடது கையை பின்னால் திருப்பி முறுக்கி ஒடிச்சி விட்டார். பால்துரை இன்ஸ்பெக்டருக்குதான் போன் பண்ணினோம். வரவே இல்லை. அப்புறம் இதே ஆஸ்பத்திரிலதான் வந்து சிகிச்சை எடுத்துக்கிட்டேன். "ஆதித்தமிழர் பேரவை' தான் வந்து ஆர்ப்பாட்டம் பண்ணினாங்க. ஏழைப்பேச்சு அம்பலம் ஏறலை. நம்ம சொல்றது எதையுமே கேட்க மாட்டாங்க.

வெட்டும்போது ஏதாவது சொல்லி வெட்டுனாங்களா?

பேசவே விடலை. தாறுமாறா வெட்டுனாங்க. அங்க ஒரு கழிப்பறை கட்டப் போறோம். ரொம்ப நாளா போராடி ஒரு கழிப்பறை கட்டப் போறோம். சுப்பு கோனாரு அண்ணன் பையன் ஆவுடையப்பக் கோனார் பையன் அம்மலு, சுல்தான் ஆரம்பத்தில் இருந்தே என்னிடம் பிரச்சனை பண்ணினாங்க. இரண்டு பேரும் சேர்ந்து நாடார் பையன்களை பிரெய்ன் வாஷ் பண்ணி கூட்டிட்டு வந்தாங்க. அன்னிக்கு ரொம்ப நேரமாயிடுச்சு. ஆபிஸ்ல வேலை முடியவே 9.30 மணி ஆயிடுச்சு. மறுநாள் ஜமாபந்தி இருந்ததுனால ஓய்வூதியம், அப்புறம் பட்டா, ரேஷன் கார்டு எழுதிக் கொடுத்திட்டு இருந்தேன். மாமா வேற இரவு வேலைக்குப் போயிட்டாங்க. எனக்கு அன்னைக்கு "பீரியட்ஸ்' வேறு. அதனால என்னால நடக்கவும் முடியலை. தலை சுத்தலா இருந்தது. அதனால ஆட்டோல போகலாம்னு சொல்லி கிளம்பினேன்.

வழக்கமாக போகின்ற ஆட்டோவா? வேற ஆட்டோவா?

நான் எப்பவுமே நடந்துதான் போவேன். அன்னைக்கு "பீரியட்ஸ்' சமயம், மத்தியானம் வேறு சாப்பிடலை. தலை சுத்துற மாதிரி இருந்தது. நடக்க முடியல, கீழே விழுந்துருவேனோன்னு பயந்துதான் ஆட்டோல போவோம்னு கிளம்பினேன். ஆட்டோக்காரன் வந்தான். கருப்பசாமி கோயில் திரும்பிய உடனே கூட்டமா அரிவாளோட வந்ததும் ஆட்டோக்காரன் ஓடிப் போயிட்டான். நானும் ஆட்டோவை விட்டு இறங்கப் போனேன். இறங்க முடியலை. எப்பவுமே அந்த இடத்துல கும்பலா ஆள் உட்கார்ந்து இருப்பாங்க. போலிஸ் கிட்ட எத்தனையோ தடவை, அங்க ஆட்களை உட்கார விடாதீங்கன்னு சொன்னோம். உட்கார்ந்துகிட்டு கெட்ட வார்த்தையால பேசுவாங்க. கல்லைக் கொண்டு எறிவாங்க.

அன்னைக்கு அரிவாள் கத்தியோட கூட்டமா ஓடி வந்ததும் ஆட்டோக்காரன் ஓடிட்டான். ஆட்டோக்குள்ள வைச்சி வெட்டுனாங்க. பேசவே விடலை. வாயை மூடிட்டாங்க. கண்ணைப் பொத்திட்டாங்க. வெட்டு அதிகமா விழுந்ததாலே கத்த முடியலை. எட்டரை மணிக்கு மேலே எல்லோரும் நாடகம் (டி.வி.) பாக்கப் போயிடுவாங்க.

நாடகத்திலேயே மூழ்கிடுவாங்க.

அதுக்கு முன்னால உங்களத்தான் வெட்டப் போறோம்னு ஏதாவது சொன்னாங்களா?

அப்படி சொல்லலை. சொல்லியிருந்தா உஷாரா இருந்திருப்போம். ஜாக்கிரதையா இருந்திருப்போம். எங்க வீட்டுக்காரரைத்தான் வெட்டுவேன்னு சொல்வாங்க. ரோட்லே வைச்சி வெட்டுவேன்னு சொன்னாங்க. கடைசியில அவரை இங்கிருந்து மாற்றம் பண்ணிட்டாங்க. என் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. தலைவர் ஆனதில் இருந்தே பிரச்சனை. அவங்க சொல்ற எல்லாத்துக்கும் சரின்னு ஜால்ரா அடிச்சிட்டு போயிருந்தா நல்லா இருந்திருக்கும்; எந்தப் பிரச்சனையும் வந்திருக்காது. கள்ளத்தனம் பண்றதுக்கு, யாரையும் எதையும் தின்ன விட மாட்டேன். அதுதான் பிரச்சனை. நான் தேர்தலில் சுயேட்சையாகத்தான் நின்றேன். ஆதித்தமிழர் பேரவைன்னு ஒண்ணு இருக்கிறதே பதவி ஏற்ற பிறகு தான் தெரியும். எங்க சமுதாயம்ன்னு லேசா போவேனே தவிர, பெரிய அளவுல இல்லை.

ஊர் மக்கள் ஆதரவாக இருப்பாங்க. நீங்களே அவங்ககிட்ட கேட்டுக்குங்க. நல்லா ஒத்துழைப்பு கொடுப்பாங்க. இடையில் நாடார் சமூகத்துக்கும் ஒரு சண்டை வந்தது. 2008 இல் "சரோஜினி நாயுடு அவார்டு' சோனியா அம்மாகிட்ட வாங்க டெல்லி போயிருந்தப்ப, சாதி சண்டைல விடலைப் பசங்களுக்குள்ளே சண்டை. தட்சணம்மாள்

நாடாரோ என்னவோ ஒரு நாடார், அந்த சண்டைல எங்க சாமிய அடிச்சிட்டாங்கன்னு பிரச்சனை. அந்தப் பிரச்சனை நடக்கும்போது நான் டெல்லி போயிட்டேன்.

நான்தான் அந்த சண்டையைத் தூண்டிவிட்டேன் என்று என்னைப் பிடிக்காதவங்க சொல்லி, அந்த சாதிச் சண்டை விஸ்வரூபம் எடுத்துட்டு, என்னதான் சரிசெய்து வைத்தாலும் அப்பப்ப இது புகைஞ்சிகிட்டே இருக்கும் (அருகில் இருந்த மகள் புவனேஸ்வரி இப்ப கொடையில்கூட பிரச்சனை வந்தது. சும்மா இருந்த அம்மாவை எப்படி நீங்க இங்க வரலாம் எங்க கோயிலுக்குன்னு கேட்டாங்க. வேணி தொடர்கிறார்). மட்டமா மட்டமா அம்மணக்குண்டி அப்படி இப்படின்னு லேடிஸை கேவலப்படுத்துறாங்க. யாரு மேடம் சம்மதிப்பாங்க? இதுக்கெல்லாம் நாங்க பொறுப்பாக முடியுமா? பிரச்சனை வந்தது.

உங்க பதவிக் காலத்தில் யாரெல்லாம் அதிகளவு தொந்தரவு பண்ணாங்க?

இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த சுல்தான். ஓடைப் பிரச்சனையில சுப்பு போன வருஷத்துல இருந்து ரொம்ப தொந்தரவு பண்ணினாங்க. அப்புறம் நாடார்கள்தான். என் சொந்த ஊர் நாகர்கோவில் பக்கம். இங்குள்ள மக்கள்

எல்லாருமே நாடார் வீடுகளுக்கு கல்யாண வீட்ல இலை எடுத்துப் போடுவாங்க. சுடுகாட்டுல குழி வெட்டப் போவாங்க. இப்படி நாடார் சமூகத்துக்கு வேலை செய்வாங்க. நான் பதவிக்கு வந்ததும் அதுபோல வேலைகளுக்கு போக விட மாட்டேன். ஓடை தள்ற வேலை பார்க்கறதாலே, இப்ப போக மாட்டாங்க. இது, அவங்களுக்கு தாங்கலை. கோபம்.

சுல்தான் ஒரு தடவை தேசிய வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் ஓடையில வைச்சி வேலை நடக்கும்போது, அங்க அம்மணமா வந்து நின்னாரு. இப்படி வந்து நின்னா பொம்பளைங்க எப்படி நிப்பாக? அதுக்குக்கூட போலிஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காசு கொடுத்தா போலிஸ் அவங்க பக்கந்தான் நிக்கும். அப்போ டி.பி.எம். மைதீன்கான் இருந்தார், அவர்கிட்ட சொன்னேன். பூங்கோதை அம்மாட்ட சொன்னேன். நான் சுயேச்சையா நின்னேன். ஆனால், நான் அ.தி.மு.க. சார்பாக நிக்கிறேன்னு சொல்லி, அந்தம்மாவையும் நடவடிக்கை எடுக்க விடாமல் ஆக்கிட்டாங்க. கருப்பசாமி பாண்டியனையும் பார்த்தேன்.

கஷ்டப்பட்ட சமுதாயத்தில் இருந்து யாரும் வரக்கூடாதுன்னு நெனைக்கிறாங்க. கழிப்பறையை கட்டுறதை எதிர்த்து சுப்பு கோனார்; அவருடன் சேர்ந்து மீரான், சுல்தான் எல்லாம் மிரட்டினாங்க. நாங்க முறையா அணுகினோம். ஆர்.டி.ஓ.விடம் கேட்டோம், தாசில்தாரிடம் கேட்டோம், இடம் இருந்தா தாராளமாக கட்டுங்க. இடம் முடிவு செய்தது மக்கள்தான். கோனார், ஆசாரி, தேவர் எல்லா சாதியும் சேர்ந்து தான் முடிவு பண்ணாங்க. இவர் சுப்பு கோனாரிடம் முக்கால்வாசி புறம்போக்கை பிடிச்சி வைச்சிருக்காரு. அதனாலதான் அவருக்கு இது புடிக்கலை.

(அவரால் தொடர்ந்து பேச முடியவில்லை) நான் ரொம்ப தைரியசாலிங்க. ஆனால், பொம்பளைன்னு கூட பாக்காம இப்படி தாறுமாறா வெட்டுனதுக்கு அப்புறம் எனக்கு ரொம்ப பயமா இருக்கு. இனிமேல் எங்க சமுதாயத்துல இருந்த யாராவது பொது வாழ்க்கைக்கு தைரியமா வருவாங்களா? பொம்பளையான என்னை வெட்டும்போது என் கணவர், என் பிள்ளைங்க கதி? எங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கு?

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More