Slideshow

களிப்பூட்டும் பொய்யும், கசப்பூட்டும் மெய்யும் !

.பலகோடி ஆண்டுகளாகப் புரையோடிப்போன மரபொன்றினை சமீப காலத்தேயே பகுத்தறிவுவாதத்தால் குறுகியகாலத்தில் வெற்றி பெறச்செய்துவிடமுடியாது

தளத்திலும் புலத்திலும் அரசியலின் நவவடிவம், திசைவழி, அதன் பரிமாணம்

நமது சமூகம் இன்னமும் "யாழ்-சைவ-வேளாள-உயர்வர்க்க-ஆணாதிக்க" அதிகாரத்துவ அமைப்பையே கொண்டிருக்கிறது. வெறும் தமிழ்தேசிய விடுதலை இவை எல்லாவற்றுக்குமான சர்வரோகநிவாரணி ஆகிவிடாது.

பேசாப்பொருளை பேசு பொருளாக்குவதன் அரசியல்!

பேசாப்பொருளை என்றென்றும் பேசாப்பொருட்களாக வைத்திருப்பதில் ஆதிக்க சக்திகள் நீண்டகாலம் வெற்றிபெற்று வருகின்றன.

Showing posts with label அருந்ததியர். Show all posts
Showing posts with label அருந்ததியர். Show all posts

குடியானவர்கள் குடிக்கும் குடத்தில் சக்கிலி பையன் தன்னீர் குடிப்பதா


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகில் நாஜிபாளையம் ஊராட்சி செங்கோட்டையன் நகரில் வசிப்பவர் க.ஆனந்தராஜ்; 17-05-2013 அன்று நாஜிபாளையம் துவக்கப்பள்ளி அருகே உள்ள விஜயன் டீ கடையில் கோவில் வரி சம்பந்தமாக ஊர் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. பெரியாரியல்வாதியான ஆனந்தராஜிடமும் வரி கேட்கப்பட்டிருக்கிறது. நான் ஒரு பெரியாரியல் வாதி எனக்கு கோவில் விழாக்களில் உடன்பாடில்லை, எனவே நான் வரி தரமாட்டேன். என் அண்ணன், தம்பியிடம் வாங்கிகொள்ளுங்கள் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை என்று சொல்லியிருக்கிறார். ஆனால் குடும்பத்தில் உள்ள மூன்று பேருமே வரி கொடுத்தாக வேண்டும் என்று பஞ்சாயத்தார் வற்புறுத்தியுள்ளனர். இதை மறுத்த ஆனந்தராஜ் அந்த டீ கடையில் இருந்த தன்னீர் குடத்தில் தன்னீர் குடிப்பதற்காக டம்ளரை எடுத்துள்ளார். குடியானவர்கள் குடிக்கும் குடத்தில் சக்கிலி பையன் தன்னீர் குடிப்பதா என்று அங்கிருந்த வீரப்பன் மற்றும் தங்கவேல் ஆகியோர் ஆனந்தராஜை கடுமையாக திட்டி, குடத்தில் இருந்த தன்னீரையும் கீழே ஊற்றியுள்ளனர். நான் எல்லோருக்கும் பொதுவான குடம் என்று நினைத்துவிட்டேன் என்று கூறிவிட்டு ஆனந்தராஜ் அங்கிருந்து சென்றுவிட்டார். அடுத்த நாள் ஊராட்சி மன்ற தலைவர் இராஜா துரைசிங்கம், ஆனந்தராஜின் அம்மாவிடம் இதுபற்றி கடுமையான எச்சரிக்கை செய்துள்ளார். உன் பையனுக்கு இவ்வளவு தைரியமா? குடியானவர்களுக்கு சமமாயிட்டானா உன் பையன்? நான் மட்டும் அங்கிருந்திருந்தால் உன் பையனை உதைக்காமல் விட்டிருக்கமாட்டேன். மரியாதையா வரியை கட்டிவிட்டு ஒழுக்கமா இருக்க சொல்லு என்றும் எச்சரித்துள்ளார். இதை கேள்விபட்ட ஆனந்தராஜ் ஊராட்சி மன்ற தலைவரிடம் நீங்களும் இப்படி சொல்லலாமா? என்று முறையிட்டிருக்கிறார். அந்த தொலைபேசி உரையாடலை நீங்களே கேளுங்கள்..........

இலங்கையில் அருந்ததியர் நிலை - என்.சரவணன்

சரிநிகரில்18 வருடங்களுக்கு முன்னர் அருந்ததியன் என்கிற பெயரில் தொடராக எழுதி வந்த குறிப்பை மாந்திருக்க மாட்டீர்கள். அருந்ததியர் சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதால். சென்ற முறை இலங்கை பயணம் பல கூட்டங்கள், சந்திப்புகள், செயற்பாடுகளால் மீண்டும் அவை புத்துயிர்ப்பு பெற்றுள்ளன. இம்முறை ஒரு மாநாட்டுக்கும் ஏற்பாடுகள் நடக்கின்றன.
லண்டன் இலக்கிய சந்திப்பில் எடுத்த தலைப்பை முழுமையாக பேச நேரம் போதவில்லை. 20 நிமிடங்களில் என்னத்தை சொல்ல...? ஆனால் அந்த சந்தர்ப்பத்தை எடுத்துக்கொள்வது தான் எங்களுக்குள்ள வழி
Video streaming by Ustream

அருந்ததியர் வாழ்வும் இலக்கியமும்- ஆதவன் தீட்சண்யா


நம்மில் பலரும் தம்மை சாதிமுறைமைக்கு எதிரானவர்களாக நம்பிக் கொள்கிறோம். கருத்தியல் ரீதியாக சாதியத்தை எதிர்க்க முன்வந்திருக்கிற நாம் நடைமுறையில்- சொந்த வாழ்க்கையில்- சாதியத்தைக் கடக்கத் துணிந்திருக்கிறோமா என்று கேள்வியெழுப்பும் நேரம் வந்துவிட்டது. சாதிக்கெதிரான போராட்டம் என்றதும் தொழிற்சங்க நடவடிக்கையைப் போல கூட்டாக சேர்ந்து ஆர்ப்பாட்டமோ உண்ணாவிரதமோ நடத்தி சாதியை ஒழித்துவிடலாம் என்று நினைப்பது அறிவுக்கொவ்வாத அணுகுமுறை. தமக்குள் இருக்கிற சாதிய சிந்தனைகள் குறித்து குற்றவுணர்ச்சி கொள்வது, அச்சிந்தனைகளிலிருந்து விடுபடுவது, சகமனிதரிடம் தீண்டாமை பாராட்டாமல் இருப்பது, எல்லா நிலைகளிலும் சாதியை மறுப்பது, சாதிய ஒடுக்குமுறைகள் நிகழ்கிறபோது தன்னொத்தவர்களோடு இணைந்து போராடுவது- என தனிப்பட்ட வாழ்வில் சாதியத்திற்கெதிரான போராட்டம் மலைப்பூட்டும் வகையில் பெரும் சவாலாக நம்முன் நிற்கிறது.

எல்லா வேலைகளையும் முடித்து விட்டு ஒட்டடையடித்து விடலாம் என்று நினைப்பதைபோல, ஒருவார காலம் விடுப்பெடுத்துக்கொண்டு சாதியை ஒழித்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. சமத்துவத்திற்காகப் போராடுவதென்பது நமது இயக்கத்தின் கொள்கையாக மட்டுமில்லாமல் நமது வாழ்வியல் நெறியாக- நமக்குள்ளிருக்கும் இயல்பானதொரு உணர்வாக மாறவேண்டியுள்ளது. 

நமக்குள் நிகழ்த்திக்கொள்ள வேண்டிய இந்த உள்முகப் பயணத்திற்கு உதவும் பொருட்டே இந்த கருத்தரங்கம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. சுவாரஸ்யமான சொற்பொழிவின் பெயரால் எல்லாப் பேச்சுக்களையும் ‘செவியின்பமாகவோ, செவிக்குணவாகவோ’ சுருக்கிப் புரிந்துகொள்ளும் போக்கு மிகவும் அபாயகரமானது. நேரத்தையும் உழைப்பையும் வீணடிக்கக்கூடியது. எனவே ஒரு தீவிரமான உரையாடலுக்கும் விவாதத்திற்குமாக நமது சந்திப்புகளை மறுகட்டமைப்பு செய்துகொள்ள வேண்டியிருக்கிறது.

2.கலை இலக்கியம் என்பவை மனிதமனத்தின் வெளிப்பாடுகள். மனிதமனமோ சமூகத்தின் விளைபொருள். இந்த விளைபொருளுக்கான நிலமாகவும் விதையாகவும் உரமாகவும் சமூகச்சூழலே இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள சிலருக்குத் தயக்கம் இருக்கிறது. எதன் சாயலும் படியாத ஒரிஜனல் சரக்கு என்று தமது சிந்தனைகளையும் அதிலிருந்து பிறக்கிற படைப்புகளையும் உருவகித்து வைத்திருக்கும் ‘சுயம்புகளான’ இவர்களுக்கு, அவை சமூகத்தின் விளைபொருள் என்று ஒப்பமுடியாமல் போவது இயல்பானதுதான். ஆனால் இப்படி ஒவ்வாமை கொள்கிறவர்கள் நடைமுறையில் தங்களது மறுப்பை நிறுவ எந்தவொரு சான்றாதாரத்தையும் முன்வைக்க முடியாதவர்களாகவே இருக்கின்றனர்.

சமூகம் என்கிற பெரும்பரப்புக்குள் தான் யார்? அந்த பெரும்பரப்பு தனக்குள் எவ்வாறு வினையாற்றுகிறது? சகமனிதரோடு தனக்கிருக்கும் உறவு சமத்துவமானதா? மேல்கீழ் படிநிலை கொண்டதா? அசமத்துவம் நிலவுகிறதென்றால் அதற்கான அடிப்படை என்ன? அந்த அசமத்துவத்தை ஏற்றுக்கொள்ள அல்லது நிராகரிக்கவும் எதிர்க்கவும் உள்ள நியாயங்கள் என்னென்ன என்று மனித மனம் ஓயாமல் தனக்குள் ஓர் உள்முகத்தேடலை நடத்திக் கொண்டேயிருக்கிறது. இந்தத் தேடல் குறித்த பதிவுகளே கலை இலக்கியப் படைப்புகளாக வெளிப்படுவதாகக் கருதுகிறேன்.

அப்படியானால் கலை இலக்கியம் குறித்த மதிப்பீடானது இந்த சமூகத்தைப் பற்றிய மதிப்பீட்டுக்கு நம்மை தவிர்க்கவியலாமல் இட்டுச்செல்கிறது. எனவே இங்கு சமூகம் என்னவாக இருக்கிறது என்பதிலிருந்தே எல்லாவற்றையும் தொடங்க வேண்டியிருக்கிறது.

இந்தியச் சமூகம் ஒன்றாக இல்லை. அது தீண்டப்படுவோர் இந்தியாவாகவும் தீண்டப்படாதோரின் இந்தியாவாகவும் இரண்டாகப் பிரிந்திருக்கிறது. பிரிந்திருக்கிறது என்றால் - அது வெறுமனே நிலவியல் ரீதியாக மட்டுமில்லாமல், வாழ்வின் எல்லா அம்சங்களிலும் இணக்கம் காணமுடியாதபடி பிரிந்திருக்கிறது. இந்தப் பிரிவினையை - இடைவெளியை இட்டுநிரப்ப எடுக்கப்பட்ட எல்லா முயற்சிகளையும் உள்வாங்கிச் செரித்துவிட்டு காலத்திற்கேற்ற ரூபங்களில் மீண்டும் மீண்டும் நீடித்து நிற்பதாயிருக்கிறது இந்தப் பிரிவினை என்று அம்பேத்கருக்கும் முன்பிருந்தே சொல்லப்பட்டு வருகிறது.

தீட்டு-புனிதம், நல்லது-கெட்டது, உயர்வு-தாழ்வு என்பதற்கான விளக்கங்கள் மாறிக்கொண்டே வந்தாலும் ஒவ்வொரு காலத்திலும் ஏதோ ஒன்று புனிதமாக- நல்லதாக- உயர்வாக கட்டமைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிற நிலையில் மாற்றமேதுமில்லை. எனவேதான் தீண்டாமையும் ஒடுக்குமுறையும் நீடிக்கிறது. நிலவும் இந்த உண்மைக்கு யார் அல்லது எது மூலகாரணமாய் அமைந்திருக்கக்கூடும் என்று தேடப் புகுந்தால் அது ஆதிக்க சாதியினரை குற்றம் சாட்டக்கூடும் என்ற பதற்றத்தில் இந்தியாவை ஒரே நாடாக - ஒன்றுபட்டு வாழும் ஒரு சமூகமாக முன்னிறுத்துகிற மோசடி நடந்துவருகிறது. இந்த மோசடிக்கு சற்றும் குறையாததுதான் மொழிவழி தேசியமும்.

ஆகவே இந்திய, தமிழ்ச்சமூகத்தின் மனநிலை நெடுங்காலமாகவே ஒடுக்குகிற அல்லது ஒடுங்குகிற நிலைக்குதான் பழக்கப்படுத்தப்பட்டுள்ளது. சகமனிதனை சமமாக கருதுகிற மேன்மையான குணம் அதற்குத் தெரியாத ஒன்று. சமத்துவவுணர்வை ஒருபோதும் துய்த்திராத அந்த மனம்- அதனாலேயே சுதந்திரவுணர்வையும் துய்க்கமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. தத்தமது சாதியின் புனிதத்தைக் காப்பாற்றும் பொறுப்பு ஒவ்வொரு தனிமனிதனின் பொறுப்புகளிலும் தலையாயதாய் நிறுவப்பட்டிருப்பதால் எப்போதும் ஒரு தற்காப்பு மனநிலையிலேயே வாழ வேண்டியராயிருக்கிறார். சற்று அயர்ந்தாலும் மோசம் போய்விடுவோம் என்ற பீதியில் உறைந்துகிடக்கும் ஒருவரது மனநிலை அழுத்தம் தாளாது நிலைபிறழ்ந்து தம்மைச் சுற்றி பாதுகாப்பு அரண்களை நிறுவிக்கொள்ள வேண்டியிருக்கிறது. மாற்றாரைத் தடுக்க அமைக்கப்பட்ட இந்த தடுப்பரணுக்குள் ஒவ்வொரு சாதியும் ஒவ்வொரு தனிமனிதரும் ஒரு கைதியாக வாழ்ந்து கொண்டிருப்பதுதான் இன்றைய நிலை.

எனவே இந்திய- தமிழ்ச் சமூகத்தின் மனம், பாரபட்சங்களையும் புறக்கணிப்பையும் அநீதியாக பார்ப்பதற்குத் துணிவதில்லை. அம்மாதிரியான அநீதிகளை இயல்பானதாக ஏற்றுக்கொள்வதும் அதை சகமனிதர்மீது நிகழ்த்திப் பார்க்கத் துணிவதாயுமே இருக்கிறது. அசமத்துவத்தை, ஒடுக்குமுறையை இயல்பானதாக ஏற்றுக்கொள்கிற இந்த மனநிலைதான் - சமூக ஒடுக்குமுறைக்கு ஆளாகிற- அதன் காரணமாகவே அரசியல், பொருளாதார, பண்பாட்டுத்தளங்களிலும் ஒடுக்கப்படுகிற- தலித்துகளையும்கூட, தமக்குள் உட்சாதிப் பிளவுகளை பேணுவதிலும் தம்வீட்டுப் பெண்களை ஒடுக்குவதிலும், இழிவாக- தம்மிலும் கீழானவர்களாகக் கருதுவதற்கு நெட்டித்தள்ளுகிறது.

இந்தப் பின்புலத்தோடு கலைஇலக்கியத்தை மதிப்பீடு செய்யப் புகுந்தால் அங்கும் அசமத்துவமான பிரதிநிதித்துவமும், வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஊடாடி வழிநடத்தும் சாதிய/ பால்நிலைச் சாய்மானமும் வெளிப்பட்டிருப்பதை உணரமுடியும். நிலவும் ஏற்றத்தாழ்வான நிலைகளை இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொண்ட ஒரு சமூகத்தின் அங்கத்தினராய் இருக்கிற ஒருவர் தம் வாழ்வியல் அனுபவங்களிலிருந்து எதை- ஏன்- எப்படி- எதற்காக வெளிப்படுத்த முன்வருகிறார் என்ற தொடக்கப் புள்ளியிலேயே அவரது சாய்மானமும் உள்ளுறையாக இணைந்துவிடுகிறது. தன் படைப்புமனதை வெளிப்படுத்த அவர் வாய்மொழி மரபைத் தெரிவு செய்கிறாரா அல்லது எழுத்துவழியாக வெளிப்படுத்துகிறாரா என்பதிலும்கூட அவரது சாய்மானம் இணைந்தே இருக்கிறது. அதாவது இந்த நாட்டில் கல்வி கற்கும் உரிமை யாருக்கு எப்போது கிடைத்தது அல்லது கிடைக்கவில்லை என்பதோடு அது தொடர்புடையதாய் அமைகிறது.

ஆனால் இப்படி சொல்கிறபோது சிலர் ஆகாயத்துக்கும் பூமிக்குமாய் தவ்விக் குதிக்கிறார்கள். இலக்கியமும் கலைகளும் எல்லோருக்கும் பொதுவானது என்று கழுத்துநரம்பு புடைக்க கர்ஜிக்கிறார்கள். அப்படி இருந்தால் சரிதான் நண்பர்களே. ஆனால் இல்லை என்பதுதானே எதார்த்தம்? நிலம் நீர் காற்று ஆகாயம் பணம் காசு பண்டம் அனைத்தையும் சாதிப்பாஷாணத்தில் தோய்த்து தொங்கவிட்டிருக்கிற இந்த சமூகத்தில் இலக்கியம் மட்டும் எப்படி எல்லோருக்கும் பொதுவாய் இருக்கமுடியும் என்ற எளிய கேள்விக்கு இவர்களிடம் பதிலில்லை. இளமையில் கல் என்ற அவ்வையின் மரபும், எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் என்ற வள்ளுவர் மரபும் அழித்தொழிக்கப்பட்டு கற்கும் உரிமையை சில சாதிகளின் ஆண்களுக்கு மட்டுமே வார்த்துக்கொடுக்கும் நிலை உருவாகி நிலைத்து நின்றுவிட்ட இச்சமூகத்தில் கல்வியோடு மிகநேரடியாக தொடர்பு கொண்டிருக்கும் கலையும் இலக்கியமும் எல்லாவற்றிலிருந்தும் விலகி சுயம்புவாக எப்படி வெளிப்பட முடியும்?

மொழி எல்லோருக்கும் பொதுவென்றால் ஏன் சமஸ்கிருதம் மட்டும் தேவபாஷையாக அறிவிக்கப்பட்டது? நமஸ்காரம் என்ற சமஸ்கிருதச் சொல்லை பொற்கொல்லர்கள் உச்சரிக்கக்கூடாது என்று பிரிட்டிஷ் அரசிடம் மனுபோட்டு தடையுத்தரவு பெறப்பட்டது எதனால்? இழிசனர் வழக்கென்ற பதம் எதன்பொருட்டு உருவானது? இசை புனிதமென்றால் இசைக்கருவிகளும் புனிதம்தானே? எனில் ஏன் திருவையாற்றில் ‘நன்னா வாசிக்கிறவாள்’ ஒருத்தரும் பறையைத் தொடுவதில்லை? இந்தியாவின் தமிழகத்தின் செவ்வியல் மரபின் கலை வடிவங்களாக முன்னிறுத்தப்படுபவை எந்த சாதிக்குரியவை? கலாச்சாரப் பரிவர்த்தனைகளின் பெயரால் இந்தியாவிலிருந்து பிறநாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறவை இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களுக்குரியவையா? பார்ப்பனர்களின் அனைத்தும் பார்ப்பனர்களின் கைச்சரக்குகள் அனைத்தும் தேசிய கலைவடிவங்களாக அந்தஸ்துப்படுத்தப்படுவதும், பார்ப்பனரல்லாதவர்களின் கலைவடிவங்களை ‘எதினிக்’ அல்லது‘ ‘ஃபோ(ல்)க்’ என்றோ வகைப்படுத்தப்படுவதும் தற்செயலான நிகழ்வுகளா?

இப்படி எல்லாமே சாதியாகத்தான் இருக்கிறது. இதற்குள் இருக்கிற படைப்பாளியும் சாதிவயப்பட்டவராகவே இருக்கிறார். அவர் அறிந்தவற்றை தன் படைப்பாக வெளிப்படுத்துகிறார் என்றால் அவர் அறிந்திருப்பதெல்லாம் அவரது சாதி கற்றுக் கொடுத்ததைத்தான். அவரவர் சாதி அவரவருக்கு விதித்த வரம்புகளை மீறி எழுதவும் பேசவும் ஒருவர் இயல்பாக முயற்சிப்பதில்லை. (மிகுந்த அரசியல் விருப்புறுதி கொண்ட விதிவிலக்கான சிலரை இங்கே பொருட்படுத்தி பேசவேண்டியிருந்தாலும் அவர்கள் மிகவும் சொற்பமானவர்கள் என்றே குறித்துக்கொள்ள வேண்டும்.)

தன் சாதி பிறரை என்னவாகப் பார்க்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்திருக்கிறதோ அந்த பொதுப்புத்தியிலிருந்து தன்னை ரத்தம் சொட்டச் சொட்ட அறுத்துக்கொண்டு வெளியேறாமல்- அப்படி அறுத்துக்கொள்ளும்போது ஏற்படும் வலியையும் வாதையையும் வாய்விட்டுக் கதறி வெளிப்படுத்தத் துணியாமல்- நிலவும் சூழலை நியாயப்படுத்துகிற ஒருவரிடமிருந்து- அவர் கொம்பாதி கொம்பு படைப்பாளியாயிருந்தாலும் அவரிடமிருந்து வெளிப்படுகிற படைப்புகளை- அவை எத்தனை உன்னதமானதென்று உலகம் கொண்டாடினாலும் - அவை காகிதத்திற்குக் கேடானது என்பதே என் கருத்து.

எனவே இதுவரையான கலைஇலக்கியப் படைப்புகளை வாசிப்புக்கு உட்படுத்துகிற ஒரு தலித் மனம் அவற்றை தன் அகநிலை சார்ந்தே அணுகுகிறது. அவற்றில் சித்தரிக்கப்பட்டுள்ள வாழ்க்கை எவருடையது? அதில் தலித்துகள் இடம் பெற்றிருக்கிறார்களா இல்லையா? இடம் பெற்றுள்ளனர் என்றால் எவ்வாறு? என்றெல்லாம் அது படைப்புகளை பரிசீலிக்கிறது. பொத்தாம்பொதுவானதென்று நீங்கள் அறிவித்துக் கொண்ட எல்லாமே போலியானவை. அவை உங்கள் சாதிப் பெருமிதங்களை- சகமனிதரை ஒடுக்குவதற்கான நியாயங்களை- ஒடுங்கிக்கிடக்க வேண்டியதன் அவசியத்தைப் போதிக்கவே கைக்கூலிச் சரக்குகளாக சந்தைக்கு வந்துள்ளன என்று கடைசியில் அறிவிக்க வேண்டியதாயிற்று. இப்படி உருவானதுதான் தலித் விமர்சன மரபு.

3.இதுவரையான கலைஇலக்கியங்கள் மீதான விமர்சனத்தோடு தலித் மனம் நிறைவடைந்துவிடவில்லை. அது தன் சொந்த வாழ்க்கையை தன் சொந்த மொழியில் படைக்கத் தொடங்கியது. எழுத்தறியும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தாலும், வாய்மொழி மரபிலும் நிகழ்த்துக்கலைகளிலும் தமது வளமார்ந்த படைப்புமனத்தை தக்கவைத்துக் கொண்டிருந்த தலித்துகளிடமிருந்து வெளிப்பட்ட படைப்புகள் இதுவரை இந்திய சமூகத்தின் வாசகப்பரப்பு அறியாதவை. வாய்மொழி மரபும் எழுத்துமரபும் இணைந்த - கூகி வாங் தியாங்கோ சொல்கிற ‘ஓரேச்சர்’ மாதிரியான ஒரு புதுவகைமையான தலித் படைப்புகளில் புதைந்திருந்த உலகமும் அதை வெளிப்படுத்திய மொழியும் திடுமென எங்கிருந்தோ உதித்த அல்லது குதித்த மாந்திரீக வஸ்துவல்ல. ரவிதாசர், சொக்கமேளா, ஜோதிராவ் பூலே, டேனியல் என்று சாதியடுக்குமுறைக்கு எதிரான ஒரு நீண்ட பாரம்பரியத்தில் உருவாகி அது வளர்ந்திருக்கிறது.

உண்மையில் தலித்துகள் புதிதாக எதையும் படைக்கவில்லை. தங்களது வாழ்வை பாசாங்கின்றி வெளிப்படுத்துகிறார்கள், அவ்வளவுதான். தீட்டு தோஷம் என்கிற கெடுங்குணங்களால் வழிநடத்தப்படும் சாதிய மனம் தலித்துகளின் வாழ்வை அருகிருந்து நேரில் பார்க்கத் தவறிவிட்டது இத்தனைக் காலமும். இப்போது இலக்கியப் படைப்புகள் வழியே தரிசிக்கிறபோது புதியனவாக அவை தெரிவதில் வியப்பொன்றுமில்லை. இவ்வளவு காலமும் எட்டிப் பார்க்காமல் இருந்த தன் சாதியமனம் குறித்து குற்றவுணர்வு கொள்வதற்குப் பதிலாக, இலக்கியத்திற்குள் சாதியா? இலக்கியத்தில் இடஒதுக்கீடா? என்று பொருமத் தொடங்கினார்கள். மராட்டியத்தில் தொடங்கிய இந்த பொருமல் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

தலித் இலக்கியம் என்று ஒன்று இருந்தால், மற்ற ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனியாக இலக்கியம் இருக்கிறதா என்று அப்போது ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மிகுந்த பொறுப்புணர்வோடு தலித் இலக்கியத்தின் முன்னோடிகள் பாகுராவ் பாகுல், அர்ஜூன் டாங்ளே போன்றவர்கள் பதிலளித்துவிட்டார்கள். தலித் இலக்கியம் என்பது என்ன, தனியாக அது உருவாக வேண்டிய அவசியம் என்ன வந்தது, தலித் இலக்கியத்தின் நோக்கம் எவையெவை என்றெல்லாம் ஒருபாடு விளக்கம் கொடுக்கப்பட்டாகிவிட்டது அப்போதே. ஆனால் நாற்பது வருடத்துக்கு முந்தைய அரதப் பழசான அந்த கேள்விகளைத் தூக்கிக்கொண்டு - அவை புத்தம்புதிதாக தம் சொந்த மூளையில் (இப்பகுதி நகைச்சுவைக்கானதல்ல) உதித்தவை என்ற பாவனையோடு இன்றும் சிலர் ‘எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீ’ என்று முதல் மரியாதை வீராசாமிபோல அலைந்தால் நாமென்ன செய்வது? ஆனாலும் இந்தக் கேள்வியை தூக்கிக்கொண்டு திரிய இமையம், சோ.தருமன் போன்று யாராவது 2008லும் இருக்கத்தான் செய்கிறார்கள். பாவம், சம்பளம் இல்லாத போர்ட்டர்கள்.

இன்னும் சா.கந்தசாமி வெளிப்படையாகவே கேட்கிறார்- தலித் இலக்கியம்னு ஒன்னு இருந்தா செட்டியார் இலக்கியம்னு, நாடார் இலக்கியம்னு, வெள்ளாளர் இலக்கியம்னு இருக்குதா? என்று. அய்யா சாதி கடந்த சமத்துவத் திலகமே, நீங்களெல்லாம் சேர்ந்து இலக்கியத்தை அந்த லட்சணத்தில்தான் சாதிவாரியாக சீரழித்து வைத்திருக்கிறீர்கள், அதை அம்பலப்படுத்தி சரிப்படுத்தத்தான் தலித் இலக்கியம் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறது என்று நாம் மெத்தப் பணிவோடு சொல்ல வேண்டியிருக்கிறது.

சாதியடுக்குமுறைக்கு பணிந்துபோவது, சாதியடுக்குமுறையை எதிர்த்து நிற்பது என்ற இருவகைப் பண்புகள் தலித்தகளிடம் காணப்படுகிறது. அதில் பணிந்துபோகும் குணத்தை வலியுறுத்தவே தலித்தல்லாதவர்களது படைப்பின் நோக்கமாய் இருந்துவருகிறது. ஆனால் தலித்துகளின் மீறல் குணத்தை மேலும் வளர்த்தெடுப்பதை நோக்கமாகக் கொண்டதே அசலான தலித் படைப்புகள். உடலுழைப்பை இழிவாய் எண்ணும் ஆதிக்கசாதி மனோபாவத்தை வெளிப்படுத்துவது பிறரது படைப்புகளென்றால், உழைக்கும் மக்களாகிய தலித்துகளின் படைப்புகள் உழைப்பைக் கொண்டாடுவதாய் இருக்கும்.

4.பொத்தாம் பொதுவான இலக்கியம் என்கிற மோசடியை அம்பலப்படுத்தி தனித்துவமான அழகியலையும் உட்பொருளையும் வடிவஒழுங்கையும் நிறுவிக் கொண்டுள்ள தலித் இலக்கியம் உள்வயமான சில கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அது இந்தியாவில் இருக்கிற 1088 தலித் சாதிகளின் - அல்லது தமிழ்நாட்டிலிருக்கிற 77 சாதிகளின் குரலையும் பிரதிநிதித்துவம் செய்கிறதா? ஆம் என்றால், எவ்வாறு? இல்லையென்றால், ஏன்? இப்படிக் கேட்டதுமே, தலித் என்றால் தலித்து தான், இதில் என்ன பறையன் பள்ளன் சக்கிலி என்ற பாகுபாடு? என்று சாமார்த்தியமாக எதிர்கேள்வி வைக்கப்படுகிறது. இது சமதர்மி சா.கந்தசாமியிடம் இரவல் பெற்ற குரல்தான். (ஒருவேளை, இதைத்தான் சிலர் கூடுவிட்டு கூடுபாய்தல் என்கிறார்களோ?) அல்லது, இலக்கியத்தின் புனிதத்தைக் கெடுத்துவிடாதீர்கள் என்ற இலக்கிய உபாசகர்கள் வெற்றிலைக்காம்பை கிள்ளிக்கொண்டே வைத்த கோரிக்கையின் மறுபிரதிதான்.

இந்தியர் என்ற பேரடையாளத்தின் பலன்கள் பார்ப்பனர்களுக்கும், தமிழர் என்ற பேரடையாளம் பார்ப்பனரல்லாத உயர்சாதியினருக்கும் பயன்பட்டதைப்போல தலித் என்ற அடையாளத்தின் பலன்கள் ஒருசில தலித் சாதிகளுக்கு மட்டுமே கிடைத்துக்கொண்டிருக்கிறதா? என்று சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டுத் தளங்களில் எழும் இந்தக் கேள்விக்கான பதில், தலித் இலக்கியத்திற்கும் பொருந்தும். உண்மையில் தலித் இலக்கியம் என்ற பெயரால் வெளிப்படும் வாழ்வு எவருடையது என்ற கேள்வியானது, வெளியை ஜனநாயகப்படுத்துவதை உட்கிடக்கையாகக் கொண்டது. அதாவது, அசமத்துமான சமூகச்சூழலை சமத்துவமுடையதாய் மாற்றியமைப்பதை நோக்கமாய் கொண்டுள்ள தலித் இலக்கியமும் தலித் இயக்கமும், தாமேயொரு முன்னுதாரணமாய் மாறிக் காட்ட வேண்டியுள்ளது. தலித் என்ற பொது அடையாளத்தை மெய்யாகவே தமது பொது அடையாளமாக தலித்துகள் அனைவரும் உணரும்படியாக செயல்வழியே நிறுவ வேண்டியுள்ளது. அதன்பொருட்டு அது தனக்குள்ளிருக்கும் உள்முரண்களை தீர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. (தீர்த்துக்கட்டுவதல்ல)

5.தலித்துகளில் மிகவும் ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கும் அருந்ததியர்களது வாழ்வுரிமையானது எல்லா முனைகளிலும் கீழ்ப்படுத்தப்பட்டிருக்கிறது. கிணற்றுப் பாசனத்தைக் கொண்டிருந்த விவசாயத்திற்குத் தேவையான பரியை மூட்டித் தருவது, போர்முனைகளுக்குத் தேவையான தோல்கருவிகளைத் தயாரிப்பது, விவசாயப் பணிகளில் ஈடுபடுவது, செருப்பு தைப்பது என பெரும்பாலும் தோல்பணியாளர்களாகவே அறியப்பட்ட இம்மக்கள், மின்சாரம்- பம்புசெட்- பிளாஸ்டிக்- ரப்பர்- என்று உருவான மாற்றங்களால் தங்களது பாரம்பரியத் தோல்தொழிலை இழந்து மலமள்ளுகிறவர்களாகவும் துப்புரவுப் பணியாளர்களாகவும் சீரழிக்கப்பட்டுள்ளார்கள். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், தலித்துகளை ஈடேற்றியதாய் சொல்லிக் கொண்டிருக்கும் சிலர், அருந்தியர்களை மலமள்ளிகளாக மாற்றியது அந்த ஆட்சிதான் என்பதை மறந்துவிடுகிறார்கள்.
நவீன விஞ்ஞான தொழில்நுட்பங்கள் எவ்வளவோ வளர்ந்துவிட்ட நிலையிலும் கையால் மலமள்ளும் கொடுமையிலிருந்து அருந்ததியர்களை விடுவிப்பதற்கான தொழில்நுட்பங்கள் இங்கே வர மறுக்கின்றன. 1993ம் ஆண்டிலேயே, கையால் மலமள்ளுதல் தடை செய்யப்பட்டுவிட்டாலும், இன்னும் 13 லட்சம்பேர் இத்தொழிலில் பலவந்தமாய் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அருந்ததியர்களுக்கு கல்வியளித்து ஆற்றல்படுத்தும் முயற்சி 1920களிலேயே திரு.எல்.சி.குருசாமி போன்றவர்களால் தொடங்கப்பட்டிருந்தாலும் அந்த நோக்கு எட்டப்படாததாகவே இருக்கிறது. இந்த நிலையில்தான் அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு என்ற நியாயமான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

வால்மீகி பஞ்சாயத் என்ற அமைப்பின் கோரிக்கையாகத் தோன்றி பின் நாடெங்கும் பரவியது இம்முழக்கம். பஞ்சாபில் 1975 ஆம் ஆண்டிலிருந்தும், தொடர்ந்து அரியானாவிலும், 01.04.2000 முதல் ஆந்திரத்திலும் இந்த உள் ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது. இடஒதுக்கீட்டுக்கு எதிராக ஆதிக்கசாதிகள் என்னென்ன வாதங்களை முன்வைப்பார்களோ அதே வாதங்களை இரவல் வாங்கி ஆந்திரத்து மாலாக்கள் வழக்காடினர். உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு ஆந்திரத்தில் மட்டுமல்லாது அதற்கும் முன்பாகவே அமலில் இருந்த பஞ்சாப், அரியானாவையும் பாதித்தது. இப்படியாக 5.11.2004 உடன் உள்ஒதுக்கீடு கோரிக்கை முடிவுக்கு வந்துவிட்டது போலத் தோன்றுகிறது.

ஆனால் உள்ஒதுக்கீடு என்பது அருந்ததியர்களின் மிக அடிப்படையான கோரிக்கை. அதை நீதிமன்ற அல்லது சட்டவிளக்கங்கள் வழியாக புரிந்துகொள்ள முடியாது. சமூகநீதி, பாரபட்சமான நியாயம் என்ற அரசியல் நிலைபாட்டிலிருந்தே விளங்கிக் கொள்ள முடியும். தவிரவும் இது சாத்தியம் தான் என்பதற்கு குஜ்ஜார் மக்களின் போராட்டமும் இப்போது அவர்கள் கோரிக்கை ஏற்கப்பட்டிருப்பதும் சமீபத்திய உதாரணங்கள். தமிழகத்தில் ஓபிசி இடஒதுக்கீட்டில் எம்பிசி என்று புதிதாக வகைப்படுத்தி 20 சதவீதம் உள் ஒதுக்கீடு பெற்ற முன்னுதாரணம் இருக்கிறது.

ஓபிசிக்குள் சாத்தியம் என்றால் தலித்துகளுக்குள்ளும் சாத்தியம்தான் என்ற புரிதலில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது தேர்தல் அறிக்கையொன்றில் அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை ஆதரித்திருந்தது. ஆனாலும் அது தன் நிலைபாட்டில் உறுதியாயில்லை. புதிய தமிழகம் போலவே விடுதலை சிறுத்தைகள் அமைப்பும் உள் ஒதுக்கீட்டை எதிர்க்கின்றன. சமூக வளங்களை தலித்துகளுடன் பகிர்ந்துகொள்ள மறுக்கிற ஆதிக்கசாதி மனோபாவத்தை இந்த அமைப்புகள் கைவிட வேண்டும் எனபது என் விருப்பம்.
6.மனித மாண்புகளுடன் வாழ்வதில் பேரார்வம் கொண்டிருக்கிற அருந்ததிய மக்களை தமிழிலக்கியம் பெரிதாக கவனப்படுத்திவிடவில்லை. ஒருசில படைப்புகளிலும் அவர்கள் இழிவாகவே சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். ‘ஒரு மனிதன் தன் வயிற்றைச் சுத்தம் செய்ய மலம் கழிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் மலத்தை சுத்தப்படுத்தி வயிற்றை நிரப்பவேண்டிய கொடுமை அருந்ததியர்களுக்கு நேர்ந்திருக்கிறது’ என்ற தோழர்.ஜக்கையனின் துயரம் பொங்கும் வார்த்தைகளை உள்வாங்காத இந்த சமூகத்தின் மீது பீயைத்தான் கரைத்து ஊற்ற வேண்டியிருக்கிறது.

(2008 ஜூலை 27 அன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட மாநாட்டையொட்டி நடைபெற்ற ‘அருந்ததியர் வாழ்வும் இலக்கியமும்’ என்ற கருத்தரங்கின் தலைமையுரை) 

நன்றி - கீற்று

தலித் அடையாளம் – டி.எம்.மணியின் நூல்களை முன்வைத்து



சில நாட்களுக்கு முன் நடந்த தலித் தொடர்பான கூட்டமொன்றில் நண்பர் ஒருவரோடு பேசிக் கொண்டிருந்தபோது "இக்கூட்டத்தில் வழங்கப்படும் சாப்பாட்டில் மாட்டுக்கறியெல்லாம் இல்லையே ! அதுவும் தலித் கூட்டத்தில் மாட்டுக்கறி இல்லாமல் சாப்பாடா?" என்றார். வேறொரு தருணத்தில் எழுத்திலும், பேச்சிலும் கொச்சையான சொற்களை கையாளும் எழுத்தாளர் ஒருவரைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது "அந்த எழுத்தாளர் தலித் அதனால் அவர் அப்படி பேசுவதுதானே சரியாக இருக்க முடியும்" என்றார்.

     மாட்டுக்கறியும், கொச்சையாக பேசுவதும் தலித்துகளின் அடையாளம் என்பது இதன் பொருள். தலித் பிரச்சனையில் கரிசனம் காட்ட விரும்பும் இடது சாரிகள் குறித்து ஒரேவிதமான கருத்தினையே வெளிப்படுத்துகின்றனர். குடி, அழுக்கு போன்றவற்றையும் தலித்துகளின் அடையாளமாக பேசமுனைந்த அறிவுஜீவிகளும் இங்கிருந்தனர்.

ஆனால் இது குறித்து தலித் மக்கள் நினைப்பது என்ன? இவை தலித் அடையாளங்கள் தானா? என்பதே இக்கட்டுரை எழுப்ப விரும்பும் வினா. ஒருவகையில் சொல்லப்படும் இந்த அடையாளங்கள் யதார்த்தத்தில் நிலவுவைதான். சாதிரீதியாக தொழிலும், இருப்பிடமும், வாழ்முறையும் பாகுபடுத்தப்பட்டு திணிக்கப்பட்டுள்ளது. தலித்து களுக்கென்று ஒதுக்கப்பட்ட அடையாளத்திலிருந்து மாறுபடுவது சாதி மீறலாகும். அதை சாதிசமூகம் அனுமதிப்பதில்லை. விரும்பும் தொழிலை, உணர்வை, வாழ்முறையை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான சுதந்திரத்தை சாத்தியப்படுத்துவதே சாதிய மறுப்பாக இருக்க முடியும்.

எனில் தலித்துகளிடம் நிலவும் இன்றைய அடையாளங்களை அவர்களுக்கேயுரியது என்று சொல்வது சாதி மறுப்பாகுமா? மாட்டுக்கறியோ, பறையடிப்பதோ அவர்களின் விருப்பமாக இருக்குமானால் அது பிரச்சினையில்லை. ஆனால் அதை அவர்களின் அடையாளம் என்று சொல்வதன் மூலம் இச்சமூகத்தின் பிற தளங்களில் அவர்களின் பங்களிப்பு மறுக்கப்படுகிறது. பொதுத்தளத்தின் மீதான அவர்களின் உரிமை மறுக்கப்படுகிறது. உண்மையில் தலித் மக்கள் அவர்களின் இன்றைய அடையாளங் களிலிருந்து விடுபட்டு சுயமரியாதை மிக்க வாழ்வை அடைய விரும்புகின்றனர். ஆனால் அத்தகைய புரிதலை உள்வாங்கி செயற்படும் அமைப்புகளாக களமும், அரசியல் தளமும் இல்லையென்பது வருத்தமே.    
இப்புரிதலை நம் சூழலில் பெறாமல் போனதன் காரணம் என்ன? தலித் மக்களின் விருப்பங்களிலிருந்தும், கடந்த கால இயக்கங்களின் தொடர்ச்சியிலிருந்தும் தலித் அடையாளத்தை யாரும் உருவாக்கிக் கொள்ளவில்லை.

கடந்த கால தலித் அமைப்புகளும், தலைவர்களும் பெரும் திரட்சியை சாத்தியப்படுத்தாவிட்டாலுங்கூட இத்தகைய புரிதலிலிருந்து செயற்பட்டனர். சாதியும், சாதிசார்ந்த கீழான அடையாளங்களும் தலித் மக்கள் மீது சுமத்தப்பட்டதன் தொடர்ச்சியாகவே அவர்களுக்கு உணவு, தொழில் இருப்பிடம் போன்றவை ஒதுக்கப்பட்டன. எனவே திணிக்கப்பட்ட தொழிலை, உணவை, மறுப்பதும். மறுக்கப்பட்ட அடையாளங்களை தங்களுக்குரியதாக பேசி மீட்டெடுத்தும் செயற்பட்டனர். அத்தகைய முன்னோடி முயற்சிகள் அறியப்படாமல் போனதின் அடிப்படையான பின்னணி எதுவெனில் தலித் மக்களின் போராட்டம்.

இயக்க வரலாறு போன்றவற்றை யாரும் அறிய மறுத்ததே ஆகும். ஒவ்வொரு இயக்கமும் தங்களின் வருகைக்குப் பின்னர்தான் இம்மக்கள் கண்விழித்தனர். அதுகாறும் அடிமை நிலையிலேயே இருந்ததாக கருதுவதும் இதனால்தான் ஆனால் இத்தகைய எண்ணங்களை மறுக்கும் பதிவுகள் இப்போது எழுத்துகளாக வந்துக் கொண்டிருக்கின்றன. அத்தகைய பதிவுகள் குறித்து நிலவும் மௌனத்தை கடக்க இக்கட்டுரை முயற்சிக்கிறது.

தலித் எழுத்து, வரலாறு, பண்பாடு என்று நிலவி வரும் கருத்துக்களிலிருந்து முற்றிலும் விலகிய தலித் எழுத்தை அண்மையில் வாசிக்க முடிந்தது. டி.எம். உமர் ஃபாரூக் என்றழைக்கப்படும் டி.எம். மணி என்ற தலித் தலைவர் எழுதிய நூல்களே அவை. 1960கள் இறுதி தொடங்கி தஞ்சை மாவட்டத்தின் கும்பகோணம், திருப்பனந்தாள் வட்டாரங்களில் இயற்றப்பட்ட நீலப்புலிகள் இயக்கத்தின் தலைவர் அவர். அமைப்பாக நின்று இப்பகுதி கிராமங்களில் இயங்கியபோது எற்பட்ட அனுபவங்களையும், அதன் வாயிலாக பெற்றுக் கொண்ட கருத்தியல்களையும் 'சாதி ஒழிந்தது' 'செந்தமிழ் நாட்டு சேரிகள்' என்னும் இரண்டு நூல்களாக எழுதியுள்ளார்.

சாதாரண நடைமுறையாகி விட்ட தலித்துகளின் இழிவாழ்வு. அதற்கு எதிரான தொடர் போராட்டங்கள், சளைக்காத அர்ப்பணிப்பு என்று இயங்கியதால் தலித் மக்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களைச் சொல்வது இந்நூல்கள் 30 ஆண்டுகால ஆவணமாய் மாறிநிற்கின்றன. தலித்துகள் குறித்த பழமையான சித்தரிப்புகளோடு முரண்படாத எழுத்துக்களே 'தலித்வாழ்வாக' மாறிவிட்ட சூழலில் இந்நூல்கள் வாசகர்களுக்கு வேறொரு உலகை காட்டுகின்றன. இவ்வாறு காட்டப்படும் இப்பதிவுகளே எதார்த்தமானவை. தான் இழிவு படுத்தப்பட்டதை இப்பதிவுகள் மறைக்கிறது. என்பது இதன் பொருளல்ல, 'எதார்த்தமாகி விட்ட இழிவுகளுக்கு எதிரான போராட்டங்களையும் அதில் பெற்ற வெற்றிகளையும் இவை சொல்கின்றன என்பதே தனித்துவத்திற்கு காரணமாகின்றன'

இழிவுகளை மறுத்து, மறுக்கப்பட்ட கல்வி உள்ளிட்ட தன்மான வாழ்வுக்கான அம்சங்களைப் பெற முயற்சிக்கிற அப்போராட்டங்கள் சாதி இழிவுகளை சுயமானதாக கருதுவதில்லை இவ்விடத்தில் சாதி தங்கள் மீது திணிக்கப்பட்டவை தானே ஒழிய 'விரும்பி' ஏற்றக் கொண்டவை அல்ல என்னும் புதிய உள்ளடக்கத் தினையும் அவர்கள் உருவாக்குகின்றனர். அதனால்தான் இழிவை சுமத்துவதைக் காட்டிலும், அதற்கு எதிரான போராட்டத்தில் கடுமையாக நடந்து கொள்கின்றனர் ஆதிக்க வகுப்பினர். ஆனால் பெறவிருக்கும் விடுதலையுணர்வுகளுக்கு முன்னால் போராட்டத்தின் வலி தலித்துகளுக்கு லேசாகிப்போகின்றன. தலித் விடுதலைக் கருத்தியலுக்கு இத்தகைய புரிதலை இந்நூல்கள் தருகின்றன.

     சுய அனுதாபத்தை வேண்டாமல் எழுதப்பட்ட தலித் எழுத்துக்கள் மிகக் குறைவே, தலித்துகள், தவிர்த்தமற்ற எழுத்தாளர்கள் யாரும் தங்கள் முன்னோர்களும். வகுப்பினரும் நடத்திய சாதிநடைமுறைகளைக் குறித்து வெளிப்படையாக எழுதவே இல்லை. ஆனால் உலகத்தின் எந்த பாகுபாடுகளுக்கும் குறையாத சாதிப்பாகுபாடு இங்குதான் நிலவுகிறது. இக்குறைகளைத் தவிர்த்த தலித் அனுபவத்தை தரக்கூடிய நூல்களாக இவை மாறியிருக்கின்றன. எழுதுவது இந்நூலாசிரியரின் முன்கூட்டிய திட்டமோ, முழுநேர வேலையோ, அல்ல, நான் இலக்கியவாதியோ எழுத்தாளனோ இல்லை என்று அறிவிக்கும் அவரின் அசாதாரண எழுத்து நடை இது.

அடர்ந்த காடு, இருண்ட சூழ்நிலை, உடைந்த மனம், பதுங்கி முடங்கிக் கிடக்கிற அற்பமான வாழ்க்கை ஏன் இந்த அவலம்? எதை வாரிக்கட்டிக் கொள்ள இப்படி அவதிப்படுகிறோம்? சொத்துசுகம் சேர்த்துக் கொள்ளவோ? இந்துக்களின் நிலபுலத்தில் மாடி மனையில் பங்கு கேட்கவோ? இல்லையே! நாங்களும் மனிதர்கள் தானே.. என்று விரிகிறது அந்த எட்டாம் வகுப்பு மட்டுமே படித்தவரின் எழுத்து.

முதல் நூலின் தொடர்ச்சிதான் இரண்டாம் நூல் அமைப்பு கட்டி போராட்டம் நடத்திய ஊரின் பெயர் சாதிப் பிரச்சினைக்கு எதிராக பேராடியவரின் பெயர் போன்றவற்றை தலைப்புகளாகக் கொண்டு சாதி ஒழிந்தது நூலில் கட்டுரைகளையும், செந்தமிழ் நாட்டு சேரிகள் நூலில் கட்டுரைகளையும் கொண்டுள்ளார். சில கட்டுரைகளை மட்டும் சமூகம் தொடர்பான தம் கருத்துக்களையும், விமர்சனங்களையும் எழுத பயன்படுத்தியிருக்கிறார். இவ்வாறு விவரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நிகழ்விற்குள்ளும் டி.எம். மணி இருக்கிறார் நேரடி அனுபவத்திலிருந்து குறிப்பிடத்தக்க சம்பவங்களை மட்டும் தொகுத்து எழுதியுள்ளார்.

கும்பகோணம், திருப்பனந்தாள் வட்டாரம் காவிரிப்பாயும் நிலப் பரப்பு யாவும் கோவில்களுக்கும், மடங்களுக்கும் உரிமை. இந்நிலங்களில் உழைக்கும் பண்ணையடிமைகளாய் தலித்துகள் இருந்தனர். "உயர்ந்த மதில் சுவர்களுடைய மடம் ஒருபுறம்,. சிவன் கோவில் மறுபுறம்... ஒவ்வொரு சிவன் கோவிலுக்கும் ஒரு தலவரலாறு இருக்கும். இப்படி ஒவ்வொரு சேரிக்கும் ஒரு தல வரலாறு போல. இது கட்டுக் கதையல்ல, காலங்காலமாக சாட்சியங்களாய் இன்னும் சேரிகளில் உயிரோடு இருக்கிறார்கள்." என்பதை சொல்லும் டி.எம். மணி அவ்வாறான 'தலவரலாறு' ஒன்றையும் சொல்கிறார். திருலோகி என்னும் கிராமத்தின் சேரிப்பெண் ஆயிபொன்னு என்பவர் வழக்கமாக செல்லும் மணியக்காரர் பண்ணை சாணியள்ளும் வேலைக்கு 3 நாட்களாக செல்லவில்லை. காரணம் அவருக்கு பிரசவம் ஆகியிருந்தது. இருந்தும் மூன்றாம் நாளே பண்ணை வேலைக்குத் திரும்பினார், கோபத்தோடு அவளை திட்டித்தீர்த்த மணியக்காரர் அவளின் மேலாக்கை பிடித்துக் கொண்டு மூங்கில் கழியால் அடித்தார். பண்ணையாரின் 'மண்ணான' சேரியிலிருக்கும் அவரின் குடிசையில்யாரும் நுழையாதவாறு வேலியும் வைத்தார்.

ஆயிப்பொன்னுவின் கணவரையும் பண்ணைக்கு வரும்படி சொல்லி அனுப்பினார். கணவனுக்கு நேரவிருக்கும் கதி, தனக்கு ஏற்பட்ட அவமானம் இரண்டும் சேர்ந்து இரண்டு வயதான தன் மூத்த மகன் மணிக்குஞ்சுவை பிறந்த குழந்தைக்கு காவல் வைத்துவிட்டு கூரையிலேயே தூக்குமாட்டி செத்தார் ஆயிபொன்னு. இவைதவிர படி நிலை சாதியமைப்பில் மேலேயுள்ள எல்லா சாதிகளுக்கம் இழிவு வேலை செய்யவேண்டிய நிலை டி.எம்.மணி விவரிப்பதைப் போல "இந்து வீட்டில் ஒருவர் இறந்து விட்டால். முன்னதாகச் சென்று வெட்டியான் சுடுகாட்டில் காத்திருக்க வேண்டும்.

பிணம் வருவதற்குள் சுடுகாட்டை சுத்தம் செய்து எரிபொருள் சேகரித்து விறகுக் கட்டைகளை அடியில்வைத்து அதன்மேலே விராட்டிகளை அடுக்கி அஸ்திவாரமிட்டு வைத்திருக்க வேண்டும். பிணம் சுடு காட்டிற்கு வரும்போது கட்டாயம் தயார்நிலையில் இருக்க வேண்டும். அடுத்து வண்ணான் செத்தவர் வீட்டிற்குச் சென்று மூங்கில் வெட்டிவந்து பாடைசெய்யும் பணியைச் செய்யவேண்டும். பிணம் தூக்கிச் செல்லும்போது. நோக்கர் கொம்பு ஊதியும், சேங்கண்டி அடித்தும் செல்லவேண்டும். பிணம் இறக்கும்போது வெட்டியான் விலகிக் கொள்ள வேண்டும். அவன் தீண்டாத சாதி அல்லவா? வண்ணானும் அம்பட்டரும் பாடையிலருந்து பிணத்தை எடுக்க வசதி செய்து கொடுக்க வேண்டும். இதற்குள் நாவிதர் கத்தியை எடுத்துக் கொண்டு கொள்ளிவைப்பவர் முடியைச் சிரைப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும்.

இதில் யாராவது ஒருவர் கடமை தவறினால் அந்தக் கிராமத்தில் சிக்கல் ஏற்பட்டுவிடும். கடமை தவறிய வருக்கு எந்த மாதிரியான தண்டனை என்பது ஊரைப் பொறுத்து. சூழ்நிலையைப் பொறுத்தது" இவை கிராமங்களின் நிலை. இழிதொழில்களுக்கு எதிரான தலித்துகளின் போராட்டம் எந்தக் கிராமத்திலும் எளிதில் நடந்தேறிவிடவில்லை. பெரும் கலவரங்களை ஏற்றபடியே போராட்டங்கள் நடந்தன கலவரத்தோடு பிரச்சினை நிற்பதில்லை. ஏற்கனவே சொந்தமாக நிலமற்ற இம்மக்களுக்கு வேலை மறுப்பு, தானாகவே எரிவதைப் போல கொளுத்தப்படும் குடிசைகள், தாக்குதல், வழக்கு அலைக் கழிப்பு என்பவைகளாக நீடித்தன. இப்படியே முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள்.

இப்பகுதி அரசியல் கட்சிகளென்றால் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், போன்றவை இருந்தன. கீழ்த்தஞ்சை மாவட்டம்போல கம்யூனிஸ்ட் கட்சி இப்பகுதியில் பரவலாகியிருக்கவில்லை. நக்சல்பாரி பாதையை ஆதரிக்கும் இடது சாரிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தலித்துகளிடம் தென்பட்டனர். பொதுவாக சுடு காட்டுப்பாதை போன்ற சிவில் உரிமைகளை வலியுறுத்தும் கம்யூனிஸ்ட்கள் சுடுகாட்டில் பிணம் புதைப்பதும் யார் என்பன போன்ற அழுத்தமான பார்வையை இன்று வரையிலும் பெறவில்லை.

சாத்திர இழிவு ஒழிப்புக்காக பாடுபட்ட திராவிடர் கழகம் அச்சாத்திரர்களால் தலித்துகள் மீது சுமத்தப்படும் இழிவுகளைக் கண்டித்து போராடிய வரலாற்றைப் பெறவில்லை. இந்நிலையில் இழிவு ஒழிப்பு போராட்டங்களை தலித்துகளே தனியாகவும் அமைப்பாகவும் நடத்தவேண்டிய நிலை. அப்படித் தான் தனித்துப் போராடியது நீலப்புலிகள் இயக்கம். இவ்வட்டாரத்தை ஒட்டி தென்னார்க்காடு அமைந்திருந்தமை சாதகமான அம்சமாய் இருந்தது. அப்பகுதியில் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுத்து வெற்றிப் பெற்றிருத்தார் எல். இளையபெருமாள்.

நீலப்புலிகளின் போராட்டத்திற்கு கைக்கொடுப்பவராக, காங்கிரஸில் இருந்த தலித்தலைவராக இவர் இருந்தார் இந்த இரண்டு நூல்களிலும் பல்வேறு கட்சிகளை, தலைவர்களை விமர்சித்து எழுதிச் செல்லும் டி.எம்.மணி மதிப்போடு 'தலைவர்'என்று விளிக்கிறார் என்றால் அவர் எல். இளையபெருமாள்தான் இதேபோல் வடஆர்காடு பகுதியிலும் இழிவு ஒழிப்புப் போராட்டங்களை குடியரசுக்கட்சி நடத்தியது தமிழகத்தின் பிறபகுதிகளைக் காட்டிலும் தலித்துகள் சற்றுமுன் கூட்டியே 'மேம்பாடு' பெற்றதற்கு இத்தகைய அரசியல் விழிப்புணர்ச்சியும் ஒரு காரணம் இப்பகுதியில் கிராமங்கள்தோறும் இவ்வகையான போராட்டங்களை தொகுக்கும்போது தலித் போராட்டத்தின் வலிமை உணரப்படும் கிராமங்களில் பெரும்பான்மை ஆதிக்கசாதியினருக்கு எதிராக நடத்தப்படும் சாதி மறுப்பு போராட்டங்கள் சாதாரணமானவை அல்ல. இவ்வாறான போராட்டங்களை தலித்சார்ந்து எழுதுவோரும்கூட அறியவில்லை. இப்போராட்ட வரலாற்றை ஏற்காமல் தலித் அடையாளத்தை "செஞ்" சோற்று கடனுக்காய் கம்யூனிஸ்டுகளிடம் விற்றுக் கொண்டிருக்கும் ஒருவர் கிராமங்களில் தலித் இயக்கங்களில் போராடிய துண்டா? என்று அண்மையில் எழுதியிருக்கிறார். போராட்ட வரலாற்றை பதிவுசெய்ய வாய்ப் பில்லாமல் போனதற்கு தலித்துகள் மட்டுந்தான் பொறுப்பா?

இழிவு ஒழிப்பு போராட்டங்களாகவே இப்போராட்டங்கள் நின்று போய் விடவில்லை. கிராமங்கள்தோறும் "கல்விப்பணிகள் நடந்து கொண்டிருந்தன ஊக்கத் தொகை, உதவித் தொகை, உயர்கல்வி நிதி, பகுதி நேரக்கல்வி, இப்படி ஏராளமான பட்டதாரி இளைஞர்கள் தொண்டாற்றிச் கொண்டிருந்தனர். சட்டப் பூர்வமாகவும். சாதுர்யமாகவும் சாதிக் கொடுமைக்கு எதிராகப் போராடி வந்தார்கள் இவ்வகை மாற்றங்கள் இழிவுமறுப்பு போராட்டங்கள் நடந்த மற்ற பகதிகளிலும் நடைபெற்றன. வடஆர்காட்டுப் பகுதியில் தொடங்கி நடத்தப்பட்ட இரவுப்பள்ளிகள் ஏராளம். தொடக்கம் முதலே தலித் தலைவர்கள் கல்வி மேம்பாட்டுக்காகப் பாடுபட்டனர்.

இத்தகைய செயற்பாடுகள் சாதிகுறித்த தனித்துவமான கருத்தியல்களை உருவாக்கிவிட்டன. அதாவது சாதி இழிவோடு இருந்தாலும் அந்த இழிவுதான் நம்முடைய காலகாலமான அடையாளம் என்ற பார்வை அவர்களிடம் இல்லை. அவ்வாறு கருதும்போதுதான் அதிலிருந்து விடுபடுவதற்கான நியாயம் உருவாகிறது. சாதியற்ற தளத்தில் இவர்களின் இடம் என்ன? எனும் கேள்வியும் எழுகிறது. அப்போது தான் சாதிக்கென்று பகுக்கப்பட்ட தொழில் உள்ளிட்ட அடையாளங்களை மறுத்துவிட்டு, மறுக்கப்பட்ட கல்விமேம்பாடு போன்ற சுயமரியாதைமிக்க அடையாளங்களை கையெடுக்கின்றனர். இம்மாற்றத்தின் கருத்தியல் வகிபாகம் என்ன? சாதிசார்ந்த அடையாளங்களை ஏற்பதை மறுத்து விரும்பும் தொழிலையும், அடையாளத்தையும் ஏற்பதே சாதிமறுப்பு என்பதாகிறது. தலித் தலைவர்களின் போராட்டம் இத்திசை நோக்கி இயங்கியிருக்கிறது.

பண்ணையின் விசுவாசியாக இருந்து பட்டினிகிடந்தே மடிந்த தாத்தா, அடிமைப்பட இன்னொரு பண்ணையைத்தேடி கிடைக்காமல் ஊர் ஊராய் கூலி வேலைக்கு அலைந்த தாய் தந்தை, ஆறாவது தலைமுறையாக அடிமை முறை வந்தபோது நீதிக்கட்சிக்கு ஓட்டுப் போடவில்லையென பண்ணையார் மாணிக்கம் பிள்ளையால் பறிக்கப்பட்ட வேலை என்ற குடும்பப் பின்னணியைக் கொண்ட டி.எம்.மணி யின் அப்பா ஒருமுறை ஈரத்துண்டை உலர்த்துவதற்காக தோளில் போடப்பட்ட போது மணியக்காரரை விட அவர் எத்துணை சிறந்த அறிவாளி. "அப்பா எவ்வளவு நாகரீகமானவர், அந்தக் காலத்திலேயே இலக்கணம் (நிகண்டு) படித்தவர். ராமாயணம், மகாபாரதம், அரப்பலிசதகம், குமரேச சதகம், சீவகசிந்தாமணி போன்ற நூல்களிலுள்ள பாடல்களை யெல்லாம் மனப் பாடமாகவேபாடுவார்" இதையெல்லாம் எந்த சூழ்நிலையில் அவர் படித்தார்.

இந்துக்களின் தெருவிலுள்ள பள்ளியில் நுழைய தீண்டாமை தடுத்ததால் வெளியே அரசமர நிழலில் அமர்ந்து படித்தவர். அந்தக் காலத்தில் முக்கியப் படிப்பான நிகண்டுகளைப் படிப்பதில் அவர் தேர்ந்தவர் தலித்துகளின் இழிவை மட்டும் சொல்ல விரும்பினோமென்றால் இத்தகைய ஆற்றல்களை யார் சொல்வது? தலித்துகளின் நிலவும் இழிவையே நிரந்தர அடையாளமாக தக்கவைப்பதில்தான் இன்றைய தலித் கலை, இலக்கிய முயற்சிகள் நிற்கின்றன. இந்நிலையை மாற்றும் கல்வி, பொருளாதாரம் குறித்த எவ்வித பார்வையும் செல்வாக்குப் பெற்றுள்ள தலித் இயக்கங்களுக்கு இல்லை. இந்நிலைமை சாதிமறுப்பதாக மாறுவதில்லை. இதை சார்ந்து டி.எம். மணி இந்நூல்களில் எழுதியுள்ள விமர்சனங்கள் முக்கியமானவையாகும் அவை "பறை எனப்படும் தப்பு ஒரு ஓசைக் கருவிதான் சேரியை ஒதுக்கினார்கள், அதற்காக தொழிலை ஒதுக்கினார்கள், தீண்டாமை பாராட்டி மனிதர்களை ஒதுக்கினார்கள். (அதன்படியே அவர்களுக்கென்று) இசையும் கலையும் ஒதுக்கப்படுகிறது.

நண்பர் கே.ஏ. குணசேகரன் போன்ற அறிவுஜீவிகளுக்கு நன்றாக தப்பு அடிக்கத்தொரியும் என்பதற்காக அதையே இசையாகத் தலையில் கட்டுகிறார்கள். அதைப் போலவே கல்வி மறுக்கப்பட்டதால் தலித்துகளிடம் உருவான ஊனத்தமிழ் வார்த்தைகளை நன்றாகப் புரிந்துக் கொண்ட 'பாமா' போன்ற எழுத்தாளர்கள், இந்த ஊனத் தமிழுக்கு வடிவம் கொடுத்து தலித் இலக்கியம் என்று அதை எங்கள் தலையில் கட்டுகிறார்கள்" என்று எழுதுகிறார்.

சாதி கற்பிக்கப்பட்ட காலத்தில சாதிக்கென்று ஒதுக்கப்பட்ட தொழில்களை மறுப்பதற்கு பதிலாக அதையே தங்களின் அடையாளமாக சொல்லிக் கொள்ளும்போது சாதிசார்ந்த கருத்தியல் மறுஉற்பத்தி செய்யப்படுகிறது. பொதுத்தளத்தில் மறுக்கப்பட்ட அடையாளங்கள் மீது உரிமையை கோருவதற்கான அரசியலையும் மறுக்கிறது. பறை மட்டுமல்ல சாதியின் பெயரால் பகுக்கப்பட்ட தொழிலையும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு மறுக்கப்பட்ட அடையாளத்தையும் அனைத்து சாதியினருக்கும் தேர்வுசெய்துகொள்வதற்கான கோரிக்கையோடு செயற்படுவதே சாதிமறுப்பாக இருக்க முடியும். செத்த மாடெடுத்தல் என்ற சுகாதாரப்பணி தலித்துகள் மீது சுமத்தப் பட்டதால் அத்தோலினால் செய்யப்பட்ட பறையும் அவர்கள் மீது சமத்தப்பட்டது.

மலமெடுக்க மறுக்கும் அருந்ததியரின் குலத் தொழில் மலமெடுப்பதுதான் என்பது எத்துணை அவதூறு. "தப்புதான் தலித்கலை என்றால் குழல், யாழ் போன்றவை எமக்கு உரிமையில்லை? அகராதியில் அழிக்கப்பட்ட தமிழ்ச் சொற்கள் கூட இன்னும் தாய்வழி கூட்டத்திற்கு ஊனத்தமிழ்தான் உரிமையா? தலித் இலக்கியம், தலித் கலை, தலித் பண்பாடு என்பதெல்லாம் ஒதுங்குதல், ஒதுக்குதல் அடிப்படையிலான வர்ணதர்ம கோட்பாடே அம்பேத்கர் சொன்ன சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இங்கு வேலையே இல்லை. எனவே தப்பு அடிக்க மறுப்பதை சமத்துவத்திற்குகான போராட்ட அடித்தளமாகவே பார்த்தோம். தப்புகளை செய்ய செத்த மாடுகள் எங்களுக்குத் தேவையில்லை என்று கோஷமிட்டோம்" என்று அவர் விளக்குகிறார். அவரின் இந்தப் பார்வை தலித்துகளின் நீண்ட போராட்ட மரபிலிருந்தும் தலித் மக்களின் விருப்பங்களிலிருந்தும் எடுக்கப்பட்டமையால் தான் தத்துவமானதாக விளங்குகிறது.

இந்நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள மற்றுமொருச் செய்தியும் தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமானதாகிறது. குடிதாங்கி பிரச்சினைதான் அது. குடிதாங்கி கிராம தலித் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை 'கொள்ளிடக்கரையில்' சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்கித்தர வேண்டும் என்பதுதான். டி.எம். மணி தலைமையிலான இயக்கம் கிளை அமைக்க சென்ற போது அக்கோரிக்கையை வலியுறுத்திய போராட்டத்தைத் தான் முதலில் எடுத்தனர்.

உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று தொடங்கி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை போன்றோரிடமும் பிரச்சினையை கொண்டு சென்றனர். 1988 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23இல் செல்வம் என்பவர் இறந்து தூக்கிச் சென்றபோது நூற்றுக் கணக்கான வன்னியர்களால் தலித்துகள் மறிக்கப்பட்டனர். அதுநாள்வரையில் மறிக்காதவர்கள் மறிப்பவர்களாக மாறியிருந்ததற்கு காரணம் அவர்களிடம் வன்னியர் சங்கம் உருவாகியிருந்ததுதான். பிரச்சினையின் காரணமாக பிண அடக்கத்தை மறுநாளுக்கு ஒத்திவைக்கச் சொன்ன காவல் துறையின் அறிவுரையின் பேரில் அவ்விடத்திலேயே பிணத்தை வைத்துச் சென்றனர் மறுநாள் பிணத்தை காவல்துறையே எங்கோ வீசிவிடுகின்றனர். அதனையட்டி தலித்துகளுக்கும் காவல்துறையினருக்கும் நடந்த மோதலில் காவல் ஆய்வாளர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டார். மறுநாள் அங்கிருந்த 9 சேரிகளில் புகுந்த காவல்துறை அவர்களை அடித்து நொறுக்கியது.

குடிதாங்கியைச் சேர்ந்த 22 தலித் பெண்கள் உள்ளிட்ட 104 பேர் மீது கொலைமுயற்சி வழக்கு (307) உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கை பதிந்தனர். இதனால் இடர்பாடுகளுக்கு பின்னும் அம்மக்களின் பிணங்களை பழைய சுடுகாட்டில் புதைப்பதில்லை. பொதுச் சாலையில்தான் எடுத்துச் செல்வோம் என்ற முடிவிலிருந்தும் மாறவில்லை. அதனால் வீதிகளிலும் வாய்க்காலிலும் பிணங்களை புதைக்கவேண்டிய நிலை. இந்த காலக்கட்டத்திலும் பல்வேறு வழக்குகளை அம்மக்கள் சுமந்தனர்.

சுமார் 4 ஆண்டுகாலம் இப்போராட்டம் நீடித்தது. இவை எல்லாவற்றின் பின்னணியில்தான் அப்பிரச்சினை முடிவுக்கு வந்தது. அன்றைக்கிருந்த அதிமுக அரசு சுடுகாட்டுப் பயன்பாட்டுக்காக பொதுப்பாதையை அனுமதித்த சூழல், 82 வன்னியவகுப்பினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலை. அச்சூழலில்தான் ராமதாஸின் வருகை நிகழ்ந்தது. அப்பகுதி சேரிமக்கள் அவரின் வருகையை விரும்பாத போதும் அவரை சுடுகாட்டுக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றவர்களும் தலித்துகளே, ஆனால் இன்றைக்கு குடிதாங்கிப் போராட்டம் என்றாலே அறியக் கூடியவராக ராமதாஸின் பெயராகிவிட்டது.

நான்கு ஆண்டுகால தலித்துகளின் நெடிய போராட்டத்திற்கு கிடைக்காத அங்கீகாரம் தலித் அல்லாத ஒருவரின் சிறிய தலையீட்டிற்கு பெரிய அளவில் கிடைத்து விடுகிறது. தமிழகத்தில் இதுபோன்று சொல்லப்படாத போராட்ட உண்மைகள் ஏராளமுண்டு அண்மைக்கால உதாரணம். கடைசி இரண்டு வருடங்களில் தலையிட்ட கம்யூனிஸ்டுகளின் போராட்டமாகிவிட்ட பாப்பாப்பட்டி பிரச்சனை.

குடிதாங்கிப் பிரச்சினை குறித்து கள ஆய்வு செய்து வெளியிட்ட நிறப்பிரிகை இதழும் இந்த வரலாற்றுப் பொய்க்கு காரணம் என்று டி.எம். மணி கூறுகிறார். ராமதாஸின் வருகையை தூக்கிப் பிடிப்பதிலேயே கவனம் செலுத்திய அவ்விதழின் கள ஆய்வு விழிப்புணர்வும், போர்க்குணமும் உடைய தலித் அமைப்புகளே அங்கில்லை யென எழுதியிருந்ததை சுட்டிக் காட்டுகிறார். பிறகு திருமாவளவனும் ராமதாஸை தமிழ்க்குடிதாங்கி என்று பாராட்டினார். பிராமணரல்லாதோர். தமிழர் போன்ற பொது அடையாளங்களை காட்டும் வரலாற்றில் இவ்வாறு சிதைந்த வரலாறு அதிகம். இதற்கு மறுதலையாக ராமதாஸ் தலித் தலைவர்களோடு பூண்ட உறவுகுறித்த நோக்கத்தினையும் டி.எம்.மணி குறிப்பிடுகிறார். எல். இளையபெருமாளின் எதிர்ப்பை சரிக்கட்டும் நோக்கிலேயே அவர் தென் மாவட்டங்களில் செயற் பட்டுக் கொண்டிருநத திருமாவளவன், பசுபதி பாண்டியன் போன்றோரை வடக்கே அழைத்தார். ராமதாஸின் அரசியல் நோக்கத்திற்கு தடையாயிருந்த தலித்துகளும் தாங்கள் எதிரியில்லை என்ற நிலையை உருவாக்குவதற்காக, தன் பிடிக்கு உட்படும் தலித் தலைவர்களை ஆதரிப்பது அவரின் நடவடிக்கையில் இருந்தது என்றும் அவர் கூறுகிறார்.

ராமதாஸின் நடவடிக்கைகளை கவனித்துவரும் யாரும் இதை பொய் என்று சொல்ல மாட்டார்கள். தமிழ் பாதுகாப்பு இயக்கத்தில் திருமாவளவனோடு இணைந்து பணியாற்றிய போதும் சாதிஒழிப்பு சார்ந்த தளங்களில் இந்த ஒற்றுமையை விரிவுபடுத்திக் கொள்ளவில்லை என்பது இளையபெருமாள் ராமதாஸோடு 1991 இல் சமாதான உடன்பாட்டை மேற்கொண்டபோது இழிதொழில்களை வலியுறுத்தக் கூடாது என்பதை உடன்பாட்டின் மைய நோக்காக்கி யிருந்தார். உடன்பாடு அப்படியே நின்றுபோனது இளையபெருமாளும் ஏமாற்றப் பட்டார் என்பதே அனுபவம்.

இந்நூல்கள் தரும் தலித்மக்களின் போராட்ட உணர்வுகுறித்த பதிவுகள் இதுவரை தமிழில் சொல்லப்டாதவையாகும். தற்சார்பற்ற வாழ்நிலை, மறுக்கப்பட்ட கல்வியால் நிலைபெறும் அறியாமை போன்றவற்றால் குறுகிக் கிடந்த அம்மக்களிடம் இயல்பாக உள்ள எதிர்ப்புணர்வு, துணிச்சல், இயக்கம் ஒன்றின் பின்னணியோடு வலுப்பெறும் எழுச்சி, இழப்புகளைத் தாண்டி உடனடியாக மறுவாழ்வை நிர்மாணிக்கம் திண்மை என்று நகருகிறது. இப்பிரதிகள் இயக்கம் உருவானபின் இந்துக்களின் வீடுகளில் சோறெடுத்தல், பண்டிகை பலகாரங்கள் வாங்குதல், கோயில் விழாக்களில் கஞ்சி வாங்குதல் போன்றன நிறுத்தப்படுகின்றன.

நிலங்களை உரிமையாக்குதல், மடத்துக்கு சொந்தமான குளத்தில் நீரெடுத்தல் என்று போராட்டங்கள் விரிவாயின. மடத்திற்கு சொந்தமான குளத்தில் நீரெடுக்கும் போராட்டம் நடந்தபோது தலித்துகளுக்கு எதிராக நில ஆதிக்கம் கொண்டிருந்த வெள்ளாளர்களுக்கு ஆதராவான பிற்பட்ட வகுப்பினர் கலவரத்தில் இறங்கினர். இருந்தும் தோல்வியைப்பற்றி நினையாமல் அம்மக்கள் போராடினர். அம்மோதலின் ரவுடிப் பட்டியலில் இருந்த ராஜேந்திரன் என்பவர் இறந்துபோனார். ஏற்கனவே தாக்கப்பட்டு மருத்துவமணையில் சேர்க்கப்பட்டிருந்த தலித் தரப்பு மோகன் என்பவரை ஆத்திரத்தினால் ஆதிக்க வகுப்பினர் கொன்று விடக்கூடும் என்று மனம் வருந்தி நின்றபோது உடல் முழுவதும் வியர்த்தவாறு 4 இளைஞர்கள் ஓடிவருகிறார்கள்.

ராஜேந்திரன் கொலையானதும் ஆதிக்க வகுப்பினர் சிதறி ஓடிய தருணத்தில் மருத்துவமனையிலிருந்த மோகனை தூக்கிக் கொண்டு பின்புறச் சுவற்றில் ஏறிக்குதித்து மறைவான இடத்தில் வைத்து விட்டு அந்நால்வரும் வருகிறார்கள். இச்சம்பவத்தை எழுதும் டி.எம்.மணி "எப்படி இவ்வளவு தைரியமாக இவர்களால் சாதிக்க முடிந்தது?" என்று வியக்கிறார். சாதி, சாதியின் செயற்பாடு போன்றவற்றை அனுபவிக்கும் இம்மக்களிடம் அத்தளத்தில் ஒன்று நடந்தால் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை எளிதாக யூகித்துக் கொள்ள முடிகிறது டி.எம்.மணி அரசு அலுவலர் ஒருவரை சந்திக்க செல்லுகிறாரென்றால் அக்குறிப்பிட்ட அலுவலர் தங்களிடம் என்னவெல்லாம் சொல்லுவார் என்று தங்கள் தோழர்களிடம் சொல்லிச் செல்லுவாராம். அவர் சொல்லிச் சென்றது போலவே அலுவலர் பேசுவாராம்.

இச்செய்தியை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் என்னிடம் நேர்பேச்சில் குறிப்பிட்டார். இது எப்படி சாத்தியம்? சாதிரீதியான அணுகு முறையில் சாதி இந்துக்களும், அதிகாரிகளும் வழமையாய் சொல்லும் காரணம் ஒரே மாதிரி இருப்பதும், வாக்குறுதிகளின் ஏமாற்றம் போன்றவற்றை சந்தித்துப் பழகிப்போன இம்மக்களுக்கு சூழலை வாசிப்பது எளிமையாகிவிடுகிறது. அதற்கு எண்ணும் எழுத்தும் கற்க தேவையில்லை.

காவற்கூடம் என்னும் ஊரில் செத்த மாட்டை அப்புறப்படுத்த வெட்டியான் வரவில்லை என்பதற்காக வெட்டியான் குடிசைகளை ஆதிக்கவகுப்பினர் கொளுத்தினர். இதனை காவல்துறையில் புகார் செய்த 'குற்றத்திற்காக' அவ்வூரைச் சேர்ந்த 40 சேரிக் குடிசைகளை எரித்தனர். கட்சி பிரமுகர்கள். காவல்துறை, தாசில்தார், துணை கலெக்டர் போன்றோர் எரிக்கப் பட்ட குடிசைகளை கணக்கில் கொள்ளாமல் சாதி இந்துக்களுக்கு ஆதரவாக பேசினாலும் தலித் சமூகத்தைச் சேர்ந்த கலெக்டர் 'கங்கப்பா' என்பவரின் வழிகாட்டுதலோடு இந்துக்களின் தெருவழியே போகாத வண்ணம் முற்றிலும் புதிய இடத்தில் வீடு கட்ட இடத்தை வழங்கியபோது 52 குடிசைகளையும் உற்சாகத்தோடு கட்டிகொண்டனர். இழப்புதரும் வலியிலிருந்து மாறி மற்றுமொரு வாழ்க்கையை உருவாக்கிக் கொள்கின்றனர். குடிசைகள் கட்டப்பட்ட பகுதிக்கு நன்றியோடு கங்கப்பா நகர் என்று பெயரும் சூட்டிக்கொண்டனர் அம்மக்கள்.

     போராட்டக் களங்களில் ஏற்படும் ஏமாற்றங்கள், கிராம அமைப்பொன்று சாதியை தக்கவைத்துக் கொள்ளும் சாதுர்யம் அசாதாரண சூழலில் பரப்பப்படும் சொல்லாடல்கள் குறித்த புரிதல் போன்றவை தலித்மக்களுக்கு அத்துப்படி. காவற்கூடம் கிராமங்களில் நடத்தப்பட்ட வன்முறையை எழுதத் தொடங்கும் டி.எம். மணி "முதல் நாள் செய்தித்தாளில் கோஷ்டி மோதல், தீவைப்பு என்ற தலைப்பில் செய்தி வெளியானது. பெரும்பாலும் கோஷ்டி தலித்துகளாகவும், அது பாதிக்கப்பட்ட தரப்பினராகவும் இருப்பர் என்பது தலித்துகளுக்கு பரிந்து பேசுபவராக வந்து தலித் இளைஞர் ஒருவரின் நடத்தை 'மீறலால்' மோதல் எழுந்தது என்றும் அரிஜனங்களே தங்களின் சில குடிசைகளுக்கு தீவைத்துக் கொண்டனர் என்றும் சொல்லுவதோடு சமாதானமாக போய்விடலாம் என்று சொல்ல தலித்துகளுக்கென சில உதவிகளையும் செய்ய முன் வருகிறார். ஆனால் தலத்துகள் தாங்களே தீவைத்துக் கொண்டதாக புகார் கூறியவர்களிடம் தீப்பெட்டியைக் கொடுக்கும் கலெக்டர் கங்கப்பா, "எங்கே உன்குடிசையை நீயே கொளுத்திக்கொள் பார்ப்போம்" என்று சொன்னபோது அவர்கள் பின்வாங்கினர். இந்த இடத்தில் கலெக்டர் கங்கப்பா தலித்வகுப்பினர் என்பதையும் ராமகிருஷ்ணன் வன்னியர் என்பதையும் டி.எம்.மணி குறிப்பிடுகிறார்.

வேறுசில இடங்களில் தலித் அதிகாரியாக இருப்பதாலேயே தலித் ஆதரவு முத்திரையால் தனக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சும் அதிகாரிகளைக் குறிப்பிடும்போது அவர்களின் சூழலை யோசித்துப் பார்க்கும் போக்கும் இவர்களிடம் வெளிப்படுகிறது. இந்த சூழல் குறித்து வேறொரு இடத்தில் எழுதும் டி.எம்.மணி "தலித்துகள் தாக்கப்படும் போதும், கொடுமைக்குள்ளாகும் போதும் அனுதாபப்படுவதற்கும் ஆதரவுக்குரல் கொடுப்பதற்கும் மற்ற சாதியில் ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் தலித்துகள் எதிர்தாக்குதல் நடத்துவதை அவர்கள் விரும்புவதில்லை" என்பதை நெடிய அனுபவத்திலிருந்து சொல்லுகிறார்.

கிராமங்களின் ஒற்றுமை என்பது அந்தந்த சாதிக் கடமையை அவரவர் செய்யவேண்டும் என்பதே போன்றவற்றை துல்லியமாக சொல்லும் சாதிகளின் சாதியச் செயற்பாடுகளை குறைத்துவிடாமலும், மிகைப்படாமலும் எழுதுகிறார். பிராமணர் எதிர்ப்பு அவருக்கிருந்தாலும் பிராமணர் அல்லாத சாதிகளன தலித்வெறுப்பை குறைத்து மதிப்பிடவோ, அதன் மூலம் சாதிய பலன்களிலிருந்து அவர்களை தப்பவைக்கவோ அவர் முயற்சிக்க வில்லை.

கொலை வழக்கு, சிறை என்று பயணித்த டி.எம்.மணி குறைவான எண்ணிக்கையினரோடு இசுலாம் தழுவி இன்று உமர் ஃபாரூக் ஆகி விட்டார். அதற்கான காரணம். மதம் தழுவியவர்களின் படங்கள் என்று சாதி ஒழிந்தது நூலின் இறுதியையும்,'தமிழ் தேசியத்தால்' உள்வாங்கப்பட்ட இன்றைய தலித் அரசியலை குறித்து செந்தமிழ் நாட்டுச் சேரிகள் நூலின் இறுதியையும் எழுதியுள்ளார். இந்நூல்களை வாசித்து முடிக்கிற போது பெரும் துயரமும், ஆற்றாமையும் நம்மை சூழ்ந்துக் கொள்கிறது. நூலின் இறுதிப்பகுதியில் அவர் முன்னெடுக்கும் விவாதத்தில் யாரும் உடன்படவோ, மாறுபடவோ செய்யலாம். ஆனால் அவர் முன்வைக்கும் அனுபவத்தை யாரும் அத்துணை எளிமையாய் கடந்துவிட முடியாது.

அங்கீகரிக்கப்படாத டி.எம்.மணி போன்றோரின் போராட்ட பலனால்தான் இன்றைய தலித் சமூகம், தலித் இயக்கங்களும் தங்களை ஆசுவாசப்படுத்தக் கொள்கின்றன. பெரும் இயக்கபலம் இல்லாவிட்டாலும் அவர் இன்றும் எழுதுகிறார், செயற்படுகிறார், ஏனெனில் அவர் பெற்றுக் கொண்டுள்ள கருத்தியல் தன்னளவில் விடுதலை பெற்றவராக அவரை உணரவைத்துள்ளது. தன்னளவில் விடுதலை பெறாத யாரும் எத்தகைய கூட்டத்தை திரட்டினாலும் யாரையும் விடுவிக்க முடியாது.

நன்றி http://arunthathiyan.blogspot.no

அருந்ததியர் அவலமும் தூங்கா நகரின் துயரமும்



மதுரை, தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க நகரங்களில் ஒன்று. பல்வேறு மத, இன, மொழியாளர் கலந்து வாழும் நகரம். கோயில் நகரம் என்று தமிழக அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட மதுரைக்கு தூங்கா நகரம் என்ற சிறப்பும் உண்டு. பாண்டியர்கள், நாயக்கர்கள், முஸ்லிம்கள், ஆங்கி லேயரின் ஆட்சிக் காலங்களில் மதுரை முக்கிய இடம் பெற்றுள்ளது. எனினும், சமூக வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளும், தீண்டாமையும் அதன் கொடுமைகளும் மதுரையின் நெடுந் தொடரான காலபடித்தரத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது.

மதுரையின் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் நுழைய தீண் டத்தகாத சமூகத்தவர்களுக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. அந்த காலக்கட்டத்தில்   ஏ.வைத்தியநாத ஐயர், தலித் மக்களை வெற்றிகரமாக கோயிலுக்குள் வழிநடத்திச் சென்ற வர். இச்சம்பவம் நடைபெற்று 70 வருடங்கள் உருண்டோடிய பின்னரும் உண்மையான சமூக விடுதலை என்ப தும் தலித் சமூகத்திற்கு எட்டாக் கனியாக உள்ளது.

மதுரை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் தீண்டாமை இன்னும் உயிர்வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. பல தலைமுறைகளாக தொடரும் தீண்டாமை கொடுமை பற்றி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்ற அமைப்பு 21 தலித் குடியிருப்புகளை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றினை தயாரித்திருக்கிறது.

தலித்கள் தனிமைப்படுத்தப்பட் டுள்ள கிராமங்களில் இந்த பாகு பாட்டை அனுபவிக்கிறார்கள். இச் செயல் குறைந்தும் வருகிறது என்ற உண்மையை இந்த அறிக்கை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.

இந்தப் பிரச்சினையில் இடதுசாரி கள் தவிர்த்து அனைத்து அரசியல் கட்சிக்கும் ஆழ்ந்த மௌனம் சாதிப்பதையும் இந்த அறிக்கை குறிப்பிட்டுச் சொல்கிறது. இந்த ஆய்வறிக்கை 2009 டிசம்பர் 18&ம் தேதியில் வெளியானது.

ஆரோக்கியமின்மை (ஜீஷீஷீக்ஷீ லீமீணீறீtலீ) மட்டகரமான வாழ்க்கை முறை இவற்றால் மதுரை மாவட்ட தலித் மக்கள் சூழப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முறையான குடியிருப்பு வசதிகள் கிடையாது. கல்விக்கான முறையான சூழல் கிடையாது, வேலை வாய்ப்புகள் கிடையாது, சுய வேலைவாய்ப்புக்கான நிதிவுதவிகள் பெற வழியில்லை, முதியோர் ஊதியம் உள்ளிட்ட நல உதவிகள் பெறுவதில் தாமதம் உள்ளிட்ட சிக்கல்கள் அவர்கள் வாழ்க்கை முன்னேற்றத் திற்கு பெரிய தடைகளாக உள்ளன என்கிறார் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பி.சம்பத்.

முப்பது வருடங்களுக்கு மேலாக இந் நகரத்தில் வாழ்ந்து வரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலப்பட்டா வழங்கவில்லை என்பது மற்றொரு பிரச்சினை சுடுகாடுகள் மற்றும் செருப்பு தைக்கும் சுகாதாரம் தொடர்பான பணியில் ஈடுபடும் அருந்தியர் அவலத்தையும் இந்த அறிக்கை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

மதுரை மாநகரில் தலித்துக்கள் சந்திக்கும் மற்றுமொரு முக்கியப் பிரச்சினை குடியிருப்பு. மதுரையின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதத்திற்கு குறைவான விகிதத் தில் தலித்துக்கள் உள்ளனர். இவர்கள் அருள்தாஸ்புரம், செல்லூர், முனிசிலை, திடீர் நகர், சதாமங்கலம், அனுப்பானடி, வில்லாபுரம் உள்ளிட்ட 19 பெரிய தொகுப்பு சேரிகளில் வசிக்கின்றனர். இவை நகரத்தின் 72 நகர்மன்ற தொகுதிகளை உள்ளடக்கி யுள்ளன. இவைகளில் ஒரு தொகுதி நகர மேயரையும், துணைமேயரையும் தந்துள்ளது.

அருந்ததியர்கள் தெலுங்கு மொழி பேசுகின்றனர். இவர்கள், விஷ்வநாத நாயக்கரின் ஆட்சி காலத்தில் (16&ம் நூற்றாண்டு) மதுரைக்கு வந்துள்ளனர். மதுரையின் புறநகர் பகுதிகளில் தங்கியுள்ளனர். நாயக்கர்கள் காலத்தில் (16 மற்றும் 17&ம் நூற்றாண்டில்) மேலவாசல், கீழவாசல், தெற்கு வாசல், வடக்கு வாசல் ஆகிய நான்கு முக்கிய நகரின் நுழைவாயில்களுக்கு வெளியே தலித்துகள் வசித்துள்ளனர். பழங்கால வருவாய் பதிவேட்டில் “பள்ளர் மயானம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மயானம் பழங்காநத்தம் அருகே இருந்துள்ளது.

சேரிவாழ் மக்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர் சுகாதாரப் பணியில் (sணீஸீவீtணீக்ஷீஹ் ஷ்ஷீக்ஷீளீs) உள்ளனர். இவர்கள் அனைவரும் அருந்ததி சாதிப்பிரிவினர். சாதிப் பட்டியலில் ஆக கீழ்மட்டத்தில் இடம் பெற்றுள்ளனர். மற்றவர்கள் உடல் உழைப்பு செய்யும் தினக்கூலி தொழிலாளர்கள், குப்பை பொறுக்கு பவர்கள், பாதைசாரி வியாபாரிகள் (லீணீஷ்ளீமீக்ஷீs) சுமை தூக்குபவர்கள், ரிக்ஷா இழுப்பவர்கள்.

தலித்துகளின் வீதிகள் கூட சாதி வாரியாக வரையறுக்கப்பட்டுள்ளன. தத்தனேரி பகுதியில் தெருக்களுக்கு கூட பட்டியல் சாதியினரின் துணை பிரிவுகளின்¢ கீழ் பெயரிடப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வமாக மாற்றுப் பெயர்கள் இடப்பட்டுள்ளபோதும், பொதுவிநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வழங்கியுள்ள குடும்பஅட்டைகளில் குறிப்பிடப் பட்டுள்ளபடி சில பொது வினியோக கடைகள் “ஹரிஜன் கூட்டுறவு நியாய விலை கடைகள்” என்று பெயரிடப் பட்டுள்ளன.

தலித்துகள், தங்கள் சொந்த சமூகத்தவர்களின் அண்டையிலேயே வசிக்க விரும்புகின்றனர். தங்கள் வாழ்விடங்களுக்கு வெளியே குடியேறுவது பாதுகாப்பாக இருக்காது என்று எண்ணுகின்றனர். நகர்ப்புற விரிவாக்கத் திட்டமும் இவர்களின் அச்ச உணர்வை போக்கவில்லை. இத்திட்டத்தினால் தலித்துகளுக்கு எந்தவித ஆதாயமும் இல்லை என்கிறார். தென்னிந்திய வரலாற்று பேரவையின் பொது செயலாளர் பி.எஸ்.சந்திரபாபு. 

குடிநீர் வினியோக பற்றாக்குறை, மற்றும் சுகாதார வசதிகள் பற்றாகுறை, பெருகும் மக்கள் தொகை அடர்த்தி, உள்கட்டமைப்பு வசதியின்மை ஆகியவை இதர பிரச்சினைகள். நெருக்கடியான இந்த சேரிப்பகுதிகளில் தலித்துகள் பன்றிகள் மற்றும் நாய்களுடன் தான் வசிக்க வேண்டியுள்ளது. இந்த குடியிருப்புகள், தமிழ்நாடு சேரி பகுதிகள் (மேம்படுத்தல் மற்றும் சுத்தப்படுத்தல்) சட்டம் 1971 பிரிவு 3-&ன் கீழ் பொருந்திப்போகிறது.

அவை (1) எந்த வகையிலும், மனிதர்கள் வாழ்வதற்கு பொருத்த மற்றவை.

(2) இடிபாடுகள், அதிக நெருக்கடி, தவறான கட்டிட அமைப்புகள், தவறான குறுகலான வீதி அமைப்புகள், காற்றோட்ட வசதியில்லாமை, வெளிச் சமின்மை, சுகாதார வசதிகள் இல்லாமை, இக்காரணிகள் தனித்தோ, கூட்டாகவோ பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சமூக ஒழுக்கத்திற்கு கெடுதி யாக (பீமீtக்ஷீவீனீமீஸீtணீறீ) உள்ளது.

இந்த சேரிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகள் அனைத்தும் குறுகலான சந்து அமைப்புகளுடனும், 10/10 அடி அல்லது அதற்கும் குறைவாக அளவு கொண்ட ஒற்றை அறை கொண்டதாகவும் இருக்கிறது. தலித்மக்கள் அதிலும் குறிப்பாக அருந்தியினர் இடப்பற்றாக்குறை காரணமாக கூட்டு குடும்ப முறைப்படி வாழ வேண்டிய நிர்பந்தம் உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது 10 தலித்துகள் வசித்து வருகின்றனர்.

குடியிருப்பு வசதிகள் போதாமை காரணத்தால் தாழ்த்தப்பட்டோர் அல்லாத சேரிவாழ் மக்களும் துயர் அடைகின்றனர். சேரிகளுக்கு வெளியே தாழ்த்தப்பட்டோர் குடி யேறுவதில் மற்றுமோர் சிக்கல் உள்ளது. தலித் அல்லாத மக்கள் தலித்துகளுக்கு வீடு விற்கவோ, வாடகைக்கு தரவோ மறுக்கின்றனர். சொத்து வர்த்தகத்தின் (ஸிமீணீறீ ணிstணீtமீ) காரணமாக நிலமதிப்பு தாறுமாறாக எகிறியிருப்பதால் தலித்துகள் நன்கு தரமான வீடு களை வாங்க முடிவதில்லை. அவர்களது குடியிருப்புகளின் சந்தை மதிப்பு அடுத்துள்ள தலித் அல்லாதவர்களின் குடியிருப்புகளின் சந்தை மதிப்புக்கு இணையாக இல்லை என்கிறார். அனைந்திந்திய காப்பீட்டு தொழிலாளர் கழகத்தின் தென் மண்டல பிரிவின் பொதுச் செயலாளர் கே. சுவாமிநாதன்.

மஞ்சள் மேடு, மேல பொன்னகரம், மினிகாலனி, சுப்ரமணியபுரம், கீழ் மதுரை, அனுப்பாமை, கரும்பாலை, விராட்டிபத்து மற்றும் அரசரடி பகுதிகளில் உள்ள தலித்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட ஒருங் கிணைப்பாளரும், மதுரை முனி சிப்பல் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர் ஒன்றியத்தின் பொதுச் செயலாருமான ஆர்.ராஜகோபால்.

கரும்பாலை சேரியில் 2000 வீடுகள் இருக்கின்றன. ஒரு சில வீடுகள் தவிர மற்றவற்றிக்கு பட்டா வழங்கப்படவில்லை. 30 வருடங் களுக்கு மேலாகவே அவர்கள் அங்கு வசித்து வருகிறார்கள். கழிவு நீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ள போதும் தனித்தனியாக வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்படாத காரணத்தால் சாக் கடை நீக்கம் திட்டத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. கடன்களை முறையாக செலுத்தாத காரணத்தால் சேரி ஒழிப்பு வாரிய அதிகாரிகள் இன்றும் பட்டா வழங்காமல் உள்ளனர்.

கோமேஸ்பாளையம் பகுதியில் இருந்து துணைமேயர் வந்திருக்கிறார். எனினும் மற்ற சேரிப்பகுதிகளில் இன்னும் முன்னேற்றம் எதுவும் அடைந்திடவில்லை. மாநகராட்சி கழிவறைகளை கட்டிவந்த போதிலும், தண்ணீர் வசதி இல்லாத காரணத்தால் கட்டிட பணிகளை நிறுத்தியுள்ளது. அதிகாலை 5 மணி முதல் 7 மணிக்குள் குடிநீர் வரத்து நின்றுவிடும். திறந்த வெளி சாக்கடைகள் காரணமாக எப்பொழுதும் வீட்டை சுற்றிலும் சகதி கள் காணப்படும்.

சேரி ஒழிப்பு வாரியம் (slum clearence board) தங்களுக்கு புதிதாக வீடுகள் கட்டி கொடுக்கும் என்பதில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். திடீர் நகரில் தலித்துகளை குடியமர்த்த 240 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை ஒதுக்கீடு செய்வதிலும் குழப்பம் நிலவுகிறது. திடீர் நகரில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு வில்லாபுரத்தில் தற்காலிக தங்குமிடம் வழங்கப்பட்டிருக்கிறது. கிருதம்மாள் நதிக்கு அருகில் உள்ளது கீராநகர். மேலவாசல் பகுதியில் உள்ள பெரிய கழிவு நீர்கால்வாய் பயங்கரமானது. இந்த கால்வாயின் மற்றொரு புரம் நகர்புற கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதன் துர்நாற்றங்களை (stக்ஷீமீநீலீ) சகித்துக் கொள்வதை தவிர இங்கு வசிப்போருக்கு வேறு வழியில்லை. வெள்ளப்பெருக்கை தடுக்க கால்வாய் ஒட்டி சுவர் எழுப்பும் திட்டத்தை அதிகாரிகள் இன்னும் தொடங்கவே இல்லை. இந்த வார்டின் ஒரு பகுதியான சுப்ரமணியபுரம். மேயர் இப்பகுதியில் இருந்து தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் இதன் நிலைமையும் மிக மோசமாக இருக்கிறது. இங்கு 450 வீடுகள் பட்டாவுக்காக காத்திருக்கின்றன.

மதுரை முனிசிபல் மாநகராட்சி காலனியில் 1500&க்கும் மேலான மக்கள் வசிக்கின்றனர். சுகாதாரப் பணியாளர் களுக்காக மிகச்சிறிய பகுதியில் 90 வீடுகள் மட்டும் கட்டப்பட்டுள்ளன. தண்டல்காரன்பட்டி சேரிப்பகுதியில் திறந்தவெளி கழிவு நீர் கால்வாயும், அழுகிய வீண் பொருள்களின் குவியல்களும் இங்குள்ள வாழ்க்கைச் சூழலை சிக்கலுக்குள்ளாக்குகிறது.

நகர்மயமாதலில் 15 பெரிய மாநிலங்களில் தமிழ்நாடுதான் முதலிடம் வசிக்கிறது. சரிகாணப்படாத, தீவிரமான நகர்மயமாக்குதலால் மாசு படுதல், உபகரணங்கள், இடங்கள் தேவைப்படுவதன் சவால்களை மாநகராட்சி நிர்வாகம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்கின்றனர் நிபுணர் கள்.    மதுரையின் நகர்மயமாதலின் எதிர்விளைவுகளை தலித்கள் மற்றும் பொதுவான சேரிவாழ் மக்கள் சுமக்க வேண்டியுள்ளது.

தினந்தோறும் மதுரையில் 450 டன்கள் கழிவு பொருட்கள் சேகரமாகின்றன.  

தலித் அல்லாதவர்கள் சுகாதாரப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர்களுக்கு அலுவலக உதவி யாளர்கள் போன்ற பணிகள் கொடுக்கப் படுகின்றன. சில டீ கடைகளில் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி குவளைகளில் (ஜீறீணீstவீநீ நீuஜீs) சுகாதாரப் பணியாளர்களுக்கு டீ கொடுக்கப்படுகின்றது என்று குற்றம் சாட்டுகிறார் ராஜகோபால்.

தலித்துகளுக்கு கடன்கள் மற்றும் நிதியுதவிகள் வழங்க தமிழ்நாடு ஆதிதிராவிடர் குடிமனை மற்றும் மேம்பாட்டு கழகம் பல்வேறு முன்நிபந்தனைகளை விதிப்பதன் காரணமாக அம்மக்கள் தனியார் கடன் தருவோரிடம் செல்ல நேர்கிறது. அவர்கள் அதிகளவு வட்டி வசூலிக்கின்றனர். கடனை திருப்பிச் செலுத்தாத போது தலித் பெண்கள் துன்பத்துக்கு ஆளாக்கப்படுகின்றனர். வட்டிக்காரர் களின் கரங்களில் சிக்கிபாலியல் தொந்தரவுக்கும் ஆளாகின்றனர். தலித்களின் நலன்களை மேம்படுத்த செயல்படுத்தப் படும் திட்டங்களை சரியாக கண் காணிக்க வேண்டும் அவர்களது வசிப்பிடங்களின் உள்கட்டு மானங் களை மேம்படுத்த வேண்டும் என்கிறார் ராஜகோபால்.

தலித்துகளின் மிக முக்கியமான மற்றுமொரு பிரச்சினை கல்வி. படிப்பை பாதியில் நிறுத்தும் தலித் சமூக குழந்தைகள் எண்ணிக்கை அதிகம். இதுவே அருந்ததியர் சமூகத்தில் எண்ணிக்கை இன்னும் கூடுதலாகும். அவர்களது பெற்றோர்கள் இடையறாது பணிக்கு செல்வதே காரணம். 96 சதவீத அருந்ததியின் குழந்தை கள் மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கப்படுவதாக அன்னை தெரஸா கிராமப்புற வளர்ச்சி அறக்கட்டளை (கிஜிஸிஞிஜி) மேற்கண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த எண்ணிக்கை ஐந்தாம் வகுப்பில் 60 சதவீதமாகவும், எட்டாம் வகுப்பில் 45 சதவீதமாகவும் குறைகிறது. 20சதவீதத்திற்கு மேல் அருந்ததியர் குழந்தைகள் பத்தாம் வகுப்பை தாண்டுவதில்லை. மிகச் சிறிய அளவு சதவீதத்தினரே இந்த சமூகத்தில் மேற்கொண்டு படிக்கின் றனர். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து கல்லூரிக்குப் போகின்றனர். குடும்பத்தில் வருவாய் ஈட்டுவோரின் திடீர் மரணமும் அக்குழந்தைகள் உடனடியாக படிப்பை கைவிட நேர்கிறது.

அருந்ததி சமூகத்தினர் தினப் பணிகளுக்காக அதிகாலை 5 மணிக்கே வீட்டைவிட்டு செல்ல நேர்வதால் தங்கள் குழந்தைகளின் கல்வி விசயத்தில் அக்கறை காட்ட முடிவதில்லை. இதன் காரணமாகவே, சுகாதாரப்பணியாளர்களுக்கு ஷிப்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெற்றோர்களில் ஒருவர் வீட்டில் இருந்து குழந்தைகளின் கல்வியை கவனிக்க முடியும்.

பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றாலும் பெரிய அளவில் நிதி தேவைப்படுவதால் அருந்ததியர் பிள்ளைகள் கல்லூரி வாசல்களை தாண்ட முடிவதில்லை. குறிப்பாக தனியார் கல்லூரிகளில் அவர்களால் சேர முடிவதில்லை. மதுரை மாநகரின் தலித் மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தொடர்ச்சியான பிரச்சாரங்களை நடத்த இருக்கிறது. இந்த சமூகத்தின் மாணவர்களுக்கு உதவும் வகையில் அவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு அருகில் பயிற்சி முகாம் களை நடத்த இருக்கிறது.

தொடர்ந்து 5 நூற்றாண்டுகளுக்கும் மேலாக தாழ்த்தப்பட்டு, ஒடுக்கப்பட்டு, இழிவுக்கு ஆளாக்கப்பட்டுள்ள சமூகத்தை மேம்படுத்த அனைத்து சமூகத்தினரும் அக்கறை காட்ட வேண்டும். அரசும் பாரபட்சமற்ற வகையில் அருந்ததியினர் சமூக மேம்பாட்டுக்கு ஆவண செய்ய வேண்டும்.

-ஜி.அத்தேஷ் 

அருந்ததியர் இனமும் துப்புரவுப் பணியும்



கோ.ஜெயராஜ்,
நிர்வாக அற்ங்காவலர்,
அன்னை தெரசா ஊரக வளர்ச்சி அறக்கட்டளை, மதுரை.

மதுரைமாவட்டம் மற்றும் மதுரை நகர் பகுதியிலுள்ள துப்புரவுப் பணியாளர்களைப் பற்றியும் அவர்களின் வாழ்வு நிலை, கல்வி, பொருளாதாரம், அரசியல் விழிப்புணர்வு மற்றும் பிற சமூக மதிப்பு குறித்தும் மதுரையில் இருக்கும் அன்னை தெரசா ஊரக வளர்ச்சி அறக்கட்டளை ஆய்வு செய்துள்ளது. அந்த ஆய்வில் கண்டறியப்பட்ட சில முக்கியத் தகவல்கள்.

துப்புரவுப்பணியில் அருந்ததியர் சமுதாயத்தினர்
தற்போது துப்புரவுப் பணி என்பது பெரும்பான்மையாகத் தாழ்த்தப்பட்ட பட்டியல் இன மக்களில் அருந்ததியர் எனும் சமூகத்தைச் சேர்ந்த மக்களால் மட்டும் செய்து வரும் இழிவு நிலைத் தொழிலாகவே இருந்து வருகிறது. மதுரை நகரில் கடந்த 70 வருடங்களுக்கு முன் துப்புரவுப் பணிகளுக்கான வேலைகளை தாழ்த்தப்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த சுமார் இரண்டு சதவிகித மக்கள் தொகையைக் கொண்ட குறவர் எனும் பிரிவினர்  மட்டுமே செய்து வந்தனர்.  துப்புரவு சார்ந்த பணிகளைச் செய்வதால் அவர்களுக்கு வீடுகளில் கிடைக்கும் மீதமான உணவுகள், தெருக்களில் கிடைக்கும் எச்சில் இலை கழிவுகள் போன்றவற்றைக் கொண்டு துப்புரவுப் பணியுடன் பன்றி, ஆடு, மாடு போன்ற கால்நடைப் பிராணிகளையும் வளர்த்து வந்தனர்.

இந்நிலையில் மதுரை நகரில் மக்கள்தொகை பெருக்கம் காரணமாக குறைந்த மக்கள் தொகை கொண்ட குறவர் இன மக்களால் துப்புரவுப் பணியை முழுமையாகச் செய்திட முடியவில்லை. அச்சமயம் தாழ்த்தப்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த அருந்ததியர் என்று அழைக்கப்படும் சக்கிலியர் இன மக்கள் மதுரையைச் சுற்றிலுமுள்ள மாவட்டங்களில் விவசாயம், தோல் சம்பந்தமான தொழில்களைச் செய்து வந்தனர். அத்தொழிலில் சரியான வேலைவாய்ப்பில்லாத நிலையில் வாழ்க்கையை ஓட்டப் பிழைப்பைத் தேடி இந்த சமுதாயத்தினர் மதுரை நகர் நோக்கி வேலை தேடி வரத்துவங்கினர். 1940-ஆம் ஆண்டுக்குப் பின் வந்த காலத்தில் இவ்வின மக்கள் பெருமளவில் மதுரையை நோக்கி வந்தனர்.

இக்காலங்களில் கல்வி அறிவு பெறாத இவ்வின மக்களுக்கு மதுரை நகரில் உடனே கிடைத்த வேலைவாய்ப்பு துப்புரவு சார்ந்த பணிகள்தான். இவர்களுக்கு முன்பு இப்பணியை மதுரை முழுவதும் பிற தாழ்த்தப்பட்ட சமுகத்தினரும் செய்து வந்தனர். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் துப்புரவுப் பணி செய்யும் தாழ்த்தப்பட்ட மக்களை கல்வி, பொருளாதாரம், அரசியல் விழிப்புணர்வு போன்றவற்றில் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பல்வேறு மத அமைப்புகள் செயல்படத் துவங்கின. அவர்களின் அப்போதைய பிரச்சாரம் நீங்கள் எங்கள் மதங்களைப் பின்பற்றுங்கள் உங்களுக்குக் கல்வி, உணவு, உடை, பொருளாதார முன்னேற்றம், அரசியல் விழிப்புணர்வு போன்ற அனைத்தையும் நாங்கள் இலவசமாகத் தருகிறோம் என்பதாகவே இருந்தது. தாழ்த்தப்பட்ட துப்புரவுப்பணி மற்றும் கடைநிலைக் கூலித்தொழில் செய்யும் மக்களிடம் பெருமளவில் இது போன்று பிரச்சாரம் செய்தனர். இதன் விளைவாகத் தாழ்த்தப்பட்ட பிரிவுகளில் மொத்தம் உள்ள 76 பிரிவுகளில் முக்கியமான மூன்று பிரிவு மக்களான பள்ளர், பறையர், அருந்ததியர் இன மக்களில் அருந்ததியர் என்று அழைக்கப்படும் சக்கிலியரைத் தவிர மற்ற இருபிரிவினர் உணவு, உடை, கல்வி போன்றவற்றைப் பெற்றுக் கொண்டு மதம் மாறினர். இந்த இரு பிரிவினர்களில் ஓரளவு வசதியுடையவர்கள் இந்திய அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளித்த 18 சதவிகித இட ஒதுக்கிட்டீன் சலுகையைப் பயன்படுத்தி கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பங்கீடு போன்றவற்றில் சலுகைகளைப் பெற்று முன்னேற்றமடைந்தனர்.

இதனால் 1970க்குப்பின் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் அல்லாத பிற பிரிவு மக்கள் கல்வி அறிவு பெற்று துப்புரவுப் பணி அல்லாத வேலைவாய்ப்புகளைப் பெற்றுச் சென்று விட்டனர். இந்நிலையில் அறியாமை மற்றும் விழிப்புணர்வின்மை காரணமாக தாழ்த்தப்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த அருந்ததியர்கள் மட்டும் கல்வி அறிவின்மையாலும், பொருளாதாரத்தில் முன்னேற்றமின்மையாலும்  தற்போதும் துப்புரவு சார்ந்த பணிகளான தெருக்கூட்டல், கழிவுநீர், பாதாள சாக்கடை அகற்றுதல், மலம் கலந்த கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்தல், மனித மலங்களை அகற்றுதல், மருத்துவமனைகளில் அனைத்துவிதமான நோயாளிகளுக்கும் சிகிச்சைக்குப் பின் ஏற்படும் மருத்துவக் கழிவுகள், மற்றும் பிணவறைகளில் இறந்த உடல்களை அப்புறப்படுத்துதல், நகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள சுடுகாடுகளில் பிணங்களை எரியூட்டுதல், பின் அப்பகுதியைச் சுத்தப்படுத்துதல், தெருக்களில் இறந்து கிடக்கும் அனாதைப் பிணங்கள் மற்றும் நாய், கழுதை போன்ற மிருகங்களின் இறந்த உடல்களையும் அப்புறப்படுத்தி அடக்கம் செய்தல் போன்ற இழிவுநிலைத் தொழில்களை முழு அளவில் செய்து வருகின்றனர்.

துப்புரவுப் பணியாளர்களின் பணி மற்றும் குடும்பநிலை
1. துப்புரவுப்பணி என்பது அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன் துவங்க வேண்டியுள்ளது. அதாவது காலை 5 மணிக்கு முன்பாக தெருக்கூட்டல், அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றில் இந்தப்பணிகளைத் துவக்க வேண்டியது அவசியமானதாக இருக்கிறது.

2. துப்புரவுப் பணியாளர்களில் பெண் பணியாளர்களுக்கு தெருக்கூட்டுதல், தெருக்களில் இருக்கும் மனித மலங்கள் மற்றும் விலங்கினங்களின் மலங்கள் போன்றவற்றை அகற்றி அவைகளைக் கழிவுக்கூடைகளில் கொண்டு சென்று கழிவுபொருள் அகற்றும் வாகனங்களுக்குக் கொண்டு சென்று கொட்டுதல், ஒவ்வொரு வீடுகளிலும் வைத்திருக்கும் கழிவுகளைப் பெற்று அவற்றையும் கழிவுப்பொருள் கொண்டு செல்லும் வாகனங்களுக்குக் கொண்டு சென்று கொட்டுதல் மற்றும் பொதுக் கழிவுகளை அகற்றுதல் போன்ற பணிகள் இருக்கிறது.

3. ஆண் துப்புரவுப் பணியாளர் என்றால் பெண் துப்புரவுப் பணியாளருக்கான பணிகளுடன் கழிவுகள், குப்பைகளைச் சேகரித்து அதற்கான வாகனங்களில் எடுத்துச் சென்று அரசு ஒதுக்கியுள்ள குப்பைக் கிடங்குகளில் கொட்டி வருவது, கழிவுநீர் தொட்டிகளில் இறங்கிப் பணி செய்வது அதில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றி சுத்தம் செய்வது, சில சமயங்களில் கழிவுநீர்ச் சாக்கடைத் தொட்டிக்குள் இறங்கி வேலை செய்வது போன்ற கடுமையான உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய்களைத் தோற்றுவிக்கும் பணிகளையும் செய்ய வேண்டியிருக்கிறது.

4. இதே போல் மருத்துவமனைகளில் பல்வேறு விதமான நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் போது வரும் மருத்துவக் கழிவுகளை அகற்றுதல், பிணவறைகளிலுள்ள இறந்த உடல்களை அகற்றுதல், இறந்தவர்களின் உடல்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டிருந்தால் அதனால் வரும் கழிவுகளை அகற்றுதல் என்று மருத்துவப்பணிகளில் இருக்கும் கடைசிப் பணிகளையும் இந்தத் துப்புரவுப் பணியாளர்களே செய்கின்றனர். இதனால் இப்பணியாளர்கள் பல்வேறு கிருமித் தொற்றுதல்களால் உடல்வழியாகவும், மனவழியாகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் ஏற்படும் மனபாதிப்பைக் குறைக்க மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றனர்.

5. இவர்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுவதால் இவர்கள் வருவாய் முழுவதும் மதுப்பழக்கத்திற்கே செலவழிக்கப்படுகிறது. இதனால் இவர்கள் குடும்பத்திற்கு பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்பட்டு அதிக வட்டிக்குப் பணம் வாங்கிக் கடனாளியாகவும் ஆகிவிடுகின்றனர். இச்சூழலில் இவர்களது குடும்பத்தின் எதிர்காலம் என்பது கேள்விக்குறிகளாகவே தொடர்கிறது.

6. துப்புரவுப் பணியாளர் குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் கல்வியறிவு பெறாமல் துப்புரவு பணிக்குச் செல்வதுடன், அதிகாலையிலேயே அப்பணிக்குச் சென்று விடுவதால் அவர்களின் குழந்தைகளைப் பராமரிக்கவோ, பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பவோ வேறு ஆட்கள் யாருமில்லாமல் போவதால் அவர்களது படிப்பு கடைசி நிலையிலேயே இருக்கிறது.

7. தந்தை வாங்கும் சம்பளம் முழுவதையும் ஒவ்வாத பணியின் காரணத்தால் மன உளைச்சலில் மதுப்பழக்கத்திற்காகச் செலவிட்டு விடுவதாலும், தாய் வேலை செய்யும் இடங்களில் கிடைக்கும் முந்தைய நாள் உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொண்டு வந்து கொடுப்பதாலும் அவர்களுக்குச் சரியான உணவு என்பதும் கிடைக்காத நிலையே இருக்கிறது.
8. இதன் தொடர்ச்சியாக இந்த அருந்ததியர் இனத்தில் ஆண்பிள்ளை என்றால் பதினான்கு வயதாகும் போதே கல்வி அறிவு, பொது அறிவு, பகுத்தறிவு போன்றவை இல்லாத காரணத்தால் அப்பையனும் தன் முன்னோர்கள் செய்து வந்த அதே துப்புரவு சார்ந்த பணியையே செய்யவே முற்படுகிறான். துப்புரவுப் பணியாளர்களின் பெண் குழந்தைகளும் இதேபோல் துப்புரவுப் பணியைத்தான் செய்யத் துவங்குகிறாள். மேலும் இவர்கள் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொண்டு விடுகின்றனர். துப்புரவுப்பணியில் இருப்பவர்களில் பெண்களில் அதிகமானவர்கள் பதினைந்து வயதிலேயே குழந்தைகளைப் பெற்றுத் தாயாகி விடுகின்றாள்.

9. இப்படி துப்புரவுப் பணியாளர்களில் நடைபெறும் சிறுவயதுத் திருமணங்களால் அவர்களுக்கிடையே சரியான புரிந்துணர்வுகள் இருப்பதில்லை. மேலும் ஒவ்வாத பணியும், மதுப்பழக்கமும், தொற்றுநோய்த் தாக்குதலும் துப்புரவுப் பணியாளர்களான ஆண்கள் அதிகமாக 40 வயதிற்குள்ளாகவே மரணமடைந்து போகும் பரிதாப நிலையும் இருக்கிறது. இதனால் துப்புரவுப் பணி செய்யும் பெண்களில் பலரும் இளம்வயதிலேயே விதவைகளாகி வாழ்க்கையை இழந்து தவிக்கின்றனர். மதுரை மாநகராட்சியில் துப்புரவுப்பணி செய்யும் பெண்களில் 94 சதவிகிதப் பெண்கள் பணிக்காலத்தில் கணவனை இழந்து தமிழ்நாடு அரசின் கருணை அடிப்படையிலான பணிக்கு வந்தவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

10. துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள் அனைவரும் கல்வி கற்கும் ஆவலில் இருக்கின்றனர். இவர்களுக்கு அவர்களின் வீட்டுச்சூழல், மதுப்பழக்கத்திற்கு அடிமையான தந்தை, கல்வி அறிவில்லாத தாய் என்று குடும்பத்தின் வறுமை நிலை, போதிய குடியிருப்பு வசதியின்மை போன்றவை கல்வியில் பிந்தங்க வைக்கிறது. மேலும் தமிழ்நாடு அரசின் 1 முதல் 8 வகுப்பு வரையிலான கட்டாயத் தேர்ச்சி போன்றவை அவர்கள் பாடங்களை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் ஒன்பதாம் வகுப்பில் படிக்க முடியாமல் கடைசி நிலையில் தங்கவைத்து விடுவதும் அதிலிருந்து தாண்டி பத்துக்குச் செல்வது என்பது இன்றும் இயலாத நிலையாகவே இருக்கிறது. இதனால் 10 ஆம் வகுப்பு வரை படித்தவர்களுக்கான அரசு சலுகைகள், கடனுதவிகள் போன்றவைகளைப் பெறமுடியாமல் இருக்கின்றனர். இந்த சலுகைகளை தாழ்த்தப்பட்ட அருந்ததியர் இன சமுதாயத்தினர் தவிர பிற சமுதாயத்தினர்களே தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.

11. துப்புரவுப்பணியில் இருக்கும் பெண்களிடம், அவர்கள் இயலாமையைப் பயன்படுத்தி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திக் கொள்ளும் தவறான செயல்களும் ஒரு சில இடங்களில் நடந்து கொண்டிருக்கின்றன என்பதும் ஒரு வேதனையான தகவல்.

அருந்ததியர் இன மக்கள் அறியாமையும் அரசின் சலுகைகளும்
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்திய அரசியல் விதிகளின்படி கல்வி, அரசியல், வேலைவாய்ப்பு போன்றவற்றில் 18 சதவித இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

1. அரசியல்
* தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் 42 பேர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள். இவர்களில் பள்ளர், பறையர் எனப்படும் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 40 பேர் இருக்கின்றனர். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகை கொண்ட அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டு பேர் மட்டுமே இருக்கின்றனர்.

* இது போல் தமிழ்நாட்டில் இருக்கும் மக்களவை உறுப்பினர்கள் 39 பேர். இதில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் 7 பேர். இந்த ஏழு பேரில் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவர் ஒருவர் மட்டுமே.
அரசியலில் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவர்கள் மிகவும் பின்தங்கிப் போயிருப்பதற்கு இந்த சமுதாயத்தினரின் பொருளாதாரத் தாழ்வு நிலை, கல்வியின்மை, அரசியல் விழிப்புணர்வின்மை மற்றும் அரசியல் கட்சிகளின் புறக்கணிப்பும்தான் முக்கியக் காரணிகளாக இருக்கின்றன.

2. கல்வி
* அரசு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு இலவசக் கல்வி மற்றும் இலவச விடுதி வசதி, உதவித்தொகை போன்றவைகளை வழங்குகின்றன. இந்த சலுகைகளை அருந்ததியர் இன மக்கள் பய்னபடுத்துவது அரிதாகவே இருக்கின்றது. ஏனென்றால் இந்த இனத்தில் பத்தாவது வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்கள் மிகக் குறைவு. இந்த சமுதாய மக்கள் மற்ற தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களாலும் ஒதுக்கப்பட்டவர்களாகவே கருதப்படுகின்றனர். இந்த அருந்ததியர் இன சமுதாயத்தினர் அரசின் கல்விச் சலுகைகளைப் பெற்று உயர்கல்வி படிப்பது என்பதே குறைவாகத்தான் இருக்கிறது.

* தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகளில் துப்புரவுப் பணியாளர் மற்றும் தோல் தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு கூடுதல் சலுகைகள் அளிக்கப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அறியாமையால் அருந்ததியர் இன மக்கள் இந்த சலுகைகளை அதிக அளவில் பெற்றுப் பயனடைய முடியாமலேயே இருந்து வருகின்றனர்.

3. அரசு உதவிகள்
* தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதிதிராவிட நலத்துறை மூலம் தாட்கோ வழியாக பல்வேறு தொழில்களுக்கான கடன்கள் மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றது. இந்தச் சலுகைகளையும், பயிற்சிகளையும் வசதியுடைய தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர்களே பெற்றுப் பயனடையும் நிலை இருக்கிறது. இதில் பயனடந்த அருந்ததியர் சமுதாயத்தினர் இரண்டு சதவிகிதம் மட்டுமே என்பது வேதனைக்குரிய ஒன்று.

அருந்ததியர் இன அமைப்புகள்
* கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தாழ்த்தப்பட்ட இனத்திலும் ஓர் ஒடுக்கப்பட்ட இனமான அருந்ததியர் என்று அழைக்கப்படும் சக்கிலிய இன மக்களிடம் செயல்படும் அருந்ததியர் இன அமைப்புகள் எல்லாம் சிறிது காலத்தில் காணாமல் போய்விடுகிறது.

* பிற இனத்தவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு எளிதில் பலியாகிவிடும் இவர்கள் ஒற்றுமைப்பட்டு நிற்பது என்பது இன்றுவரை கேள்விக்குரியதாகவே இருக்கிறது.

* அருந்ததியர் இன மக்களிடம் அவர்கள் தற்போது வாழ்ந்து வரும் பகுதிகள் குறித்த பாகுபாடு இருந்து வருவதால் தமிழகம் முழுவதும் இவர்களை ஒன்றிணைப்பதில் கருத்து வேறுபாடுகளும், அமைப்பு வழியில் ஒற்றுமையின்மையும் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்றன.

* அருந்ததியர் இனத்தில் பல தலைவர்களும் பல அமைப்புகளும் செயல்படுவதால் குறிப்பிட்ட கொள்கைகள், நோக்கங்கள் எதையும் அடைய முடியாமல் பின்னடைவுகள்தான் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

* அருந்ததியர் இன மக்கள் முன்னேற்ற அமைப்புகள் எனும் பெயர்களில் சில தொண்டு நிறுவனங்கள் துவங்கப்பட்டு அருந்ததியர் இன மக்கள் முன்னேற்றத்திற்காக அரசு ஒதுக்கும் பணத்தைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன.

* சில வெளிநாட்டு அமைப்புகள் துப்புரவுப்பணியில் இருப்பவர்களுக்காக சில உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த உதவித்தொகையை அருந்ததியர் இனத்தின் ஒரு சில அமைப்புகள் பெற்றுக் கொள்கின்றன. ஆனால் இந்த அமைப்புகளில் இருக்கும் குறிப்பிட்ட சிலர் மட்டும் பயன்படுத்திக் கொண்டு அருந்ததியர் இன முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தியது போல்  காண்பித்துக் கொள்ளும் தவறான போக்கும் இருக்கிறது.

இப்படி கல்வி, சமூகம், அரசியல் மற்றும் பொருளாதாரம் போன்ற அனைத்து வழிகளிலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலும் தனிமைப்படுத்தப்பட்ட சமுதாயமாக இருந்து வரும் அருந்ததியர் இன சமுதாயத்திற்கு தமிழ்நாடு அரசு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்துள்ளது. இந்த உள் ஒதுக்கீட்டில் அருந்ததியர் இன மக்கள் முன்னேற்றமடைந்து மற்ற சமுதாயத்தினரைப் போல் வருவதற்கு அவர்களுக்கான அடிப்படைக் கல்வியும், பொருளாதார நிலையும் முதலில் ஏற்றமடைந்தால் மட்டுமே அரசின் எண்ணம் ஈடேறும். முதலில் அருந்ததியர் இன மக்களின் மீது தனிப்பட்ட கவனம் கொள்ளும் கல்விக்கூடங்கள் அமைக்க அரசு முன்வரவேண்டும்.

கோகிலா என்பவரின் சந்தேகத்திற்குரிய மரணம்



பள்ளிநேலியனூர், கண்டமங்கலம் அருகில், விழுப்புரம் மாவட்டத்தில் பறயர் சாதிப் பெண் கோகிலா என்பவரின் சந்தேகத்திற்குரிய மரணம் – உண்மை அறியும் குழுவின் அறிக்கை

3.12.2012

சென்னை

பள்ளிநேலியனூர் கிராமத்தில் நவம்பர் 11 அதிகாலை 2.30 மணியளவில் நடந்த குடும்ப / சாதி வெறி திமிர் கொலையில்(கௌரவக் கொலையில்) பறையர் சாதியைச் சேர்ந்த கோகிலா (வயது 23) என்ற பெண் அதேபகுதியை சேர்ந்த அருந்ததியர் சாதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 25) என்பவரை காதல் திருமணம் செய்தையொட்டி, கோகிலாவின் பெற்றோரால் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என்றும், அதை தற்கொலை என்று அவர்கள் முடி மறைப்பதாக  செய்திகள் வெளியானது. இதுகுறித்து ஆய்வு செய்ய மாசெஸ் அமைப்பின் சார்பாக, அரங்க. குணசேகரன், தமிழக மனித உரிமைக் கழகம் தலைமையில் மேலும் சில மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த நபர்களை ஒருங்கிணைத்து கீழ்கண்ட 5 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.

1. நிர்மலா (கொற்றவை), நிறுவனர் மாசெஸ் அமைப்பு

2. அரங்க. குணசேகரன், தமிழக மனித உரிமைக் கழகம்

3. தமிழ் மணி, தமிழக சாக்கிய அருந்ததியர் சங்கம்

4.  மாறன், மனித உரிமை ஆர்வலர்

5.  வழக்குரைஞர் சுந்தரராஜன், பூவுலகின் நண்பர்கள்

நாங்கள் ஐவரும் டிசம்பர் 2 அன்று சம்பவம் நடந்த பள்ளிநேலியனூர் சென்று கார்த்திகேயனின் தாய் மற்றும் கோகிலாவின் குடும்பத்தார், ஊர் பொதுமக்கள், இந்த வழக்கை விசாரித்து வரும் இன்ஸ்பெக்டர் சரவனன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் இராமமூர்த்தி, இன்றைய தலைவர் தமிழ்குடி, ஆசிரியர் ரமேஷ் ஆகியோரைச் சந்தித்தோம். மேலும் கார்த்திகேயன், அவரது சகோதரர் கதிர்வேல், கார்த்திகேயனின் வழக்குரைஞர் லூசி, அவரது சீனியர் வழக்குரைஞர் ஜோஸ் மற்றும் கார்த்திகேயன் நண்பர் இளையரசன் (திராவிட விடுதலைக் கழகம்) ஆகியோரையும் சந்தித்துப் பேசினோம். கோகிலாவின் குடும்பத்தார் தரப்பில் பேசிய அவரது சித்தப்பா முருகன், அந்த தெருவில் வசிக்கும் அண்டை வீட்டர் மற்றும் இன்ஸ்பெக்டர் சரவணன் தெரிவித்த தகவல்களில் பல முரண்பாடுகள் இருப்பதை எங்களால் காண முடிந்தது. எங்கள் குழுவின் விசாரனை விவரங்கள் பின் வருமாறு:

 கோகிலாவின் தந்தை இதை இயற்கை மரணம் என்று சொல்ல, வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் இதை தற்கொலை என்று உறுதியாகச் கொல்கிறார். தற்கொலை என்றால் போஸ்ட்மார்ட்டத்திற்கு ஏன் உடலை தரமறுக்கிறார்கள் என்ற ஒரு சிறு சந்தேகம் கூட காவல்துறைக்கு வராதிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.


பின்னணி:

பறையர் சாதியைச் சேர்ந்த கோகிலா, அருந்ததியர் சாதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை கடந்த 9 வருடங்களாக காதலித்துள்ளார், பெற்றோர்களுக்கு தெரியாமல் 1.10.2010 அன்று கடலுரில் இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கோகிலா வீட்டிற்கு விசயம் தெரிந்து ’சக்கிலியனுக்கு’ கட்டிக் கொடுக்க மாட்டோம் என்று சொல்லி கோகிலாவின் பெற்றோர் வேறிடத்தில் அவருக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினர். கோகிலா கார்த்திகேயனுடன் தான் வாழ்வேன் என்று தீர்மானகரமாக இருந்ததால் அவரது பெற்றோர் அவரை கடுமையாக அடித்து துன்புறுத்தியிருப்பதாகத் தெரிகிறது. பின்னர் 10.11.12 அன்று மாலை 4 மணி அளவில் கோகிலா கார்த்திகேயனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது தந்தை தங்களது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாகவும், அடுத்த நாள் (ஞாயிற்று கிழமை) பெண் பார்க்க வருமாறும் சொல்லியிருக்கிறார். அதைத் தொடர்ந்து இருவரும் மகிழ்ச்சியாகப் பேசிவிட்டு உறங்கச் சென்றதாகவும், 11.11.12 அன்று அதிகாலை 2.30 மணியளவில் கோகிலா இறந்துவிட்டதாக கார்த்திகேயனுக்கு தகவல் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அவருக்கு தைராய்ட் நோய் தொந்தரவு முற்றி மூச்சடைத்து இறந்துவிட்டாள் என்று கோகிலாவின் தந்தை நாகராஜன் தெரிவித்திருக்கிறார், வேறு சிலர் அவள் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் என்று கூறுகின்றனர்.  

கோகிலாவின் பெற்றோர் போஸ்ட்மார்ட்டம் செய்ய காவல்துறையினரிடம் பிணத்தை ஒப்படைக்க மறுத்து இடுகாட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டதாலும், கார்த்திகேயன் தரப்பினர் எவரையும் பிணத்தின் அருகே அனுமதிக்காததாலும், பிணம் கண்களைத்தவிர முழுவதுமாக போர்த்தியிருந்தது என்பதாலும் தனது மனைவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக உணர்ந்த கார்த்திகேயன், கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தையடுத்து இந்த செய்தி செய்தித்தாள்கள், வார இதழ்களில் வெளிவந்தது. மேலும் அது சமூக இணையதளங்களின் வாயிலாக கதிர்வேல் அவர்கள் அளித்திருந்த தகவல்களின் ஒலிப்பதிவு  மாசெஸ் அமைப்பின் கவனத்திற்கு வந்ததையொட்டி உண்மையறியும் குழு அமைத்து விசாரனைக்குச் சென்றோம்.

1. முதலில் நாங்கள் கார்த்திகேயனின் தாயார் கஸ்தூரியை சந்தித்தோம். கார்த்திகேயன், கலியமூர்த்தி தம்பதிகளுக்கு 5 மகன்கள். கார்த்திகேயன் கடைசி மகன். அவர் செண்ட்ரிங் எனப்படும் கட்டிட வேலை பார்த்து வருகிறார். 12ஆம் வகுப்பு வரை படித்திருக்கிறார். கோகிலாவும் கார்த்திகேயனும் ஒன்றாக படித்தவர்கள். 9 வருடங்களாக காதலித்து வந்ததாகவும், அரசல் புரசலாக இந்த காதல் சேதி தனக்கு தெரியும் என்றும் ஆனால் கோகிலாவின் இறப்பிற்கு பிறகே திருமண விசயம் தனக்கு தெரியும் என்றார். அதன்பிற்கு செய்தித்தாளில் வந்த திருமணப் புகைப்படத்தையே தான் பார்த்ததாகச் சொன்னார். கோகிலாவின் தந்தை நாகராஜ் கரும்பு வெட்டும் கூலி வேலைக்கு செல்பவர். சாதிப் பற்றின் காரணமாக, சக்கிலியப் பையனுக்கு எந்த காரணம் கொண்டும் பெண் கொடுக்கமாட்டேன் என்று சொல்லி அவர் அந்தப் பெண்ணை அடித்துக் கொடுமை படுத்தியிருக்கிறார்.

11.11.12 அன்று அதிகாலை 3.30 அளவில் கார்த்திகேயன் நண்பர்கள் வந்து கோகிலா இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். பின்னர் கோகிலாவின் பெற்றோர் கடும் கோபத்தில் இருப்பதால் கார்த்திகேயனின் பாதுகாப்பு கருதி அவரது நண்பர்கள் அவரை வேறிடத்திற்கு அழைத்து சென்று விட்டனர். அடுத்தநாள் ஈம காரியங்கள் செய்ய அவர்கள் பிணத்தை தயார் படுத்திக் கொண்டிருந்திருக்கின்றனர்.” இதற்கிடையில் தனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கார்த்திகேயன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டான். அதைத் தொடர்ந்து காவல்துறை போஸ்ட்மார்டத்திற்காக உடலை கைபற்றவந்தபோது பெண்கள் எல்லாம் மறித்துக் கொண்டு அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. சிலர் காவல்துறையினரையே நெட்டி தள்ளியபடி பின் தள்ளினர், வேறு சிலர் உடனடியாக பெண்ணின் உடலை கட்டையில் ஏற்றி பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டனர்.

அதுமட்டுமல்லாது  என் மகனை நான் கொலை செய்வேன், இவன் யார் புகார் கொடுக்க? என்று கனவர் கலியமூர்த்தியை மிரட்டியுள்ளார் நாகராஜ். எங்ககளது வீட்டை இடிக்கப்போவதாகவும், எங்களை சும்மா விடமாட்டேன் என்று நாகராஜ் சொல்லிவருவதாகவும் எனது மகனுக்கு தகவல் கிடைக்க எங்களை உடனே இந்த இடத்திலிருந்து வெளியேறுமாறு அவன் சொன்னான். நாங்களும் சென்றுவிட்டோம. காவல்துறையினரிடம் தனது மகன் மிரட்டல் குறித்து தெரிவித்து பாதுகாப்பு கோரியதாகவும், அதனால் அது தடுக்கப்பட்டதாகவும் கூறினார். ஆனால் அதன் பிறகு வேறு தொந்தரவுகள் இல்லை. எனவேசில நாட்கள் கழித்து வீட்டிற்கு திரும்பியதாகவும், இரவில் மட்டும் பங்காளி வீட்டில் படுத்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

அந்த ஊரில் பொதுவாக பொதுவெளியிலோ அல்லது நடைமுறையிலோ சாதிய ஏற்றத்தாழ்வுகள் ஏதும் இல்லையென்றும் தெரிவித்தார். தங்களது குடும்பத்தில் கூட தனது சொந்த அண்ணன் மகள் ஒரு பறையர் சாதிப் பையனை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதாகவும் கோகிலாவின் தந்தை மற்றும் அவரது அண்டை வீட்டார் சிலருக்கு சாதிவெறி இருந்திருக்கிறது, அருந்ததி சாதியில் பெண் கொடுப்பதை அவர்கள் விரும்பவில்லை. தனது மகன் கோகிலாவின் மரணத்தை கொலை என்றே நம்புவதாகவும், ஊரில் சிலரும் அப்படியே பேசிக்கொள்வதாகவும் தெரிவித்தார். தாங்கள் எந்தவிதத்திலும் குறைவில்லை எல்லா வசதிகளும் வீட்டில் இருக்கிறது, அநியாயமாக ஒரு பெண்ணின் உயிரை இப்படி வாங்கிவிட்டார்களே என்று ஆதங்கப்பட்டார்.

தான் அந்த வீட்டில்தான் இருப்பேன் என்றும் தனக்கு என்ன நேர்ந்தாலும் சந்திக்கத் தயார் என்றும் தெரிவித்தார்.

அந்தத் தெருவில் 3 அருந்ததயிர் குடியிருப்புகள் இருக்கிறது. பறையர் சாதியே பெரும்பான்மை. எதிரில் இருந்த கார்த்திகேயனின் சித்தி கௌரி மற்றும் அவர் கணவர் (கார்த்திகேயன் சித்தப்பா) வீட்டினரை விசாரித்தோம்.

2. சில தனிப்பட்ட காரணங்களால் தாங்கள் கஸ்தூரி குடும்பத்தோடு பேசாதிருந்ததாகவும். இப்போது இந்த சம்பவத்தை ஊரில் பேசிக் கொள்வதாகவும் கேள்விபட்டதாகவும் தெரிவித்தார். தங்கள் வீட்டுப் பையனைக் காதலித்ததால் தான் இப்படி நேர்ந்தது, அவன் கொலைகாரன் என்று கோகிலா குடும்பத்தினர் தூற்றுவதாகவும் வேதனைப்பட்டார். அப்போது கார்த்திகேயனின் சித்தப்பா அழத்தொடங்கினார். விசாரித்தபோது, ஒருவாரத்திற்கு முன் பள்ளிக்கூடச் சாலையருகே நடந்துவந்தபோது கோகிலாவின் சித்தப்பா தனஞ்செயன் (தனசேகர் என்பதை தனஞ்செயன் என்று சொல்லிவிட்டார்) தன்னை வழியில் வைத்து அடித்ததாக கண்ணீர் மல்கச் சொன்னார். இந்த சம்பவம் பற்றி என்ன தெரியும் என்று கேட்டதற்கு, பெரும்பாலும் அவர் குடித்துவிட்டு வருவதால் அவருக்கு எதுவும் தெரியாது என்று அவர் மனைவி தெரிவித்தார்.

3. கார்திகேயன் வீட்டற்கு அடுத்த தெருவில் இருந்த பறையர் சாதியைச் சேர்ந்த அருள் என்பவரிடம் விசாரித்தோம். கோகிலா, கார்த்திகேயன் இருவரும் காதலித்திருக்கிறார்கள், திருமணம் செய்து மறைத்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் கோகிலா வீட்டில் தெரிந்து பிரச்சனையாகி இருக்கிறது, திடீரென்று ஒருநாள் அந்த பெண் இறந்துவிட்டாள் என்று அறியமுடிகிறது. திடீர் மரணம், போஸ்ட்மார்டத்திற்கு உடலைத் தர மறுத்ததால் கார்த்திகேயன் மேலும் சந்தேகம் கொள்கிறார். காவல்துறையினர் வந்தபோது பெண்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு உடலை கைப்பற்றவிடாமல் மறித்துள்ளனர் என்றார்.

ஒருவேளை கார்த்திக் ஊருக்குள் வந்து அவரை எவரேனும் அடித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு அதைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம், நிச்சயம் தட்டிக் கேட்போம் உதவிக்கு செல்வோம் என்றார்.

ஆக அந்த ஊரில் ஒட்டுமொத்த சமூகம் சாதிய பாகுபாடு போற்றவில்லை என்று அறியமுடிந்தது. எல்லோரும் நட்புறவுடனேயே இருந்திருக்கின்றனர்.

4.   கோகிலாவின் பெற்றோரை சந்திக்க சென்றபோது அவர்கள் முன் ஜாமீன் வாங்குவதற்காக சென்றுள்ளதாக  கோகிலாவின் சித்தப்பா முருகன் தெரிவித்தார்.

முருகன் (தனியார் பேருந்து ட்ரைவர்) கூறியது:

எங்கள் பெண் காலை 8 மணிக்கு வேலைக்கு செல்வாள், 6 மணிக்கு வருவால். திடீரென்று ஒரு நாள் அவன் தான் திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கிறான் கார்த்திகேயன். அதை வெளியில் சொல்ல அச்சப்பட்டிருக்கிறான். ஒன்றரை வருடங்களுக்கு முன் தான் கோகிலாவை திருமணம் செய்து கொண்டதாக கார்த்திகேயன் கூறுகிறான். இதற்கிடையில் இது ஏதும் தெரியாமல் எங்கள் விட்டுப் பெண்ணுக்கு நாங்கள் மாப்பிள்ளை பார்த்தோம். அவரது தொடர்பு எண் இருந்ததைக் கொண்டு கோகிலா அவரைத் தொடர்பு கொண்டு தான் இப்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் இல்லை என்று பேசியிருக்கிறாள், தன்னைத் திருமணம் செய்ய வேண்டாம் என்று சொல்லியிருக்கிறாள். இதைத் தெரிந்து அவளது தந்தை யாரையாவது காதலிக்கிறாயா என்று விசாரித்தபோது, தைராய்ட் பிரச்சனை இருப்பதால் அப்படிச் சொன்னதாக சொல்லியிருக்கிறாள்.

 அதிகாலை 3 மணியளவில் உறக்க கலக்கத்தில் பார்த்தபோது இறந்து கிடந்தாள் என்றார். தனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் துறையை நாடியிருக்கிறார். எங்கள் பெண் தைராயிட் பிரச்சனையால் அவதியுற்று வந்தாள், மூச்சு விட முடியாமல் சிரமப்படுவாள். அவர் எப்படி இறந்தாள் சூசைடா என்று நாங்கள் கேட்டபோது ஆம் சூசைட் தான், தூக்கு மாட்டிக் கொண்டாள். தன்னால் வாழமுடியவில்லையே என்று மன உளைச்சலடைந்திருக்கிறாள் போலும் அதான் சூசைட் செய்து கொண்டாள் என்றா.

பிறகு காவல்துறை வந்ததா என்றோம்.

மதியம் 3 மணியளவில் காவல்துறை வந்தது, கோகிலாவின் கணவர் என்று சொல்லி கார்த்திகேயன் என்பவர் கோகிலா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்திருக்கிறான். காவல்துறை விசாரிக்க வரும்போதுதான் அவர்கள் பதிவுத் திருமனம் செய்து கொண்டார்கள் என்பதே எங்களுக்கு தெரியும்.  காவல்துறை வரும் வேளையில் எங்கள் சாதி வழக்கப்படி உடலை தகனம் செய்வதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தோம். பெண் எப்படி இறந்தாள் என்று நாங்கள் மீண்டும் கேட்டதற்கு, எந்த பெற்றோர் தான் உடனே காதலுக்கு சம்மதம் தெரிவிப்பார்கள், அந்த அடிப்படையில் அவர்கள் கொஞ்சம் கண்டித்திருக்கிறார்கள் அது தவறா. அதற்குள் அந்தப் பெண் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாள் என்றார்.

கார்த்திகேயன் எங்களை நாடாது நேரே காவல்துறையை நாடியிருக்கிறார். ஒருவேளை காலையிலேயே சென்று புகார் அளித்து அவர்களும் காலையிலேயே வந்திருந்தால் நாங்கள் உடலை முறைப்படி ஒப்படைத்து, கணவன் என்ற முறையில் அவனே சடங்குகள் செய்யட்டும் என்று அனுமதித்திருப்போம். உடலைக் குளிப்பாட்டி எல்லாம் தயாரான பிறகு உடலை போட்டுவைப்பது தவறு என்பதால் நாங்கள் கொடுக்கவில்லை, ஒருவேளை ஊர்காரர்கள் அனுமதித்தால் எடுத்துச் செல்லுங்கள் என்று சொன்னதாக எங்களிடம் தெரிவித்தார்.

உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டீர்கள் என்று சொல்லப்படுகிறதே. அது உண்மயில்லை, எங்கள் ஊர் வழக்கப்படி சர்க்கரை கொட்டி, இரப்பர் போட்டு சடங்கு வழக்கப்படிதான் எரித்தோம், அது அவர்களின் வாக்குமூலம் என்றார்.

ஓரிரண்டு நாட்கள் அந்தப் பெண்ணை எங்காவது அழைத்து சென்று குடித்தனம் நடத்தியிருந்தால் நாங்களும் எங்கள் பெண்ணைக் காணவில்லையே என்று தேடியிருப்போம் எங்களுக்கும் முன்னரே இந்த விசயம் தெரிந்திருக்கும்… இல்லையேல் முன்னரே அவன் காவல்துறை உதவியையாவது நாடியிருந்தால் இந்த அளவுக்கு சென்றிருக்காது என்றார்.

அப்போது அங்கு பறையர் சாதியைச் சேர்ந்த தெரு மக்களும் கூடியிருந்தனர். அவர்களும் ஊடே இதே கருத்தை தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

இந்த ஊரில் இதேபோல் சாதி மாறித் திருமணம் நடந்திருக்கிற்தே, கார்த்திகேயன் உறவினர்கூட பறையர் சாதியில் பெண் எடுத்திருக்கிறாரே என்று நாங்கள் கேட்டபோது ஆமாம் என்றார் முருகன் எங்களுக்கும் முன்னரே தெரிந்திருந்தால் சேர்த்து வைத்திருப்போம் என்றார். அப்போது, அங்கிருந்த கதிரவன் என்பவர் யார் அவன் சக்கிலி வூட்டில் பெண் எடுத்தது என்று எரிச்சலுடன் கேட்டார்.

தொடர்ந்த முருகன் – ஏன் எங்களிடம் சொல்லாமல் பார்த்து வைத்த மாப்பிள்ளையிடம் சொன்னாய் என்று கோகிலாவின் தந்தை கோபித்திருக்கிறார். இது பெற்றோர்களின் இயல்பான கோபம் தானே, திருமணம் முடிந்து 2 வருடங்கள் வேறு ஆனதால் சேர்ந்து வாழ முடியவில்லையே என்று அவள் மன உளைச்சலடைந்து தற்கொலை செய்யும் மனநிலைக்கு சென்றிருக்கலாம் என்றார்.

பெற்றோர் கோபித்ததற்கும், பெண் இறந்ததற்கும் எத்தனை நாள் இடைவெளி என்று கேட்டபோது மூன்றே நாள் என்றார், அவளை பெண் பார்க்க வருவதாக இருந்தது, அதற்குள் இப்படி நடந்துவிட்டது. இப்போது இத்தனை பேரை அனுகும் கார்த்திகேயன் ஏன் தொடக்கத்திலியே இந்த முயற்சியை எடுக்கவில்லை, எங்களிடமும் வந்து பேசவில்லை என்றார்.

திருமணம் செய்து மறைக்கும் அவசியம் ஏன் வந்திருக்கும் என்று கேட்டதற்கு, கோகிலாவின் தந்தை கோவில் நாட்டாமைக்காரராக இருந்திருக்கிறார், ஊரில் ஒரு பெரிய மனிதர் அதனால் அவனுக்கு அச்சமாக இருந்திருக்கலாம் என்றார்.

சரி பெண் ஏன் மறைத்திருப்பார் என்று கேட்டதற்கு, அவருக்கு என்ன 21 வயதுதானே ஆகிறது, என்ன மெச்சூரிட்டி இருக்கும், அதனால் தான் நாங்களே மாப்பிள்ளை பார்த்தோம். பெண் 10 ஆவது படித்திருக்கிறாள், மருந்து கம்பெனியில் வேலை பார்க்கிறாள், காலையில் செல்வாள் மாலையில் வருவாள். ஒருநாள் கூட வேறெங்கும் சென்றதில்லை எங்களுக்கும் சந்தேகம் வரவில்லை என்றார். ஆனால் ஊரில் அரசல் புரசலாக இவர்கள் சந்திப்பை பற்றி பேசிக் கொள்வார்கள். அதை நாங்கள் பொருட்படுத்தவில்லை என்றார்கள். நாங்களே காதல் ஜோடிகளை சேர்த்து வைத்திருக்கிறோம், எங்களுக்கு தெரியவே இல்லாதபோது நாங்கள் என்ன செய்ய முடியும் என்றார்.

கார்த்திகேயன் சித்தப்பாவை கோகிலாவின் சித்தப்பா அடித்ததாக சொல்கிறார்களே என்று கேட்டதற்கு அப்படியெல்லாம் இல்லை என்று ஊர்காரர்கள் சொல்ல, முருகன் பெண்ணின் இறப்பு நடந்த ஓரிரு நாட்களில் கோபம் காரணமாக அப்படி ஏதாவது நடந்திருக்கலாம் ஆனால் அதன் பிறகு ஏதாவது நடந்ததா என்று விசாரித்துப் பாருங்கள் என்றார்.

அங்கிருந்த ஓர் பெண்மணியும் எவருக்கும் தெரியாதபோது இப்போது வந்து திருமணம் செய்துகொண்டதாக சொன்னால் என்ன செய்யமுடியும் என்றார் கோபமாக. யாராவது சென்று அவர்களை எதாவது செய்தால் அவர்கள் இன்நேரம் இங்கிருந்திருக்க முடியுமா, அப்படி செய்யாததால்தான் அவர்கள் அதிகம் துள்ளுகிறார்கள் (ரொம்ப போராங்க) என்றார்

முருகன் தொடர்ந்தார், கோகிலாவின் தந்தை அடுத்த நாள் கார்த்திகேயனைப் பெண் பார்க்க வருமாறு போனில் சொன்னதை பதிவு செய்திருப்பதாக அவரே சொல்லியிருக்கிறார் கேட்டுப்பாருங்கள். அதன் பிறகு கோகிலாவின் தாயார் சற்று கோபமாகப் பெண்ணிடம் பேசியிருக்கிறார், அதைத் தொடர்ந்து கோகிலா மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கலாம்.

கோகிலா தைராய்ட் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கார்த்திகேயனோடு திருமணம் செய்யமுடியாதிருக்கிறதே என்று தற்கொலை செய்து கொண்டாரா என்று கேட்டதற்கு, முருகன் அது தன்னால் உறுதியாக சொல்ல முடியாது என்றார், ஆனால் முன்னர் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றார். கதிரவன் ஆணித்தரமாக தைராய்ட் பிரச்சனையால்தான் தற்கொலை செய்து கொண்டாள் என்றார்.

கோகிலா புகைப்படம் இருக்கிறதா என்று கேட்டதற்கு அது எதுவுமில்லை எல்லாம் கொளுத்திவிட்டார்கள் என்றார். ஏன் கொளுத்த வேண்டும் என்று கேட்டதற்கு அதை தான் சொல்ல முடியாது, அவர்கள் அப்பா அம்மா இருந்தால் தான் தெரியும் என்றார்.

இது பெரிய விசயமானதற்கு காரணமே வழக்குரைஞர் லூசி தான் காரணம், எங்கள் தரப்பில் எதையும் கேட்காமல் அவர்களாகவே எல்லாவற்றையும் முடிவு செய்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்? என்றார்.

வழக்குறைஞர் கோதண்டபாணி என்பவர் லூசியை மிரட்டியதாகச் சொல்லப்படுகிறதே என்றபோது அது தனக்கு தெரியாது ஆனால் எங்கள் ஊர் விசயத்தில் ஏன் தலையிடுகிறாய், இந்த வழக்கை விட்டுவிடு என்பதுபோல் ஏதாவது சொல்லியிருக்கலாம் என்றார். மேலும் அவர் எங்கள் நெருங்கிய உறவு, கோகிலாவின் தந்தை கூட பிறந்த சித்தப்பா மகன் என்றார்.

5. முன்னாள் ஊராட்சி தலைவர் இராமமூர்த்தி, ஆசிரியர் ரமேஷ் மற்றும் சில ஊர் மக்களை அங்குள்ள கோயில் மண்டபத்தில் சந்தித்தோம்.

இராமமூர்த்தி கூறியது:

கோகிலா இயற்கை மரணமடைந்திருக்கிறார். அவருக்கு தைராய்ட் பிரச்சனை இருந்தது, அதுதான் இறப்புக்கு காரணம் என்றார்.

கார்த்திகேயன் தன்னோடு தான் எப்பொழுதும் இருப்பார் என்றும் மாமன் மச்சான் என்று பழகிவந்ததாகவும் திருமணம் செய்து கொண்டதை தன்னிடம் கூடச் சொல்லவில்லை என்றார்.

ஏன் உடலைக் கொடுக்க மறுத்தார்கள் என்று கேட்டதற்கு, உடலைக் குளிப்பாட்டி எல்லாம் முடித்தபின்னர் ஊர்வழக்கப்படி அப்படி கொடுக்க மாட்டார்கள், அதனால் தான் ஊர்மக்கள் காவல்துறையை தடுத்திருக்கின்றனர் என்றார்.

ரமேஷ் குறுக்கிட்டு எங்கள் ஊரில் சாதிப் பிரச்சனையே இல்லை, முன்னர் சக்கிலியர்கள் செறுப்பு கூட அணிந்து செல்ல முடியாத அளவுக்கு கொடுமைகள் இருந்தது ஆனால் இப்போதெல்லாம் அப்படி எதுவும் இல்ல, நாடார், வள்ளுவப் பறையர், உடையார், ரெட்டியார் என்று அனைவரும் ஒற்றுமையாகவே இருக்கின்றொம் என்றார்.

ஆனால் கார்த்திகேயன் எங்கள் மேல் காவல் துறையில் புகாரளித்ததோடு லூசியின் தூண்டுதலின் பேரில் ஊரெங்கும் சாதி வெறியன் நாகராஜை கைது செய்! என்று போஸ்டர் ஒட்டியிருக்கிறார். மன வேதனையாக இருக்கிறது. தலித்தல்லாத லூசி எதற்கு இதில் தலையிடுகிறார், அவர் ஒரு முதலியார் என்று சாதியை குறிப்பிட்டு பேசினார். இரவு வேளைகளில் காவல்துறை வந்து எங்களை தொந்தரவு செய்கிறது, இரவு வேளைகளில் ஊரில் ஆண்களே இருக்க முடியாமல் ஓடி ஒளிகிறோம். இத்தனைக்கும் அவன் தான் காரணம். தொடக்கத்திலேயே அவன் எங்களை நாடியிருந்தால் ஊர்காரகளே அவர்களை சேர்த்து வைத்திருப்போம் என்றார்.

காதிலித்த காலத்திலேயே நாங்கள் யாரும் கண்டிக்கவில்லையே. கார்த்திகேயன் கோகிலாவின் தைராய்ட் நோய் என்பது க்ரானிக் டிசீஸ் அவரை திருமணம் செய்வது பயனற்றது என்பதால் வேண்டுமென்றே அவரை பாலியல் வேட்கையை தீர்த்துக் கொண்டு கைவிட்டிருக்கிறார், இல்லையென்றால் தனது மனைவியை அவர் அழைத்து சென்று வாழ்ந்திருக்கலாமே என்று இராமமூர்த்தி சொன்னர்.

அவர் தவறு செய்துவிட்டு எங்கள் மேல் புகார் அளித்து இப்போது முன் ஜாமீன் பெறுவதற்கு அலையவிடுகிறார். யார் யார் மேல் புகார் அளித்திருக்கிறார் என்று கூட தெரியாமல் ஊரே பயப்படுகிறது என்றார்.

6. கதிர்வேல், கார்த்திகேயன் சகோதரர்:

என் தம்பியை அந்தப் பெண்ணை காதலிக்குமாறு தூண்டியதே இராமமூர்த்திதான் (அ.தி.மு.க – முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்) என்றார். அப்போது அவருக்கும் நாகராஜுக்கும் பிணக்கு இருந்தது, என் தம்பி எப்போதும் இராமமூர்த்தியுடனே இருப்பர். இது எல்லாவற்றுக்கும் காரணம் அவர்தான், நீ லவ் பண்ணு நான் பாத்துக்குறேன் என்றவர், பின்னர் நாகராஜோடு ராசியான பின்னர் என் தம்பியை கூப்பிட்டு எச்சரிக்கை விடுத்தார். தனது மாமாவிற்காக எதையும் செய்யத் தாங்கமாட்டேன் என்று சொன்னார். இரண்டு முறை அவர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்திருக்கிறார், மக்களுக்கென்று அவர் எதுவும் செய்யவில்லை, பின்னர் நாங்கள் தமிழ் குடி என்பவருக்கு எங்கள் 12-15 ஒட்டைப் போட்டோம் அவர் செயித்துவிட்டார். அப்போதும் தம்பி அவரோடு தான் இருந்தார், அவருக்கு தான் ஓட்டு போட்டார். இதற்கு மூலக் காரணமே இராமமூர்த்திதான். தன் வஞ்சத்தை தீர்த்துக் கொண்டார்.

கோகிலா தற்கொலை செய்து கொண்டாரா, கொலை செய்யப்பட்டாரா என்று கேட்டதற்கு: இரவு 10 மணியவரை கோகிலா தம்பியோடு பேசிக்கொண்டிருந்தார். அதற்கு முந்தைய நாள் அதற்கு இரண்டு நாளுக்கு முன்பு கோகிலாவின் தாய் மாமா வீட்டில் கோகிலாவை பயங்கரமாக அடித்து கொண்டு போய் விட்டிருக்கின்றனர். அவள் மனம் மாறும் என்று எதிர்பார்த்திருக்கின்றனர். ஆனால் அது நடக்கவில்லை. மீண்டும் தங்களது வீட்டிற்கே அழைத்து வருகின்றனர். சனிக்கிழமை மதியம் 12 மணி வரை அவரது அம்மா கோகிலாவை நன்கு அடித்திருக்கிறார். அதை தம்பி தனது தொலைபேசியில் ஒலிப்பதிவு செய்திருக்கிறார். அதனால் வீட்டை விட்டு ஓடிவிட முடிவெடுத்திருக்கிறார் கோகிலா. இதற்கிடையில் கோகிலாவின் தந்தை கார்த்திகேயனைத் திருமணம் செய்ய சம்மதம் தெரிவிப்பதாகச் சொல்லி மறுநாள் கார்த்திகேயனை பெண் பார்க்க வருமாறு சொல்லியிருக்கிறார். மகிழ்ந்துபோன கோகிலா உடனே கார்த்திகேயனிடம் தெரிவித்திருக்கிறார். நண்பர்களிடமெல்லாம் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். அதை அம்மாவிடமும் தெரிவித்துவிட்டு தூங்கிவிட்டார்.

இரவு 2.30 மணியளவில் கோகிலா இறந்துவிட்டதாக தகவல் வருகிறது. கார்த்திகேயனை பாதுகாப்பாக இருக்கச் சொன்னார்கள் அவரது நண்பர்கள். நாங்கள் உடனே வெளியேறிவிட்டோம். காலையில் அம்மாவும் அண்ணியும் அடுத்த நாள் கிளம்பிவிட்டனர். அப்பா மட்டும் இரண்டு நாள்வரை அங்கிருந்தார். மிரட்டல் வரவே அவரும் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

எப்போது கம்ப்ளையிண்ட் கொடுத்தீர்கள்? என்று கேட்டபோது.

11.11.2012 அன்று மதியம் 12 மணிக்கு புகார் அளிக்க சென்றோம். பின்னர்  கோகிலாவின் பெற்றோர்தான் நம்மை எதுவும் செய்யவில்லையே பின்னர் எதற்கு புகார் என்று நான் தெரிவித்தேன். சிறிது நேரம் கழித்து கார்த்திகேயன் நண்பர்கள் உனது பாதுகாப்பிற்காகவாவது நீ முதலில் புகார் கொடு. பிணத்தை அடக்கம் செய்துவிட்டு உன்னை நிச்சயம் தாக்குவார்கள் என்றார்கள். பின்னர் அவர்கள் சென்று தனது மனைவியை அடித்து கொலை செய்துவிட்டதாக புகார் அளித்தார். புகாரளிக்க 11.30 – 12 மணியளவில் சென்றுள்ளார்கள். காவல்துறையினர் புகாரை உடனே பெறாமல் இழுத்தடித்துள்ளனர். ஒருவழியாக 12.30 மணியளவில் புகாரை ஏற்றுக்கொள்வதாக சொல்லி எழுதத்தொடங்கினர். 1.30 மணியளவில் காவல்துறை ஊருக்குள் சென்றது. 3.30 வரை என்னதான் செய்து கொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை. 3.30 மணிக்கு உடலை எடுத்து சென்றார்கள், எங்களிடம் கொடுக்க மறுத்தார்கள், மறித்தார்கள், எரித்துவிட்டார்கள் என்று சொல்கின்றனர்.

அந்த பெண் தூக்கு போட்டு கொண்டதாக நினைக்கிறீர்களா என்ன நினைக்கிறீர்கள் என்றபோது:

இல்லை அவரை தூங்கவைத்து தலகாணி வைத்து அழுத்தி கொன்று தூக்கிலிட்டிருக்கிறார்கள். தானாக தூக்கு போட்டுக்கொள்ளும் அளவுக்கு அவள் இல்லை. அவள் வீட்டை விட்டு ஓடிவிடுவாள் என்று தெரிந்துகொண்டதால், திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி, திட்டமிட்டு கொன்றிருக்கிறார்கள் என்றார்.

கோகிலா ஏன் வீட்டை விட்டு வர சம்மதிக்கவில்லை என்றோம்:

இல்லை பெற்றோர் சம்மதத்துடன் கௌரவமாக திருமணம் செய்து ஊரில் வாழவேண்டும், ஒடிப்போய்விட்டால் அப்பா தற்கொலை செய்து கொள்வார் வேண்டாம் என்று தடுத்துவந்தார். நெருக்கடிகள் அதிகமாக 2010 ஜனவரி மாதம் அவர்கள் இரகசியமாகப் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்கள். எங்களுக்கு எதுவும் தெரியாது. இராமமூர்த்தி தம்பியை பேச அழைத்தபோதுதான் எங்களுக்கு விசயம் தெரியும். சாதி வேற்றுமை காரணமாக சேர்ந்து வாழ விடமாட்டார்கள் என்பதால்தான் அவர்கள் மறைத்து வந்தனர்.

அவர்கள் காதலித்தது ஊருக்கே தெரியுமே அப்போது யாரும் தடுக்கவில்லையே என்றபோது:

இல்லை இல்லை, கோகிலாவின் சித்தப்பா தனசேகர் ஒருமுறை தம்பியை கூப்பிட்டு அடித்திருக்கிறார். அதன் பிறகு தம்பி ஒதுங்கி இருந்தார். கோகிலாதான் அவரை துரத்தி துரத்தி காதலித்தார். இப்போது எங்கள் சித்தப்பாவையும் அடித்தவர் தனசேகர் தான்.

இதில் இராமமூர்த்தியின் பங்கு என்னவாக கருதுகிறீர்கள் என்று கேட்டபோது:

என் தம்பியை அழைத்துப் பேசும்போது எனது மாமா (நாகராஜுக்காக) நான் எது வேண்டுமானாலும் செய்வேன் என்றிருக்கிறார், தப்பா நினைக்காதே, மாமன் மச்சான் என்றெல்லாம் பார்க்கமாட்டேன். கொலையை செய்வதிலும், கொலையை மறைப்பதற்கும் அவருக்கு முக்கிய பங்கிருக்கிறது. ஒருகட்டத்தில் நாகராஜுக்கு பகை இருந்தது, பின்னர் சேர்ந்து கொண்டார். நேரம் போல் மாறிவிடுவார். அவருக்கு சாதிவெறி உள்ளது.

காதலித்தபோது தடுக்காதவர் இப்போது ஏன் இப்படிச் செய்கிறார் என்றதற்கு, இதை அரசியல் ரீதியாக கொண்டு சென்று அடுத்த பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெறுவதற்கு திட்டமிடுகிறார். அவரை கணிப்பது யாராலும் இயலாத காரியம் என்றார். கூட இருக்கும் ரமேஷுக்குத்தான் தெரியும்.

நீங்கள் தமிழ்குடிக்கு (விடுத்லை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்) ஓட்டு போட்டதால் அவர் வஞ்சம் தீர்க்கிறார் என்று கருதுகிறீர்களா என்றதற்கு ஆம் என்றார்.

தமிழ்குடி தேர்தலில் செயித்தபின்னர் இராமமூர்த்தி அவரை அடித்திருக்கிறார். ஒரே சாதியானாலும் அவர்களுக்குள் பகை இருக்கிறது. அதற்கும் சேர்த்து இப்போது அரசியல் செய்கிறார் என்றார்.

உள்ளூரில் அருந்ததியருக்கும், பறையருக்கும் பிரச்சனை இருக்கிறதா என்றோம். ஆம்! அவர்கள் எங்களை எந்த நேரத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றார். பெரும் பாகுபாடு ஏதும் பாராட்ட மாட்டார்கள், ஆனால் பெறும் அன்பும் பாராட்டமாட்டார்கள். விலகியே இருப்பார்கள். நாங்களும் ஒதுங்கியே இருப்போம். பள்ளிநேலியனூரில் எங்கள் தெருவில் அந்த அளவுக்கு கிடையாது, ஆனால் கோகிலா இருக்கும் தெருவில் சாதி வெறி பயங்கரமாக இருக்கிறது என்றார்.

உள்ளூரில் நாகராஜை நிறைய பேருக்கு பிடிக்காது ஏனென்றால் அதிக வட்டிக்கு விட்டு காசு பார்ப்பார், ஆனால் அவருக்கு பயந்து கொண்டு யாரும் உண்மை சொல்ல மாட்டார்கள். மூன்று மாதம் கழித்து உண்மை மெல்ல வெளிவரும் என்றார்.

7. பெயர் சொல்ல விரும்பாத நபர்:

நாகராஜன் சாதி பார்த்ததால் கோகிலாவை கார்த்திகேயனுக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்தார். கோகிலாவை அடித்து துன்புறுத்தியுள்ளார்கள். 10.11.12 அன்று மாலை 7 மணியளவில் கோகிலாஅய்யோ அடிக்குறாங்களே, காப்பாத்துங்க என்று அலறிக்கொண்டே சாலையில் ஓடிவந்திருக்கிராள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் ஏன் பெண்ணை இப்படி அடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, எங்கள் பெண்ணை நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம் உங்கள் வேலையைப் பாருங்கள், இது எங்கள் குடும்பப் பிரச்சனை என்று கோகிலா அம்மா சொல்லவே எல்லோரும் கலைந்து சென்றுவிட்டனர்.

அடுத்தநாள் அதிகாலை கோகிலா இறந்துவிட்டதாகச் சொல்கின்றனர். தூக்கு மாட்டிய நிலையில் அவள் உடலை யாருமே காணவில்லை. கண்கள் மட்டுமே தெரியும் வண்ணம் முழுவதும் மறைத்தபடி உடல் கிடத்தப்பட்டிருக்கிறது. காலை 10 மணியளவில் ஊராட்சித் தலைவர் தமிழ்குடி என்னவென்று விசாரிக்கச் சென்றபோது கோகிலாவின் பெற்றோர் அவரை மோசமாக திட்டியுள்ளனர் என்றார்.

11.11.12 அன்று இரவு 12 மணியளவில் இராமமூர்த்தி கோகிலாவின் வீட்டிலிருந்து வெளியே வந்ததாக சிலர் தெரிவிக்கின்றனர் என்றார்.



8.  கோகிலாவின் தோழி தொலைபேசி வழியாக:

நாங்கள் இருவரும் ஒன்றாக வேலை பார்த்து வந்தோம், அந்த நிறுவனம் இழுத்து முடப்பட்ட பின்னர் தொடர்பில்லாமல் இருந்தோம். எப்போதேனும் ஒருமுறை தான் பேசுவோம். கோகிலாவும் கார்த்திகேயனும் சிறு வயது முதலே காதலித்து வந்தனர். திடீரென்று ஒருநாள் திருமணம் செய்து கொண்டதாக புகைப்படங்களைக் காட்டினாள் கோகிலா. அவள் இறப்பதற்கு ஒருவாரம் முன்பு வீட்டில் விசயம் தெரிந்துவிட்டதால் கொடுமைபடுத்துகிறார்கள் என்று மற்றொரு தோழியிடம் கூறியிருக்கிறாள். ஒருவாரமாக வேலைக்கு வராததால், அந்த தோழியின் அப்பா கோகிலாவின் அப்பாவைத் தொடர்பு கொண்டு என்ன ஆச்சு ஏன் பொண்ணு வேலைக்கு வரவில்லை என்று கேட்டதற்கு, அவளுக்கு உடம்பு சரியில்லை என்றிருக்கிறார்கள். ஆனால் கோகிலாவை அடித்து துன்புறுத்தி அவளது தாய்மாமா வீட்டில் கொண்டுபோய் விட்டிருக்கின்றனர். அதன் பிறகும் அவள் மனம் மாறவில்லை என்பதால் அவளை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர். 10.11.12 அன்று சனிக்கிழமை மதியம் அந்த தோழி தொலைபேசியில்  தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருந்தபோது இதற்கிடையில் அறைக்குள் வந்த கோகிலாவின் அம்மா அவளை கொடூரமாக அடித்திருக்கிறார், நான் ஏன் சாக வேண்டும் வாழ்ந்தால் அவனோடு தான் வாழ்வேன் என்று கதறியிருக்கிறாள். பின்னர் அன்று மாலை தனது தந்தை திருமணத்திற்கு சம்மதித்து விட்டதாகவும், கார்த்திகேயன் நாளை பெண் கேட்டு வரப்போவதாகவும் தெரிவித்திருக்கிறாள். பின்னர் அதிகாலை 2.30 மணியளவில் அவள் இறந்து விட்டதாக தகவல் வந்தது. தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவள் கோழை இல்லை. எங்களுக்கெல்லாம் தைரியம்  சொல்லக்கூடியவள். அவளை இழந்து நாங்கள் தவிக்கிறோம். இருவரும் ஒருவருக்கொருவர் உயிருக்குயிராக நேசித்தனர். கார்த்திகேயன் அவளை இழந்து இப்போது கஷ்டப்படுகிறார் என்றார்.

9.  கண்டமங்கலம் காவல்நிலையம் – இன்ஸ்பெக்டர் சரவணன்:

11.11.2012 அன்று மதியம் 2.30 மணியளவில் கார்த்திகேயன் என்பவர் தனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளிக்க வந்தார். தாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டு தனித்தனியே வாழ்ந்ததாகவும் ஒரு கட்டத்தில் அது பெண் வீட்டில் தெரிந்து அதை கடுமையாக எதிர்த்ததாகவும், 10.11.12 அன்று மாலை தனது தந்தை திருமணம் செய்துவைக்க சம்மதித்து விட்டார், பெண் பார்க்க வா என்று கோகிலா சொன்னதாகவும், இரவு பத்து மணி வரை சந்தோசமாக தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்துவிட்டு உறங்கச் சென்றுவிட்டதாகவும். 11.11.12 அன்று அதிகாலை 2.30 மணியளவில் கோகிலா இறந்துவிட்டதாக தகவல் வந்தது இந்த சாவில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று புகார் அளித்தார். எஃப்.ஐ.ஆர் போடும்போதே நான் எஸ்.ஐ மற்றும் சில ஏட்டுகளை சம்பவ இடத்திற்கு அனுப்பினேன். ஊர் கூடி அவர்களை உள்ளே விட மறுத்தது. நான் கிளம்பிச் செல்லும் முன் அவர்கள் பிணத்தை எரித்து விட்டனர் என்றார்.

போஸ்ட்மார்டத்திற்கு காவலரிடம் உடலைக் கொடுக்காதது, பணி செய்யவிடாமல் தடுத்தது ஆகியவை ‘offense’ ஆச்சே அதற்கு நீங்கள் ஏதும் வழக்கு போடவில்லையா என்றோம். சற்று தயங்கி, இல்லை உடலைக் கைப்பற்றும் அதிகாரம் இன்ஸ்பெக்டருக்குத் தான் உள்ளது, ஆனால் நான் செல்வதற்குள் எரித்து விட்டார்கள். அதனால்தான் தடையங்களை மறைத்ததற்காக 201 போட்டிருக்கிறோம் என்றார். அதற்கு முன் 174 மட்டும் தான் போட்டிருந்தோம் ஆர்.டி.ஓ விசாரனைக்கு சிபாரிசு செய்திருந்தோம்.

மேலும் கார்த்திகேயன் 4 மணிக்கு கோகிலாவோடு தொலைபேசியில் பேசியபோது, அவரது தாயார் கடுமையாக கோகிலாவைத் தாக்கியதும், நான் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும், நான் ஏன் சாக வேண்டும், அவன் என்ன உங்களிடம் பணம் கேட்டு நிற்கிறானா. வாழ்ந்தால் அவனோடுதான் வாழ்வேன் என்று கூறியதும் பதிவாகியிருக்கிறது. இதன் அடிப்படையில் 174ஐ மாற்றி தற்கொலையை மறைத்த வழக்கில் 306ம் போட்டுள்ளோம் என்றார்.

யார் யார் மேல் வழக்கு போட்டிருக்கிறீர்கள் என்றதற்கு கோகிலாவின் பெற்றோர் மற்றும் இராமமூர்த்தி, ரமேஷ் மீது என்றார்.

கைது செய்வீர்களா என்று கேட்டதற்கு. கோகிலாவின் பெற்றோர் முன் ஜாமீன் வழக்கு விசாரனையில் உள்ளது. மற்ற இருவரை நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம் என்றார்.

வி.ஏ.ஓ வட்டாரத்தில் விசாரித்தவரை கோகிலா தற்கொலைதான் செய்து கொண்டதாகச் சொல்கிறார்கள் என்றார்.

கதவு உட்பக்கம் தாளிடப்பட்டிருந்ததா, வெளியிலா என்றோம், தெரியாது என்றார். 2.30 மணி அளவில் தனியாகத் தூங்கிக் கொடிருக்கும் பெண்ணின் அறையைத் திறந்து அவள் தூக்கில் தொங்கிவிட்டாளா என்று பார்ப்பதற்காக அவள் பெற்றோர் கதவைத் திறந்திருப்பார்களா என்று கேட்டோம்…தெரியவில்லை என்றார்.





10.  கார்த்திகேயன் (வயது 27), கோகிலாவின் கணவர்:

கடந்த 9 ஒன்பது வருடங்களாக காதிலித்து வந்தோம். ஒரே வகுப்பில் படித்ததால் சிறுவயதிலிருந்தே காதல். இருவர் வீட்டிலும் சொல்லாமல் இரகசியம் காத்தோம். வீட்டில் பெரியவள் ஓடிப்போய் திருமணம் செய்தால் தவறாகிவிடும், அப்பா உயிர் விட்டுவிடுவார், பெற்றோர் சம்மதம் பெற்று திருமணம் செய்து கொள்வோம் என்றதால் நானும் சரி என்றேன்.  நான் தான் தினமும் திரிபுவனத்திலிருந்து வேலைக்கு அழைத்து சென்று விடுவேன், கூட்டி வருவேன்.

ஒரு மாதத்திற்கு முன்னர் எங்கள் பதிவுத் திருமண விசயம் எவர் மூலமோ கோகிலாவின் அப்பா தெரிந்துகொண்டார். அந்த ஒரு மாதத்திலேயே 4 மாப்பிள்ளைகள் பெண் பார்க்க வந்துவிட்டனர். எவரையும் தனக்கு பிடிக்கவில்லை என்று கோகிலா சொல்லிவந்தார். அதற்கு காரணம் கேட்டபோது கோகிலா உண்மையை சொல்லிவிட்டார். அதற்கு அவரது தந்தையார், அவன் என்ன சாதி, நம்ம என்ன சாதி எப்படி திருமணம் செய்து வைக்க முடியும் என்று கேட்டிருக்கிறார். அவன் யாராக இருந்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை நான் அவனோடுதான் வாழ்வேன் என்று கோகிலா உறுதியாக சொல்லியிருக்கிறாள். அதன் பிறகு ஒரு மூன்று நாள் கோகிலாவை வீட்டில் வைத்தே மிகவும் சித்திரவதை செய்துள்ளனர். அக்கம் பக்கம் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக கொத்தாம்பாக்கத்தில் உள்ள தாய்மாமன் வீட்டில் கொண்டு விட்டனர். அங்கும் வைத்து அடித்து துன்புறுத்தி சொந்தத்தில் உள்ள பையனை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.  அதற்கு அவர் மறுக்கவே, சரி அவனுக்கே திருமணம் செய்து தருகிறோம் என்று சொல்லி அழைத்துவருமாறு அந்த வீட்டாருக்கு போன் வரவும், 9.11.12 அன்று இரவு 8.30 மணியளவில் தாய்மாமா கோகிலாவை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர். அப்போதே எனக்கு தகவல் சொல்லிவிட்டார் கோகிலா.

இரவு முழுக்க அவளை என்ன செய்யப்போகிறாய் என்று அவரது அப்பா, அம்மா கேட்டதற்கு, அவனை திருமணம் செய்து வைப்பதாகச் சொல்லித்தானே அழைத்து வந்தீர்கள். இப்போது மீண்டும் பழைய பேச்சை பேசுகிறீர்களே என்றதற்கு, கோகிலாவின் தந்தை அவரை மீண்டும் அடித்திருக்கிறார். பின்னர் எனக்கு ஃபோன் செய்து கோகிலா இதைச் சொன்னார். இரவு 1 மணி வரை இருந்த தாய் மாமா பின்னர் சென்றுவிட்டார். 10.11.12 அன்று காலை 10 மணிக்கு இராமமூர்த்தி என்னிடம் பேசவேண்டும் என்று நேரில் வரச்சொன்னார்.

அந்தப் பெண் யார் சொன்னாலும் கேட்கமாட்டேன் என்கிறாள். அவளை வேறு யாராவது ஒரு பையனை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி நீயே சொல்லு என்று இராமமூர்த்தி கூறினார். கோகிலாவின் அப்பா உன்னிடம் பேசுமாறு என்னைப் பணிந்தார். அதற்கு நான் மறுத்துவிட்டேன், நான் அப்படிச் சொன்னால் அவள் உயிரையே விட்டுவிடுவாள், வாழ்ந்தாள் அவளோடுதான் வாழ்வேன் என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்றேன்.

நீங்கள் பதிவுத் திருமணம் செய்து கொண்ட விசயத்தை அவரிடம் சொல்லவில்லையா என்றோம். இல்லை சொல்லவில்லை எவரிடத்தும் நான் அதைச் சொல்வதில்லை, ஆனால் அவருக்கு விசயம் தெரியாமல் இருந்திருக்காது என்றார்.

அதற்கு இராமமூர்த்தி, சரி இந்த விசயத்தை நான் கோகிலாவின் தந்தையிடம் கூறுகிறேன், ஆனால் அவர் என்ன செய்யச் சொன்னாலும் நான் செய்யத் தயங்கமாட்டேன், மாமன் மச்சான் என்று கூடப் பார்க்க மாட்டேன், அவருக்காக எதுவும் செய்யத் தயங்கமாட்டேன் என்றார். நான் கிளம்பி சேலைக்குச் சென்றுவிட்டேன் என்றார் கார்த்திகேயன்.

நீங்கள் காதலித்துவந்தபோது உங்களை யாரும் கண்டிக்கவில்லையா என்றோம்:

ஒருமுறை கோகிலாவின் சித்தப்பா தனசேகர் ஒருமுறை எங்களைக் கோவிலில் பார்த்துவிட்டார். உன்னை எத்தனை தடவை அடித்தாலும் நீ அடங்கமாட்டேங்குறாய் உன்னை ஏதாவது செய்தால் தான் சரிவரும், என் அண்ணன் மகளை ஏன் காதலிக்கிறாய் என்று சொல்லி மிகவும் மோசமாகத் திட்டினார்.

முன்னர் எப்போது அடித்திருக்கிறார் என்றோம், அவர் நேரடியாக வந்து அடிக்கவில்லை திருபுவனையில் ஆட்களை வைத்து அடித்தார்கள். இந்த தொடர் மிரட்டலின் காரணமாகத்தான் பிரித்துவிடுவார்களோ என்று அஞ்சி பதிவுத் திருமணம் செய்து கொண்டோம்.

தாய்மாமன் கிளம்பிய பின்னர் 10.11.12 அன்று என்ன நடந்தது என்றோம்.

அன்று காலை 11 மணியளவில் எனக்கு ஃபோன் வந்தது. என்னை கயிறு மாட்டி தூக்கில் தொங்கச் சொல்கிறார்கள் என்று கோகிலா சொன்னார். உடனே புறப்பட்டு அவர் வீடு வழியாக சென்று பார்த்தபோது வீட்டிற்கு வெளியே பூட்டு போடப்பட்டிருந்தது. போன் செய்து கேட்டேன், என்னை உள்ளே வைத்து பூட்டி வைத்திருக்கிறார்கள், சாகச் சொல்லி அடிக்கிறார்கள், புடவையை மாட்டி விட்டு தூக்கு மாட்டிக் கொள்ளச் சொல்கிறார்கள் என்றார். அதுபோல் ஏது செய்துவிடாதே என்று நான் சொன்னேன். கோகிலா இல்லை நான் அப்படிச் செய்ய மாட்டேன், உன்னுடன் தான் வாழ்வேன், என்னை என்ன அடித்தாலும் நான் நாளை வீட்டை விட்டு வந்துவிடுகிறேன் நாம் எங்காவது சென்று விடுவோம் என்று உறுதியாகக் கூறினார். நான் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது அவர் அப்பாஅம்மா கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார்கள். அவளைத் தூக்கு மாட்டி தொங்கவிட்டுவிட்டு வெளியில் தாப்பால் போட்டுவிட்டு வெளியில் வந்துவிடு…என்று சொல்லி அம்மாவை உள்ளே அனுப்பிவிட்டு அவர் அப்பா வெளியில் சென்று வருகிறேன் என்று அவர் அப்பா சொன்னார் நான் லைனில் இருந்ததால் எனக்கு அது கேட்டது ஆனால் அப்போது நான் பதிவு செய்யவில்லை. சாகச் சொல்லி அடித்துக் கொண்டிருந்ததால், உடனே வீட்டிற்கு சென்று பதிவுத் திருமணம் செய்த சான்றிதழ்களை சேகரித்துக் கொண்டு நண்பருடன் கிளம்ப்பிக் கொண்டிருந்தேன்.

மீண்டும் கோகிலாவிற்கு ஃபோன் செய்து விசயத்தை சொல்லிக் கொண்டிருந்தேன் அப்போது மீண்டும் உள்ளே வந்து தூக்கு மாட்டி சாகச் சொல்லி அடித்துக் கொண்டிருந்தார்கள். வெளியே தாழ் போட்டு சென்றுவிட்டார்கள்.  நான் எஸ்.பி அலுவலகம் சென்று புகார் கொடுக்கப்போகிறேன், இதற்கு மேல் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது கோகிலாவிடம் போனில் கூறிவிட்டு சென்று கொண்டிருக்கையில், உடனே எனக்கு ஃபோனில் அழைப்பு வந்தது. அம்மா அப்பா மேல் புகாரெல்லாம் அளிக்க வேண்டாம், நாம் தான் நாளை கிளம்பிவிடுவோமே, புகாரெல்லாம் வேண்டாம் என்றார் கோகிலா. அவரது பேச்சைக் கேட்டு நான் வீடு திரும்பிவிட்டேன்.

மீண்டும் மாலை 4 மணி அளவில் கோகிலாவை மிகவும் அதிகமாக அடித்து டார்ச்சர் செய்கின்றனர். உன்னை அடித்துக் கொன்றாலும் கொல்வோமே தவிர, அவனுக்கு திருமணம் செய்து கொடுக்க மாட்டோம் என்றார். அப்போதுதான் நான் அந்த பேச்சைப் பதிவு செய்தேன்.

பின்னர் ஒரு மாலை 6.30 மணியளவில் கோகிலா அழைப்பு வந்தது, அப்பா சம்மதித்து விட்டார், நாளை பெண் பார்க்க வரச்சொன்னார் என்று கோகிலா சொன்னார். நான் (கோகிலா) நம்பமாட்டேன் என்றதற்கு, இல்லை அப்பா சொன்னர் உன்னிடம்தான் ஃபோன் இருக்கிறதே நீயே தொடர்பு கொண்டு அவனிடம் சொல் என்றார் என்று கோகிலா சொன்னார். உடனே எங்கள் நண்பர்களையெல்லாம் தொடர்பு கொண்டு விசயத்தை சொல்லி அழைப்பு விடுத்தேன். பிறகு 8.30 மணி முதல் 10 மணி வரை மிகவும் சந்தோசமாகப் ஃபோனில் பேசிக்கொண்டிருந்தோம். காலையில் அப்பா அம்மாவை அழைத்துக் கொண்டு வந்துவிடு, காலை எனக்கு நிறைய வேலை இருக்கிறது, நான் தான் எழுந்து எல்லா வேலைகளையும் செய்யவேண்டும் என்றதால், நானும் சரி என்று சொல்லி உறங்கச் சென்றேன்.

இரவு 12 மணியளவில் எனக்கு திடீரென்று உடல் பதறியது, ஏதோ விபரதீமாக தோன்றியதால் உடனே எழுந்து அவர் செல்லுக்கு ஃபோன் செய்தேன். சுவிச் ஆஃப் என்று வந்தது. வழக்கமாக செல் சார்ஜ் போடும்போது அதை அனைத்துவைத்துவிடுவார், அப்படிதான் இருக்கும் என்று நினைத்து நானும் தூங்கச் சென்று விட்டேன். 2.30 மணியளவில் நண்பர்கள் தகவல் சொல்ல ஃபோன் செய்திருக்கிறார்கள், நான் நல்ல உறக்கத்தில் இருந்திருக்கிறேன், கேட்கவில்லை. நான் எடுக்காததால், வீட்டிற்கு வந்து தகவல் சொல்லியிருக்கின்றனர். அந்தப் பெண் இறந்துவிட்டாள், அவன் ஏதாவது செய்து கொள்ளப் போகிறான் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். 2.45 / 3 மணியளவில் என்னை எழுப்பி, பக்கத்து ஊரில் இருக்கும் அண்னனுக்குப் பிரச்சனை நீ உடனே கிளம்பி அங்கே போ என்றார்கள். நான் சட்டைய மாட்டிக் கொண்டு வண்டிஎடுக்க சென்றேன், செல்லை மறந்துவிட்டோமே என்று மீண்டும் வீட்டிற்குள் சென்று செல்லை எடுத்தபோது நண்பர்களின் (பறையர் சாதியைச் சேர்ந்தவர்கள்) மிஸ்டு கால் நிறைய இருந்தது. தொடர்பு கொண்டு என்னவென்று விசாரித்தபோது கோகிலா இறந்துவிட்டாள் என்றார்கள். என்னால் நம்பமுடியவில்லை. அங்கு சென்று பார்ப்போமே என்று கோகிலா வீட்டுத் தெரு அருகில் சென்றேன். பெண்களின் அழுகைக் குரல் கேட்டது, அதற்கு மேல் என்னால் தாங்கமுடியவில்லை, அருகில் ரைல்வே கேட் இருந்தது, அதை நோக்கி ஓடினேன், அண்ணன் எல்லோரும் சேர்ந்து தடுத்து, கண்டமங்கலத்தில் கொண்டு சென்று விட்டனர்.

விசயம் அறிந்து நண்பர்கள் எல்லோரும் வந்தனர். 12.11.12 அன்று காலை 7.30 மணியளவில் நாங்கள் 20 பேர் சேர்ந்து எங்கள் வீட்டிற்கு சென்றோம். உடலை பார்க்க வேண்டும் என்றேன். கோகிலா வீட்டருகில் இருக்கும் நண்பர்களிடம் ஃபோன் செய்து விசாரித்தேன். நீ இங்கு வந்துவிடாதே உன்னை அடித்தே கொன்று விடுவார்கள் என்று சொன்னார்கள். நண்பர்கள் மட்டும் சென்று பார்த்தனர். அங்கிருப்பவர்களிடம் கேட்டதற்கு இரவு 11 மணியளவில் என்னை அடிக்கிறார்கள், சாகடிக்கப்பார்க்கிறார்கள் என்று கதறிக் கொண்டே வீட்டிற்கு வெளியே ஓடிவந்தாள், நாங்கள் சென்று என்னவென்று கேட்டதற்கு, பெண்ணின் அம்மா, இது எங்கள் வீட்டு விசயம் நீங்கள் யாரும் தலையிடாதீர்கள் என்று சொல்லியிருக்கிறார். அவளது உடல் கண்களைத் தவிர முழுவதும் மூடியிருந்திருக்கிறது. இடது கண்களின் கீழ் காயம் இருந்தது, வலது கண்களின் மேல் காயம் இருந்தது என்றனர். நான் சென்று பார்க்க முடியவில்லை.

அதன் பின்னர் காலை 11 மணிக்கு புகார் அளிக்க கண்டமங்கலம் காவல் நிலையம் சென்றோம். அவர்கள் புகாரைப் பெறவே இல்லை. இண்ஸ்பெக்டர், எஸ்.ஐ இருவரும் இல்லை, 2 ஏட்டுகள் மட்டும் இருந்தனர். நாங்கள் இந்தப் புகாரைப் பெற முடியாது என்று சொல்லி தவிர்த்து வந்தனர். நாங்கள் 20 பேர் கெஞ்சிக்கொண்டிருந்தோம். ஒரு மணி நேரம் அலைகழித்து 12.30 மணிக்கு புகாரைப் பெற்றனர். பின்னர் எஸ்.ஐ சேதுராமன் வந்தார், புகாரை வாங்கிப் பார்த்தவுடனே அவர் சம்பவ இடத்திற்கு முதலில் சென்றார். ஒன்றரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். பின்னர் இன்ஸ்பெக்டர் வந்தார், ஒரு அறைமணி நேரத்தில் அவரும் கிளம்பிச் சென்றார். அப்போது 1.30 மணி இருக்கும். புகார் வந்திருக்கிறது போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டும் என்றதற்கு கோகிலாவின் பெற்றோர் உடலைத் தர மறுத்துள்ளனர். அதனால் அதிரடிப்படையை வரவழைக்க ஏற்பாடு செய்துள்ளார் இன்ஸ்பெக்டர்.  அதற்குள் பாடையைக் கூட முழுமையாகக் கட்டாமல் எஸ்.ஐ யைக்கூட அடித்து தள்ளிவிட்டு, பிணத்தை உடனடியாக எடுத்துச் சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டனர். எங்களால் அவர்களைத் தடுக்கவே முடியவில்லை என்று இண்ஸ்பெக்டர் சொன்னதாக கார்த்திகேயன் கூறினார்.

இன்ஸ்பெக்டர் ஊருக்குள் சென்றாரா என்று கேட்டபோது, வழக்குறைஞர் லூசி சொன்னது:

எஸ்.ஐ தள்ளி விட்டனர், ஸ்குவாட் போகும்போது பெண்களை விட்டு மறித்துள்ளனர். இன்ஸ்பெக்டர் எங்கிருந்தார் என்றபோது இளையரசன் என்பவர் குறுக்கிட்டு, இன்ஸ்பெக்டரும் அங்குதான் இருந்தார். சம்பவ இடத்தில் இருந்த 5 போலீசில் அவரும் ஒருவர்.  பின்னர் தான் ஸ்குவாட் சென்றது என்றார். தங்களையும் மீறி அவர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டார்கள் என்று என்னிடம் சொன்னதே இன்ஸ்பெக்டர் தான் என்றார்.

உடனே கார்த்திகேயன் குறுக்கிட்டார். அந்த ஊர் பஞ்சாயத்து தலைவர் தமிழ்குடி சம்பவ இடத்தில் அப்போது இருந்திருக்கிறார். அவரிடம் இன்ஸ்பெக்டர் ஏம்பா நீ ஊர் பஞ்சாயத்து தலைவர் நீயாவது அவர்களிடம் சொல்லக் கூடாதா என்று இன்ஸ்பெக்டர் கேட்டிருக்கிறார்.

தமிழ்குடியை (ஜனார்தனன் என்கிற தமிழ் குடி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் மாவட்டத் தலைவர், ஊராட்சி மன்றத் தலைவர், வழக்குறைஞர்) பேச அனுமதிக்காமல் இது எங்கள் குடும்ப விசயம் நீங்கள் தலையிட வேண்டாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள் என்றார் இளையரசன்.

இன்ஸ்பெக்டர் எங்களிடம் சொன்ன தகவலை வைத்துத்தான் எஃப்.ஐ.ஆர் காபியே நாங்கள் இம்ப்ளீட் செய்தோம். எங்களையும் மீறி பெட்ரோல் ஊற்றி எரிக்கிறார்கள், எங்களைத் தடுக்கீறார்கள் என்றால் இது கொலைதான் சந்தேகமில்லை, ஆதலால் தடையங்களை மறைக்கிறார்கள் என்கிற அடிப்படையிலும் வழக்கு பதிவு செய்யலாம் என்று காவல் துறையினர் சிலர் கூறினார்.

பிணம் பாதி எரிந்து கொண்டிருக்கையிலேயே, அவர்கள் திரும்பிவிடுகின்றனர். என்ன நடந்தது என்று கேட்டபோது, அது தற்கொலைதான் என்று இன்ஸ்பெக்டர் வலியுறுத்தத் தொடங்கினார். அதற்கு அழுத்தம் கொடுத்தார் என்று இளையரசன் தெரிவித்தார்.

11. வழக்குரைஞர் லூசி கூறியது:

உங்களை சந்திக்கவந்த ஊர் மக்களை நீங்கள் சந்திக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறதே என்றோம்:

ஆம், பொதுவாக வழக்கு நடந்துகொண்டிருக்கும்போது எதிர் தரப்பினரை சந்திக்க வேண்டிய அவசியமில்லை. நாங்கள் மனித உரிமை இயக்கமாக செயல்பட்டு வருகிறோம். வழக்கமாக எஸ்.சி, எஸ்.டி வழக்குகள், பெண்கள் பிரச்சனைகளைத் தொடர்ந்து எடுத்து போராடி வருகிறோம். வழக்குறைஞர்களுக்கெதிராக செயல்படக்கூடாது என்றெல்லாம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரீட்டா மேரி வழக்கு எடுத்தது உட்பட அவர்களுக்கு என் மேல் கோபம்.

பலம் உள்ள எதிர் தரப்பினர் பெரும்பாலும் மிரட்டவும், சமரசம் செய்யவும் பேச வருவார்கள் அதனால் நாங்கள் அவர்களை சந்திப்பதில்லை. வழக்கு மன்றத்தில் பார்ப்போம் என்று சொல்லி விடுவேன்.

கோதண்டபாணி என்ற வழக்குறைஞர், கோகிலாவின் பெரியப்பா அவர் என்னை பார்த்து இது எங்கள் குடும்ப வழக்கு விலகிக்கொள் என்று சொன்னதற்கு நான் மறுத்துவிட்டேன். அதைத் தொடர்ந்து நான் நீதிமன்ற வளாகத்தில் வேலை பார்க்க செல்லும் போதெல்லாம் கோதண்டபாணி, பவாணி என்ற பெண் வழக்குரைஞரையும் இணைத்துக் கொண்டு மிகவும் ஆபாசமாகவும், ஆணாதிக்க மனநிலையோடும் அவதூறாக பேசியதாக சக வழக்குறஞர்கள் தெரிவித்தனர். என்னை பாரிலிருந்தே வெளியேற்ற வேண்டும் என்றும் பேச்சு நடந்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து நான் மூத்த வழக்குரைஞரிடம் முறையிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது கோதண்டபாணி, ஒரு கும்பலோடு வந்து அவதூறாக பேசியபடி என்னை அடிப்பது போல் பாய்ந்தார். போய்யா என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டு என் கைப்பையை எடுத்துக் கொண்டு புறப்படச் சென்றேன்..அப்போதும் துரத்திக் கொண்டே என்னை அடிக்க வந்தார். இளையரசன் அப்போது என்னோடு தான் இருந்தார், ஆனால் அவராலும் ஏதும் செய்ய முடியவில்லை. வழக்குரைஞர் என்றால் கோர்ட்டில் பேச வேண்டும், ரோட்டில் பேசக்கூடாது என்று சொல்லி விட்டு சென்றேன். அடுத்த நாள் எங்கள் இயக்கத் தலைவர் ஜோஸிடம் கூறினேன். முறைப்படி புகார் அளிக்கச் சொன்னார்கள்.

கார்த்திகேயனுக்கு ஏன் பாதுகாப்பளிக்கிறாய், ஏன் இதில் தலையிடுகிறாய் விலகிவிடு என்பதே அவர்களது வாதம்…இந்த காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நான் கோதண்டபாணியை சாதிப் பெயர் சொல்லி திட்டியதாக என் மேல் எஸ்.சி. எஸ்.டி வழக்கு தொடர்ந்தார்கள்.  ஆனால், என் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என்னுடைய மற்ற தோழிகளையும் ஆபாசமாக பவாணி என்கிற வன்னியர் சாதியைச் சேர்ந்த வழக்குறைஞர் திட்டினார். எங்களுக்கு திருமணம் ஆகவில்லை என்பதை வைத்து ஆண்களோடு தொடர்புபடுத்தி, கொச்சையான பாலியல் சொற்களைச் சொல்லி ஆபாசமாக ஒன்றரை மணி நேரம் திட்டினார். பாருக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று சொன்ன போது, நான் நீதி மன்றத்திற்கெதிராக ஏதும் செயல்படவில்லை என்று சொல்லிச் சென்று விட்டேன்.

கோகிலா எப்படி மரணமடைந்தார் என்று கருதுகிறீர்கள் என்று கேட்டபோது, ஸ்ரீனிவாசன் என்ற அருந்ததியர் சாதியைச் சேர்ந்த ஒரு நியூஸ் தரகர் எங்கள் ஆலோசனைக் கூட்டங்களுக்கு வருவார். அவரிடமே கோகிலாவின் தந்தை தான் தான் பெண்ணை அடித்துக் கொன்றதாக ஒப்புக்கொண்டார். அதற்காக என்னை ஏன் தேவையில்லாமல் அசிங்கப்படுத்துகிறார்கள் என்று கேட்டிருக்கிறார். கார்த்திகேயனுக்கு திருமணம் செய்து வைப்பதாகச் சொல்லி ஏமாற்றி திட்டமிட்டு அவரை வரவழைத்து அவளை கொலை செய்திருக்கிறார்கள். கார்த்திகேயன் நண்பர்கள் உடலைப் பார்க்கச் சென்றபோது கோகிலாவின் கண்களின் கீழ், புருவத்தின் மேல் காயங்கள் பார்த்திருக்கிறார்கள். உடலை முழுவதுமாக மூடி வைத்திருக்கிறார்கள் என்றார்.

அப்போது கார்த்திகேயன், கோகிலாவின் கழுத்தில் தூக்கு மாட்டிக் கொண்டதற்கான எந்த தடயங்களும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது என்றார்.

தொடர்ந்த லூசி, ஊரில் உள்ளவர்கள் சொல்கிறார்கள் 11 மணியளவில் கோகிலா அலறிக் கொண்டு வெளியில் ஓடி வந்ததாகவும், 12 மணியளவில் முன்னாள் தலைவர் இராமமூர்த்தி கோகிலாவின் வீட்டிலிருந்து வெளியே சென்றதைப் பார்த்ததாகவும் கூறுகின்றனர்.

அப்போது வழக்குறைஞர் ஜோஸ் கூறியது:

தவறேதும் இல்லையென்றால் அவர்கள் ஏன் தடயங்களை மறைக்கிறார்கள். காவல்துறையினரே இந்த கேள்வி எழுப்புகிறார்கள்.

தொடர்ந்த லூசி:

11 மணிக்கு புகார் அளிக்க கார்த்திகேயன் தரப்பு சென்றுவிட்டது, 12.30 மணிக்கு புகாரை வாங்குகிறார்கள். அதன் பிறகு காவல்துறை சம்பவ இடத்தில்தான் இருந்தது. 3.30 மணிக்கு பிணம் எரிக்கப்பட்டிருக்கிறது. இடையில் என்ன நடந்தது என்பதே சந்தேகத்திற்குரியது. 

ஊரில் விசாரித்தபோது, வழக்குறைஞர்கள் சிலரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உடலைத் தர மறுத்துள்ளனர். வேறு இருவர் பெட்ரோல் வாங்கிக் கொண்டு வந்துள்ளனர். கோகிலாவின் தந்தை அதை ஊற்றி எரித்திருக்கிறார். அவர் கையில், மாமாவுக்கும் முகத்தில் காயம் இருக்கு.

பெண்களை வைத்து மறித்திருக்கிறார்கள், ஆனால் காவல்துறை நினைத்திருந்தால், எரியும் நிலையிலேயேகூட பிணத்தை மீட்டிருக்கலாம். அவர்கள் அதைச் செய்யவில்லை. அதிரடிப்படை 3 குழுக்களாக இறக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலரை கண்டமங்கலம் எல்லையிலேயே நிறுத்தி வைத்துள்ளனர், சிலர் மட்டும் தான் ஊருக்குள் சென்றிருப்பதாக சொல்லப்படுகிறது.  ஏன்? அ.தி.மு.க கவுன்சிலர் கண்ணா என்பவர் அந்த காவல்நிலையத்திற்கெதிராகத்தான் வசிக்கிறார். அவரை மீறி இங்கு எதுவும் நடக்காது. அதிரடிப்படையும் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டது சந்தேகத்தைக் கிளப்புகிறது என்றார்.

11.11.12 அன்று மாலை 4 மணியளவில் இன்ஸ்பெக்டர் சரவணன் என்னிடம் தொலைபேசியில் பேசினார், என்ன மேடம் உங்களுக்குத் தெரியாதா, இந்த வழக்கெல்லாம் எப்படி நிற்கும் என்றார். அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம், உடலைக் கொடுக்க மறுத்திருக்கிறார்கள், மறித்திருக்கிறார்கள் அதற்கு முதலில் எஃப்.ஐ.ஆர் போடுங்கள், ஃபாரன்சிக்கிற்கு உடனடியாகத் தகவல் தெரிவியுங்கள் என்று சொன்னேன் என்று லூசி தெரிவித்தார்.





எமது பார்வைகள், கேள்விகள், பரிந்துரைகள்:

1.  கோகிலா தைராய்ட் பிரச்சனையால்தான் இறந்தார் என்று அவரின் தந்தை நாகராஜன் 5.12.2012 தேதியிட்ட தமிழக அரசியல் இதழில் குறிப்பிட்டிருக்கிறார். கோகிலாவின் மாமா முருகனோ, அவர் மன உளைச்சல் தாங்காமல் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் என்கிறார். இக்குடும்பத்திற்கு உறவினரான முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இராமமூர்த்தி அது இயற்கை மரணம் என்கிறார். இப்படி குடும்ப உறவுகளே வெவ்வேறு தகவல்களைத் தருவது கவனத்திற்குறியது. ஆகவே கோகிலாவின் மரணத்தில் சந்தேகம் எழுகிறது.

2.  ஒருவேளை கோகிலா தற்கொலை செய்து கொண்டார் என்றிருந்தாலும், அதை காவல்துறையினருக்குச் சொல்லாமல் ஏன் மறைத்தார்கள். தடையங்களை ஏன் மறைத்தார்கள். உடலை போஸ்ட்மார்ட்டத்திற்கு தர மறுத்தது, மேலும் பெண்களை ஒன்று திரட்டி காவல்துறையினரை மறித்து, வழக்கத்திற்கு மாறாக பெட்ரோல் ஊற்றி எரித்தது ஆகிய செயல்கள் கூடுதல் சந்தேகத்தை எழுப்புகிறது.

3.  முன்னரே தெரிந்திருந்தால் சேர்த்துவைத்திருப்போம், காலையிலேயே கார்த்திகேயன் வந்து உடலைக் கேட்டிருந்தால்  தந்திருப்போம் என்று சொல்லும் அவர் மாமன் முருகனோ அல்லது கோகிலாவின் குடும்பத்தாரோ, கார்த்திகேயன், அதாவது கோகிலாவின் கணவருக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கவோ, கணவன் என்ற முறையில் சடங்குகள் செய்யவோ ஏன் அழைப்பு விடுக்கவில்லை. இரண்டு தெரு தள்ளி இருக்கும் அவர் வீட்டிற்கு சென்று கார்த்திகேயனையோ, அவரது பெற்றோரையோ எவரையும் அழைக்காமல், உடலைக் காட்டாமல் அவசர அவசரமாக ஏன் எரித்தார்கள்?

உடலை எரித்த பின்னர் ஒரு சம்பிரதாயமாகவேனும் சாம்பல் கணவனிடம் ஒப்படைக்கப்படவில்லை.

4.  சடங்கு, சம்பிரதாயம் என்று சொல்லி உடலைக் கொடுக்க மறுத்த அந்த தெரு அண்டைவீட்டார் ஏன் கணவன் வந்து முறைப்படி செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை.

5.  இயற்கை மரணமோ, தற்கொலையோ…. ஊர்தலைவர் இராமமூர்த்தி கார்த்திகேயன் தன்னோடு மிகவும் நெருக்கமாக இருந்ததாக ஒப்புக்கொள்கிறார், அந்த உறவின் அடிப்படையில் அவராவது கோகிலாவின் உடலை முறைப்படி கார்த்திகேயன் காண வழிசெய்திருக்க வேண்டும்.  செய்யவில்லை. அதுமட்டுமல்லாது, கோகிலா இறந்ததற்கு முந்தைய நாள் அவர் கார்த்திகேயனை கூப்பிட்டு மனம் மாறிவிடும்படி அறிவுறுத்தியிருக்கிறார், நாகராஜனுக்காக எதுவும் செய்ய தயங்க மாட்டேன் என்று அவர் சொன்னதும், மரணம் நிகழ்ந்திருக்கும் நள்ளிரவு 12 மணியளவில் அவர் கோகிலா வீட்டை விட்டு வெளியே சென்றதைப் பார்த்ததாக வரும் தகவல்களும் பெறும் சந்தேகத்தை எழுப்புகின்றன. ஆளும் கட்சியான அ.தி.மு.க பிரமுகராக இருப்பவருக்கு சட்டம் நன்றாக தெரிந்திருக்கும், அத்தோடு அவருக்கு காவல்துறையினரிடம் செல்வாக்கு இருந்திருக்கும் அப்படியிருக்க அவர் நினைத்திருந்தால் சடங்கு செய்ய, உடலை ஒரு முறை பார்க்க கார்த்திகேயனுக்கு உதவியிருக்க முடியும். அவர் அதைச் செய்யவில்லை என்பது அவர் மீதும் சந்தேகத்தை எழுப்புகிறது.

மேலும் கோகிலா தன்னை அடித்து துன்புறுத்துகிறார்கள் என்று அலறிக்கொண்டு இரவு 11 மணி அளிவில் வீட்டிற்கு வெளியே ஓடிவந்ததாக சொல்லப்படுகிறது. ஊர்மக்கள் என்ன பிரச்சனை என்று கேட்க, கோகிலா தாயார் இது எங்கள் குடும்ப பிரச்சனை என்று சொன்னதும் ஊர்மக்கள் ஒதுங்கிவிட்டிருக்கின்றனர்.  பின்னர் 12 மணி அளவில் இராமமூர்த்தி அந்த வீட்டை விட்டு வெளியில் சென்றதை பலரும் பார்த்துள்ளனர். இரவு 2.30 மணிக்கு கோகிலாவின் மரணம் குறித்து தகவல் தெரிவிக்கின்றனர். போஸ்ட்மார்ட்டம் செய்யாததால் கோகிலா எத்தனை மணிக்கு இறந்தார் என்பதை உறுதியாக அறியமுடியவில்லை. இரவு 11 முதல் 12 மணி வரை ஏதோ நடந்திருக்கிறது என்பதும் இராமமூர்த்திக்கும் அதில் தொடர்பிருக்கலாம் என்பதும் கார்த்திகேயன் குடும்பத்தார் மற்றும் ஊர்மக்கள் சிலரின் சந்தேகமாக இருக்கிறது. உடலைத் தரமறுத்தது இதற்கு கூடுதல் வலு சேர்க்கிறது.

மரணத்தில் சந்தேகம் என்று வந்தபின்னர் – கோகிலாவின் உறவினர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், ஆளும் கட்சி பிரமுகர் என்கிற செல்வாக்கில் இராமமூர்த்தி உடலை மீட்டு போஸ்ட்மார்டத்திற்கு கொடுக்க வழிவகை செய்திருக்கமுடியும்.

இப்போதைய ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் குடி மீது அவர் கடும் காழ்ப்புணர்ச்சி கொண்டதாகச் சொல்லப்படுகிறது. மேலும் கார்த்திகேயன் குடும்பத்தார் அவர்களுக்கு ஓட்டு போட்டு செயிக்க வைத்துவிட்டார்கள் என்பதில் அவர்கள் மீதும் கோபத்தில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.  அவர் ஒரு முறை தமிழ்குடியை அடித்ததாகவும் சொல்கிறார்கள். தொடக்கத்தில் கார்த்திகேயனை காதலிக்க தூண்டியவரே இராமமூர்த்திதான் பின்னர் அரசியல் ஆதாயங்களுக்காக நாகராஜனுக்கு ஆதரவாக மாறிவிட்டார். நாகராஜனுக்காக எதுவும் செய்வேன் என்று இராமமூர்த்தி சொல்லியிருப்பது கூட அடுத்த தேர்தலில் செயித்து விட வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்கள் செய்த கொலையை மறைக்கப்பார்க்கிறார், 12 மணியளவில் கோகிலா வீட்டை விட்டு வெளியே சென்றார் என்பதை வைத்துப் பார்க்கும்போது கொலையிலும் அவருக்கு பங்கிருக்கிறது என்று கார்த்திகேயன் அண்னன் கதிர்வேலின் கருத்து கவனிக்கத்தக்கது.

6.  புகாரில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆசிரியர் ரமேஷும் இராமமூர்த்திக்கு மிகவும் நெருக்கமானவர், இரமமூர்த்திக்காக மிகவும் பரிந்து கொண்டு பேசினார், மேலும் வழக்குறைஞர் லூசி மீது கடும் கோபமான  சொற்களைப் பிரயோகித்தார். அவர் தலித்தல்லாதவர், முதலியார் இந்த பிரச்சனையில் அவருக்கு என்ன ஆர்வம் என்று சொன்னபோது அவருடைய சாதி வெறுப்பை எங்களால் உணரமுடிந்தது. ஒரு பெண்ணின் உயிர் வாழும் உரிமை மறுக்கப்பட்ட விஷயத்தில், மனித உரிமையில் அக்கறையுள்ள யாரும் தலையிட உரிமையுள்ளது. இதில் தலித் உயிர், முதலியார் உயிர் என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. லூசியை சாதி ரீதியாக தனிமப்படுத்திவிட்டால் வழக்கு இல்லாமல் செய்யல்லாம் என்றே ரமேஷ் கருதுகிறார்.

7.  கோகிலாவின் வீட்டருகே உள்ளவர்களின் பேச்சுக்களிலும் சாதிப் பற்றை காண முடிந்தது.

8. கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகாரை உடனே வாங்காமல் காலம் தாழ்த்தியுள்ளார்கள். ஆனால் எங்களிடம் இன்ஸ்பெக்டர் சரவணன் 2.30 மணிக்குத்தான் அவர்கள் வந்தார்கள், உடனே புகாரைப் பெற்றுக் கொண்டு தன் சகாக்களை அனுப்பியதாகவும், தான் செல்லும் முன்னரே பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டார்கள் என்றும் சொன்னார்.

மாறாக 5.12.12 தமிழக அரசியல் நாளிதழில் “கோகிலாவின் உடலை எடுக்கச் சென்றபோது எடுக்க விடாமல் கோகிலாவின் குடும்பத்தினர் என்னைத் தடுத்தனர். நாங்கள் செய்த விசாரணையில் அந்தப்பெண் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. தற்கொலையை மறைத்தது தவறு. அதற்காக நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்.” என்று கூறியிருக்கிறார்.



இந்த இரண்டு தகவல்களிலும் முரண் இருக்கிறது. உடலைக் காணாதபோது, ஊரே கூடி உடலை தர மறுத்து, மறித்து போஸ்ட்மார்ட்டமும் நடக்காதபோது ஒரு காவல்துறை ஆய்வாளராக அது கொலையாக இருக்கக்கூடும் என்று சந்தேகம் கொள்வதே யதார்த்தம் ஆனால் இவர் தற்கொலைதான் என்று அழுத்தமாகச் சொல்வதின் பின்னணி என்ன என்று ஆய்வு செய்ய வேண்டும்.

உடல் எரிக்கப்பட்டிருந்தாலும் ஃபாரென்சிக் துறைக்கு தகவல் சொல்லுங்கள் என்று வழக்குறைஞர் லூசியா சொல்லியும் இதுவரை ஃபாரென்சிக் துறைக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை, ஆய்வு செய்யப்படவுமில்லை.

காவல்துறையினர் பணி செய்யவிடாமல் தடுத்ததற்காக சம்பந்தபட்ட ஊர் மக்கள் மீது எந்த வழக்கும் பதியப்படவுமில்லை.

குற்றம் சாட்டப்பட்டுள்ள இராமமூர்த்தியையும், ரமேஷையும் நாங்கள் எளிதாக பார்த்துபேச முடிந்தபோது அவர்களைத் தேடிக்கொண்டிருப்பதாகவும், இன்னும் அகப்படவில்லை அதனால் கைது செய்யமுடியவில்லை என்று இன்ஸ்பெக்டர் சரவணன் தெரித்தது வேடிக்கையாக இருந்தது.

கோகிலா தூக்கில் தொங்கிய அறையில் அவள் எப்போதும் தனியாகவே தூங்குவாள் என்று சரவணன் தெரிவித்தபோது, அப்படியென்றால் அதிகாலை இரவு 2.30 மணிக்கு என்ன காரணத்திற்காக கோகிலாவின் பெற்றோர் அந்த கதவைத் திறந்து பார்த்திருப்பார்கள் என்று கேட்டதற்கு அவரிடத்தில் பதில் இல்லை. மேலும் உள் தாழ்பால் போடப்பட்டிருந்ததா, வெளிதாழ்ப்பால் போடப்பட்டிருந்ததா என்ற கேள்விக்கும் அவரிடத்தில் பதில் இல்லை. ஆனால் விசாரனையில் அவள் தற்கொலைதான் செய்து கொண்டதாகத் தெரிகிறது என்று எங்களிடமும் உறுதியாகக் கூறினார். அப்படியென்றால் இதுபோன்ற அடிப்படை கேள்விகளைக் கூட கேட்காமல் அவர் என்ன விசாரனை செய்திருப்பார் என்பது கேள்வியாக இருக்கிறது. 

9. கோகிலாவின் பெற்றோர் அடித்து துன்புறுத்தியிருப்பதாக எல்லோரும் ஒப்புக்கொள்கின்றனர். மேலும் தன்னை சாகச்சொல்வதை எதிர்க்கும் கோகிலாவின் பேச்சும் தொலைபேசியில் பதிவாகியுள்ளது. ஆனால் அதற்கு முந்தைய நாள் தாய் மாமன் வீட்டிலிருந்த கோகிலாவை கார்த்திகேயனுக்கு திருமணம் செய்துவைப்பதாகச் சொல்லி வரவழைத்திருக்கிறனர். அதன் பிறகும் கோகிலாவை அடித்து துன்புறுத்தியிருக்கின்றனர். தற்கொலைக்கும் தூண்டியுள்ளனர். இந்த முரண்பட்ட செயல்பாடுகளை வைத்துப் பார்க்கும்போதும், சக்கிலியப் பையனுக்கு கட்டிக் கொடுப்பதா என்ற அவர்களின் பேச்சைக் கொண்டு அவர்களுக்குள் ஒரு சாதி வெறி இருந்திருப்பதைக் காணமுடிந்தது.

இந்த சாதி வெறிக் கொலையில் சாதியத்தின் பங்கும், வர்க்க அரசியலின் ஆதிக்கமும்

பரந்த அளவில் சாதி மறுப்பை பேசுபவர்கள் கூட ஆண் தாழ்த்தப்பட்ட சாதியில் இருந்தால் பெண் கொடுப்பதை விரும்புவதில்லை. பெண்ணை அடக்கி வைப்பதுன் மூலமே பல்லாண்டு காலமாக சாதிகள் கட்டிக் காக்கப்பட்டுள்ளன. அந்த உளவியல் படி பார்த்தால் மேல் சாதியில் (அப்படி வகுக்கப்பட்ட) உள்ள ஆணை காதலித்தால் ஏற்றுக் கொள்ளும் மனம் தாழ்த்தப்பட்ட சாதியில் உள்ள ஆணை ஏற்றுக் கொள்வதை அவமானமாகவே கருதுகிறது. சாதிய அடுக்கில் தாழ்த்தப்பட்டவர்களாக இருக்கும் இருசமூகத்திற்குள்ளும் (பறையர்-அருந்ததியர்) இத்தகைய ஒரு சாதியப் பற்றை வெளிப்படுத்துகிறது. அந்த ஆண் ஒரு தாழ்த்தப்பட்ட சாதி என்ற ஒரே காரணம் ஒரு பெண்ணின் உயிரைக் குடிக்கும் அளவுக்கு சென்றிருக்கிறது.

பள்ளிநேலியனல்லூரில் கார்த்திகேயன் வசிக்கும் பகுதியிலும் ஊரின் மற்ற பகுதிகளிலும் பொதுவாக சாதிய பாகுபாடு வெளிப்படையாக கடைப்பிடிக்கப்படவில்லை என்றபோதிலும் கோகிலாவின் தாய், தந்தை சாதி பார்த்த்தால் தான் கார்த்திகேயனுக்கு திருமணம் செய்து கொடுக்கவில்லை, அதைத் தொடர்ந்து அவரை சித்திரவதை செய்திருக்கிறார். இன்று அந்தப் பெண் மர்மமான முறையில் இறந்திருக்கிறார். இத்தனை நாள் பதுங்கியிருந்த சாதியப் பூனை இப்போது வெளிவந்திருப்பதாகவேத் தோன்றுகிறது, ஏனென்றால் அந்த தெருவேச் சேர்ந்து (பறையர் பெரும்பான்மையினர்) உடலை எரித்திருக்கிறது. விசாரணைக்கு சென்றபோதும் ஒன்று கூடி நாகராஜன் குடும்பத்தாருக்கு சாதகமாகவே பேசுகின்றனர். ஊராட்சி மன்றத் தலைவரும் வெளிப்படையாக பேசமுடியாத அளவுக்கு வர்க்க செல்வாக்கும், அதே சாதியைச் சேர்ந்த ஆளும் கட்சி அரசியல் பிரமுகரின் ஆதிக்கத்தையும் காண முடிகிறது. பறையர் பெரும்பான்மையினர் தங்களின் சாதியைச் சேர்ந்த ஒரு நபரை காக்கும் முயற்சி வெளிப்படையாகத் தெரிகிறது.

தருமபுரி தலித் கிராமங்கள் எரித்துக் கொல்லப்பட்டதற்கு பெரும் ஆர்பாட்டங்களைச் செய்த அமைப்புகள், கட்சிகள் அருந்ததியினர் இன மக்கள் ஒடுக்கப்படும்போதும் அப்படிப்பட்ட ஆர்பாட்டங்களைச் செய்கிறார்களா என்பது ஒரு கேள்வியாக வைக்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் அருந்ததியர் சாதியைச் சேர்ந்த விவேகானந்தா கல்லூரி மாணவி காயத்திரி மர்மமான  முறையில் இறந்து போனார். அப்போதும் அருந்ததியர் அமைப்புகளும், பெரியார் திராவிடக் கழகமும், எஸ்.எஃப்.ஐ போன்ற மாணவ அமைப்புகளும் சிறு சிறு போராட்டங்களை நடத்தின ஆனால் தர்மபுரி தலித் கிராமங்கள் தீக்கிரையான பிரச்சனையில் கூட்டியக்கங்கள் வரை அமைத்து நீதி கேட்டுப் போராடும் அமைப்புகள் ஏன் காய்த்ரி பிரச்சனையில் முழுவீச்சான ஒரு போராட்டத்தை முன் எடுக்கவில்லை என்ற கேள்வி அருந்ததியர் மத்தியில் எழுகிறது.

பரிந்துரைகள்:

1.  காவல்துறையினரின் முரண்பட்ட தகவல்களும், தற்கொலை என்று அழுத்தம் கொடுப்பதாலும் இந்த வழக்கு விசாரனை சிபி-சிஐடிக்கு மாற்றப்பட வேண்டும்.

2.  புகாரளிக்க வந்தபோது காலம் தாழ்த்தி, உடனடியாக நடவடிக்கையில் இறங்காததால் பெண்ணின் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது, தடையங்களும் அழிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே காவல்துறையினரின் தாமத நடவடிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. வரதட்சனைக் கொடுமைக்கெதிராக அல்லது குடும்ப வன்முறைக்கெதிராக பெண்ணின் கணவரோ அல்லது உறவினரோ செய்யும் துன்புறுத்தலுக்கெதிராக ஐ.பி.சி 498 ஏ என்று ஒரு சட்டம் இருக்கிறது, ஆனால் சாதி மறுப்பு காதலைத் தொடர்ந்து பெற்றோர் பெண்கள் மிது நிகழ்த்தும் குடும்ப வன்முறைக்கெதிராக ஏதும் கடுமையான சட்டங்கள் இல்லை, ஆகவே பெற்றோர் பிள்ளைகள் மீது செலுத்தும் வன்முறைக்கெதிராக உடனடியாக அரசு ஒரு முழுமையான, கடுமையான சட்டத்தை வகுக்க வேண்டும். அதில் உடல்ரீதியாக, மனரீதியாக தொடுக்கப்படும் ஒடுக்குமுறை, வன்முறை ஆகியவையும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.  அதன் கீழும் கோகிலாவின் பெற்றோர் கைது செய்யப்பட வேண்டும். 



4. உடலைத் தர மறுத்து, மறித்து காவல்துறையை பணியாற்றவிடாமல் செய்த சம்பந்தப்பட்ட நபர்களை, ஊர் மக்களை ஐ.பி.சி  பிரிவு 353 படி வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும்.  (Section 353 of the Indian Penal Code for causing obstruction in discharge of official duty which was applied in Koodankulam )

5.  கோகிலாவின் பெற்றோர் கார்த்திகேயனை சக்கிலியப் பையன் என்று வசை பாடியிருப்பது தெரிகிறது இந்த சாதியப் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

6.  கார்த்திகேயனை மிரட்டியவரும், அவரின் சித்தப்பாவை அடித்தவருமான சித்தப்பா தனசேகர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7. சாதி மறுப்பு திருமணங்களுக்கெதிராக பிரச்சாரங்கள் செய்து வரும் கட்சிகளும், அமைப்புகளும் இதுபோன்ற கௌரவக் கொலைகளுக்கு மறைமுக காரணமாகக் கருதப்பட வேண்டும். அக்கட்சிகள் மேலும் அத்தகைய மக்கள் விரோதப் பிரச்சாரங்களைச் செய்யாமல் இருக்க அரசு உடனே தடை விதிக்க வேண்டும். தேவைப்பட்டால் அத்தகைய சாதிக் கட்சிகளை, சங்கங்களை, பேரவைகளை தடை செய்ய வேண்டும்.

8.  கௌரவக் கொலைகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பிரச்சாரத்தை அரசு பரவலாக மேற்கொள்வதோடு. இந்திய அரசியல் சாசனம் கொடுத்திருக்கும் பெண்ணுக்கு இருக்கும் துணை தேடும் உரிமை குறித்த பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும்.

9. மாநில பெண்கள் ஆணையம் இது போன்ற கொலைகள் நடந்தவுடன், அவ்விடங்களுக்கு உடனடியாக ஒரு விசாரணைக் குழுவை அனுப்பி விசாரிக்க வேண்டும். அவர்களின் தகவல் அறிக்கைகள் பொதுத் தளங்களில் பதியப்பட வேண்டும்.

10. இவ்வழக்கை கையாளும் லூசியா மற்றும் அவரது மூத்த வழக்குறைஞர் ஜோஸ் ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும். லூசியாவை அவதூறாகப் பேசிய அணைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

11. கார்த்திகேயன் மற்றும் தற்போது அவருக்கு உதவியாக இருக்கும் அவரது நண்பர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More