Slideshow

சுதந்திரத் திருநாடு, ஆங்கொரு சக்கிலிக் காடு!


நாமக்கல் தாலுக்காவில், ஏளூர் கிராமத்திலிருந்து நாட்டார் மங்கலம் மற்றும் சின்ன மணலி செல்லும் பாதையில் கல்லாங்குடி பிரிவு சாலையிலேயே ஒரு சிறு சாமி சிலை இருக்கிறது. அதைச் சுற்றிலும் இரும்புக் கம்பி போட்டு, அதில் ‘சக்கிலி காடு’ என எழுதப்பட்டு இருக்கிறது.

வேலகவுண்டன்பட்டியிலிருந்து வையப்பமலை வரை, புதன் சந்தை முதல் ஏளூர் பெரிய மணலி வரை அனைத்து கிராமங்களிலும் அருந்ததிய மக்கள் வசித்து வருகிறார்கள் என்பது இங்கு கவனிக்கத் தக்கது.

சுதந்திரம் பெற்று பல வருடங்களாகியும், உயர் ஜாதியினரால இன்னும் மிக எளிதாக பறத் தெரு, சக்கிலியத் தெரு என அழைக்கப்படும் கொடுமை, இங்கு எழுத்து வடிவில் நிறுவப்பட்டு இருக்கிறது. 

மேற்கண்ட தகவலையும், இந்த புகைப்படத்தையும் நண்பர் விமலாவித்யா அவர்கள் மெயிலில் அனுப்பி, “உங்களை இது தொந்தரவு செய்கிறதா?’ என்ற கேள்வியையும் கேட்டு இருந்தார்.

சக்கிலி காடு


அவஸ்தையாகவும், அவமானமாகவும் இருந்தது. சமூகத்தின் ஆழத்தில் மனிதர்களை அழுத்தி, அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று அவர்கள் மீதே பச்சைகுத்தி வைக்கிற வன்கொடுமையாகவே தெரிகிறது.

இந்த சாதிய கட்டமைப்பில், ஆதிக்க சாதியினர், தாங்கள் இன்ன சாதி என பெருமையுடன் பீற்றிக்கொள்ள முடியும்.. காலம்காலமாய் நசுக்கப்ப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் தாங்கள் இன்ன சாதியென அறியப்படுவதில் அல்லது அறிமுகப்படுத்தப்படுவதில் எத்தனை வேதனையும், வலியும் கொண்டு இருப்பர்?

‘இந்த குளம் தாங்கள் குளிப்பதற்குரியதா, இந்த பாதை தாங்கள் நடப்பதற்கு உரியதா, இந்த சுடுகாடு தாங்கள் புதைக்கப்படுவதற்கு உரியதா” என நிற்கிற, நடக்கிற, சுவாசிக்கிற வெளியெங்கும் ஜாதிய பாகுபாட்டின் எச்சரிக்கையுடனே வாழ்வது எத்தனை கொடுமையானது.?

மனிதாபிமானமும், விடுதலை குறித்த ஞானமும் உள்ள யாரையும் இந்தச் செய்தி தொந்தரவு செய்யும். சில நாட்களுக்கு முன்பு, நாமக்கல் மாவட்ட ஆட்சியரைப் பாராட்டி, நண்பர் ஈரோடு கதிர் எழுதிய இடுகையை வாசித்தேன். இதனை அறிய நேரும்போது, அவரும் தொந்தரவு செய்யப்படுவார் என்றே நம்புகிறேன். அதனால் சக்கிலிக்காடு என்னும் எழுத்துக்களையாவது முதலில் அழிக்க நேரிடுமா?

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More