Slideshow

புலம் பெயர்ந்த தமிழிலக்கியத்தின் எதிர் காலம் பற்றி சில கேள்விகள்......

சமுத்திரன்
1980களில் தமிழ் இலக்கியல் ஒரு புதிய முனைப்பைச் சந்தித்தது. மேற்கத்திய நாடுகளில் புகலிடம் கோரிக்குவிந்த தமிழர்களிடமிருந்து பிறந்தது அந்த முனைப்பு. அது ஒரு புதிய மரபின் வருகையை அறிவித்தது. அந்த மரபை புலம்பெயர்ந்த தமிழ் இலக்கியமென அழைத்தோம். பின்னோக்கிப் பார்க்கும்போது அதன் ஆரம்பகால வளர்ச்சி பிரமிப்பூட்டுவதாகவே இருக்கிறது. 1989இல் ஐரோப்பாவில் வாழ்நத தமிழ் அரசியல் இலக்கிய ஆர்வலர்களின் உழைப்பின் விளைவாக முப்பதுக்கு மேற்பட்ட சஞ்சிகைகள் வெளிவந்தன. அதே ஆண்டின் இறுதியில் ஒஸ்லோவின் ”சுவடுகள்” குழுவினர் ”துருவச் சுவடுகள்” எனும் கவிதைத் தொகுப்பினை வெளியிட்டனர். சுவடுகள் அப்போது ஒரு மாத சஞ்சிகையாக வெளிவந்து கொணடிருந்தது. அதே ஆண்டின் மார்கழி மாதத்தில் மேற்கு பேர்லின் நகரில் ஆறாவது இலக்கியச் சந்திப்பு மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. அந்த இலக்கிய சந்திப்பின் பங்குபற்றி உரயாற்றும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அந்த மேற்கு பேர்லின் நிகழ்ச்சியை நினைவு கூரும் போதெல்லாம் அங்கு இடம்பெற்ற கலந்துரையாடல்களும் விவாதங்களும் என் மனதிற்கு மட்டுமன்றி சர்வதேச நிலைமைகளும் பலவிதமான அரசியல் சமூக இயக்கங்களும் விவாதிக்கப்பட்டன. மூன்று நாட்கள் தொடாச்சியாக மண்டபத்திற்குள்ளேயும் வெளியேயும் பலவிதமான கருத்துப்பரிமாறல்கள். அந்த மூன்று நாட்களும் நான் இரவு ஒரு மணிவரை நண்பர்களுடன் கலந்துரையாடும் சந்தர்ப்பங்களைப் பெற்றேன். கிழக்கையும் மேற்கையும் பிரித்து வைத்த பேர்லின் சுவர் வீழ்ந்து சில நாட்கள். இந்த நிகழ்ச்சியும் நமது கலந்துரையாடல்களுக்கு ஒரு உந்துதலாக அமைந்தது.. தமிழரின் விடுதலை தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலம் சோசலிசத்தின் எதிர்காலம் இவையெல்லாம் இலக்கியச் சந்திப்பின் விவாதப் பொருட்களாயின. புலம்பெயர்ந்த தமிழரின் இலக்கியச் செயற்பாடுகளின் புலத்தின் புரப்பின் பாரிய பரிமாணங்கள் பற்றிப் பேசி வியந்தோம்.
இலக்கியச் சந்திப்புக்கள் ஐரோப்பாவில் தொடர்கின்றன. 2001 யூலையில் 28வது சந்திப்பு நோர்வேயின் பேர்கன் நகரில் இடம்பெற்றது. நான் அப்போது இலங்கை சென்றிருந்ததால் இச்சந்திப்பில் பங்குபற்ற முடியவில்லை. பேர்லினுக்குப் பிறகு நான் பங்குபற்றிய இரண்டாவது இலக்கியச் சந்திப்பு பாரிசில் இடம்பெற்ற 27வது இலக்கியச் சந்திப்பாகும். இதில் கூட துரதிருஸ்டவசமாக முதலாம் நாள் மட்டுமே கலந்துகொள்ள முடிந்தது. பாரிஸ் சந்திப்பு நன்றாகவே இருந்தது. 1989இல் பேர்லினில் கண்டு அனுபவித்த உத்வேகத்தையும் அரசியல் விவாதங்களையும் பாரிசில் காணவும் அனுபவிக்கவும் முடியவில்லை. ஆயினும் சில விடயங்கள் அலசி ஆராயப்பட்டது.
நல்ல அறிகுயாகவே இருந்தது. இலக்கிய அரசியல், தத்துவார்த்த வட்டங்களில் இன்று முக்கியத்தும்பெறும் சில விடயங்கள் அங்கு கிளப்பப்பட்டன. ஐரோப்பாவில் இன்று முனைப்பு பெற்றுள்ள பின்நவீனத்துவம் சார்ந்த சில அம்சங்கள் மேலெழுந்துவாரியாக அலசப்பட்டன. அதே வேளை உலகமயமாக்கல் பற்றி நான் முன்வைத்த விடயங்கள் பற்றி இடதுசாரி நண்பர்கள் பல கேள்விகளை எழுப்பினர். புலம்பெயர்ந்த தமிழர் மத்தியில் இன்றைய ஐரோப்பிய விவாதங்களில் ஈடுபாடுள்ள அறிவாளர்கள் உருவாகியிருக்கிறார்கள் என்பதை அறிந்தேன்.
இரண்டு இலக்கியச் சந்திப்புகளில் மட்டுமே பங்குபற்றிய என்னால் இதுவர இடம்பெற்ற 28 சந்திப்புக்கள் பற்றிய ஒரு பொதுப்பார்வையை அல்லது தொகுப்பி­னைத் தரமுடியாது. ஆனால் இச்சந்திப்­புக்கள் தொடர்ந்து ஒரு நல்ல அறிகுறி என்பதை மறுக்க முடியாது. புலம்பெயர்ந்த தமிழரின் இலக்கிய மரபின் போக்குகள் உள்ளடக்கங்களின் தன்மைகள் பற்றி ஆழ அறிந்து கொள்வதற்கு இதுவரை இடம்பெற்ற சந்திப்புக்கள் பற்றிய ஒரு வரலாற்று ரிதியான விமர்சன ஆய்வுதேவை. இது இடம்பெறும் காலம் வந்துவிட்டது என்றே கருதுகிறேன்.
அதேவேளை புலம்பெயர்ந்த தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம் பற்றிய சில கேள்விகள் என் மனதில் எழுகின்றன. 1990களின் முற்பகுதியிலிருந்து புலம்பெயர்ந்த தமிழ் குழுக்கள் வெளியிடும் சஞ்சிகைகள் அளவு ரீதியில் அருகி வருகின்றன. நீண்டகாலமாக வெளிவந்த ”சுவடுகள்” போன்ற சஞ்சிகைகள் இப்போது நின்று விட்டன. இந்த அளவு அமைதியான வீழ்ச்சி தொடாக்கிறது. இதன் தன்மை ரிதியான விளைவுகள் எத்தகையவை? இந்தக் கேள்விக்கு ஒரு பொதுப்படையான பதிலைக் கொடுக்க விரும்புகிறேன். முதலாவதாக இந்த அளவு ரீதியான குறைபாடு புலம்பெயர்ந்த தமிழ் இலக்கி­யத்திற்கு இருந்து வந்த பன்முகத் தன்மைகளைக் குறுக்கியுள்ளதெனலாம்.
ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்தும் வெளியீடுகள் வந்தகாலத்திலிருந்த புவியியல் சமூகவியல் ரீதியாக பரவிய பன்முகத் தன்மையை புலம்பெயர்ந்த தமிழ் இலக்கியம் இழந்து வருகிறது போல் படுகிறது. அடுத்ததாக இந்தப் பன்முகப் போக்குகளுக்குச் செழுமையையும் குறிப்பிட்ட அடையாளங்களையும் கொடுத்த அரசியல் தத்துவார்த்த புலங்களும் இப்போது குறுகிவிட்டதெனலாம்.
மறுபுறம் இப்போது இயங்கிவரும் சஞ்சிகைகள் பலும்பெயர்ந்த தமிழரின் இரண்டாம் சந்ததியினரின் பிரச்சினைக­ளைப் பற்றி ஆழப்பார்க்கும் போக்கினைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. 1980களில் புலம்பெயர்ந்தவர் மத்தியில் இப்போது இரு சந்ததிகளுக்கிடையில் உறவுகள் ஒரு முக்கிய அம்சமாகிவிட்டன. இந்த உறவுகளின்அன்றாட நடைமுறைகளில் வெளிப்பாடுகளில் முரண்பாடுகள் பல. குடும்பங்களுக்குள்ளே சந்ததிதிகளுக்கி­டை­யி­லான முரண்பாடு கலாச்சாரங்களுக்­ கிடையிலான முரண்பாடாகி பல விதமான உளவியல் தாக்கங்களைப் பிள்ளைகளின் மீதும் பெற்றோர் மீதும் ஏற்படுத்தி வருகிறது. இது பற்றி வெளிப்படையாகப் பேசும் நிலையில் பலர் இல்லை. ஒரு சில சிறுகதை­களில் நாவல்களில் இந்தப் பிரச்சினையின் சில பரிமாணங்கள் பிரதிபலிக்கப்பட்டுள்ளன. அது போதுமா? இலக்கிய சந்திப்புக்கள் இத்தகைய பிரச்சினைகளுக்கு எத்தகைய தொடர்ச்சியான முக்கியத்துவத்தைக் கொடுத்துள்ளன?
சமூக, கலாச்சார உளவியல் பிரச்சினை­களால் அவதிப்படும் பல பெற்றோர் மத்தியில் அதாவது கடவுளிடம் விமோசனம் தேடுகிறார்கள். இந்தப் போக்கின் விளைவுகள் என்ன? பெற்றோரின் அதீத மத நம்பிக்கை பிள்ளைகளின் சமூகப் பிரச்சி­னைகளை தனிமனித ஆளமையை எப்படிப் பாதிக்கின்றன? இத்தகைய கேள்விகள் சமூக ஆய்வுக்கான கேள்விகள் தான். அதே வேளை இவை புலம்பெயர்ந்த தமிழரின் வாழ்நிலையிலிருந்து பிறக்கின்றன என்பதால் ஆக்க இலக்கியத்திலும் இவற்­றின் பிரதிபலிப்புக்களை நாம் தேடவேண்டும்.
புலம்பெயர்ந்த தமிழ் இலக்கியத்தின் பாரிய எழுச்சிக்காலம் போய்விட்டது. அது வெளிநாட்டிற்கு இடம்பெயர்ந்த ஒரு சந்ததியின் முதலாவது பத்துவருடங்களின் ஏக்கங்களின், தேடல்களின் ஆக்கத்திறன்க­ளின் வெளிப்பாடு எனலாம். அதை நாம் ஒரு பொற்காலமெனக் கருதத் தேவையில்லை. அதன் அரசியல் சமூக சந்தர்ப்பத்தின் தன்மைகளை மறந்துவிடலாகாது. இப்போது அந்த காலக்கட்டம் இன்னொன்றிற்கு வழிவிட்டுள்ளது. இன்றைய காலக்கட்­டத்தின் புலம்பெயர்ந்த தமிழ் இலக்கிய மரபு பரிமாணங்களைத் தேடவேண்டும். இந்தப் பரிமாணங்களின் சில அம்சங்கள் மேலே தொட்டுள்ளேன். நமது ஆக்கத்திறனையும் விமர்சனத்தையும் மேலும் ஆழமாக நமது சமூகத்தின் முன்னே பாய்ச்சவேண்டும். நமது சமூகத்திற்குள்யிருக்கும் சமூகப்போக்குகளை பிரிவாக்கங்களை நன்கு கிரகிக்க வேண்டும். சஞ்சிகைகளின், நூல்களின் வெளியீட்டு வைபவங்கள் அரங்கேற்றங்களாக அமையாது நமது சமூகத்தினை கலாச்சார ரீதியில் மறுமலாச்சிபெற உதவும் கற்கலாக அமைய வேண்டும்.
இந்தப்பார்வையில் ”பறை” எனும் புதிய சஞ்சிகையை நாம் எதிர்காலத்தில் மதிப்பீடு செய்யும் போது, அது ஒரு சமூகத் தேவையை பூர்த்தி செய்ய முன்னிற்கும் வெளியீடு என்ற முடிவிற்கு வரவேண்டும். இதுவே பறையிடம் இருந்து நாம் எதிர்பார்ப்பது. நோர்வேயில் நீண்டகாலமாக ஒரு தரமான சஞ்சிகை இல்லை. அந்த வெற்றிடத்தை ”பறை” நிரப்பும் என எதிர்பார்க்கிறேன்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More