சக்கு
மரங்கள் இலைகளை
துறக்கிற காலமிது
கிளைகள் இலைகளை
விட்டுப் பிரியும் காலமிது -ஏன்
இலைகள்
பச்சையிலிருந்து மஞ்சள்,
மஞ்சயிலிருந்து சிவப்பு
சிவப்பிலிருந்து பழுப்பு - என
மாறும் காலமும் கூட
இலை துறந்து - வெறும்
கருநிற குச்சிகளாய்
வரப் போகும் இருட் காலத்தில்-
சூழல்
சோகமாய் காட்சிதரும்.
பனியும், இருளும்
தனிமை, விரக்தியுடன் ஒருசேர
செத்துத் தொலையத்தான்
தோணும்
வெண்பனி கொட்டப் போகும்
காலம் அதிகமில்லை.
உடல்
வரண்டு போகும்
நா வரண்டு போகும் - கூடவே
நானும்...?
தெரியாது...!
இறுதியாக
மனம் விட்டு சிரித்த நாள்
நினைவிலில்லை
இரவு பன்னிரண்டரை
வேலை களைப்பில்
நெடுந்தூர நடையில்
கால்களுக்கு மேல்
வலதும் இடதும்
சாய்ந்து சாய்ந்து
தாவித் தாவி பனிக் குளிரில் நான்.
பின் தொடர்ந்த பெரிய வட்டநிலா
இப்போது
இராட்சத மலைகளுக்கு மேல்
பைன் மரங்களின் நடுவில் இருந்து
எட்டிப்பார்த்தது
நிலவு நமக்கு ஊட்டிய
கதைகள்
எங்கு இவர்களுக்கு
புரியப்போகிறது.
இந் நிலவு பேசும் மொழி-மேலும்
இம்சைப்படுத்தியது
வாயினால் மூச்சிழுத்த
படி மீசை முடிகளில் - குளிர்
பனியாக ஒட்டிக்கொண்டிருந்தது.
துயரங்களின் மீதிருந்த
முழு கவனமும்
களைப்பை மூடியிருந்தது...
நடந்தேன் நடந்தேன்...
எட்டிப் பிடித்து விடுவேன்
முடிவை...?
0 comments:
Post a Comment