கலா
உங்களுக்குத் தெரியுமோ என்னவோ
எம் இனத்தின் ஒவ்வொரு மனிதரும்
கொல்லப் படுவதற்கென்றே
படைக்கப்பட்டவர்கள்.
கசாப்புக் கடைக்காரனின் பின்
வாசலில் காத்திருக்கும்
ஆடுகளைப் போல்
நாம் காத்திருக்கிறோம்.
எமை பலி கொண்டு
ஒரு தேவதையின்
ஆட்சியை நிலைநிறுத்த
நீங்கள் நம்ப வேண்டாம்.
ஆனால் என் தாய்
மண்டியிட்டுக் கதறுகிறாள்
சிதறுண்டு போன
உடலங்களையாவது
தன்னிடம் தரும்படி
அவள் அழுது புலம்புகிறாள்.
இரத்தத்தில் குளித்து
பிய்ந்து போய் இருக்கும்
உடல்களின் மென் நெற்றி
பொட்டுகளில்முத்தமிட்டு
புதைகுழியில் மூடுவதற்காய்.
இப்போதும் மடுமாதா தன்
வயிற்றிலும் மார்பிலும்
அடித்துக் கதறுகிறாள்.
அந்த 38 பேரின் சாட்சியாக
அவள் உள்ளாள்.
நீங்கள் என் தாயின்
வயிற்றில் விதைத்தவைகள்
அவள் கால்களுக்கிடையால்
இரத்தமாய் கொட்டும்
அப்போது நீங்கள்
அதிர்ச்சியடைய வேண்டாம்
மீண்டும் பொறிப்பதற்கு
பயங்கரவாதிகள் என்ற
வாசகம் இல்லாமலா
போய்விடும்!?
0 comments:
Post a Comment